Thursday, February 25, 2010

24 மணி நேர மதுக்கடைக்கு பூட்டுப் போட்ட பெண்கள்

கடலூர், பிப். 25: விதிகளுக்கு மாறாக 24 மணி நேரமும் இயங்கிய டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கடைக்கு பூட்டுப் போட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர்.

கடலூரில் 24 மணி நேரமும் இயங்கும் பெட்ரோல் நிலையம் கிடையாது. 24 மணி நேரமும் இயங்கும் ரத்த வங்கி கிடையாது. தனியார் மருத்துவமனைகள் ஒன்றிரண்டு, மருந்தகங்கள் ஒன்றிரண்டு மட்டுமே 24 மணி நேரமும் இயங்குகின்றன. அவற்றிலும் இரவு 1 மணிக்கு மேல் எதிர்பார்க்கும் அளவுக்குச் சேவை இல்லை. இவையெல்லாம் அத்தியாவசியத் தேவைகளாக இருந்தும் அவைகள் பெருமளவுக்கு 24 மணி நேர சேவையாக மக்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லாத நகரமாகக் கடலூர் உள்ளது.

ஆனால் டாஸ்மாக் மதுக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்க வேண்டும் என்பது விதி. அவர்களுக்கு வார விடுமுறையும் இல்லை. வார விடுமுறை வேண்டும், 8 மணி நேர வேலையை அமல்படுத்த வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் ஒருபக்கம் போராடி வருகின்றன.

மறுபக்கம் பல டாஸ்மாக் கடைகள் விதிகளுக்கு மாறாக 24 மணி நேரமும் இயங்குவதாக, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுகின்றன. அத்தகைய 24 மணி நேர டாஸ்மாக் மதுக்கடை, கடலூர் முதுநகர் மீன் அங்காடி அருகே இயங்கி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். நள்ளிரவு நேரத்திலும் கடைக்குள் தூங்கிக் கொண்டு இருப்பவர்களை எழுப்பி, மதுபாட்டில்களை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்கள்.

இதனால் அப்பகுதியில் எந்த நேரமும் குடிகாரர்கள் நடமாட்டம், ஆபாசமான பேச்சுக்கள், மீன் விற்பனை உள்ளிட்ட வியாபாரத்தைப் பெரிதும் பாதிப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். பொதுமக்கள் பலரும் அச்சம் அடைய நேரிடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம்.

இதனால் எரிச்சலடைந்த அப்பகுதிப் பெண்கள் சிலர் வியாழக்கிழமை அதிகாலை, அந்த டாஸ்மாக் மதுக்கடையை வெளிப்புறமாகப் பூட்டி விட்டனர். இதனால் பொதுமக்கள் பலரும் அங்கு திரண்டனர். காவல் நிலையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டது. முதுநகர் போலீஸ் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் வந்து, டாஸ்மாக் ஊழியர்களை விடுவித்தார். இனிமேல் இவ்வாறு நடக்கக் கூடாது என்றும் எச்சரித்தார். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

நன்றி: தினமணி 26.02.2010

Wednesday, February 24, 2010

“தமிழ்” தொழில் நிறுவனங்களுக்கு ஆகாதா? ஒத்துவராதா?

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு பெரிய நிறுவனத்தில் என்னுடைய நண்பர் வேலை செய்கிறார். அவருக்கு தமிழில் மின்னஞ்சல் அனுப்பும் வழிமுறைகளையும் ஒருங்குகுறி எழுத்துருக்களையும் கற்றுக்கொடுத்தேன். அவரும் உற்சாகமாக கற்றுக்கொண்டார். அந்த ஆர்வத்தில் அவருடைய விடுப்பு விண்ணப்பத்தை தமிழில் தட்டச்சு செய்து மின்னஞ்சல் மூலம் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தார்.

அந்த தமிழ் மின்னஞ்சலை படித்த அவருடைய உயர்அதிகாரிகள் இருவர் என் நண்பரை காய்ச்சி எடுத்துவிட்டனர். “ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டு தமிழில் லீவ் லட்டர் எழுதுறீங்களே! உங்களுக்கு வெட்டகமாக இல்லையா?” என்று கேட்டுள்ளனர். அவர் அதற்கு ஒரு வழியாக மன்னிப்பு கேட்டுவிட்டு “இனிமேல் அப்படி செய்யமாட்டேன்” என்று சொல்லி இந்த பிரச்சனையை ஒருவழியாக சமாளித்துள்ளார்!

இதுபற்றி என்னிடம் கூறி வருத்தப்படார். என்னுடைய நண்பரிடம் அவர்களுடைய உயர்அதிகாரிகளைப் பற்றி விசாரித்தேன். அவருடைய உயர் அதிகாரிகளில் ஒருவர் கும்கோணம் பார்ப்பான், மற்றொருவர் மலையாள பார்ப்பான். அவர்கள் இருவருக்கும் தமிழில் எழுத, படிக்க, பேச நன்கு தெரியுமாம்.

நம்புங்கள்! நாம் விடுதலை பெற்றுவிட்டோம்!

Monday, February 15, 2010

காவிரி போராளி கரூர் குப்புசாமி அவர்களுக்கு வீரவணக்கம்


காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைப் பெற தன் வாழ்நாள் முழுவதும் போராடிவந்த கரூர் வழக்கறிஞர் பூ.அர. குப்புசாமி காலமானார்.

காவிரி நதி நீர் சிக்கல் குறித்து மக்கள் மன்றத்திலிருந்து நீதிமன்றம் வரை பல்வேறு தளங்களில் போராடியவர் வழக்கறிஞர் குப்புசாமி. இவர் எழுதிய காவிரி நதி நீர்ச் சிக்கல் புத்தகம், அப்பிரச்சனையை மிக எளிதாக புரிய வைத்தது மட்டுமின்றி, தமிழகத்தின் உரிமையை பறிக்க கர்நாடக அரசும், அரசியல் கட்சிகளும் எப்படியெல்லாம் செயல்பட்டன என்பதையும், அதையெல்லாம் உரிய நேரத்தில் தடுத்து நிறுத்தத் தவறிய தமிழக அரசு, தலைவர்கள் குறித்தெல்லாம் அப்புத்தகத்தில் விரிவாக எழுதியிருந்தார்.

காவிரி சிக்கல் மட்டுமின்றி, விவசாயிகளின் நலன் காக்க பல போராட்டங்களை நடத்தியவர் குப்புசாமி. தமிழ்நாட்டின் விவசாயிகள் கந்து வட்டிக் கடன் சுமையில் தத்தளித்தபோது, கந்து வட்டிக் கடன்களுக்கு முற்றுப் புள்ளி வைக்குமாறு தமிழக முதலமைச்சருக்கு குப்புசாமி அவசர தந்தி அனுப்பினார்.

அதனைக் கண்ணுற்ற அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, கந்து வட்டியில் பெற்ற கடன்கள் அனைத்தையும் இரத்து செய்தது மட்டுமின்றி, கந்து வட்டிக் கடன் அளிப்பதை அரசு உத்தரவு மூலம் நிறுத்தி, அதற்குத் தடையும் விதித்தார்.இதனால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடன் தற்கொலைக்குச் செல்லாமல் காப்பாற்றப்பட்டனர்.

ஜீவாவுடன் துவங்கிய பொது வாழ்க்கை

வழக்கறிஞசர் குப்புசாமியின் பொது வாழ்க்கை பொதுவுடைமையாளரான ஜீவாவுடன் இணைந்து துவங்கியது. இந்திய பொதுவுடைமைக் கட்சியில் கலை இலக்கிய பெருமன்றத்தை இவரை வைத்து ஜீவா துவக்கினார்.

ஜீவாவின் காலத்திற்குப் பிறகு பொதுவுடைமைக் கட்சியில் இருந்து வெளியேறி, பெரியாரின் தலைமையை ஏற்றார். தமிழ்நாட்டின் உரிமைகளை பொதுவுடைமைக் கட்சி முன்னெடுக்காததால், திராவிடர் கழகத்தில் இணைந்ததாகக் கூறிய குப்புசாமி, ‘மண்ணிற்கேற்ற மார்க்சியம்’ என்ற கோட்பாட்டில் தீவிரம் காட்டினார்.

கரூர் மக்களின் வாழ்வாதாரமாக திகழ்ந்த நொய்யல் ஆறு, சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் மாசடைந்தபோது, அதனை எதிர்த்துப் பெரும் மக்கள் இயக்கம் கட்டியவர் குப்புசாமி.

காவிரி நதி நீர்ச் சிக்கலில் அரசியலிற்கு அப்பாற்பட்டு, தமிழின உரிமையை முன்வைத்து சென்னையில் இவர் நடத்திய கருத்தரங்கத்தில், அப்பிரச்சனையில் ஈடுபட்டிருந்த சட்ட வல்லுனர்களையும், நீராண்மை நிபுணர்களையும் அழைத்து பேசச் செய்தார். காவிரி நதி நீர்ப் பிரச்சனையை தமிழகத்தின் உரிமைப் போராகவே கருத வேண்டும் என்று கோரி, அதற்காக பல போராட்டங்களை நடத்தியவர் குப்புசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

80 வயதைக் கடந்த குப்புசாமி சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார். நேற்று (15.02.2010) அதிகாலை 5 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. நேற்று மாலை அவரது சொந்த ஊரில் இறுதி நிகழ்ச்சி நடந்தது.

நன்றி: தமிழ்வெப்துனியா.காம்

Sunday, February 7, 2010

மது விற்பனை இருக்கும்வரை தமிழகத்தில் வறுமையை ஒழிக்க முடியாது: தமிழருவி மணியன்

மது விற்பனை இருக்கும்வரை தமிழகத்தில் வறுமையை ஒழிக்க முடியாது என காந்திய அரசியல் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

இயக்கத்தின் சார்பில் நாமக்கல்லில் சனிக்கிழமை நடந்த தேசிய சிந்தனைக் கருத்தரங்கில் அவர் பேசியது:

டாஸ்மாக் கடைகள் மூலம் பெறக்கூடிய வருமானத்தில் தமிழக அரசு பல்வேறு இலவச திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இலவச திட்டங்கள் வேண்டும் என தமிழக அரசிடம் பொதுமக்கள் யாரும் கோரிக்கை விடுக்கவில்லை. வாக்காளர்களை கவர வேண்டும் என்பதற்காக கடந்த தேர்தலில் இலவச திட்டங்கள் குறித்த கவர்ச்சிகர அறிவிப்புகளை திமுக வெளியிட்டது. தற்போது, இந்த திட்டங்களுக்காகவே தமிழக மக்களை குடிமகன்களாக மாற்றி வருகிறது.

இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் கூறுகையில் தமிழகத்தில் மாற்று உடையில்லாமல் 3 கோடி மக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக ஆண்டுக்கு ரூ. 2,600 கோடி செலவில் இலவச வேட்டி, சேலை வழங்குவதாகவும் அரசு அறிவித்துள்ளது. ஆனால், 2008-09-ம் ஆண்டில் டாஸ்மாக் கடைகளில் நடந்த மது விற்பனையில் மது மீது விதிக்கப்பட்ட உள்நாட்டு வரி மற்றும் விற்பனை வரி ஆகியவற்றின் மூலமாக மட்டும் ரூ. 10 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் வந்துள்ளது. மது மீதான வரி மூலமே 10 ஆயிரம் கோடி வருவாய் என்றால் இந்த தொகையை வைத்து மாற்று உடையில்லாமல் உள்ள 3 கோடி மக்களை வசதியாக வாழ வைக்க முடியும்.

இதை விடுத்து இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, உயிர்காக்கும் காப்பீடு திட்டம் என்பதெல்லாம் மக்களை சிந்திக்க செய்யாமல் வைத்திருப்பதற்கே. ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கும் கிராம மக்கள்தான் தினமும் 70 ரூபாய் கொடுத்து டாஸ்மாக் மதுவை அருந்தும்நிலை உள்ளது. உயிர்காக்கும் காப்பீடு திóட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ. 600 கோடி தனியார் நிறுவனத்துக்கு வழங்கினால் 5 ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி வழங்க வேண்டியுள்ளது. இந்த 3 ஆயிரம் கோடியில் தமிழகத்தின் 30 மாவட்டங்களிலும் தலா 100 கோடி செலவில் மருத்துமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரிகளை அரசே துவக்க முடியும். தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையும் ஓராண்டில் உணவு, மருந்துக்காக செலவிடும் தொகையோடு ஒப்பிட்டால் மது குடிக்க செலவிடும் தொகையே அதிகமாக உள்ளது. இந்தநிலை மாற வேண்டும். இலவச திட்டம் என்பது கல்விக்கு மட்டுமே இருக்க வேண்டும். இலவச திட்டங்களால் மக்களை ஏமாற்றாமல் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் வகையில் தமிழக மக்களை தயார்படுத்த வேண்டும். பொதுநல அரசு என்பது மக்களை ஒழுக்கமாகவும், கண்ணியத்துடனும் இருக்கச் செய்ய வேண்டும். மது விற்பனையால் வரும் வருமானம் பாவத்தின் சம்பளம் என்பதை உணர வேண்டும்.

100 ஊராட்சிகளுக்கு குறி: காந்திய அரசியல் இயக்கம் குறைந்தபட்சம் 100 ஊராட்சிகளில் இயக்க நிர்வாகிகளை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 12,600 ஊராட்சிகளில் 100 ஊராட்சிகளிலாவது காந்திய அரசியல் இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பொறுப்புக்கு வந்தால் அந்த 100 ஊராட்சிகளை முன்மாதிரி ஊராட்சிகளாக மாற்றம் செய்து அவற்றை பிற ஊராட்சிகளும் கடைப்பிடிக்க செய்ய முடியும். இதற்காக கிராமம் தோறும் சமூக அக்கறையுள்ள 10 இளைஞர்கள் இயக்கத்துக்கு முன்வர வேண்டும். இந்த இளைஞர்களை கொண்டு கிராம சுயராஜ்ஜியம் அமைக்க பாடுபடுவதே காந்திய அரசியல் இயக்கத்தின் தலையாய நோக்கம். இந்த இயக்கத்தில் வன்முறைக்கு இடமில்லை. முழுக்க, முழுக்க காந்தியக் கொள்கைகள் பின்பற்றப்படும் என்றார் அவர்.

நன்றி: தினமணி 08.02.2010

Thursday, February 4, 2010

பேரறிஞர் இராகுல் காந்தி இன்று புதுச்சேரி வருகை!

இதனால் நாட்டுமக்களுக்கு அறிவிக்கப்படுவது யாதெனில்,

பேரறிஞரும், பேராசிரியரும், முனைவரும், இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேருவின் கொள்ளு பேரனும், இந்திரா காந்தியின் பேரனும், இராஜுவ் காந்தியின் மகனும், தற்போதைய பிரதமரை இயக்குபவருமான சோனியா காந்தி அவர்களின் தவப்புதல்வரும் இந்நாட்டின் இளவரசனுமாகிய ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ. இராகுல் காந்தி அவர்கள் புதுச்சேரி பல்கலை கழகத்தில் மாணவர்களுடன் உரையாட உள்ளா...ர்...

இன்று விமானம் மூலம் சென்னை வரும் அவர், அங்கிருந்து உலங்கு வானூர்தி மூலம் புதுச்சேரி வருகிறா...ர்...

நாட்டுமக்களின் அறிவையும் ஆற்றலையும் பெருக்க புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள “இராஜீவ் காந்தி மட்டைப்பந்து விளையாட்டுத் திடலை” திறந்து வைக்கிறா...ர்...

பிறகு “வாக்குரிமை மற்றும் ஜனநாயகம்” என்னும் தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளா...ர்...

இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் அருகேயுள்ள ஒரு விடுதியில் நடைபெறும் இளைஞர் காங்கிரசு கூட்டத்தில் பங்கேற்கிறா...ர்...

இது தொடர்பான ஒளிப்பட தொகுப்பு இரண்டு நாட்களுக்கு அனைத்து ஊடகங்களிலும் காட்டப்படும்...

இதைப்பார்த்து நாட்டுமக்கள் அனைவரும் குதுகலிக்க வேண்டும்...

இதுவே இந்திய பேரரசின் மேன்மைபெருந்திய சோனியா மகாராணியாரின் விருப்பம்...................

மேலும் இந்நிகழ்வுகளில் சுயசிந்தனையாளர்களும் மான உணர்வு உள்ளவர்களும் கண்டிப்பாக கலந்து கொள்ளக்கூடாது என அறிவிக்கப்படுகிறது...

டும்... டும்....
டும்... டும்....
டும்... டும்...
டுடும்.... டுடும்.... டுடும்...

முக்கிய அறிவிப்பு: கூட்டத்தில் கலந்துகொள்ளும் யாரும் பின்வரும் ஐயத்தை இளவரசரிடம் கேட்டுவிடக்கூடாது. மீறி கேட்டால் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்...

ஐயம்-1: மகாத்மா காந்திக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எந்தவித இரத்த உறவும் இல்லாத நீங்கள் உங்கள் பெயருக்கு பின்னால் “காந்தி” என்ற பட்டத்தை ஏன் சேர்த்துக் கொண்டீர்கள்.

ஐயம்-2: தங்கள் குடும்பப் பெயரான “காண்டி” எதற்காக “காந்தி” என்று மாற்றப்பட்டது.

ஐயம்-3: இந்த நாட்டை ஆள நேரு குடும்பத்தைத் தவிர வேறு யாருக்கும் தகுதி இல்லையா?

ஐயம்-4: மக்களாட்சி நடைபெறுவதாக சொல்லப்படும் இந்த நாட்டில்; ஆண்டவர்களின், ஆட்சியாளர்களின் காதலின் அடையாளமாகவோ, காமத்தின் கழிவிலோ பிறந்தவர்களுக்குத்தான் நாட்டை ஆளும் சூழல் தற்போது இருப்பது ஏன்?

இது அரசு ஆணை....

டும்... டும்....
டும்... டும்....
டும்... டும்...

Monday, February 1, 2010

காந்தியப் பொருளாதாரத்தை வடிவமைத்த தமிழன்



பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற இளம் வழக்கறிஞரை மகாத்மா காந்தியாக உருவாக்கியதில் தமிழர்களுக்குப் பெரும் பங்கு உண்டு.

தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது ஒப்பந்தக் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களுக்கு வெள்ளை முதலாளிகள் இழைத்த கொடுமைகளுக்கு எதிராகத்தான் அவர் தனது முதல் போராட்டத்தைத் தொடங்கினார். பாலசுந்தரம் எனும் தமிழ் ஒப்பந்தக் கூலியை அவருடைய வெள்ளை எஜமானன் மிகக் கடுமையாகத் தாக்கிக் கொடுமை செய்த வழக்கை ஏற்று நடத்தி அந்த அப்பாவித் தமிழனுக்கு நீதி கிடைக்க உதவியதன் மூலம் அவர் வாழ்வில் மிகப் பெரும் திருப்பம் ஏற்பட்டது.

1894-ம் ஆண்டு "நேட்டால் இந்தியன் காங்கிரஸ்' என்ற பெயரில் ஓர் அமைப்பை காந்தியடிகள் தோற்றுவித்தார். இந்த அமைப்பில் முக்கிய பங்கு வகித்தவர்கள் தமிழர்களே. தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் 20 ஆண்டுகளுக்கு மேல் தங்கியிருந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை நீக்குவதற்கு வழிவகுத்தார்.

1920-ம் ஆண்டு முதல் 1947--ம் ஆண்டு வரை 27 ஆண்டுகள் இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தை காந்தியடிகள் வழிநடத்தினார். ஆனால் அதற்கான பயிற்சியையும் பக்குவத்தையும் அவருக்குத் தென்னாப்பிரிக்காவில் நடத்திய போராட்டங்கள் அளித்திருந்தன. அதற்கு முழுமையாகக் காரணமானவர்கள் தமிழர்களே.

தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்திய போராட்டத்தில் வள்ளியம்மை, நாகப்பன், நாராயணசாமி ஆகிய 3 தமிழர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றனர். பல தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக நாடு கடத்தப்பட்டனர். ஆனாலும் காந்தியடிகளுக்குத் தோள் கொடுத்து துணை நிற்பதிலிருந்து தமிழர்கள் பின்வாங்கவில்லை.

வள்ளியம்மை குறித்தும் தனக்குத் தோள் கொடுத்துத் துணை நின்ற தமிழர்கள் குறித்தும் காந்தியடிகள் குறிப்பிட்ட கருத்துகள் அவர் எவ்வளவு உயர்வாகத் தமிழர்களை மதித்தார் என்பதற்குச் சான்றாகத் திகழ்கின்றன.

காந்தியடிகள் அரை நிர்வாணப் பக்கிரி கோலத்துக்கு மாறியதும் தமிழகத்தில்தான். 22-9-1921 அன்று காந்தியடிகள் மதுரையில் தங்கியிருந்தபோது அன்று அதிகாலையில் எழுந்து தனக்குத் துணையாக இருந்த விருதுநகர் காங்கிரஸ் தொண்டர் பழனிகுமாரு பிள்ளையை எழுப்பி கதர் வேட்டியைப் பிடிக்கச் சொல்லி இரண்டாகக் கிழித்து ஒரு பாதியை இடுப்பில் கட்டிக்கொண்டு மற்றொரு பாதியை தோளில் போர்த்திக் கொண்டார். அன்றிலிருந்து அவர் மறைவு வரை இதுவே அவரது உடையாயிற்று.

காந்தியடிகளின் மனசாட்சிக் காவலர் என்று அழைக்கப்படும் அளவுக்கு அவரைப் பற்றி உள்ளும் புறமும் தெரிந்து அவருடைய பணிகள் எல்லாவற்றுக்கும் துணை நின்றவர் ராஜாஜி ஆவார்.
காந்திய இயக்கத்துக்குத் தமிழகத்தில் கிராமம் கிராமமாகச் சென்று தொண்டர் படையைத் திரட்டியவர் காமராஜ் ஆவார்.

காந்தியப் பொருளாதாரத் தத்துவத்துக்கு வடிவம் அமைத்துத் தந்த பெருமைக்குரியவர் ஜே. சி. குமரப்பா ஆவார். காந்தியடிகளின் ஆதாரக் கல்வித் திட்டத்தை உருவாக்கியவர் அரியநாயகம் என்னும் ஈழத் தமிழர்.

இப்படி காந்தியடிகளுக்கு பலவகையிலும் துணையாக நின்று பெருந்தொண்டாற்றியவர்கள் தமிழர்களே.

ஜோசப் கொர்னலியஸ் செல்லதுரை குமரப்பா. சென்னையில் உயர் கல்வி கற்ற இவர் 1912-ம் ஆண்டு லண்டன் சென்று பட்டயக் கணக்கர் படிப்பில் சேர்ந்தார். பிறகு லண்டனில் சிறிது காலம் பணியாற்றிவிட்டு 1919-ல் இந்தியாவுக்குத் திரும்பி மும்பையில் சொந்தமாகவே பட்டயக் கணக்கு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார். 1928-ம் ஆண்டு அமெரிக்காவுக்குச் சென்று நிர்வாக மேலாண்மை படித்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றார். 1929-ம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பினார். பிரிட்டிஷ் அரசு தன்னுடைய வரிவிதிப்புக் கொள்கையின் மூலம் இந்தியாவை எப்படியெல்லாம் சுரண்டுகிறது என்பது குறித்து ஒரு நூலை எழுதினார். காந்தியடிகளின் பார்வைக்கு அந்த நூலைக் கொண்டு செல்ல விரும்பினார். காந்தியடிகளின் செயலாளராக இருந்த பியரிலால் மூலம் அந்த விருப்பம் நிறைவேறியது.

1929-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி பிற்பகல் 2:30 மணிக்கு சபர்மதி ஆசிரமத்தில் காந்தியடிகளை அவர் சந்தித்தார். இந்தச் சந்திப்பு அவரின் வாழ்க்கைப் போக்கை மாற்றிவிட்டது. அவரது நூலைத் தனது "யங் இந்தியா' இதழில் தொடர் கட்டுரையாக வெளியிடுவதாக காந்தியடிகள் கூறியபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தனது பொருளாதாரச் சிந்தனைகளும் குமரப்பாவின் பொருளாதாரச் சிந்தனைகளும் ஒரே மாதிரியாக அமைந்ததைக் கண்ட காந்தியடிகள் இதனை இதனால் இவன் முடிக்கும் எனக் கருதினார்.

காந்தியடிகளால் தோற்றுவிக்கப்பட்ட தேசியப் பல்கலைக்கழகமான குஜராத் வித்யா பீடத்தில் பொருளாதாரப் பேராசிரியராக குமரப்பாவை நியமிக்க காந்தியடிகள் ஏற்பாடு செய்தார். இதன் மூலம் குமரப்பாவின் சொந்த வாழ்க்கை பெரும் மாறுதலுக்குள்ளானது. திருமணத்தைத் துறந்து காந்தியத் தொண்டராக வாழத் தன்னை அவர் அர்ப்பணித்துக் கொண்டார். காந்தியடிகளுக்கு அவர் மீது உள்ள நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. 1931-ம் ஆண்டு புகழ்பெற்ற தண்டி உப்புச் சத்தியாகிரக யாத்திரையை காந்தியடிகள் தொடங்கியபோது குமரப்பாவை யங் இந்தியாவின் ஆசிரியர் பொறுப்பில் நியமித்தார்.

காந்தியடிகளைச் சுற்றி எத்தனையோ தலைவர்களும் அறிஞர் பெருமக்களும் இருந்த போதிலும் அவர்களில் யாரையும் இப்பதவியில் அவர் நியமிக்கவில்லை. குமரப்பாவை இப்பதவிக்கு அவர் தேர்ந்தெடுத்தார். அனல் பறக்கும் கட்டுரைகளை எழுதியதற்காக குமரப்பாவுக்கு ஒன்றரை ஆண்டு காலச் சிறைத் தண்டனை பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்டது. ஆனால் காந்தி இர்வின் உடன்பாடு ஏற்பட்டதனால் சில நாள்களிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டார்.

1932-ம் ஆண்டு காந்தியடிகள் கைது செய்யப்பட்டபோதும் யங் இந்தியா இதழின் ஆசிரியர் பொறுப்பை மீண்டும் குமரப்பா ஏற்க நேர்ந்தது. அப்போதும் இவர் எழுதிய கட்டுரைகளுக்காக இவருக்கு இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக் காலம் முழுவதையும் நாசிக் சிறையில் அவர் கழித்தார்.

1934-ம் ஆண்டு சிறையிலிருந்து வெளிவந்தவுடன் காந்தியடிகள் இவரை பிகார் பூகம்ப நிவாரணப் பணிகளுக்கு அனுப்பி வைத்தார். அவர் அங்கிருந்து டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்குத் துணையாக ஓராண்டு காலம் பணியாற்றினார்.

1935-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் அகில இந்தியக் கிராமத் தொழில்கள் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் தலைவராகக் காந்தியடிகளும் செயலாளர் மற்றும் அமைப்பாளராக குமரப்பாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த அமைப்பின் மூலம் நாடெங்கும் கிராமத் தொழில்களைத் திருத்தி அமைக்கவும் அதன் வளர்ச்சிக்கு உதவும் பல்வேறு தொழில்நுட்பங்களை வழங்கவும் இந்த அமைப்பு பெரும் பணியாற்றியது. கிராம உத்யோக் பத்திரிக்கா என்ற பெயரில் மாத இதழ் ஒன்றையும் குமரப்பா நடத்தினார்.

1938-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சந்திர போஸ் இருந்தபோது தேசியத் திட்டக் குழு ஒன்றை அவர் அமைத்தார். பிற்காலத்தில் நாடு சுதந்திரம் பெற்றபோது உருவாக்கப்பட்ட தேசியத் திட்டக் குழுவுக்கு இதுவே முன்னோடியாகும். இக்குழுவுக்குத் தலைவராக ஜவாஹர்லால் நேரு நியமிக்கப்பட்டார். காந்தியடிகள் மற்றும் நேருவின் வற்புறுத்தலுக்கு இணங்க இக்குழுவில் அங்கம் வகிக்க இசைந்த குமரப்பா 3 மாதங்களில் இக்குழுவில் இருந்து விலகினார். திட்ட அணுகுமுறையில் அவருக்கு இருந்த கருத்து வேறுபாடே இதற்குக் காரணமாகும்.

1942-ம் ஆண்டு ஆகஸ்டு போராட்டத்தின்போது அதில் ஈடுபட்டு பல்வேறு தலைமறைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இரண்டரை ஆண்டுக் காலம் சிறையிலடைக்கப்பட்டு 1945-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். சிறையிலிருந்த போது "நிரந்தரப் பொருளாதாரம்', "இயேசு பிரானின் போதனைகளும், செயற்பாடுகளும்' எனும் இரு நூல்களை எழுதினார். இந்த நூல்களைப் படித்து வியந்து போற்றிய காந்தியடிகள் குஜராத் வித்யா பீடத்தின் மூலம் இவருக்கு இரு முனைவர் பட்டங்களை வழங்கச் செய்தார்.

இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்குவது குறித்து இந்தியத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக பிரிட்டிஷ் அரசால் அனுப்பப்பட்ட நாடாளுமன்றக் குழு காந்தியடிகளை சென்னையில் 23-1-1946 அன்று சந்தித்துப் பேசியது. இந்தியாவின் பொருளாதார சமுதாய சிக்கல்கள் குறித்து ஜே.சி. குமரப்பா, அவர் சகோதரர் பரதன் குமரப்பா ஆகியோரைச் சந்தித்துப் பேசுமாறு காந்தியடிகள் நாடாளுமன்றக் குழுவை வேண்டிக் கொண்டார். எனவே அக்குழுவினர் இருவரையும் சந்தித்துப் பேசி பல விவரங்களை அறிந்து கொண்டனர். அந்த இரு சகோதரர்களுக்கும் காந்தியடிகள் அளித்த முக்கியத்துவத்தை இந்நிகழ்ச்சி சுட்டிக்காட்டுகிறது.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு அவருக்கு அதிகார அரசியலில் நாட்டமில்லை. இந்தியாவின் முதலாவது நிதியமைச்சராக இவரே நியமிக்கப்படுவார் என்ற நம்பிக்கை நாடெங்கும் பரவியிருந்தது. ஆனாலும் எந்த பதவியையும் ஏற்க அவர் முன்வரவில்லை.

1947-ம் ஆண்டு காங்கிரஸ் செயற்குழுவில் இருந்து ஜெயப்பிரகாஷ் நாராயணன் விலகியபோது இவரை நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது. ஆனால் காந்தியடிகள் வற்புறுத்தியும்கூட இவர் அதை ஏற்க மறுத்தார். காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த இடதுசாரிகள் மற்றும் வலதுசாரிகள் ஏற்கக்கூடிய பொருளாதாரக் கொள்கை ஒன்றை வகுத்து பிரதமர் நேருவிடம் இவர் அளித்தார். ஆனால் காந்தியடிகளின் மறைவுக்குப் பிறகு குமரப்பாவின் ஆலோசனைகளை நேரு ஏற்கவில்லை. இந்தியாவில் சோஷலிச முறையில் தொழிற்புரட்சி ஒன்றை ஏற்படுத்துவதையே அவர் விரும்பினார். அந்த அடிப்படையில் அரசுத் துறையில் கனரகத் தொழில்களை உருவாக்கினார்.

ஆனால் குமரப்பாவோ இயற்கையோடு இயைந்த தொழிற்புரட்சி ஏற்பட வேண்டுமென்று விரும்பினார். கடலில் உள்ள நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி மேலே சென்று மேகமாகி மீண்டும் நிலத்தில் மழையாகப் பொழிகிறது.

ஆறுகளில் பெருகி ஓடி வரும் மழை நீர் கடலில் கலக்கிறது. இது இயற்கையான சுழற்சியாகும். இந்த இயற்கை நெறியை மறந்து செயற்படும் நாடு குழப்பத்தில் ஆழும் என குமரப்பா கருதினார்.
ஒவ்வொரு கிராமமும் அங்கு வாழும் மக்களுக்குத் தேவையான பொருள்களை அங்கேயே கைத்தொழில் முறையில் உற்பத்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெற்ற கிராமமாக மாறுவது மொத்தத்தில் நாட்டைத் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றிவிடும் எனக் கருதினார். ஆனால் காந்தியடிகளுக்குப் பிறகு அவரது யோசனைகளை ஏற்கவோ, செயற்படுத்தவோ யாரும் தயாராக இல்லை.

1950-களின் தொடக்கத்தில் சீனா, சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றுக்கு அவர் நல்லெண்ணத் தூதுவராகச் சென்று வந்தார். அந்நாடுகளில் ஏற்பட்டிருக்கும் புரட்சிகரமான மாற்றங்களை நேரில் காணும் ஒரு வாய்ப்பாக இந்தப் பயணத்தை அவர் பயன்படுத்திக் கொண்டார்.

இந்தியாவில் விரைவான தொழில்மயக் கொள்கையும் நிலச் சீர்த்திருத்தத்தைப் பற்றி உண்மையாக எந்த நடவடிக்கையும் இல்லாதிருப்பதையும் அதற்கு நேர்மாறாக இந்நாடுகளில் நிலைமை இருப்பதையும் நேரில் கண்டார். அந்தப் பயணத்துக்குப் பிறகு இந்நாடுகளில் நிலவும் தன்னிறைவு உணர்வை அவர் பாராட்டினார்.

மக்களின் அடிப்படை வாழ்வில் முன்னேற்றம் காண்பதை நோக்கமாகக் கொண்டு அரசுகள் இயங்குவதை அவர் மிகவும் பாராட்டினார். உண்மையான காந்தியவாதியான அவர் கம்யூனிச நாடுகள் குறித்து வெளியிட்ட கருத்துகள் பலருக்கு வியப்பை அளித்தன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் உலகப் பெரும் வல்லரசாக அமெரிக்கா உருவானதையும் அவர் கண்டார். ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளுக்குப் பதிலாக அமெரிக்கா புதிய ஏகாதிபத்தியமாக உருவானதை அவர் கண்டித்தார்.

கொரியாவில் அமெரிக்கா நாபாம் குண்டுகளையும், கிருமி குண்டுகளையும் வீசியதை அவர் கடுமையாகக் கண்டனம் செய்தார். அமெரிக்காவுக்கு எதிராகப் பொருளாதாரப் புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இந்தியா உள்பட உலக நாடுகள் முன்வரவேண்டுமென்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

வினோபா பாவே தலைமையில் நடைபெற்ற பூதான இயக்கமும் அவரது விமர்சனத்துக்கு உள்ளாயிற்று. நிலத்தைத் தானமாகப் பெற்று நிலமில்லாதவர்களுக்கு அதை வழங்குவதோடு பூதான இயக்கத்தின் கடமை முடிந்துவிடாது. நிலத்தைப் பெற்ற ஏழை எளிய மக்கள் அதில் வேளாண்மை செய்யவும் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளவும் வழிவகை செய்ய வேண்டும்.

அதற்கு அந்த மக்களைப் பயிற்றுவிப்பதற்குத் தொண்டர்களும் வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் பூதான இயக்கம் இயங்குவது வெற்றி பெறாது என்று அவர் கூறியபோது, பலரும் அவர்மீது கோபப்பட்டனர். ஆனால் அவர் கூறியதுதான் சரியானதென்பதை காலம் நிரூபித்தது.

சர்வோதய இயக்கம் குறித்தும் அவருக்கு இதுபோன்ற கருத்துகள் இருந்தன. அதை அவர் வெளிப்படுத்தத் தயங்கவில்லை. இதை அந்த இயக்கத்திலிருந்த பலர் விரும்பவில்லை. ஆனாலும் அவர் மனதில் பட்டதை மறைக்காமல் கூறினார்.

தேசத்தந்தை காந்தியடிகளுக்குப் பொருளாதாரத் திட்டம், நிர்மாணத் திட்டம், கைத்தொழில் திட்டம் போன்ற பல துறைகளில் அரிய ஆலோசனைகளை வழங்கி அவரால் பாராட்டப்படும் நிலையில் இருந்த நிகரற்ற தமிழர் ஜே.சி. குமரப்பா.

காந்தியடிகளின் நெருங்கிய சகாக்களாக இருந்த அத்தனை தலைவர்களுடனும் தோழமை உணர்வோடு பழகியவர் அவர். ஆனாலும் ஒருபோதும் அவற்றைப் பயன்படுத்திப் பதவி நாடாதவர்.

காந்தியடிகள் எப்படி அதிகாரப் பதவிகள் எதையும் நாடாமல் வாழ்ந்தாரோ, அதைப்போல அவருடைய உண்மையான சீடரான குமரப்பாவும் "என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற நாவுக்கரசரின் வாக்குக்கு ஏற்ப வாழ்ந்தார்.

காந்தியடிகளின் மறைவுக்குப் பிறகும் அவர் வழியிலிருந்து கொஞ்சமும் விலகாமல் உறுதியாக நடந்தவர் குமரப்பா. இதன் காரணமாகவே தன்னுடைய பழைய சகாக்களின் புறக்கணிப்புக்கு அவர் ஆளானார். அதைக் குறித்தெல்லாம் அவர் ஒருபோதும் கவலைப்படவில்லை. உண்மையான காந்தியவாதியாக இறுதிவரை வாழ்ந்தார்.

மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியிலிருந்த காந்தி நிகேதன் ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று அருந்தொண்டு புரிந்தார். இறுதியாக சென்னை அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டபோது வினோபா பாவே, குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, காமராஜ் போன்ற பல தலைவர்கள் அவரைச் சந்தித்தனர்.

அவருடைய சகா அரியநாயகம், சகோதரர் பரதன் குமரப்பா ஆகியோர் அவர் அருகேயே இருந்தனர். அவருடைய குருநாதர் காந்தியடிகள் மறைந்த அதே நாளான 30-1-1960 அன்று அவர் மறைந்தார்.

காந்தியப் பொருளாதாரத்தை வடிவமைத்த அந்தத் தமிழனின் 50-வது நினைவுநாள்.

யார் யாருக்கெல்லாமோ பிறந்த நாளும், நினைவு நாளும் நடத்தப்படுகிறது. குமரப்பாவைப் பற்றி நினைக்கக் காங்கிரஸ்காரர்களுக்குக்கூட நேரமுமில்லை, மனமுமில்லை.

தமிழன் நன்றி கெட்டவனாக இருக்கலாம். ஆனால், உலகம் அப்படியல்ல. குமரப்பாவின் நிலைத்த பொருளாதாரக் கொள்கையும், அவர் முன்வைத்த மரபுசாரா எரிசக்திக் கொள்கையும் உலகளாவிய சிந்தனையைத் தூண்டியிருக்கிறது.

பழ. நெடுமாறன்




நன்றி: தினமணி 30.01.2010