Thursday, January 21, 2010

நாமெல்லாம் உப்புப் போட்டுத்தான் சாப்பிடுகிறோமா?

மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விவகாரம் முற்றி சந்திக்கு வந்திருக்கிறது. மரபணு மாற்றக் கத்தரிக்காயை இந்தியாவில் பயன்படுத்தலாமா, கூடாதா என்பதை இறுதியாக முடிவு செய்யவேண்டியது அதற்கான நிபுணர் குழுதான் என்று வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் கூற, இல்லையில்லை இறுதி முடிவை எடுக்க வேண்டியது மத்திய அரசுதான் என்று அடுத்த நாளே மறுத்து நமது வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.

தேசியவாத காங்கிரஸ் என்ற தோழமைக் கட்சியின் தனிப்பெரும் தலைவர் சரத் பவார். அவருடைய சமீபகால அரசியல் நடவடிக்கைகள், மக்கள், அதிலும் குறிப்பாக விவசாயிகள், நலன் சாராது கூட்டுறவுச் சர்க்கரை ஆலை அதிபர்கள், சர்க்கரை மொத்த வியாபாரிகள், இறக்குமதியாளர்கள் ஆகியோர் நலன் சார்ந்து இருப்பது விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. நெல், கோதுமை, கரும்பு சாகுபடியாளர்களுக்குக் கட்டுபடியாகும் கொள்முதல் விலையை வாங்கித் தருவதில் அதிக ஆர்வம் காட்டாத சரத் பவார், இறக்குமதி கோதுமைக்குக் கூடுதல் விலை தருவதற்குத் தயக்கம் இல்லை என்று வெளிப்படையாகவே அறிவித்து கோதுமை உற்பத்தியாளர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார்.

இதையெல்லாம் கூறக் காரணம், மரபணு மாற்றப்பட்ட கத்தரி விஷயத்தில் நிபுணர் குழுவின் முடிவே இறுதியானது என்று கூறி, இந்த நாட்டுக்கு மிகப்பெரிய தீங்கு இழைக்கப்பட காரணமாக அவர் இருந்துவிடுவாரோ என்கிற அச்சம்தான். நல்லவேளை ஜெய்ராம் ரமேஷ் குறுக்கிட்டு அவருக்குக் கடிவாளம் போட்டிருக்கிறார்.

பி.டி. கத்தரிக்காய் விதைகளை "மேகோ' (மகாராஷ்டிர உயர்விளைச்சல் விதை நிறுவனம்) என்கிற நிறுவனம் தயாரிக்கிறது. அமெரிக்க பி.டி. நிறுவனம் தான் மகாராஷ்டிரத்தில் இப்படி ஒரு புதிய பெயரில் சில இந்தியர்களை முன்னிலைப்படுத்தி ஓர் இந்திய நிறுவனம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வேடிக்கை என்னவென்றால் மரபணு மாற்றப்பட்ட இந்தக் கத்தரிக்காய் விதை உலகின் எந்தப் பகுதியிலும் இதுவரை பெருமளவு நிலப்பரப்பில் விதைக்கப்பட்டு நேரடியாக சோதிக்கப்படவே இல்லை என்பதுதான்.

மரபணு மாற்றப்பட்ட பருத்தியாவது பரவாயில்லை. கத்தரிக்காய் என்பது நேரிடையாக மக்களால் உணவாகச் சாப்பிடப்படுவது. இதில் நச்சுக்கலப்பு இருந்தால் அதன் விளைவு எத்தகையதாக இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மேலும், அமெரிக்காவிலும் ஏனைய மேலைநாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர்கள் விவசாயத்துக்காக இருக்கும்போது, மரபணுப் பரிசோதனைகளை அங்கே நடத்தாமல் இந்தியா போன்ற ஏமாளி நாடுகளில் நடத்தி, நம்மைப் பரிசோதனைக் களமாக்குவதன் ராஜதந்திரம், சிறந்த அரசியல் ராஜதந்திரியான சரத் பவாருக்கு ஏன் தெரியவில்லை என்கிற கேள்வியும் எழுகிறது.

இதே பி.டி. ரக பருத்தி விதைகளை வாங்கி சாகுபடி செய்து, சாகுபடி பொய்த்ததால் கடனில் மூழ்கி தற்கொலை செய்துகொண்ட இந்திய விவசாயிகள் எண்ணிக்கை சில ஆயிரம். அவர்களுக்கு இந்த நிறுவனம் எந்த நஷ்டஈட்டையும் அளித்ததாகத் தகவலே கிடையாது. ஆலைகளில் இந்தப் பருத்தியைக் கையாண்ட தொழிலாளர்களுக்கு ஒருவித அரிப்பும், இதர உடல் உபாதைகளும் ஏற்பட்டது பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பசுமைப்புரட்சியை இந்த நாட்டில் கொண்டு வந்தபோது மிகவும் பெருமிதம் கொண்ட நமக்கு அதன் தீமைகள் புரிய பல ஆண்டுகள் பிடித்தன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

மரபணு மாற்றிய கத்தரிக்காயைப் பன்னாட்டு நிறுவனம்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. அதன் நோக்கம் இந்தியர்கள் கத்தரிச் சாகுபடியில் அமோக லாபம் சம்பாதிக்க வேண்டும், பூச்சி அரிக்காத காய்கறிகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும், ஓர் ஏக்கருக்கு இப்போது கிடைப்பதைவிட 3 மடங்கு 5 மடங்கு என்று கத்தரிக்காய் விளைய வேண்டும் என்பதெல்லாம் அல்ல. இவையெல்லாம் வியாபார உத்திக்காகக் கூறப்பட்டாலும் நம்முடைய பாரம்பரிய கத்தரிக்காய் ரகங்களைப் புழக்கத்திலிருந்து அகற்றுவதுதான் அவர்களின் நோக்கம். அதன் பிறகு கத்தரிக்காய் என்றாலே நாம் ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவனம் தயாரித்துத்தரும் ரகத்தைத்தான் வாங்க வேண்டியிருக்கும். அப்போது அதற்குத் தரும் விலையும் அமோகமாக இருக்கும்.

அதைவிடுங்கள், அதனால் நிலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படக்கூடிய கெடுதல்களை எப்படி முன்கூட்டியே அனுமானிப்பது? நாம் காரணம் இல்லாமலேயே சந்தேகப்படும் பத்தாம்பசலிகளாகவே கூட இருந்து தொலைப்போம், நாளை இதனால் கெடு விளைவுகள் ஏற்பட்டால் நம்மைக் காப்பாற்றப் போவது யார்? போபாலில் பல்லாயிரக்கணக்கானவர்களின் உயிரையும் வாழ்வையும் உறிஞ்சிய யூனியன் கார்பைடு என்ற பன்னாட்டு நிறுவனம் இன்று எங்கே? அதன் தலைவராக இருந்த ஆண்டர்சன் எங்கே? அவரைக் கொண்டுவந்து நீதியின் முன் நிறுத்த மன்மோகன் அரசு எடுத்த தீவிர முயற்சிகள் என்ன? பாதிக்கப்பட்டவர்கள் இப்போதும் முழுமையான நஷ்டஈடு கிடைக்காமல் தவிக்கிறார்களே, அவர்களுக்கு விடிவுதான் என்ன?

நாளை மரபணு கத்தரிக்காயால் அப்படியொரு கெடு பலன் ஏற்பட்டுவிட்டால் அதற்குப் பிணை நிற்கப் போவது யார்? இந்தியாவில் அணு மின் நிலையம் அமைக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், ஏதேனும் பெரிய அசம்பாவிதம் நேரிட்டால் மிகவும் குறைந்தபட்ச நஷ்ட ஈடு தந்தாலே போதும், வேறு எந்த ஜாமீனும் தேவையில்லை என்று ஒப்பந்தம் தயாரிக்கும் இந்த தேசபக்தர்களை நம்பியா நம் நாட்டு நிலங்களை புதிய மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு ஒப்படைப்பது?

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஆணிவேரையே கெல்லி எறிய தண்டியிலே ஒரு கைப்பிடி உப்பைக் கையில் எடுத்தார் அண்ணல் மகாத்மா காந்தி. நாமெல்லாம் உப்புப் போட்டுத்தான் சாப்பிடுகிறோமா? என் செய்வது, ஐநூறு ரூபாய்க்கும் ஆயிரம் ரூபாய்க்கும் விற்பதற்குத்தான் வோட்டு என்றாகிவிட்ட பிறகு, விலைபேசுவது நம் நாட்டு சரத் பவாராக இருந்தால் என்ன, அமெரிக்க ஆண்டர்சனாக இருந்தால்தான் என்ன?

நன்றி: தினமணி 22.01.2010

No comments: