Friday, June 17, 2011

சமச்சீர் கல்விக்குழுவில் தனியார் பள்ளி முதலாளிகளை நியமித்த தமிழக அரசு!

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கிணங்க, சமச்சீர் கல்வி திட்ட ஆய்வு குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் மாற்றம் வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

சமச்சீர்க் கல்வி பற்றி முடிவெடுக்க உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் கல்வியாளர்கள் என்ற பிரிவில் டி.ஏ.வி. பள்ளிகள் குழுமத்தின் நிறுவனர் ஜெயதேவும், பத்மாசேஷாத்திரி பாலபவன் பள்ளிகளின் முதல்வர் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதியும் சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சமச்சீர்க் கல்வி தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுபற்றி முடிவெடுப்பதற்காக அமைக்கப்படும் 9 பேர் கொண்ட குழுவில் கல்வியாளர்கள் இவரும் இடம் பெற வேண்டும் என்று ஆணையிட்டதன் நோக்கமே சமச்சீர்க் கல்வி பற்றிய அனைத்து அம்சங்களையும் அவர்கள் அறிந்திருப்பார்கள் என்பதுதான். அவர்கள் தம் கருத்துகளின் அடிப்படையில் சமச்சீர்க் கல்வி பற்றி 9 பேர் கொண்ட குழு சரியான முடிவுக்கு வர இயலும் என்ற நோக்குடன்தான் உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை அளித்தது.

ஆனால், கல்வியாளர்கள் என்ற பெயரில் சமச்சீர்க் குழுவில் அமர்த்தப்பட்ட இருவரும் சென்னையிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் இரண்டு பள்ளிகளின் முதலாளிகள் ஆவர். கல்வியாளர் என்பதற்கான எந்த வரையறையுமே இவர்களுக்கு பொருந்தாது. லட்சக்கணக்கில் நன்கொடையும் கட்டணமும் வாங்கி பள்ளிகளை நடத்தும் இவர்களுக்கு, தரமான கல்வி கற்க ஏழைகள் படும் பாடு குறித்து எதுவும் தெரியாது.

அதுமட்டுமின்றி சமச்சீர்க் கல்வி முறை பிரபலமடைந்தால் தனியார் பள்ளிகளுக்கு உள்ள வரவேற்பு போய்விடும் என்ற நிலையில் இவர்கள் எந்த அளவிற்கு நடுநிலையோடு செயல்படுவார்கள் என்பது ஐயமே.

சமச்சீர்க் கல்வி முறை பற்றி கரைத்து குடித்த எத்தனையோ கல்வியாளர்கள் தமிழகத்தில் இக்கும் போது, அவர்களையெல்லாம் விட்டுவிட்டு இவர்கள் இருவரையும் குழுவில் உறுப்பினர்களாக அமர்த்தியது வியப்பளிக்கிறது.

தமிழ்நாட்டில் சமச்சீர்க் கல்வி முறையை கொண்டுவந்துவிடக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

சமச்சீர்க் கல்வி தொடர்பான சிக்கலில் தமிழக அரசு காட்டிவரும் பிடிவாதத்தால் மாணவ, மாணவியர் இதுவரை எவ்வளவோ பாதிப்புகளை எதிர்கொண்டுவிட்டனர். எனவே இந்த விசயத்தில் தமிழக அரசு அதன் சார்பு போக்கை கைவிட்டுவிட்டு, நடுநிலையை கடைபிடிக்க வேண்டும். மாணவர்களின் நலன் சம்மந்தபட்ட 9 பேர் குழுவிலிருந்து தனியார் பள்ளி முதலாளிகளை நீக்கிவிட்டு, சமச்சீர்க் கல்வி முறை பற்றி நன்கறிந்த கல்வியாளர்களை உறுப்பினர்களாக அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்துவதாக ராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நன்றி தினமணி 18.06.2011

பள்ளி, கல்லூரிகள் அனைத்தையும் அரசுடமை ஆக்கவேண்டும்: ராமதாஸ்

பள்ளி, கல்லூரிகள் அனைத்தையும் அவசர சட்டத்தின் மூலம் அரசுடமை ஆக்கவேண்டும் என்று பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூறினார்.

தமிழக மாணவர் சங்கம் சார்பில் தனியார் பள்ளி, கல்லூரிகளின் அதிகப்படியான கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை மெமோரியல் ஹால் முன்பு 17.06.2011 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய ராமதாஸ்,

காமராஜர் ஆட்சிக் காலத்தில் அரசு பள்ளிகளில் படித்தவர்கள்தான் ஜனாதிபதிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், வேறு பல உயரிய பொறுப்புகளுக்கும் வந்துள்ளனர்.

காமராஜரின் ஆட்சிக்குப் பிறகுதான் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உருவாகின. ஏழைக்கு, பணக்காரர்களுக்கு என்று கல்வி பிரிக்கப்பட்டது. கல்விக் கட்டண கொள்ளைக்குத் துணைபோனவர்கள் ஆட்சியாளர்கள் தான்.

தமிழ்நாட்டில் தர்ம சிந்தனையோடு லாப நோக்கம் இல்லாமல் கல்வி நிறுவனங்கள் நடத்துகிறோம் என்று ஒருவர்கூட சொல்ல முடியாத நிலை இருக்கிறது.

இப்போது நடைபெறும் கட்டணக் கொள்ளையைத் தடுக்க ஒரே வழி வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே பள்ளி, கல்லூரிகள் அனைத்தையும் அவசர சட்டத்தின் மூலம் அரசுடமை ஆக்கவேண்டும். அனைவருக்கும் தரமான கல்வியையும், கட்டணம் இல்லாத கல்வியையும் அரசே கட்டாயம் கொடுக்க வேண்டும் என்றார்.

நன்றி நக்கீரன்.காம்

Wednesday, June 15, 2011

அரசு தொடக்கப் பள்ளியில் கல்வி கற்கும் ஆட்சியர் மகள்!

ஈரோடு மாவட்ட ஆட்சியராக அண்மையில் பொறுப்பேற்றார் ஆர்.ஆனந்தகுமார். இதற்கு முன் தருமபுரி மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்தார். இவர் மனைவி ஸ்ரீவித்யா. கோபிகா, தீபிகா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

ஸ்ரீவித்யா தருமபுரி அரசு மருத்துவமனையில் டாக்டராகப் பணியாற்றி வருகிறார். மூத்த மகள் கோபிகா தருமபுரியில் ஒரு மெட்ரிக் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்தார். தற்போது ஈரோடு குமலன்குட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தனது மகளை 2ம் வகுப்பில் ஆட்சியர் சேர்த்துள்ளார்.

குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு மகளுடன் புதன்கிழமை காலை சென்ற ஆட்சியர், தனது மகளை 1ம் வகுப்பில் சேர்ப்பதாக தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார். எனினும் கோபிகாவை 2-ம் வகுப்பில் சேர்த்துக் கொண்டனர்.

கூலித் தொழிலாளி கூட தங்களது குழந்தைகளுக்கு ஆங்கில அறிவு கிடைக்க வேண்டும் என்ற ஆவலில் மெட்ரிக் பள்ளிகளிலும் பெரும் பணக்காரர்களின் குழந்தைகள் படிக்கும் பிரபலமான தனியார் பள்ளிகளிலும் சேர்க்கின்றனர்.

ஆனால் மாவட்ட ஆட்சியர் ஒருவர் தனது மகளை ஏழைக் குழந்தைகள் படிக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேர்த்ததன் மூலம், தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அரசு பள்ளிகள் தரம் வாய்ந்தவை என்பதை உணர வைத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ்.ஜெ.சிரு தன் மனைவியை பிரசவத்துக்கு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இப்போது ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆனந்தகுமார் தன் மகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளார் இத்தகைய செயல்கள் மூலம் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் மற்ற அரசு ஊழியர்களுக்கும், மக்களுக்கும் வழிகாட்டியாக உள்ளனர்.

நன்றி தினமணி 16.06.2011



இந்தக் கருத்து எப்படி இருக்கு?


“அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும், கல்வித்துறையில் பணிபுரியும் அரசு ஊழியர்களும், கல்வித்துறை அமைச்சரும் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வைக்க வேண்டும்“ என்ற ஆணையை அரசு வெளியிட்டால் தனியார் பள்ளிகளின் பகல் கொள்ளையையும் கல்வி வியாபாரத்தையும் ஒழித்துவிடலாம்.

Tuesday, June 14, 2011

ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை, ஜூன் 14: கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.) மூலம் ஆசிரியர்களைக் கொண்டு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இட ஒதுக்கீட்டுக்காகவும், சமூக நீதிக்காகவும் எண்ணற்ற போராட்டங்களை பாமக நடத்தியுள்ளது. தமிழகத்தில் 69 சதவீதமாக உள்ள இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாகக் குறைக்க சில சக்திகள் முயன்றபோது அதனைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் வரை சென்று பா.ம.க. போராடியது.

தமிழகத்தில் ஓராண்டுக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு நீடிக்கும். அதற்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மூலம் இட ஒதுக்கீட்டின் அளவை இறுதி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. இந்தக் கெடு வரும் ஜூலை 12-ம் தேதி முடிவடைய இருக்கும் நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி கடந்த அக்டோபர் 13-ம் தேதி 27 சமுதாய அமைப்புகளின் தலைவர்களுடன் அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் மனு அளித்தோம். மத்திய அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த இருப்பதால், அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின் மூலம் நடத்தப்படாமல் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தக் கணக்கெடுப்பின் நோக்கம் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களை கண்டறிவதுதான் எனவும், ஜாதி விவரங்களை தெரிவிப்பது கட்டாயமில்லை எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, இந்தக் கணக்கெடுப்பால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை.

இந்தச் சூழலில் சமூக நீதியின் பிறப்பிடமான தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டையும், மக்களின் உரிமையையும் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் ஆசிரியர்களைக் கொண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் ரூ. 10 கோடி வரைதான் செலவாகும். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நன்றி தினமணி 15.06.2011

Wednesday, June 8, 2011

தமிழினத்திற்கு விடிவு தேடித் தரும் தீர்மானம் – சீமான்

தமிழினப் படுகொலை செய்த சிறிலங்க அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியென்றும், சிறிலங்க அரசிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவித்தும் நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை.

ஈழத் தமிழினத்தை திட்டமிட்டு இனப் படுகொலை செய்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவை போர்க் குற்றவாளி என்றும், இன்றளவும் தமிழின அழிப்பில் ஈடுபட்டுவரும் அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை நாம் தமிழர் கட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

சிங்கள பெளத்த இனவாத அரசின் தமிழின அழிப்பிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு, கண்ணியமிக்க, சமவுரிமையுடைய வாழ்வைப் பெறுவதற்காக கடந்த அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக போராடிவரும் ஈழத் தமிழினத்தின் விடுதலை வரலாற்றில் தமிழக சட்டப் பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் ஒரு திருப்பு முனையாகும். அதற்காக பெரும்பான்மை பலத்துடன் 3வது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கும், தீர்மானத்திற்கு ஆதரவாக நின்ற சட்டப் பேரவையில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் நாம் தமிழர் கட்சி இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த, பன்னாட்டு மனிதாபிமானச் சட்டங்களில் நிபுணத்துவம் வாய்ந்த மூவர் குழு அளித்த அறிக்கையின் பரிந்துரைத் தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் எடுக்க முன்வராத சிறிலங்க அரசிற்கும், அந்த அறிக்கையின் மீது ஆதரவு நிலையெடுக்காத இந்திய அரசிற்கும் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானம், தமிழினத்தின் சார்பாக விடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான, ராஜதந்திர ரீதியிலான நியாயமான அழுத்தமாகும்.


‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறி, ஈழத் தமிழினத்திற்கு எதிரான திட்டமிட்ட இனப் படுகொலைப் போரைத் தொடங்கி, இந்தியா உள்ளிட்ட பன்னாட்டு ஆதரவுடன் இரண்டரையாண்டுக் காலம் நடத்தப்பட்ட அந்தப் போரில் மட்டும் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச அமைத்த கற்ற பாடங்கள் மற்றும் இணக்கப்பாடு ஆணையத்தின் (Lessons Learnt and Reconciliation Commission – LLRC) முன்னின்று ஈழத்தில் நடந்த மானுடப் பேரழிவு குறித்து தனது சாட்சியத்தை அளித்த மதிப்பிற்குரிய மன்னார் மாவட்டப் பேராயர் ராயப்பு ஜோசஃப் அவர்கள், இந்தப் போருக்கு முன் இருந்த வன்னி பகுதி மக்கள் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், போர் முடிந்த பிறகு வன்னி முள்வேலி முகாம்களுக்கு வந்த சேர்ந்த மக்களின் எண்ணிக்கை 1,46,679 பேர் குறைவாக உள்ளனர் என்றும், அவர்கள் கொல்லப்பட்டோ அல்லது காணாமல்போய் உள்ளவர்களாகவோ இருக்கலாம் என்று எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் அளித்தார்.

உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய அந்த உண்மையை இன்று வரை சிறிலங்க அரசு மறுக்கவில்லை. ஆனால், அதுபற்றி இன்று வரை எந்த வினாவையும் சிறிலங்க அரசை நோக்கி இந்திய அரசு எழுப்பவில்லை. இது இலங்கையில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையில் அது உடந்தையாக நின்றது என்பதற்கான மற்றுமொருச் சான்றாகும்.

இந்திய அரசின் மெளனமே, சிறிலங்க அரசு திட்டமிட்டுச் செய்த மாபாதகச் செயலை இனப் படுகொலை என்று சர்வதேசம் கூற முன்வராததற்குக் காரணமாகும். எனவேதான் தமிழின அழிப்பு என்பது போர்க் குற்றம் என்ற அளவோடு நி்ற்கிறது. இந்த நிலையில்தான், தமிழினத்திற்கு எதிராக சிறிலங்க அரசு போர்க் குற்றம் செய்துள்ளது என்பது நம்பகமான குற்றச்சாற்று என்று ஐ.நா.நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்தது. அந்த அடிப்படையிலேயே, ராஜபக்சவை போர்க் குற்றவாளி என்று அறிவிக்கக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவைத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இனப் படுகொலைப் போர் முடிந்து வன்னி முகாம்களில் வந்தேறிய சற்றேறக்குறைய 3 இலட்சம் தமிழர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அவர்களுடைய வாழ்விடங்களில் குடியமர்த்தப்படவில்லை. ஏனெனில் தமிழர்கள் வாழ்ந்த பூமியில் சிங்களர்கள் குடியேற்றம் நடைபெறுகிறது. அவர்களுடைய காணிகள் சிங்களர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களை நிரந்தரமாக ஒடுக்குவதற்கு, அவர்களின் பாரம்பரிய பூமியின் பெரும்பகுதியை இராணுவப் பகுதிகளாக (Cantonments) சிங்கள இனவெறி அரசு அறிவித்துள்ளது. வாழ்ந்த இல்லங்கள் போரினால் சிதைக்கப்பட்டு, வாழ்க்கைக்கு ஆதாரமான காணிகள் பறிக்கப்பட்டு, பிழைக்க வழியேதுமின்றி, ஈழத் தமிழினம் சிதறடிக்கப்பட்டு, சின்னபின்னமாக்கப்பட்ட நிலையில், சிறிலங்க அரசை மண்டியிடச் செய்ய வேண்டுமெனில், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதார தடையை கடைபிடிப்பதே ஒரே வழியாகும்.

அந்த புரிந்துணர்வோடு தமிழக சட்டப் பேரவை இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை அறிவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது ராஜதந்திர ரீதியில் மிகச் சாமர்த்தியமான தீர்மானமாகும்.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டு வந்த தமிழ் மக்கள் எதை மிகவும் ஆவலாக எதிர்பார்த்தார்களோ அந்த விஷயத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள், அனைத்துக் கட்சிகளின் பேராதரவோடு நிறைவேற்றியுள்ளார்.

இதற்காக தமிழினம் அவருக்கும், தமிழக சட்டப் பேரவைக் கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் என்றென்றும் நன்றி தெரிவிக்கும் என்பது மட்டுமின்றி, இத்தீர்மானம் தமிழினம் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு ஒரு புத்துணர்வை தந்துள்ளது என்பதை நன்றியுடன் நாம் தமிழர் கட்சி தெரிவித்துக்கொள்கிறது.

வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமின்றி, காணாமல் போன மீனவர்கள் 4 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் தெரிவித்ததற்கும் நாம் தமிழர் கட்சி நன்றி கூறுகிறது.

நன்றி தமிழ்வின்.காம்

இலங்கை பிரச்சனையில் டெல்லியில் முகாமிட்டு வலியுறுத்த வேண்டும்: ஜெயலலிதாவுக்கு தங்கர்பச்சான் கோரிக்கை

இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க டெல்லியில் முகாமிட்டு வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மூன்று லட்சம் தமிழர்களின் உயிரிழப்பும் நாற்பதாயிரம் போராளிகளின் முப்பது ஆண்டுகளுக்கு மேலான போராட்டமும் வீணாகிப் போனதே என தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தவித்திருந்த வேளையில், ஐ.நா.சபை விசாரணைக் குழுவின் போர்க்குற்ற அறிக்கை நம்பிக்கையை விதைத்தது.

இலங்கைத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்துக்கு தண்டனையாக கடந்த ஆட்சி தோல்வி கண்டு மக்களின் புதிய ஆட்சி மலர்ந்துள்ளது. தேர்தல் முடிவு வரும் முன்னரே புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்பவர்கள் முதல் சட்டப்பேரவைத் தொடரிலேயே இலங்கை அரசுக்கு பொருளாதாரத் தடையை விதித்து தீர்மானம் நிறைவேற்றி இலங்கை ஆட்சியாளர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என எனது கோரிக்கையை வெளிப்படுத்தியிருந்தேன்.

என்னைப் போன்றோரின் வேண்டுகோள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் உலகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழனும் எப்போதும் இல்லாத அளவுக்கு மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். உலகின் ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பையும் தீர்த்து வைக்கும்படியான தீர்மானம் நிறைவேறக் காரணமாக இருந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் தமிழர்கள் சார்பில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதற்கு அடுத்த கட்டமாக முதல்வர், டெல்லியில் முகாமிட்டு அனைத்துக் கட்சியினரையும் கூட்டி இந்தத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன் என அந்த அறிக்கையில் தங்கர்பச்சான் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி நக்கீரன்.காம்

சமச்சீர் கல்வி வராத வரை சமூகத்தில் முன்னேற்றம் ஏற்படாது: ராமதாஸ்

சமச்சீர் கல்வி வராத வரை இந்த சமூகத்தில் முன்னேற்றம், மாற்றம் ஏற்படாது என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் முன்னாள் எம்.எல்.ஏ., கலிவரதன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய ராமதாஸ்,

நம் நாட்டில் ஏழை, பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர்களுக்கு என தனித்தனியாக படிப்புகள் உள்ளது. இதில் பணத்தை கொடுத்தால் தான், தரமான கல்வியை பெறமுடியும் என்ற நிலை நிலவுகிறது. பணக்காரர்கள் படிக்கும் சி.பி.எஸ்.சி., படிப்பு கிராமப்புறத்தில் உள்ள ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும். அதே பள்ளியை அரசு சார்பில் கிராமத்தில் துவக்கி தரமான கல்வியை வழங்க வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம். பணக்காரர்களுக்கு மட்டும் தேர்தலில் கூடுதலான ஓட்டுக்களா உள்ளது? அவர்களுக்கும் ஒரே ஓட்டு தான். அதுபோல் அனைவருக்கும் சமமான கல்வி கட்டாயம் வேண்டும்.

ராமதாஸ் மட்டும் தான் இதுபற்றி பேசிவருகிறான். குடிக்க கூடாது என கூறுபவனும் இந்த ராமதாஸ் மட்டும் தான். சமச்சீர் கல்வி என்றால், யார் என்ன படிக்க விரும்பினாலும் அவர்களுக்கு கட்டாயமாக அந்த கல்வியை கொடுக்க வேண்டும். தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். கட்டணம் இல்லாத கல்வி வேண்டும். இதனை செயல் படுத்த முடியும். அதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது. சமச்சீர் கல்வி வராத வரை இந்த சமூகத்தில் முன்னேற்றம், மாற்றம் ஏற்படாது என்றார்.

நன்றி நக்கீரன்.காம்

உலகம் முழுதும் வாழும் தமிழர்களுக்கு உவப்பான நம்பிக்கையூட்டும் செய்தியாகும்: கொளத்தூர் மணி

இராஜபக்க்ஷே மீது போர்க்குற்றவாளி என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும், இந்தியா இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என்றும், தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானம் தமிழர்களின் ஒருமித்த உணர்வைப் பிரதிபலிக்கிறது, இந்தத் தீர்மானத்தை தமிழக முதல்வரே முன் மொழிந்து ஒருமனதாக நிறைவேற்றச் செய்ததை பெரியார் திராவிடர் கழகம் பாராட்டி வரவேற்கிறது.

ஈழத்தமிழர் பிரச்சனையில் சரியான பார்வையோடு தமிழக முதல்வர் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது உலகம் முழுதும் வாழும் தமிழர்களுக்கு உவப்பான நம்பிக்கையூட்டும் செய்தியாகும்,.

தமிழ்நாட்டு சிறப்புமுகாம்களில் பலஆண்டுகளாக விசாரணை ஏதும்இன்றி அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்கள் தங்களை உறவினர்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு நீண்ட காலமாகப் போராடி வருகிறார்கள், கடந்த ஆட்சியில் கண்டுகொள்ளப்படாத இந்த நியாயமான, மனிதாபிமானக் கோரிக்கையைப் பரிசீலித்து நல்ல முடிவை எடுக்க வேண்டுமென்று தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறோம்.

Friday, June 3, 2011

மதுக்கடைகளை மூடவேண்டும்: ராமதாஸ்

மது இல்லாத மாநிலத்தை எப்படி உருவாக்குவது? என்று மராட்டிய மாநிலம் வழிகாட்டியிருக்கிறது. மராட்டியத்தில் இனி 25 வயதிற்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்றும், ஏதேனும் ஒரு ஊரில் 25 விழுக்காடு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் அங்குள்ள மதுக்கடைகள் மூடப்படும் என்றும் அம்மாநில அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இவை வரவேற்கப்படவேண்டியவை மட்டுமின்றி மற்ற மாநிலங்களால் பின்பற்றப்பட வேண்டியவை ஆகும்.

மதுவிலக்கு கொள்கையைப் பொறுத்தவரை மராட்டிய அரசு தொடக்கத்திலிருந்தே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வருகிறது. 1949ஆம் ஆண்டு மும்பை மதுவிலக்கு சட்டப்படி அம்மாநிலத்தில் ஏதேனும் பகுதியில் வசிக்கும் பெண்களில் 50 விழுக்காட்டினர் எதிர்ப்புத் தெரிவித்தால் அங்குள்ள மதுக்கடைகள் மூடப்பட்டு வருகின்றன.

இப்போது காந்தியவாதி அன்னா ஹசாரேவின் கோரிக்கையை ஏற்று ஒட்டுமொத்த மக்களில் 25 விழுக்காட்டினர் எதிர்ப்புத் தெரிவித்தாலே மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது பராட்டப்பட வேண்டிய முடிவாகும்.

ஆனால், தமிழகத்திலோ நீதிமன்றம் உத்தரவிட்டபிறகும் குடியிருப்புப் பகுதிகளிலுள்ள மதுக்கடைகள் மூடப்படுவதில்லை. மராட்டியத்தில் 25 வயதிற்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 13 வயது பள்ளி மாணவர்கள் கூட மது குடிப்பதாக செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக பல ஆண்டுகளாகப் போராடி வருகிறது. தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றதுமே முழு மதுவிலக்கை கொண்டுவரும்படி நான் வலியுறுத்தி இருந்தேன். அதன் முதல் படியாக மராட்டிய மாநிலத்தில் இருப்பது போல, பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் பகுதிகளில் மதுக்கடைகளை உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 25 வயதிற்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும். பொது நிகழ்ச்சிகளில் மது பரிமாறப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும். நாள்தோறும் காலை 10 மணி முதல்ர பிற்பகல் 1 மணிவரை 3 மணி நேரத்திற்கு மட்டுமே மதுக்கடைகளை திறந்திருக்க வேண்டும். இதையும் படிப்படியாக குறைத்து குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையால் மதுக்கடை ஊழியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களை படிப்படியாக அரசு ஊழியர்களாக்கி மற்ற துறைகளில் பணியமர்த்த வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

நன்றி நக்கீரன்.காம்

Wednesday, June 1, 2011

25 வயதுக்கு கீழ் மது அருந்தினால் அபராதம்

மராட்டியத்தில் தற்போது 21 வயதிலிருந்து மது பானங்கள் வாங்க, குடிக்க சட்டப்பூர்வ அனுமதி உள்ளது. இந்த நிலையில், மராட்டியத்தில் மது அடிமைக்கு எதிராக மாநில அரசு புதிதாக கொள்கை ஒன்றை கொண்டு வர உள்ளது.

இது தொடர்பாக மாநில மந்திரிசபை கூட்டம் முதல் அமைச்சர் பிரிதிவிராஜ் சவான் தலைமையில் மும்பையில் நடந்தது.

இந்த கூட்டத்தில், 25 வயதுக்குட்பட்டோர் மது பானம் வாங்குவதும், குடிப்பதும் சட்டவிரோதமான குற்றம் என்னும் அரசின் புதிய முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் பீர் வாங்குவதற்கும், பருகுவதற்கும் வயது வரம்பு 21 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொது விழாக்களில், நிகழ்ச்சிகளில் மதுபானங்கள் பரிமாறவும் அரசு தடை விதித்து விட்டது. இனி 25 வயதுக்குட்பட்டோர் மராட்டியத்தில் மதுபானங்கள் பருகினால் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் கல்வி நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வழிபாட்டுத்தலங்கள், நெடுஞ்சாலைகளுக்கு ஒரு கி.மீ. தொலைவில் மதுக்கடைகள் இருக்க அனுமதி இல்லை. ஒரு மாநகராட்சி வார்டு பகுதியில் மதுக்கடையை மூடுமாறு அதில் குடியிருப்போரில் 25 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்தால் அதை மூடிவிட வேண்டும்.

தனி நபர் வாங்குகிற மது பாட்டில்களின் அளவுக்கும் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.

மதுபானங்கள் வாங்குவதற்கும், பருகுவதற்கும் 25 வயது ஆகி இருக்க வேண்டும் என்ற வரம்பு டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் அமலில் உள்ளது. இப்போது மராட்டியமும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: நக்கீரன்.காம்



நமது தமிழ்நாடு அரசும், புதுச்சேரி அரசும் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருங்காலத் தலைமுறையினரை காப்பாற்றவேண்டும்.

Thursday, May 26, 2011

சமச்சீர் கல்வி‌க்கு மூடு‌விழா ‌நியா‌ய‌ம்தானா?

''தற்போது நடைமுறைப்படுத்த உள்ள சமச்சீர் கல்வி, மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் அமையவில்லை. தற்போதைய சமச்சீர் கல்வி பாடத்திட்டம் ஒட்டுமொத்த கல்வி தரத்தை உயர்த்த வழிவகை செய்யாது. எனவே, சமச்சீர் கல்வி முறை அமல்படுத்த வேண்டும் என்றும், ஆனால் அதே நேரத்தில் எவ்வாறு கல்வி தரத்தை உயர்த்துவது என்பது குறித்து ஆராய வல்லுநர் குழு ஒன்றை அமைக்கவும் அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. ஆகவே, இந்த கல்வி ஆண்டில் பழைய பாடப் புத்தகங்களையே பின்பற்றலாம்'' எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா தலைமை‌யி‌ல் நடைபெ‌ற்ற முத‌ல் அமை‌ச்சரவை கூ‌ட்ட‌த்த‌ி‌ல் முடிவு எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தமிழக‌த்‌தி‌ல் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த தி.மு.க. அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டு வந்தது.

இத‌ற்கு தனியார் பள்ளிகளில் குறிப்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சமச்சீர் கல்வி திட்டத்தால் மெட்ரிக் பள்ளி மாணவர்களின் கல்வி தரம் குறையும் என்று அவர்கள் தெரிவித்தனர். மற்றொரு பிரிவினர் எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான, தரமான கல்வி கிடைக்கும் என்பதால் சமச்சீர் கல்வியை ஆதரித்தார்கள்.

சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வியை எ‌தி‌‌‌ர்‌த்த ‌சில மெ‌ட்‌ரி‌க் ப‌ள்‌ளிக‌ள‌், த‌ங்க‌ள் ப‌ள்‌ளி‌யி‌ல் படி‌க்கு‌ம் மாணவ‌ர்களை ‌சி‌.பி.எ‌‌ஸ்.இ-‌க்கு மாற பெ‌ற்றோ‌ர்களை வ‌‌ற்புறு‌த்‌தி வ‌ந்தது. அ‌ப்படி ‌சி.‌பி.எ‌ஸ்.இ பாட‌த்‌‌தி‌ட்ட‌த்த‌ி‌ற்கு மாறு‌பவ‌ர்களு‌க்கு க‌ல்‌வி‌க் க‌ட்டண‌ம் இருமட‌ங்காகு‌ம். இதனா‌ல் த‌ங்க‌ள் ‌பி‌ள்ளைகளை ‌சி‌.பி.எ‌ஸ்.இ பாட‌த்‌‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு மா‌ற்ற பெ‌ற்றோ‌ர்க‌ள் த‌யங்‌‌கின‌ர். ‌சில மெ‌ட்‌ரி‌க் ப‌ள்‌‌ளிக‌ள் வலு‌க்க‌ட்டாயமாக மாணவ‌ர்களை ‌சி.‌பி.எ‌ஸ்.இ. பாட‌த்‌தி‌‌ட்ட‌த்‌தி‌ற்கு மா‌ற்‌றின‌ர்.

முதல் கட்டமாக கடந்த 2010-11 கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பிற்கும், 6ஆம் வகுப்பிற்கும் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. இந்த கல்வியாண்டில் இருந்து 10ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த கட‌‌ந்த அரசு திட்டமிட்டு அதற்காக 200 கோடி ரூபா‌யி‌ல் ஏழரை கோடி பாட புத்தகங்கள் அச்சி‌ட்டது. இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அ.இ.அ.தி.மு.க. அரசு, இந்த கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படமாட்டாது என்று அறிவித்துள்ளது.

அ.இ.அ‌.தி.மு.க அர‌சி‌ன் இ‌ந்த ‌அ‌றி‌வி‌ப்பு பெ‌ற்றோ‌ர்க‌ளு‌க்கு‌ம், இ‌ந்த க‌ல்‌வி‌த் ‌தி‌ட்ட‌த்தை ஆத‌ரி‌த்த அனை‌த்து தலைவ‌‌ர்களு‌‌க்கு‌ம் அ‌தி‌ர்‌‌ச்‌சி ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. ஏழைக‌ள் மு‌த‌ல் பண‌க்கார குழ‌ந்தைக‌ள் வரை ஒரே மா‌தி‌ரியான க‌ல்‌வி ‌கிடை‌க்க ஏ‌ற்பாடு செ‌ய்ததது கட‌ந்த ஆ‌ட்‌சி, த‌ற்போது பு‌திதாக வ‌ந்து‌ள்ள அ.இ.அ.‌தி.மு.க அரசு மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் சம‌ச்‌‌‌சீ‌ர் க‌ல்‌வி அமையவில்லை எ‌ன்று கூ‌றி இத‌ற்கு மூடு‌விழா நடத்துகிறது.

ச‌ம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி‌‌யி‌ன் தர‌த்தை உ‌ய‌ர்‌த்துவது கு‌றி‌த்து ஆராய வ‌ல்லுந‌ர் குழு ஒ‌ன்றையு‌ம் அமை‌க்க‌ப் போ‌கிறதா‌ம் அ.இ.அ‌.‌தி.மு.க. அரசு. அ‌ந்த குழுவு‌க்கு ஆரா‌ய்‌ந்து முடி‌க்க ஒரு கால‌க்கெடு ‌நி‌ர்ண‌யி‌க்க‌ப்பட‌வி‌ல்லை. அ‌ப்படியெ‌ன்றா‌ல் இ‌ந்த வ‌ல்லுந‌ர் எ‌ப்போது க‌ல்‌வி‌த் தர‌த்தை ஆரா‌ய எ‌த்தனை ஆ‌ண்டுக‌ள் தேவை‌ப்படுமோ எ‌ன்று தெ‌ரிய‌வி‌ல்லை.

‌அ.இ.அ‌.தி.மு.க அரசு இ‌ப்படி இரு‌க்கு‌ம் ப‌ட்ச‌த்‌தி‌ல் சில ம‌ெ‌ட்‌ரி‌க்‌ ப‌ள்‌‌ளிக‌ள் ஏழை குழ‌ந்தைகளை த‌ங்க‌ள் ப‌ள்‌ளி‌யி‌ல் சே‌ர்‌ப்ப‌தி‌‌ல்லை. காரண‌ம் எ‌ன்ன எ‌ன்றா‌ல் இ‌ந்த குழ‌ந்தைகளா‌ல் த‌ங்க‌ள் ப‌ள்‌ளி‌யி‌ன் தர‌ம் குறைவதோடு, ஒழு‌க்க‌க்கேடு‌ம் ஏ‌ற்படு‌ம் எ‌ன்‌கிறது. இ‌ப்படி‌ப்ப‌ட்ட மெ‌‌ட்‌ரி‌க் ப‌ள்‌ளிக‌ள் பண‌ம் ஒ‌ன்றே எ‌ன்ற கு‌றி‌க்கோளுட‌ன் செய‌ல்படு‌கிறது. இ‌ப்படி‌ப்ப‌ட்ட ப‌ள்‌ளிகளை க‌ண்ட‌றி‌ந்து அரசு நடவடி‌க்கை எடு‌க்குமா எ‌ன்பது கே‌ள்‌வி‌க்கு‌றி‌‌தா‌ன்.

தெ‌ரி‌ந்தோ தெ‌ரியாமலோ கட‌ந்த ‌தி.மு.க. அரசு கொ‌ண்டு வ‌ந்த ‌சில ந‌ல்ல‌த் ‌தி‌ட்ட‌ங்களை அ.இ.அ.‌தி.மு.க அரசு ‌நிறைவ‌ே‌ற்று‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்ப‌ட்ட ‌நிலை‌யி‌ல் அ‌ந்த ‌‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ம் ஜெயல‌லிதா த‌ற்போது மூடு‌விழா நட‌த்‌தி‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்.

இது ஒருப‌க்க‌ம் இரு‌க்கு‌ம் ‌நிலை‌யி‌ல் த‌னியா‌ர் ப‌ள்‌‌ளிக‌ள் க‌‌ல்‌வி‌‌க் க‌ட்டண‌த்தை த‌ங்க‌ள் இ‌ஷ்ட‌ம் போ‌ல் வசூ‌லி‌க்க‌த் தொட‌ங்‌கி‌வி‌ட்டன. சம‌ச்‌‌சீ‌ர் க‌ல்‌வி‌த்த‌ி‌ட்ட‌ம் வர‌ப்போ‌கிறது எ‌ன்று கரு‌தி ‌சில மெ‌ட்‌ரி‌க் ப‌‌‌ள்‌‌ளிக‌ள் ‌ஒரா‌ண்டு‌க்கான க‌ல்‌வி‌‌க் க‌ட்ட‌ண‌த்தை ஒரே தவணை‌யி‌ல் செலு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் பெ‌ற்றோ‌ர்களை வ‌‌‌‌ற்புறு‌த்து‌கிறது. இதனை க‌ண்டி‌த்து ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் செ‌ய்த பெ‌ற்றோ‌ர்களு‌க்கு எ‌‌ந்த பயனும் இ‌ல்லை.

முத‌லி‌ல் த‌னியா‌ர் ப‌ள்‌ளிகளு‌க்கான க‌ல்‌வி‌க் க‌ட்டண‌த்தை த‌மிழக அரசு உடனடியாக ‌நி‌ர்ண‌யி‌க்க வ‌ே‌ண்டு‌ம். க‌ல்‌வி‌க் க‌ட்டண‌ம் தொட‌ர்பாக உய‌ர்‌நீ‌திம‌ன்ற ஓ‌ய்வு பெ‌ற்ற ‌நீ‌திப‌தி ர‌விராஜபா‌ண்டிய‌ன் தனது அ‌றி‌க்கையை ‌விரை‌வி‌ல் த‌மிழக அர‌சிட‌‌ம் தா‌க்க‌ல் ச‌ெ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்பதே பல கோடி பெ‌ற்றோ‌ர்க‌‌ளி‌ன் எ‌தி‌ர்பா‌ர்‌ப்பாக உ‌ள்ளது.

‌நீ‌திப‌தி ர‌விராஜபா‌ண்டிய‌ன் தா‌க்க‌ல் செ‌ய்யு‌ம் ப‌ட்ச‌த்‌தி‌ல் அதனை த‌மிழக அரசு ஏ‌ற்று‌க் கொ‌ள்ளுமா? அ‌‌ல்லது ‌மீ‌ண்‌டு‌ம் வ‌ல்லுந‌ர் குழு ஒ‌ன்று ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு பு‌திய க‌ல்‌வி‌க் க‌ட்டண‌த்தை ‌நி‌ர்ண‌யி‌‌க்க‌ப்படு‌‌ம் எ‌ன்று த‌மிழக அரசு சொ‌ல்வ‌தி‌ல் எ‌ந்த ஆ‌ச்ச‌ரிய‌‌மு‌ம் இ‌ல்லை.

சம‌‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி‌ மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் அமையவில்லை. தற்போதைய சமச்சீர் கல்வி பாடத்திட்டம் ஒட்டுமொத்த கல்வி தரத்தை உயர்த்த வழிவகை செய்யாது எ‌ன்று கூறு‌ம் த‌மிழக அரசு, த‌ற்போது‌ள்ள சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி ‌பாட‌த்‌தி‌ட்ட‌‌‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌சில குறைகளை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு ஜெயல‌லிதா ‌நினை‌ப்பது போ‌ல் பாட‌த்‌தி‌ட்ட‌த்தை மா‌‌ற்‌றி‌க் கொ‌‌ள்ளலா‌ம்.

அதை ‌வி‌ட்டு‌‌வி‌ட்டு முந்தைய ‌தி.மு.க. அரசு கொண்டுவந்த திட்டம் என்பதற்காக சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்ப‌‌தி‌ல் இரு‌ந்து ஜெயல‌லிதா இ‌ன்னு‌ம் மாற‌வி‌ல்லை எ‌ன்றே தெ‌ரி‌கிறது.

மெ‌‌ட்‌ரி‌க் ப‌ள்‌ளி‌யி‌ல் படி‌த்த ஜெயல‌லிதா, அத‌ன் ‌விசுவாச‌த்தை கா‌ட்டுவத‌ற்காக மெ‌ட்‌ரி‌க் ப‌ள்‌ளிகளு‌க்கு ஜெயல‌லிதா உதவுவதாகவே தெ‌ரி‌கிறது. எது எ‌ப்படியோ இ‌னி சம‌‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி எ‌ன்பது எ‌ட்டா‌க்‌‌க‌னிதா‌ன்.

நன்றி தமிழ்.வெப்துனியா.காம்

சமச்சீர் கல்விச் சட்ட அமலை நிறுத்த முடியுமா?

சமச்சீர் கல்விச் சட்டத்தை அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்பது பற்றி தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமச்சீர் கல்வி முறை நிறுத்தி வைக்கப்படும் என்றும், இந்தக் கல்வியாண்டில் பழைய பாடத்திட்ட முறையே தொடரும் என்றும் அண்மையில் தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அரசின் இந்த முடிவை எதிர்த்து வழக்கறிஞர் கே. ஷியாம் சுந்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். சமச்சீர் கல்வி முறையை தொடர்ந்து அமல்படுத்த தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர் மனுவில் வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ். ராஜேஸ்வரன், கே.பி.கே. வாசுகி ஆகியோரைக் கொண்ட டிவிசன் பெஞ்ச் முன்பு வியாழக்கிழமை வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே. பாலு கூறியதாவது:

சமச்சீர் கல்வி முறை பற்றி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ். முத்துக்குமரன் தலைமையிலான குழு விரிவான ஆய்வு மேற்கொண்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்துவதற்கான சட்டம் இயற்றப்பட்டு, 2010 - 2011-ம் கல்வியாண்டில் 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு இந்த புதிய பாடமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

2011-2012-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, ரூ.200 கோடி செலவில் 9 கோடி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

இது மாணவர்களையும், பெற்றோர்களையும் பெரிதும் பாதிக்கச் செய்துள்ளது. ஏற்கெனவே ரூ. 200 கோடி செலவு செய்துள்ள அரசு, புதிதாக புத்தகங்கள் அச்சடிக்க மேலும் சுமார் ரூ. 200 கோடி செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, சமச்சீர் கல்வி முறையை தொடர்ந்து அமல்படுத்த அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று பாலு வலியுறுத்தினார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கூறியதாவது:

பல்வேறு பாடத் திட்ட முறைகளிலிருந்து தங்களுக்கான சிறந்த பாடத் திட்டத்தை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதே பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் விருப்பமாக உள்ளது. இந்நிலையில், ஒரு மாணவன் குறிப்பிட்ட ஒரு பாடத் திட்ட முறையில்தான் படிக்க வேண்டும் என்பதை அரசால் கட்டாயப்படுத்த முடியாது.

இப்போதைய சமச்சீர் கல்வி முறை மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக் கூடியது. எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன்களுக்காகவே சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைப்பது என்ற கொள்கை முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்றார் நவநீதகிருஷ்ணன்.

இதற்கிடையே, சமச்சீர் கல்வி முறையை இந்த கல்வியாண்டிலேயே தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக பண்ருட்டியைச் சேர்ந்த எம். சேஷாச்சலம், சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை எஸ்.டி. மனோன்மணி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

அவர்கள் இருவர் சார்பிலும் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவையில் சமச்சீர் கல்விச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதன் அடிப்படையிலேயே சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், ஏற்கெனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை, அமைச்சரவைக் கூட்டம் ஒன்றில் எடுக்கப்படும் ஒரு கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா?

தமிழக அரசின் சமச்சீர் கல்விச் சட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டு, ஏற்கெனவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஒரு கொள்கை முடிவின் மூலம் செல்லாதது ஆக்க முடியுமா?

முந்தைய அரசு எடுக்கும் கொள்கை முடிவை, அடுத்து பொறுப்புக்கு வரும் அரசு மாற்றுவது நல்லதல்ல என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் முந்தைய அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி முறையை, இப்போது புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அரசு கொள்கை முடிவு என்ற பெயரில் நிறுத்தி வைக்க முடியுமா என்பவை போன்ற கேள்விகளை நீதிமன்றத்தில் வில்சன் எழுப்பினார்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:

சமச்சீர் கல்விச் சட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவானது. சிறந்த வல்லுனர்களைக் கொண்ட ஆய்வுக் குழு விரிவாக ஆராய்ந்து சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த பரிந்துரை செய்துள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைகளை எளிதாகப் புறக்கணித்து விட முடியாது. இது தவிர, ஏற்கெனவே, பெரும் தொகை செலவிடப்பட்டுள்ள நிலையில், மேலும் பெரும் தொகையை செலவிடுவது அவசியம்தானா?

இவை பற்றியெல்லாம் அட்வகேட் ஜெனரல் அரசுக்கு தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

மேலும், ஏற்கெனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை, இந்த நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சட்டத்தை அமைச்சரவைக் கூட்டத்தின் கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்பவை போன்ற கேள்விகள் மனுதாரர்கள் சார்பில் எழுப்பப்பட்டுள்ளன.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசின் சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

நன்றி தினமணி 27.05.2011

Wednesday, May 25, 2011

சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி‌க்கு ‌‌மீ‌ண்‌டு‌ம் செலவு தேவையா? த‌மிழக அரசு‌க்கு உ‌‌ய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் கே‌ள்‌வி?

சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி‌க்கு ஏ‌ற்கனவே ரூ.200 கோடி செல‌வி‌ட்டிரு‌க்கு‌ம்போது ‌மீ‌ண்டு‌ம் செலவா? எ‌ன்று த‌மிழக அரசு‌க்கு கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ள செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம், இது தொட‌ர்பாக வரு‌ம் 8ஆ‌ம் தே‌தி ப‌தி‌ல் ‌அ‌ளி‌க்கு‌ம் படி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

சமச்சீர் கல்வியை தமிழக அரசு நிறுத்தி வைத்ததை எதிர்த்து வழ‌க்க‌றிஞ‌ர் கே.ஷியாம் சுந்தர் தாக்கல் செய்து‌ள்ள பொதுநலன் மனுவில், தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதற்காக, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எஸ்.முத்துகுமரன் தலைமையில் நிபுணர்கள் குழுவை அமைத்து சாத்தியக்கூறுகளை முந்தைய அரசு ஆய்வு செய்தது.

கல்வியாளர்கள், பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர், பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்து இந்தக் குழு தமிழக அரசிடம் 4.7.07 அன்று அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை அரசு பரிசீலித்து, சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது தொடர்பாக அறிவித்தது. சமச்சீர் கல்வி தொடர்பாக விஜயகுமார் தலைமையிலும் குழு அமைக்கப்பட்டு அதன் அறிக்கையையும் அரசு பெற்றிருந்தது.

அதைத்தொடர்ந்து தமிழ்நாடு சமச்சீர் கல்வி சட்டம்-2010 கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌மு‌ம் உறுதி செய்துள்ளது. 2010-11ஆம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் 6ஆம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு அறிமுகம் செய்தது.

அதைத் தொடர்ந்து சமச்ச்சீர் கல்வியை 10ஆம் வகுப்பு வரை 2011-12ஆம் கல்வி ஆண்டுக்கு அரசு அறிமுகம் செய்தது. இதற்காக ரூ.200 கோடி செலவில் 9 கோடி பாட புத்தகங்களை தமிழக அரசு அச்சடித்துள்ளது.

இந்த நிலையில் தேர்தலில் முந்தைய ஆளும் கட்சி தோல்வி அடைந்து, அ.தி.மு.க. கட்சி தலைமையில் தமிழகத்தில் அரசு அமைந்துள்ளது. இந்த அரசு தற்போது சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்துவிட்டது. மேலும் பழைய கல்விமுறையையே பின்பற்றுவதற்கும் புதிய அரசு முடிவு செய்துள்ளது. சமச்சீர் கல்வி தொடர்பாக புதிய நிபுணர் குழுவை அமைக்கவும் அரசு தீர்மானித்துள்ளது.

இந்த முடிவுகள் பொதுமக்கள் நலனுக்கு எதிரானவை. எந்த ஒரு நிபுணர்களின் ஆலோசனையையும் பெறாமலேயே இந்த முடிவை தமிழக அரசின் அமைச்சரவை எடுத்துள்ளது. சமச்சீர் கல்வியை அறிமுகம் செய்வதில் ஏற்கனவே நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையை பெற்று அதை விரிவாக விவாதித்த பிறகுதான் அதற்கான சட்டத்தை முந்தைய அரசு கொண்டு வந்தது.

தற்போது பழைய கல்வி முறைக்கான புத்தகங்களை மீண்டும் அச்சடிப்பதற்காக பள்ளிக்கூடங்களின் திறப்பு நாளை அரசு தள்ளி வைத்துள்ளது. சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று இந்த அரசு எடுத்துள்ள முடிவு முற்றிலும் அரசியல் சார்பானது.

அரசின் கொள்கை முடிவு என்று கூறி தமிழக அரசு தப்பிக்க முடியாது. பல கோடி ரூபாய் செலவு செய்து முந்தைய அரசால் கொண்டுவரப்பட்ட இந்த கல்வி முறையை புதிய அரசு உடனடியாக தவிர்க்கக் கூடாது. எனவே சமச்சீர் கல்வி முறைக்கு எதிராக அமைச்சரவை எடுத்த முடிவு சட்டவிரோதமானது.

மாணவர்கள் நலனோ, பொதுமக்களின் நலனோ அதில் இல்லை. மக்கள் வரிப்பணம்தான் வீணாக்கப்படுகிறது. சட்டப்பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவை நிர்வாக ரீதியாக மீற முடியாது. எனவே ஏற்கனவே உள்ள சட்டத்தின்படி தமிழகத்தில் சமச்சீர் கல்வியை தொடர்ந்து நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இ‌ந்த மனு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், கே.பி.கே.வாசுகி முன்னிலையில் இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது, சம‌ச்‌சீ‌‌‌ர் க‌‌ல்‌வி ச‌ட்ட‌ம் இய‌‌ற்ற‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம்போது அதனை ம‌ா‌ற்ற த‌மிழ அரசு முடிவு எடு‌ப்பது ச‌‌ரியா? எ‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்‌பிய ‌நீ‌திப‌திக‌ள், சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி‌க்கு ஏ‌ற்கனவே ரூ.200 கோடி செல‌வி‌ட்டிரு‌க்கு‌ம்போது ‌மீ‌ண்டு‌ம் செலவா? எ‌ன ‌வின‌‌வின‌ர்.

சம‌‌‌ச்‌சீ‌ர் க‌ல்‌வியை அம‌ல்படு‌த்த‌க் கோரு‌ம் வழ‌க்‌கி‌ல் வரு‌ம் 8ஆ‌ம் தே‌தி ப‌தி‌ல் அ‌ளி‌க்க த‌மிழக அரசு‌க்கு ‌நீ‌திப‌திக‌ள் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளன‌ர்.

நன்றி: தமிழ்.வெப்துனியா.காம்

சமச்சீர் கல்வித் திட்டம்: அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் வலியுறுத்தல்

தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அதன் மாநிலச் செயலர் ம.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கல்வி என்பது வியாபார மற்றும் விற்பனை பொருளாக இருப்பதை எதிர்த்து கடந்த காலங்களில் பல்வேறு விதமான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக தமிழகத்தில் இந்தாண்டு முதல் சமச்சீர் கல்விமுறை அமுல்படுத்தப்படும் என தமிழக அரசு கடந்தாண்டு அறிவித்தது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து அதற்கான பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு நிறைவடைந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்ற அ.தி.மு.க அரசு இத்திட்டத்தை நிறுத்திவைப்பதாக அறிவித்திருப்பது வேதனைக்குரியதாகும்.

சமச்சீர்கல்வி திட்டத்தில் குறைபாடுகள் இருப்பின் அதனை அமுல்படுத்திக்கொண்டே அதனை சரிசெய்யும் நடவடிக்கையில் இறங்காமல் அதனை முழுமையாக நிறுத்திவைப்பது என்பது தனியார் கல்வி நிறுவனங்களின் வியாபாரத்திற்கு ஊக்கமளிக்கும் விதமாக அமையும்.

தேவையற்ற பாடங்களை சுற்றறிக்கைகள் மூலமாக நீக்கிவிட முடியும். மேலும் தரத்தை மேம்படுத்துவதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. தரம் குறைந்துவிடுவதாக கூறி தனியார் பள்ளிகளின் வியாபார நலனை உள்நோக்கமாகக் கொண்டு செயல்படக்கூடாது.
எனவே, தமிழக அரசு தனது முடிவினை மறுபரிசீலனை செய்யவதுடன் உடனடி நடவடிக்கையாக நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை அமுல்படுத்த உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் ம.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி 26.05.2011

Tuesday, May 24, 2011

சமச்சீர் கல்வி நிறுத்திவைப்பு: பா.ம.க. எதிர்ப்பு

சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பது என்ற தமிழக அரசின் முடிவுக்கு பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பாமக நிர்வாகக் குழு கூட்டம் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமையில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், அடிதடி, சண்டை சச்சரவுகள் போன்ற சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு குடிப்பழக்கம்தான் அடிப்படை காரணமாகும். மனித சமுதாயத்தை சீரழித்து வரும் குடிப்பழக்கத்திலிருந்து மக்களை விடுவிக்க பூரண மதுவிலக்கு கொள்கையை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

தனி மனித வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் கல்விதான் அடிப்படையாகும். ஏழை, பணக்காரர், நடுத்தர வகுப்பினர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே தரமான, சீரான உயர் கல்வி கிடைக்க வேண்டும். இதற்காகவே சமச்சீர் கல்வி முறை வேண்டும் என பா.ம.க. முதன் முதலில் குரல் கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இதனை வலியுறுத்தியதால் கடந்த ஆண்டில் சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அனைத்து வகுப்புகளுக்கும் இது விரிவுப்படுத்தப்படும் என எதிர்பார்த்த நிலையில் சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பது என தமிழக அரசு எடுத்துள்ள முடிவு பெரும் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை நீக்கி நடைமுறைப்படுத்துவதுதான் சரியானது. ரூ. 200 கோடி செலவில் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு தனது முடிவை திரும்பப் பெற வேண்டும். அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்படும் சமச்சீர் கல்வித் திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிர்வாகக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி 25.05.2011

சமச்சீர் கல்வியை நிறுத்திவைக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: அரசுக்கு கல்வியாளர்கள் கோரிக்கை

சமச்சீர் கல்வியை நிறுத்திவைக்கும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பேராசிரியர்கள் அ.மார்க்ஸ், கல்யாணி, கே.ராஜு, த.பச்சையப்பன், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, வழக்கறிஞர் ரஜினி ஆகியோர் கூறியதாவது,

பல்வேறு பாடத்திட்டங்கள் போய் பொதுப்பாடத்திட்டம் என்கிற அளவில் கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. 1 முதல் 10 ம் வகுப்பு வரை பொதுப்பாடத்திட்டம், பாடநூல்கள் உருவாக்க குழுக்கள் அமைக்கப்பட்டன.

குழுக்களின் அறிக்கை அடிப்படையில் பொது விவாதத்துக்குப் பிறகே பாடத்திட்டங்களை இறுதி செய்து பாடநூல்கள் அச்சடிக்கப்பட்டன. இந்த நிலையில், பாடத்திட்டம் தரமாக இல்லை என்று ஒரு தரப்பு கருத்தை ஏற்று சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதை அரசு நிறுத்திவைத்துள்ளது. இது பெரும் பொருள் இழப்பு மட்டுமல்ல, மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தும்.

பொதுக்கல்வி வாரியத்தில் 7 கல்வித் துறை அதிகாரிகள், 3 கல்வியாளர்கள், மெட்ரிக், ஆங்கிலோ, ஓரியண்டல் ஆசிரியப் பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளனர். பொதுக்கல்வி வாரியத்தின் ஏற்புடன் பாடத்திட்டமும், பாடநூலும் அச்சிடப்பட்டன.

அப்படியிருக்கும்போது, சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரமற்றதாக உள்ளது என்று அமைச்சரவை எப்படி முடிவுக்கு வர முடியும்?

இந்தப் பாடத்திட்டத்தைப் பற்றி அரசுக்கு யாராவது எழுத்துப்பூர்வமாக குறை தெரிவித்தார்களா? அல்லது ஏதேனும் வல்லுநர் குழு இந்தப் பாடத்திட்டம் சரியில்லை என்று அறிக்கைச் சமர்ப்பித்ததா?

எந்த அடிப்படையில் இந்தப் பாடத்திட்டம் தரமற்றதாக உள்ளது என்ற முடிவுக்கு அரசு வந்தது என்பதை விளக்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதை மற்றும் அவரது சில எழுத்துகள் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளதாலேயே புதிய அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. தேவையானால் அத்தகைய பகுதிகளை நீக்கி நூல்களை விநியோகிக்கலாம்.

பழைய பாடத்திட்டத்தின் படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள பாடநூல்கள் 10 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டவை. அதே பாடநூல்களை மீண்டும் பயன்படுத்துவது என்.சி.ஈ.ஆர்.டி நெறிமுறைக்கு எதிரானது என்பதை அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.

எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ள நிலையில், சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதை ஏற்க முடியாது. இது உண்மையான சமச்சீர்க் கல்வியை நோக்கிய பயணத்தை முடக்கும் செயல். நீண்ட விவாதங்களுக்குப் பிறகு பலரும் இணைந்து ரூ.216 கோடி செலவில் உருவாக்கிய பாடநூல்களை ஒரு சில தவறுகளுக்காகவும், அரசியல் நோக்கங்களுக்காகவும் புறக்கணிப்பது எந்த வகையிலும் நியாயமானதல்ல. சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைத்துள்ளதை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசை வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.

நன்றி: நக்கீரன் 25.05.2011

Monday, May 23, 2011

சமச்சீர் கல்வியை தொடர வேண்டும்: பா.ம.க., மார்க்சிஸ்ட் கோரிக்கை

பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியை நடப்பு ஆண்டிலிருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவே அதிர்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது. அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப்பட்ட சமச்சீர்க் கல்வி பாடத்திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்தப்படாது என்றும், அதற்கு மாறாக பழைய பாடத்திட்டத்தையே பின்பற்றலாம் என்றும் எடுக்கப்பட்டுள்ள முடிவு தேவையற்ற ஒன்றாகும்.

முந்தைய அரசு கொண்டுவந்த திட்டம் என்பதற்காக இந்தத் திட்டத்தை நிறுத்திவைப்பது ஏற்புடையதல்ல. சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் உள்ள குறைகளை படிப்படியாக சரிசெய்து கொள்வதுதான் முறையாக இருக்கும். அதைவிடுத்து, சமச்சீர் கல்வி முறையையே நிறுத்தி வைப்பது என்பது வளரும் கன்றை முளையிலேயே வெட்டி வீழ்த்துவதற்குச் சமம். சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்த புதிய வல்லுநர் குழு அமைக்கப்படும் என்பது காலம்தாழ்ந்த நடவடிக்கையே தவிர வேறல்ல.

இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் கல்வியை வணிகமயமாக்கி, கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வரும் தனியார் பள்ளி நிர்வாகிகளின் நிர்ப்பந்தத்திற்கு அரசு துணை போய்விடக் கூடாது.

தமிழக அரசின் முடிவால் ரூ.200 கோடி செலவால் அச்சிடப்பட்ட 6.5 கோடி புத்தகங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், பழைய பாடத்திட்டத்தின் படி, பாடப்புத்தகங்களை புதிதாக அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்க தேவையற்ற காலதாமதமும், பொருள்செலவும் ஏற்படும்.

1, 6 வகுப்புகளில் சமச்சீர் கல்வி முறை ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு 2, 7 வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

மாணவர்களின் கல்வி நலன் கருதியும், ஏழை, பணக்காரர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே தரமான, சீரான கல்வி கிடைப்பதை உறுதி செய்யவும் சமச்சீர் கல்வி முறையை அனைத்து வகுப்புகளுக்கும் நடப்பாண்டிலிருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ராமதாஸ்.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை அமலாக்க வேண்டும் என மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஜனநாயக இயக்கங்கள் நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வந்துள்ளனர்.

இந்தப் பின்னணியில்தான் தமிழ்நாடு அரசு சமச்சீர் கல்வியை ஏற்றுக்கொண்டு முதல்கட்டமாக 1,6 வகுப்புகளில் அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு சமச்சீர் கல்வி அமலாக்கத்தை ஏற்றுக்கொள்வதாகவும், கூடவே கல்வித் தரத்தையும் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி அதற்காக வல்லுநர் குழு அமைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்தக் கல்வியாண்டுக்கு சமச்சீர் கல்வியை நிறுத்தி, பழைய பாடத்திட்டத்தையே பின்பற்ற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கல்வித் தரத்தை உயர்த்துவதும் பாடப்புத்தகத்தில் உள்ள குறைபாடுகளைக் களைவதும் வரவேற்கத்தக்கவையே.

ஆனால், இதற்காக சமச்சீர் கல்வி முறையை இந்த ஆண்டு நிறுத்தி வைத்திருப்பதும், ரூ.200 கோடிக்கும் மேல் செலவிட்டு அச்சிட்டுள்ள பாடப்புத்தகங்களை முழுமையாகக் கைவிடுவது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையும், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, சமச்சீர் கல்வி முறையை இந்த ஆண்டும் அமலாக்கிக் கொண்டே கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான பணிகளை நிறைவேற்றுமாறும், பாடப்புத்தகங்களில் உள்ள குறைபாடுகளைக் களையும் வகையில் சில பாடங்களை நீக்கியோ அல்லது பிழைதிருத்தம் செய்தோ அரசு உத்தரவு மூலம் சரிசெய்யுமாறு வேண்டுகிறோம்.

இதன்மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் நம்பிக்கையை பலப்படுத்துமாறு தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு கேட்டுக்கொள்கிறது. தனியார் கல்விக் கட்டணக் கொள்ளையிலிருந்து மாணவர்களையும், பெற்றோர்களையும் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

நன்றி: தினமணி 24.05.2011

சமச்சீர் கல்வியை நிறுத்தக் கூடாது: அரசுக்கு அமைப்புகள் கோரிக்கை

சமச்சீர் கல்வியை அமல்படுத்திக்கொண்டே, அதிலுள்ள குறைகளை நீக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்திய மாணவர் சங்கம்: பொதுப்பாடத்திட்டத்தை இந்த கல்வியாண்டில் நிறுத்திவைக்கும் புதிய அரசின் அமைச்சரவை முடிவு சரியானதல்ல. எனவே, அதை அமல்படுத்திக்கொண்டே அதிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.

பொதுப்பாடத்திட்டத்தில் சில குறைகள் உள்ளதையும், அதில் பல மாற்றங்கள் செய்து செழுமைப்படுத்த வேண்டும் என்பதையும் ஏற்கிறோம்.

ஆனால், அதை இந்தப் பொதுப்பாடத்திட்டத்தை அமல்படுத்திக் கொண்டேதான் குறைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும்.

கடந்த தி.மு.க. அரசு முழுமையான சமச்சீர் கல்வியைத் தராமல், பொதுப்பாடத்திட்டத்தை மட்டுமே ஏற்படுத்தியது. பெரும்பான்மையான மக்களின் எதிர்பார்ப்பான முழுமையான சமச்சீர் கல்வியை இந்த அரசு ஏற்படுத்த வேண்டும்.

தமிழ் உரிமைக் கூட்டமைப்பு:இப்போது அமலில் உள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தில் குறைகள் இருந்தால் நீக்க நவடிக்கை எடுக்கலாம். ஆனால், திட்டத்தையே நிறுத்துவது பொருத்தமானதாக இல்லை.

பழைய பாடத்திட்டத்தின் புதிதாக புத்தகங்களை அச்சிடுவதற்கு மூன்று மாதங்களாகும். அதுவரை பாடப்புத்தகங்கள் இல்லாமல் மாணவர்களும், ஆசிரியர்களும் சிரமப்படுவார்கள். தமிழக அமைச்சரவை எடுத்த முடிவை மாற்றி சமச்சீர் கல்விமுறையை இந்த ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம்:சமச்சீர் கல்வித் திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களைந்து அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் பாடத்திட்டங்களை தயாரிக்க வேண்டும். தமிழ்நாட்டின் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களும் தரமான கல்வியை இலவசமாகப் பெறத்தக்க வகையில் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

நன்றி: தினமணி 24.05.2011

Thursday, May 19, 2011

ஜெயலலிதாவின் நியாயமற்ற கோபம்!

புதுவை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ரங்கசாமி தனித்தே ஆட்சி என்று அறிவித்திருப்பதன் மூலம் அதிமுகவுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சி தனக்கு துரோகம் செய்துவிட்டது என்று கூறிய ரங்கசாமி, தேர்தலுக்குப் பிறகு அதே துரோகத்தை அதிமுகவுக்கு இழைத்திருக்கிறார்.

நடந்து முடிந்த புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்திந்திய அதிமுகவுடன் இணைந்து ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. தேர்தல் சமயத்தில், தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரசாரம் செய்த நான், புதுச்சேரிக்கு சென்று என். ரங்கசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய ஆதரவு அளிக்குமாறு புதுச்சேரி வாக்காளப் பெருமக்களைக் கேட்டுக் கொண்டேன்.

இது மட்டுமல்லாமல், தேர்தலுக்கு முன்பு அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதிமுக மீதும், என் மீதும் நம்பிக்கை வைத்தும், கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை மனதில் வைத்தும் தான் புதுச்சேரி மக்கள் அதிமுக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தனர். அதிமுக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது.

கழகக் கூட்டணி வெற்றி பெற்றதும், புதுச்சேரி யூனியன் பிரதேச வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, புதுச்சேரி முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் என்.ஆர். ரங்கசாமி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளையும் நான் தெரிவித்திருந்தேன். ஆனால், ரங்கசாமி அவர்களுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற எனக்கு வாழ்த்து தெரிவிக்கக்கூட மனமில்லை. நன்றி மறந்து நாணயமற்ற முறையில் நடந்து கொண்டிருக்கிறார் ரங்கசாமி. எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை என்ற வள்ளுவரின் வாய்மொழியை இந்தத் தருணத்தில் நான் அவருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அதிமுக ஆதரவுடனும், செல்வாக்குடனும் வெற்றி பெற்றுவிட்டு ஆட்சி அமைக்க துணைநிலை ஆளுநரிடம் உரிமை கோரச் செல்லும் போது ஒரு வார்த்தை கூட எனக்குத் தெரிவிக்காமல், கழக வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேட்சை உறுப்பினரின் ஆதரவுடன் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைத்திருப்பது கூட்டணி தர்மத்திற்கு விரோதமான செயல் ஆகும். நம்ப வைத்து மோசடி செய்துவிட்டார் ரங்கசாமி. முதுகில் குத்துவதில் எல்லோரையும் மிஞ்சிவிட்டார் ரங்கசாமி. கூட்டணிக் கட்சியுடனேயே நாணயமற்ற முறையில் நடந்து கொண்டுள்ள ரங்கசாமி மக்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறார்? புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் ஏமாற்று நடவடிக்கைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்

ஜெயலலிதா கோபப்படுவதில் எந்தவித நியாயமும் இல்லை என்பதும் புதுச்சேரி மாநிலத்தில் அ.தி.மு.க.வின் செல்வாக்கு என்ன என்பதும் புதுச்சேரி மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

தமிழக மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்காகத்தான் வேறு வழியின்றி அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். ஜெயலலிதாவின் கடந்த கால ஆட்சியைப் பார்த்து தமிழக மக்கள் வாக்களிக்க வில்லை என்பதுதான் உண்மை.

ஆனால் புதுச்சேரி மக்கள் ரங்கசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகத்தான் வாக்களித்தனர்.

புதுச்சேரி அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் ரங்கசாமியின் படத்தைப்போட்டு..

“ரங்கசாமி முதலமைச்சராக எனக்கு வாக்களியுங்கள்”...

“நான் தேர்தலில் நிற்கவில்லை ரங்கசாமிதாம்மா என்ன நிக்க வச்சாரு.. ”

“நான் அ.தி.மு.க. வேட்பாளரா வரவில்லை ரங்கசாமியின் வேட்பாளராகத்தான் உங்களிடம் வந்துள்ளேன்”...

அதனால எனக்கு இரட்டை இலையில ஓட்டு போடுங்க...”


என்று கூறித்தான் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் மக்களிடம் வாக்கு கேட்டனர். அதனாலேயே அவர்களும் வெற்றி பெற்றனர்.

புதுச்சேரியில் ரங்கசாமியை தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து போட்டியிட்டிருந்தாலோ, அல்லது அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டிருந்தாலோ அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் டெப்பாசிட் தொகையை இழந்திருப்பார்கள். இந்த உண்மை தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவருக்கும் தெரியும்... இந்த உண்மை ஜெயலலிதாவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை...

Friday, April 22, 2011

ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்: ஜெயலலிதா

ஐ.நா. மன்றத்தால் போர்க் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இலங்கையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என்பதைத்தான் அண்மையில் 4 இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட கோரச் சம்பவம் நினைவூட்டுகிறது. இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடூர மனப்பான்மைக்கு உண்மையிலேயே ஆதாரம் தேவை என்றால் இலங்கை அதிகாரிகளின் சித்ரவதையால் சிதைந்து அழுகிய நிலையில் கிடந்த மீனவர்களின் சடலங்களே சாட்சி. இந்தியாவைச் சேர்ந்த தமிழர்கள் மீதே இதுபோன்ற கொடூரத் தாக்குதலை இலங்கை அரசு நடத்தியிருக்கும் நிலையில், இலங்கைத் தீவில் வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி தமிழர்களின் நிலைமை என்ன என்பதை கற்பனை செய்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

வருத்தம் தெரிவிக்கவில்லை:

இலங்கை அரசின் கொடுஞ் செயலுக்கு எதிராக சர்வதேச அளவில் குரல் எழுப்பப்பட்டதோடு மட்டுமல்லாமல் இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தி போர்க் குற்றத்துக்காக விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்திய அரசோ, தமிழக அரசோ இது குறித்து எதிர்ப்பையோ அல்லது வருத்தத்தையோ கூட தெரிவிக்கவில்லை.

மாறாக 2009 அக்டோபரில் தன்னுடைய மகள் கனிமொழி உள்பட திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தார் கருணாநிதி. இலங்கையிலிருந்து திரும்பிய நாடாளுமன்றக் குழுவினர் அங்கு எல்லாமே நன்றாக இருக்கிறது என்றும் அங்குள்ள தமிழர்கள் குறைபட்டுக் கொள்ளும் அளவுக்கு புகார் ஒன்றுமில்லை என்றும் தெரிவித்தனர்.

என்னதான் கருணாநிதி நற்சான்றிதழ் கொடுத்தாலும் அங்குள்ள தமிழர்களின் நெஞ்சை உருக்கும் நிலையைக் கண்டு மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு நாடுகளைச் சேர்ந்த அரசுகள், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை பொங்கி எழுந்தன. இப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அனுப்பிய குழுவின் அறிக்கை மூலம் இலங்கை அரசின் கொடூரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

அந்த அறிக்கையில் இருந்து ஒரு சில பகுதிகளை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். "ஐ.நா. குழுவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நம்பத் தகுந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படின் சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரான ஆபத்து விளைவிக்கக் கூடிய அத்துமீறல்களை இலங்கை அரசாங்கம் நிகழ்த்தியுள்ளது வெட்ட வெளிச்சமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் சில குற்றங்கள் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகும்.

2009-ம் ஆண்டு ஜனவரி முதல் மே வரை மனித வர்க்கத்தின் படுகொலை நடந்த இறுதி நாள்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அனாமதேயமாக செத்து மடிந்தனர். இது ஐக்கிய நாடுகள் சபை குழுவின் அறிக்கையில் மிகத் தெளிவாக உள்ளது.

தமிழினப் பாதுகாவலர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கருணாநிதியின் வேஷம் ஐ.நா. அறிக்கையின் மூலம் கலைக்கப்பட்டு இருக்கிறது. தமிழர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட, மனித குல வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மிக மோசமான இனப் படுகொலையை தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த கருணாநிதி பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ராஜபட்ச, அவருடைய சகாக்களின் போர்க் குற்றங்களை விசாரிக்கும் வகையில், சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த உடனடி நடவடிக்கைகளை தனது பங்குக்கு இந்திய அரசு எடுக்க வேண்டும். இல்லையெனில் அண்மையில் தமிழக வாக்காளர்கள் முன்பு, இலங்கை குறித்து சோனியா காந்தி தெரிவித்த கருத்துகள் வாய்மையற்றவை என்றாகிவிடும். இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலையை நடத்தியது இந்திய அரசுதான் என்று கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டும் உண்மை என்று நம்புவதற்கு வழி வகுக்கும்.
நன்றி: தினமணி 23.04.2011

Sunday, April 10, 2011

நாங்க உங்களுக்கு இலவசமாக குழந்தை மட்டும்தான் பெத்துத்தரல-நடுவண் அமைச்சரின் திமிர்ப்பேச்சு

நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் “தேர்தல் அறிக்கை” என்று ஒன்றை வெளியிட்டுள்ளன. வர்த்தக நிறுவனங்கள் விழாக்கால இலவசங்கள் வழங்குவதுபோல் தேர்தல் திருவிழாக்கால இலவசங்கள் பல இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஊடகங்களும் அந்த அறிக்கைகளில் உள்ள ஒருசில உருப்படியான கொள்கை முடிவுகளைப்பற்றி செய்தியே வெளியிடுவதில்லை. மாறாக டி.வி.இலவசம்.. பிரிட்ஜ் இலவசம்... வாஷிங் மெஷின் இலவசம்... என்றே ஊடகங்கள் செய்திகளை வெளியிடகின்றன.

மக்களும், அரசியல் கட்சிகள் இலவசங்களை கொடுத்து நம் கண்ணை மறைத்து அடிமடியில் கையை வைக்கப்போகிறார்கள் என்பதை உணராமல் அந்த இலவசங்களுக்காகவே ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இலவசங்களுக்காக ஏங்கும் மக்களின் எண்ணம் அரசியல் வியாதிகளை இன்று வரம்புமீறி பேசவைத்திருக்கிறது.

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்த்த நடுவண் அமைச்சர் நாராயணசாமி தேர்தல் பரப்புரையின் மக்களிடம் பேசும்போது... எங்களுக்கு நீங்கள் வாக்களித்தால் உங்களுக்கு... இலவசமாக டி.வி. தருவோம்.. மிக்சி தருவோம்... பிரிஜ் தருவோம்... செல்போன் தருவோம்... புடவை தருவோம்... உங்களுக்குத் தேவையான அனைத்தையும் இலவசமாகத் தருவோம்... “நாங்க உங்களுக்கு இலவசமாக குழந்தை மட்டும்தான் பெத்துத்தரல...” என்று வரம்பு மீறி பேசியுள்ளார்.

நாராயணசாமியின் இந்தத் திமிர்ப்பேச்சுக்கு பல்வேறு கண்டனங்கள் பரவலாக எழுந்துள்ளன. வழக்கம்போல் உள்ளூர் ஊடங்கள் இந்த நிகழ்வுகளை இருட்டடிப்பு செய்து வருகின்றன.

மக்களே சிந்திப்பீர்!
இந்தத் திமிர்ப்பேச்சு இவர்களுக்கு எங்கிருந்து வந்தது?

நாராயணசாமியின் வரம்புமீறிய பேச்சின் காட்சி:
http://www.youtube.com/watch?v=SzDJuQ2zqoU
http://www.youtube.com/watch?v=2i0LsAiRftk
http://www.youtube.com/watch?v=Teq0ZptFQPU
http://www.youtube.com/watch?v=kF_3qKybDj0

Friday, April 1, 2011

வைகோ அவர்களே! கற்பழிக்க வந்தவனிடம் கண்ணியமாக நடக்க வேண்டுமா?

தமிழன் காசில் தமிழினத்திற்கு துரோகமிழைப்தையே தொழிலாகக் கொண்டுள்ள “தினமலர்” நாளேடு முட்டள்தினத்தை கொண்டாடுவதற்காக வைகோ தொடர்பாக ஒரு செய்தியை நேற்று வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தியை படித்த மானமுள்ளத் தமிழர்கள் அனைவரும் தினமலருக்கு எதிராக கோபமுற்றனர்.

ஆனால், வழக்கம்போல் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு....


”...எத்தகைய விமர்சனங்களை எவர் நம்மீது கூறினாலும், சேற்றை வாரி இறைத்தாலும், அண்ணாவின் மணிவாசகத்தை கருதி, எதையும் தாங்கும் இதயத்தோடு பொறுத்துக் கொள்வோம்....

...கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதற்கு இலக்கணமாக இயங்குவோம்! எனவே தோழர்கள் இதுகாறும் கடைப்பிடித்து வந்த கண்ணியமான அணுகுமுறைக்கு சிறிய சேதமும் ஏற்படாவாறு ஆத்திரத்தை வெளிக்காட்டும் எவ்வித செயலிலும் ஈடுபடக் கூடாது என வேண்டுகிறேன்... என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

மரியாதைக்குரிய வைகோ அவர்களிடம் கேட்பது இதுதான்...

“கொலைவெறியோடு நம்மை குத்தவரும் எதிரியிடமும்...
காமவெறியோடு ஒரு பெண்ணின் கற்பை சூறையாடவரும் காமக்கொடூரனிடமும்...
தமிழர்கள் கண்ணியத்தோடுதான் நடந்துகொள்ள வேண்டுமா?

சாதரண கொசு, மூட்டைப்பூச்சி, எறும்பு போன்றவைகளிடமிருந்து நம்மை நாம் தற்காத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை நாம் மேற்கொள்கிறோம். தமிழினத்தை கருவறுக்க வந்த தினமலருக்கு எதிராக சிறு துரும்பையாவது எடுத்துவீச வேண்டாமா?...

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற சொற்களே தற்போது தமிழனை வெறுப்பேற்றிக்கொண்டிறுக்கிறது.

தினமலரின் வேசித்தனம்

தமிழ்நாட்டையும் தமிழினத்தையும் சீரழிப்பதற்காகவே “தினமலர்” (எ) “தினமலம்” என்ற நாளேடு தமிழ்நாட்டில் வெளிவருகிறது. இந்த கருமாதி பத்திரிக்கையில் இன்று (01.04.2011) “வைகோ செயலலிதாவை சந்தித்தார்” என்று கொட்டை எழுத்தில் செய்தி வெளியிட்டு “தேர்தல் களம் 2011” சிறப்பிதழில் அது தொடர்பாக விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது.

இச்செய்தியை உண்மையென நம்பி மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் இதைப் பற்றியே பேசிக்கொண்டனர். வைகோவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களும் பொதுமக்கள் மத்தியில் எழுந்தன. ம.தி.மு.க.-வினரும் நடுநிலையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால், இதுதொடர்பாக வேறு எந்தவொரு நாளேட்டிலும் செய்தி வரவில்லை. கடைசியில் இன்று முட்டாள்தினமாம் அதற்காக மக்களை ஏமாற்றவே இப்படி ஒரு செய்தி வெளியிட்டார்களாம்.

மக்களை ஏமாற்றுவதற்காக தேர்தல் நேரத்தில் இப்படி செய்தியை வெளியிட்ட தினமலரை சனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் கண்டிக்க வேண்டும்.

இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசியலில் எமது இயக்கத்தை பற்றியும், என்னைப் பற்றியும் கடுமையான விமர்சனங்கள் ஏடுகளில், ஊடகங்களில் வந்தாலும் அவற்றை ஜனநாயக பண்போடு தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை பெற்று இருக்கிறோம். எவ்வளவோ கடுமையாக நாம் காயப்படுத்தப்பட்ட நேரங்களிலும், ஆத்திரத்துக்கு கிஞ்சிற்றும் இடம் கொடுத்தது இல்லை. நாளிதழ் ஒன்றில் இன்றைக்கு மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை, அ.தி.மு.க. தலைமையை சந்தித்து பேசியதாக குறிப்பிட்டு தேர்தல் களம் என்ற தலைப்பில் பிரதானமாக வெளியிடப்பட்ட செய்திக்கு உள்ளே ஏழாம் பக்கத்தில் உண்மை என்ன? என்று கூறி, நான்கு வரிகளில் இது ஏப்ரல் முதல்நாள் செய்தி என குறிப்பிட்டு உள்ளது.

வேடிக்கையாக பொய்களை சொல்லி, பிறரை முட்டாளாக்கும் வேலை ஏப்ரல் முதல்நாள் நடைபெறும் என்றும், மேற்கு நாடுகளில் பகுத்தறிவுக்கு பொருந்தாத ஒரு வழக்கம் இருக்கிறது. அனல்வீசும் தேர்தல் களத்தில் தமிழகம் இருக்கின்ற நிலையில், மறுமலர்ச்சி தி.மு.க.வை பற்றி, இப்படி ஒரு செய்தி வெளியிட்டது நியாயமான கோபத்தையும், வேதனையையும் தோழர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.

எத்தகைய விமர்சனங்களை எவர் நம்மீது கூறினாலும், சேற்றை வாரி இறைத்தாலும், அண்ணாவின் மணிவாசகத்தை கருதி, எதையும் தாங்கும் இதயத்தோடு பொறுத்துக் கொள்வோம். தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று முடிவு எடுத்தபின்னர் கழகம்தான் போட்டி இடவில்லையே, நாம் சுயேச்சையாக போட்டியிட்டால் என்ன என்று எண்ணி, ஒரு தொகுதியில் கூட கழகத் தோழர்கள் சுயேச்சையாக கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பது, வேறு பல கட்சிகளின் போட்டி வேட்பாளர்கள் களம் இறங்கும் சூழலில் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் கட்டுப்பாடு இமயம் நிகர்த்தது என்று நாட்டு மக்களை சிந்திக்க வைத்து இருக்கிறது.

கழகத்துக்கு பெருமை தேடித்தந்த தோழர்களுக்கு, இயக்கம் காலமெல்லாம் கடமைப்பட்டு இருக்கின்றது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதற்கு இலக்கணமாக இயங்குவோம்! எனவே தோழர்கள் இதுகாறும் கடைப்பிடித்து வந்த கண்ணியமான அணுகுமுறைக்கு சிறிய சேதமும் ஏற்படாவாறு ஆத்திரத்தை வெளிக்காட்டும் எவ்வித செயலிலும் ஈடுபடக் கூடாது என வேண்டுகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலருக்கு ஒரு ஆலோசனை: நீங்கள் பரபரப்பாக செய்தி வெளியிடவேண்டும் என்று நினைத்தால்...

“தினமலர் அலுவலகத்தில் இடி விழுந்தது!

தினமலர் அலுவலகங்கள் அனைத்தும் எரிந்து நாசமானது!

தினமலர் குடும்பத்துப் பெண்கள் அனைவரும் ஒரே நாளில் டிரைவரோடும், வாட்ச்மேனோடும் ஓடிவிட்டனர்!

தினமலர் அலுவலகம் இன்று ஒருநாள் மட்டும் விபச்சாரத்திற்கு இலவசம்!”

என செய்திகளை வெளியிட்டால் தமிழ்நாடே பரபரப்படையும், இந்நிகழ்வுகள் அனைத்தும் உண்மையாவே இருந்துவிட்டால் தமிழர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியடைவார்கள்!..

Thursday, February 17, 2011

புதுக்கோட்டை சு.முத்துக்குமாரை வணங்குகிறோம்...


தமிழினப் பகைவர்களால் மாண்ட
தமிழ் தேசிய சிந்தனையாளரும் தமிழீழ ஆதரவாளருமான
புதுக்கோட்டை சு.முத்துக்குமாரை
வணங்குகிறோம்...

Thursday, January 13, 2011

ஆடுகளம்: எங்க ஊரு பையன் நடிச்சிருக்கான்!


எந்தவொரு பலமான திரையுலக பின்ணணியும் இன்றி...
தன்னுடைய திறமையை மட்டும் நம்பி...
சென்னைக்கு நடிக்க வந்த எங்க ஊரு பையன் “ஆடுகளம்” படத்தில் நடித்துள்ளான்...

அவன் பெயர்
“முருகதாசு”


ஆடுகளம் திரைப்படம் பார்க்கும் வலையுலக திரைவிமர்சகர்கள் அவனைப்பற்றியும் கொஞ்சம் திறனாய்வு செய்யுமாறு வேண்டுகிறேன்...

அன்புடன்
அரியாங்குப்பத்தான்



படங்கள்: நக்கீரன்