Sunday, January 24, 2010

மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம்

மொழிப்போர் ஈகியருக்கு

வீரவணக்கம்

திருவள்ளுவராண்டு 2041 சுறவம் 12


மொழிப்போர் ஈகியர் நாள் - 25.01.2010

Saturday, January 23, 2010

தமிழால் வளம்பெறலாம்!

இன்று உலகை ஆளும் முதலாளிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் உள்ள ஒரே இலக்கு தாம் செய்யும் தொழிலில் “இலாபம்”, “மேலும் இலாபம்”, “மேலும் மேலும் இலாபம்” ஈட்டுவது மட்டுமே. இந்த இலக்கை அடைய அவர்கள் “எதை” வேண்டுமானாலும் செய்ய தயாராகவே இருக்கிறார்கள். இந்த கட்டுரையின் நோக்கம் அந்த “எதை” வேண்டுமானாலும் என்ற இடத்தில் “தமிழையும்” வைக்கவேண்டும் என்பது மட்டுமே.

உலகில் உள்ள அனைத்து மொழிக்கும் பல்வேறு சிறப்புகள் உண்டு. ஒரு மொழிக்கு எத்தனை சிறப்புகள் இருந்தாலும் அந்த மொழி மக்கள் பயன்பாட்டில் இருந்தால் மட்டுமே காலத்தால் நிலைத்து நிற்கமுடியும். குறிப்பாக ஆட்சி அதிகாரத்திலும், வியாபாரா-வர்த்தக-தொழில் நடைமுறைகளிலும் ஒரு மொழி பயன்படுத்தப்படுமானால் அந்த மொழியும் - அந்த மொழியை அறிந்தவர்களும் – அந்த மொழி சார்ந்த பிற துறைகளும் தானாக வளர்ச்சியடையும்.

மேற்குறிப்பிட்ட வளர்ச்சியை அடைய தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? ஆட்சியாளர்களுக்கு கோரிக்கை மனு.., கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம்..., ஆர்ப்பாட்டம்..., கோரிக்கைப் பேரணி... போன்ற கூடிக்களையும் நிகழ்வுகள் எதுவுமே தேவையில்லை. நாம் இருக்கும் இடத்திலேயே, நமது அன்றாட வாழ்க்கை நடைமுறைகளிலேயே இதை சாதிக்கலாம். தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடி செயலாற்றுவோம். நாம் செய்ய வேண்டிய செய்யக்கூடிய பணிகள் ஒருசிலவற்றையாவது செய்வொம்...

நம்மால் ஏதாவது ஒருவகையில் பயனடையும் அல்லது இலாபமடையும் அனைவரோடும் தமிழில் தொடர்புகொண்டு அவர்களையும் தம்மோடு தமிழில் தொடர்புகொள்ள வலியுறுத்துவோம்.

நாம் பணிபுரியும் இடத்தில் நமது அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து நடைமுறைகளிலும் தமிழை பயன்படுத்துவோம்.

மின்னணு இயந்திரங்கள், மின்சார வீட்டு உபயோக பொருட்கள், போக்குவரத்து வாகனங்கள் போன்றவற்றின் பயன்பாடுகள் நமது வாழ்க்கை நடைமுறைகளில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. நாம் வாங்கும் எந்தவொரு மேற்குறிப்பிட்ட பொருளுடனும் “பயனாளர் கையேடுகள்” (User Manuals) வழங்கப்படுகின்றன. பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தாங்கள் வெளியிடும் கையேடுகளை பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே வெளியிடுகின்றன. தாம் உற்பத்தி செய்யும் பொருட்களை அனைத்து வகைகளிலும் பயனாளிகள் விரும்ப வேண்டும் என்றே உற்பத்தியாளர்கள் விரும்புவார்கள். அந்த வகையில் நாம் வாங்கும் பொருட்களின் முகவர்களிடமும் உற்பத்தியாளர்களிடமும் பயனாளர் கையேடுகளை தமிழில் வழங்க அனைத்து வகைகளிலும் வலியுறுத்துவோம். நமது கோரிக்கை தொடர்ந்தால் தமிழ்நாட்டில் வர்த்தகமொழியாக தமிழ்மட்டுமே இருக்கும்.

பொருட்களை உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்க்க “குறைதீர்க்கும் நடுவங்களை” (Customer Care, Help line, etc...) உலகெங்கும் நிறுவியுள்ளன. அந்த நடுவங்களை தொடர்புகொண்டு தாங்கள் உரையாட நேரிட்டால் தங்களுக்கு ஆங்கிலம் தெரிந்தாலும் தொடர்ந்து தமிழிலேயே உரையாடுங்கள். உறுதியாக அவர்கள் தங்களுக்கு தமிழில் பதிலளிக்கவே முயற்சி செய்வார்கள். எந்தவொரு வர்த்தக நிறுவனமும் வாடிக்கையாளர்களிடமிருந்து தொடர்புகளை துண்டித்துக்கொள்ளாது. அவர்களின் நோக்கம் இலாபம்... இலாபம்... இலாபம் மட்டுமே...

இந்த நூற்றாண்டு முதல் மொழிபெயர்ப்புத்துறைக்கு ஆயிரகணக்கான கோடி ரூபாயை ஒதுக்க பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இருப்பதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் உலகெங்கும் குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வட்டார அளவில் தனது வாடிக்கையாளர்களை விரிவுபடுத்த தயாராகிவருகின்றன. இந்தச் சூழலை தமிழர்கள் அனைவரும் சரியாக பயன்படுத்த வேண்டும்.

தொடருவோம்...

Thursday, January 21, 2010

நாமெல்லாம் உப்புப் போட்டுத்தான் சாப்பிடுகிறோமா?

மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விவகாரம் முற்றி சந்திக்கு வந்திருக்கிறது. மரபணு மாற்றக் கத்தரிக்காயை இந்தியாவில் பயன்படுத்தலாமா, கூடாதா என்பதை இறுதியாக முடிவு செய்யவேண்டியது அதற்கான நிபுணர் குழுதான் என்று வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் கூற, இல்லையில்லை இறுதி முடிவை எடுக்க வேண்டியது மத்திய அரசுதான் என்று அடுத்த நாளே மறுத்து நமது வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.

தேசியவாத காங்கிரஸ் என்ற தோழமைக் கட்சியின் தனிப்பெரும் தலைவர் சரத் பவார். அவருடைய சமீபகால அரசியல் நடவடிக்கைகள், மக்கள், அதிலும் குறிப்பாக விவசாயிகள், நலன் சாராது கூட்டுறவுச் சர்க்கரை ஆலை அதிபர்கள், சர்க்கரை மொத்த வியாபாரிகள், இறக்குமதியாளர்கள் ஆகியோர் நலன் சார்ந்து இருப்பது விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. நெல், கோதுமை, கரும்பு சாகுபடியாளர்களுக்குக் கட்டுபடியாகும் கொள்முதல் விலையை வாங்கித் தருவதில் அதிக ஆர்வம் காட்டாத சரத் பவார், இறக்குமதி கோதுமைக்குக் கூடுதல் விலை தருவதற்குத் தயக்கம் இல்லை என்று வெளிப்படையாகவே அறிவித்து கோதுமை உற்பத்தியாளர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார்.

இதையெல்லாம் கூறக் காரணம், மரபணு மாற்றப்பட்ட கத்தரி விஷயத்தில் நிபுணர் குழுவின் முடிவே இறுதியானது என்று கூறி, இந்த நாட்டுக்கு மிகப்பெரிய தீங்கு இழைக்கப்பட காரணமாக அவர் இருந்துவிடுவாரோ என்கிற அச்சம்தான். நல்லவேளை ஜெய்ராம் ரமேஷ் குறுக்கிட்டு அவருக்குக் கடிவாளம் போட்டிருக்கிறார்.

பி.டி. கத்தரிக்காய் விதைகளை "மேகோ' (மகாராஷ்டிர உயர்விளைச்சல் விதை நிறுவனம்) என்கிற நிறுவனம் தயாரிக்கிறது. அமெரிக்க பி.டி. நிறுவனம் தான் மகாராஷ்டிரத்தில் இப்படி ஒரு புதிய பெயரில் சில இந்தியர்களை முன்னிலைப்படுத்தி ஓர் இந்திய நிறுவனம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வேடிக்கை என்னவென்றால் மரபணு மாற்றப்பட்ட இந்தக் கத்தரிக்காய் விதை உலகின் எந்தப் பகுதியிலும் இதுவரை பெருமளவு நிலப்பரப்பில் விதைக்கப்பட்டு நேரடியாக சோதிக்கப்படவே இல்லை என்பதுதான்.

மரபணு மாற்றப்பட்ட பருத்தியாவது பரவாயில்லை. கத்தரிக்காய் என்பது நேரிடையாக மக்களால் உணவாகச் சாப்பிடப்படுவது. இதில் நச்சுக்கலப்பு இருந்தால் அதன் விளைவு எத்தகையதாக இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மேலும், அமெரிக்காவிலும் ஏனைய மேலைநாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர்கள் விவசாயத்துக்காக இருக்கும்போது, மரபணுப் பரிசோதனைகளை அங்கே நடத்தாமல் இந்தியா போன்ற ஏமாளி நாடுகளில் நடத்தி, நம்மைப் பரிசோதனைக் களமாக்குவதன் ராஜதந்திரம், சிறந்த அரசியல் ராஜதந்திரியான சரத் பவாருக்கு ஏன் தெரியவில்லை என்கிற கேள்வியும் எழுகிறது.

இதே பி.டி. ரக பருத்தி விதைகளை வாங்கி சாகுபடி செய்து, சாகுபடி பொய்த்ததால் கடனில் மூழ்கி தற்கொலை செய்துகொண்ட இந்திய விவசாயிகள் எண்ணிக்கை சில ஆயிரம். அவர்களுக்கு இந்த நிறுவனம் எந்த நஷ்டஈட்டையும் அளித்ததாகத் தகவலே கிடையாது. ஆலைகளில் இந்தப் பருத்தியைக் கையாண்ட தொழிலாளர்களுக்கு ஒருவித அரிப்பும், இதர உடல் உபாதைகளும் ஏற்பட்டது பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பசுமைப்புரட்சியை இந்த நாட்டில் கொண்டு வந்தபோது மிகவும் பெருமிதம் கொண்ட நமக்கு அதன் தீமைகள் புரிய பல ஆண்டுகள் பிடித்தன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

மரபணு மாற்றிய கத்தரிக்காயைப் பன்னாட்டு நிறுவனம்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. அதன் நோக்கம் இந்தியர்கள் கத்தரிச் சாகுபடியில் அமோக லாபம் சம்பாதிக்க வேண்டும், பூச்சி அரிக்காத காய்கறிகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும், ஓர் ஏக்கருக்கு இப்போது கிடைப்பதைவிட 3 மடங்கு 5 மடங்கு என்று கத்தரிக்காய் விளைய வேண்டும் என்பதெல்லாம் அல்ல. இவையெல்லாம் வியாபார உத்திக்காகக் கூறப்பட்டாலும் நம்முடைய பாரம்பரிய கத்தரிக்காய் ரகங்களைப் புழக்கத்திலிருந்து அகற்றுவதுதான் அவர்களின் நோக்கம். அதன் பிறகு கத்தரிக்காய் என்றாலே நாம் ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவனம் தயாரித்துத்தரும் ரகத்தைத்தான் வாங்க வேண்டியிருக்கும். அப்போது அதற்குத் தரும் விலையும் அமோகமாக இருக்கும்.

அதைவிடுங்கள், அதனால் நிலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படக்கூடிய கெடுதல்களை எப்படி முன்கூட்டியே அனுமானிப்பது? நாம் காரணம் இல்லாமலேயே சந்தேகப்படும் பத்தாம்பசலிகளாகவே கூட இருந்து தொலைப்போம், நாளை இதனால் கெடு விளைவுகள் ஏற்பட்டால் நம்மைக் காப்பாற்றப் போவது யார்? போபாலில் பல்லாயிரக்கணக்கானவர்களின் உயிரையும் வாழ்வையும் உறிஞ்சிய யூனியன் கார்பைடு என்ற பன்னாட்டு நிறுவனம் இன்று எங்கே? அதன் தலைவராக இருந்த ஆண்டர்சன் எங்கே? அவரைக் கொண்டுவந்து நீதியின் முன் நிறுத்த மன்மோகன் அரசு எடுத்த தீவிர முயற்சிகள் என்ன? பாதிக்கப்பட்டவர்கள் இப்போதும் முழுமையான நஷ்டஈடு கிடைக்காமல் தவிக்கிறார்களே, அவர்களுக்கு விடிவுதான் என்ன?

நாளை மரபணு கத்தரிக்காயால் அப்படியொரு கெடு பலன் ஏற்பட்டுவிட்டால் அதற்குப் பிணை நிற்கப் போவது யார்? இந்தியாவில் அணு மின் நிலையம் அமைக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், ஏதேனும் பெரிய அசம்பாவிதம் நேரிட்டால் மிகவும் குறைந்தபட்ச நஷ்ட ஈடு தந்தாலே போதும், வேறு எந்த ஜாமீனும் தேவையில்லை என்று ஒப்பந்தம் தயாரிக்கும் இந்த தேசபக்தர்களை நம்பியா நம் நாட்டு நிலங்களை புதிய மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு ஒப்படைப்பது?

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஆணிவேரையே கெல்லி எறிய தண்டியிலே ஒரு கைப்பிடி உப்பைக் கையில் எடுத்தார் அண்ணல் மகாத்மா காந்தி. நாமெல்லாம் உப்புப் போட்டுத்தான் சாப்பிடுகிறோமா? என் செய்வது, ஐநூறு ரூபாய்க்கும் ஆயிரம் ரூபாய்க்கும் விற்பதற்குத்தான் வோட்டு என்றாகிவிட்ட பிறகு, விலைபேசுவது நம் நாட்டு சரத் பவாராக இருந்தால் என்ன, அமெரிக்க ஆண்டர்சனாக இருந்தால்தான் என்ன?

நன்றி: தினமணி 22.01.2010

Tuesday, January 12, 2010

தேவை மதுவிலக்கு என்னும் மலர்க்கிரீடம்!

சில தினங்களுக்கு முன்பு புத்தாண்டு தினத்தையொட்டி அசம்பாவிதச் சம்பவங்களைத் தடுக்கும்விதமாக, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களைப் போக்குவரத்து போலீஸôர் கண்காணித்து கைது செய்தும், அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்ற அரசின் எச்சரிக்கையை மதித்து நடந்திருந்தால் தண்டனையிலிருந்து தப்பித்திருக்கலாம் என கைதானோர் அதன்பிறகு எண்ணியிருப்பார்களோ என்னவோ?

புத்தாண்டு தினத்தில் மட்டும் தமிழகத்தில் ரூ. 47 கோடி அளவுக்கு மதுவிற்பனை நடைபெற்றிருப்பதாகவும், இது கடந்த ஆண்டைவிட 10 சதவிகிதம் அதிகம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுஅருந்துவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிப்பது இதன்மூலம் வெட்டவெளிச்சமாகிறது.

சுப நிகழ்ச்சிகளோ, துக்க நிகழ்ச்சிகளோ பார்ட்டி என்ற பெயரில் மதுகுடித்து கூத்தடிப்பது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அந்தப் பட்டியலில் ஒருசில ஆண்டுகளாகப் புத்தாண்டையும் மதுமயக்கத்திலேயே வரவேற்கும் பு(ம)து வகை கலாசாரம் சென்னை போன்ற பெரிய நகரங்களை மட்டுமன்றி சின்னஞ்சிறிய கிராமங்களிலும் வேரூன்றத் தொடங்கியுள்ளது.

முகவரி கேட்டு வருவோருக்கு வழிசொல்ல முன்பெல்லாம் தலைவர்களின் சிலைகள், பூங்காக்கள், கோயில்கள் உதவின. இப்போது டாஸ்மாக் கடைகளே பெரிதும் உதவுகின்றன. வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளைத் திறந்து மது ஆறு வற்றாமல் பாயும்படி பார்த்துக் கொள்வதால் நாட்டில் நடப்பது "குடி'யாட்சிதான் என்று ஆட்சியாளர்கள் ஒருவகையில் மார்தட்டிக் கொள்ளலாம்.

மயக்கம் தரும் "கள்'ளைத் தரும் என்பதாலேயே பெரியார் தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்}இது கடந்த கால வரலாறு. ஆனால், அவரிடம் "பாஸ்மார்க்' வாங்கியதாகக் கூறிப் பெருமை கொள்ளும் தலைவர்களோ, இளைஞர்களின் எதிர்காலத்தை விழுங்கும் "டாஸ்மாக்' கடைகளைத்தான் திறந்து வைக்கின்றனர். இது நிகழ்காலம் சொல்லும் கசப்பான உண்மை.

திராவிடம் என்னும் இனப்பற்று பேசிய தலைவர்கள் அந்த இனத்தின் இளைஞர்களையும், குடும்பங்களையும் பாதிக்கும் எனத் தெரிந்தே தீரா விடம் (விஷம்) என்னும் மதுவைப் பணப்பற்று காரணமாக ஆதரிக்கின்றனர் என்பது வேதனை தரக்கூடியதுதானே?

அரசர்களான கடையேழு வள்ளல்கள் நாடி வந்த குடிமக்களுக்கெல்லாம் வாரிவாரி வழங்கினார்களாம். கலிகால வள்ளலான மது அரக்கனோ, மக்களின் குடியால் கஜானா நிரம்பி வழியவழிய அரசுக்கு வாரி வழங்குகிறான். நாய் விற்ற காசு குரைக்குமோ என்னவோ, ஆனால் மது விற்ற காசு என்றால் நிச்சயம் மயக்கம்தான், ஆட்சியாளர்களுக்கு.

இப்போது, வாங்கும் ஊதியத்தின் மொத்தத்தையும் ஒரு குடும்பத் தலைவன் குடித்தே அழித்தாலும் பரவாயில்லை. அவன் பாக்கெட்டில் ஒரு ரூபாய் இருந்தால்கூட போதும். அதைக் கொண்டு நியாயவிலைக் கடையில் வாங்கும் கிலோ அரிசியில் அவன் குடும்பம் பசியாறுமே என இவர்கள் நியாயம் பேசலாம்.

பல ஆண்டுகளாய் குடித்துக் குடித்து குடல் வெந்து, உள்ளுறுப்புகளும் கெட்டு, ஒருவன் எந்த நோயில் பாதிக்கப்பட்டாலும் அவனும், அவன் குடும்பமும் கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் அதற்கும்தான் இருக்கவே இருக்கிறதே மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்றும் நியாயப்படுத்தலாம்.

மதுபானங்களை விற்பதன் மூலம் கிடைக்கும் பெரும் தொகையில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி ஏழை, எளியோரின் வாழ்வில் குடும்ப விளக்கை ஏற்ற முயல்வதாகக் கூறுகின்றனர் ஆட்சியாளர்கள். ஆனால், மதுவால் நிலைகுலைந்த வீடு இருண்ட வீடுதானே?. அங்கு அழகின் சிரிப்பைக் காண்பதெப்படி?

படித்துப் பழகிய தலைமுறை மெல்ல மெல்ல மறைந்து இன்று குடித்துப் பழகும் தலைமுறை உருவாகி வருகிறது. ஊக்கத்தைக் கைவிடாதே என்ற பொருளில் "ஊக்கமது கைவிடேல்' என்றார் ஒüவையார். ஆனால், இனி வரும் தலைமுறை "ஊக்க மது கைவிடேல்' என தங்கள் வசதிக்கேற்ப வாசித்து மகிழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அதிகமாய் உலவிய மயிலும், புலியும் தேசியப் பறவையாகவும், விலங்காகவும் ஆகிவிட்ட பின்பு ஏனோ எண்ணிக்கையில் வெகுவாகக் குறைந்துவிட்டன. அந்த வகையில் பார்த்தால் நாட்டில் ஆறாக ஓடும் மதுவை முற்றிலும் ஒழிப்பது என்பது இயலாத காரியம் என்பதால் அதை ஓரளவுக்காவது குறைக்க வேண்டும் என்றால் அதை தேசிய பானமாக ஆக்குவதுதான் ஒரேவழி போலும்.

கள்ளுண்ணாமையை வலியுறுத்திய வள்ளுவரின் குறளுக்கு உரை எழுதி, குறளோவியம் தீட்டிய முதல்வர், மது அரக்கனுக்கும் ஒரு முடிவுரை எழுதி, தமிழகத்துக்கு நல்வழி காட்ட வேண்டும்.

தற்போது தமிழுக்குச் செம்மொழித் தகுதி என்ற கிரீடம் சூட்டி அழகுபார்க்கும் முதல்வர், தமிழகத்துக்கும், தமிழனுக்கும் மதுவிலக்கு என்னும் நிரந்தர மலர்க்கிரீடம் அணிவித்து தலைநிமிரச் செய்து அழகுபார்க்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும்.

மா. ஆறுமுககண்ணன்

நன்றி: தினமணி 12.01.2010