Tuesday, November 30, 2010

ஆட்சியாளர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் கூட்டணி ஆட்சி

சட்டீஸ்கர் மாநிலத்தில், தண்டகாரண்ய வனத்தின் ஒரு பகுதியாக இருக்கும், தாண்டிவாடா மாவட்டத்தில் உள்ள கனிம வளங்களை சுரங்கம் அமைத்து தோண்டி எடுப்பதற்காக அங்கு வாழ்ந்து வந்த ஆதிவாசிகள் 4 இலட்சம் பேர் துரத்தப்பட்டதையும், அவர்களின் துயரத்தையும் நமது நாட்டின் மற்ற பகுதி மக்களுக்கும் எடுத்த சொல்ல சென்னைக்கு வந்த காந்தியவாதி ஹிமான்சு குமார் ஒரு வரலாற்றைக் கூறினார்.

இந்தியா விடுதலை பெற்ற நாடான பிறகு, ஒரு நாள் மகாத்மா காந்தியைச் சந்திக்க வந்தாராம் பூதான இயக்கத்தை நடத்திய வினோபா பாவே. அவரிடம் பேசிய மகாத்மா காந்தி, “நமது நாடு விடுதலை பெற்றுவிட்டது. அரும்பாடுபட்டு நாம் பெற்ற இந்த விடுதலை நிலைக்க வேண்டுமானால் நமது மக்களை ஜனநாயகப்படுத்த வேண்டும். அவர்கள் தங்கள் உரிமைகளை உணர வேண்டும். அந்தப் பணியை நீங்களெல்லாம் மேற்கொள்ள வேண்டும். இதைச் செய்யத் தவறினால், எதிர்காலத்தில் இந்த நாட்டில் நாம் நினைக்கும் அந்த உண்மையான ஜனநாயகம் இருக்காது. ஒன்று, பெரு நிறுவனங்களின் ஜனநாயகம் (Corporate Democracy) உருவாகும் அல்லது குண்டர்களின் ஜனநாயகம் (Goondas Democracy) இருக்கும்” என்று கூறியதாக ஹிமான்சு குமார் கூறினார்.

“மகாத்மா காந்தி அவ்வாறு கூறியதற்கு இணங்கவே, வினோபா பாவே வழியில் நின்று, தண்டகாரண்ய காடுகளில் எனது ஆசிரமத்தை அமைத்து அந்த மக்களோடு வாழ்ந்து, அவர்களுக்கிடையே தொண்டு செய்து வருகின்றேன்” என்று கூறினார் (தமிழ்.வெப்துனியாவில் அந்த செய்தியைப் பார்க்க).

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டினால் பயன்பெற்றோர் விவரங்கள், நீரா ராடியா நடத்திய உரையாடல்களில் வெளியானதைப் பார்க்கும் போது, மகாத்மா காந்தியின் அந்த அச்சமே நினைவிற்கு வருகிறது.

தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.இராசாவிற்கு தொலைத் தொடர்பு அமைச்சர் பதவியைப் பெற்றுத் தருவதில் இருந்து, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வரை நடந்தேறிய பேரங்களை வெளிக்கொணர்ந்தது மட்டுமின்றி, இந்த நாட்டை ஆளும் அரசின் கொள்கை முடிவுகளை நிர்ணயிப்பதிலும், மாற்றுவதிலும் பெரு நிறுவனங்கள் எந்த அளவிற்கு செல்வாக்குச் செலுத்தின என்பதையும், அவைகளுக்கு வசதியாக பத்திரிக்கைகளில் செய்திகள் வராமல் இருட்டடிப்பை செய்யப்பட்டதும், அந்த பெரு நிறுவனங்கள் பெரும் பலம் அடைவதற்கென்ற அரசு அளிக்கம் சலுகைகளை நாடாளுமன்றத்தில் எந்த உறுப்பினரும் பேசாமல் தடுக்க கையாண்ட முறைகளும் ராடியா உரையாடல் பதிவுகளில் வெளிவந்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய வணிகக் குடும்பத்தில் நடந்த மோதல், அதில் ஒருவரின் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு உற்பத்திக்கு விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக அவர்களில் ஒருவர் மற்றவருக்கு எதிராக பத்திரிக்கைகளை பயன்படுத்த முயன்றது. அதனை முன்னவர் ராடியா உள்ளிட்ட தனது லாபியிஸ்ட்டுகளை பயன்படுத்தி, ‘பேச்சுவார்த்தைகளை’ நடத்தி இருட்டிப்பு செய்த விவரங்கள். விலை நிர்ணயம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போதே, திரைமறைவில் இத்தனை திரைமறைவு வேலைகள் நடந்துள்ளது.

இதைவிட, பெரும் அதிர்ச்சி தரும் மற்றொரு திரைமறைவு பேரம்தான் மிகக் கொடியது. மத்திய அரசு கடைபிடித்துவரும் புதிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்புகள் தொடர்பான உரிமம் (New Exploration and Licensing Policy) அளிக்கப்பட்டதில், இந்தியாவின் முதன்மையான அந்த பெரும் நிறுவனத்திற்கு வரிச் சலுகை - அதுவும் முன்தேதியிட்டு வழங்க - முன்வந்ததும், அதனை நாடாளுமன்ற விவாதத்தில் கொண்டு வந்து ‘கெடுத்து’விடாமல் இருக்க மேற்கொண்ண்ட திரைமறைவு நடவடிக்கைகளும்தான் அதிர்ச்சியளிக்கிறது. அந்த வரிச் சலுகை முன் தேதியிட்டு (Retrospective) அளிக்கப்பட்டால் அந்த முதன்மை நிறுவனத்திற்கு மட்டும் ரூ.81,000 கோடி வருமான வரிச் சலுகை கிடைக்குமாம். இந்த உண்மை பத்திரிக்கைகளில் வெளிவராமல் செய்துவிட்டதாக அந்த முதன்மை நிறுவனத்திற்கான தொடர்பாளராக செயல்பட்ட, இந்தியப் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது அவருக்கு செயலராக இருந்த என்.கே.சிங், ராடியாவிடம் கூறுகிறார்.

அந்த உரையாடலில் ராடியாவுடன் பேசியது என்.கே.சிங்தான் என்பதை, அவருடன் கல்லூரியில் பயின்ற பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் அருண் ஷோரி (ஒரு தொலைக்காட்சி பேட்டியில்) உறுதி செய்துள்ளார். பத்திரிக்கைளில் வெளிவராமல் (இந்தியாவின் ஒரு பெரும் ஆங்கில நாளிதழின் உரிமையாளரிடமே பேசிவிட்டதாக கூறுகின்றனர்) தடுத்துவிட்ட பிறகு, அதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதிப்பதை எவ்வாறு தடுப்பது என்று என்.கே.சிங், ராடியாவுடன் விவாதிக்கிறார்.

இப்பிரச்சனையை அருண் ஷோரி கட்சிக் கூட்டத்தில் எழுப்பியதால், அவர் நாடாளுமன்றத்திலும் அது பற்றி பேசக் கூடும் என்பதால், நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக முதலில் பேசுபவராக இருந்த அருண் ஷோரியை பின்னுக்குத் தள்ளிவிட்டு, அக்கட்சியின் முன்னாள் தலைவரான வெங்கையா நாயுடுவை (திரைமறைவு வேலை செய்து) முதன்மை பேச்சாளராக வாதத்தை வைப்பார் என்று மாற்றுகின்றனர்.

இதேபோல், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு, முரளி மனோகர் ஜோஷியை மக்களவையில் முதன்மை பேச்சாளராக விவாதத்தை தொடங்க வைத்து அந்த முதன்மை நிறுவனத்திற்கு அரசு அளிக்க உத்தேசித்துள்ள சலுகையை கேள்விக்கு உட்படுத்தாமல் தடுத்து விடுகின்றனர்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக அரசு என்று பெருமைப்படுத்தப்படும் நமது நாட்டின் பாரம்பரியமிக்க நாடாளுமன்றம் திரைமறைவு வேலைகளால் இயக்கப்படுகிறது என்ற உண்மை இன்றுதான் முதல் முறையாக - மிக ஆதாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!

இந்தியாவின் முதன்மையான நாளேடுகளில் இன்று வெளியாகியுள்ள இந்த விவரங்கள் அனைத்தும் உண்மையென்பதும், அது இதுவரை மறுக்கப்படவில்லை என்பதும் ஒன்றை நிச்சயமாக்குகிறது. அது இந்த நாடு நாம் நினைத்துக் கொண்டிருப்பதுபோல் மக்கள் ஜனநாயக அரசல்ல என்பதையே.

இது ஆட்சியில் இருப்பவர்கள், அரசு நிர்வாகிகள் (Bureaucracy), பெரு நிறுவனங்கள் (Corporates) ஆகியோரின் கூட்டணி ஜனநாயமே இங்கு நிலவுகிறது. இங்கு பெரு நிறுவனங்களின் கைப்பாவையாகவே அரசியல் கட்சிகளும், ஆட்சியில் உள்ளவர்களும், அதிகாரிகளும் செயல்படுகின்றனர் என்பதற்கு இதற்கு மேல் எந்தச் சான்றும் தேவையில்லை.

இவையாவும் ஒரிரு கோடி ரூபாய்க்கு நடந்த திரைமறைவு வேலையில்லை, பல ஆயிரம் கோடி ரூபாய் வரிப்பணத்தை சலுகை என்ற பெயரால் அரசே கொள்ளை கொடுக்கும் கொடுமையாகும்.

ஒரு பக்கத்தில் நமது நாட்டின் விவசாயிகள் கடன் தொலை தாங்காமல், மரபணு மாற்ற விதைகளை பயிரிட்டு, அதனால் இழப்பு ஏற்பட்டு சாகிறார்கள். இருபது ஆண்டுக்காலத்தில் இப்படி 3 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு செத்துள்ளார்கள். மறுபக்கம், தொன்றுதொட்டு தாங்கள் வாழ்ந்த வந்த பூமியில் உள்ள வளங்களுக்காக பழங்குடிகள் - இப்படிப்பட்ட பெரு நிறுவனங்களின் கொள்ளைக்காக - விரட்டப்படுகிறார்கள்.

கடலிற்குச் சென்று மீன் பிடித்து அன்றாட வாழ்க்கையை கரையேற்றிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் மீனவர்கள் சிறிலங்க கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். அன்றாடம் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியால் அடித்தட்டு மக்கள் அல்லுறுகிறார்கள். ஆனால், இந்த நாட்டின் வளத்தையும், வரிப்பணத்தையும் மிக எளிதாக பெற்று பெரு நிறுவனங்கள் செழித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் உலக பணக்காரர்கள் வரிசையில் அதிகம் இடம்பெறுகின்றனர் என்று இங்குள்ள பத்திரிக்கைகள் பல பெருமையாக செய்திகளை வெளியிடுகின்றன.

சந்தேகமில்லை, மகாத்மா காந்தி அஞ்சிய நிறுவன ஜனநாயகம் (Corporate Democracy) நமது நாட்டில் நிலைபெற்றுவிட்டது.
நன்றி: தமிழ்.வெப்துனியா.காம் (30.11.2010)

Wednesday, November 24, 2010

தமிழ் கலைஞர்களை பழித்தால் குரல்வளையை கடிப்பேன்: வி.சி.குகநாதன்

நான், எந்த நடிகருக்கும் விரோதி அல்ல. ஆனால் தமிழர்களையும், தமிழ் கலைஞர்களையும் பழித்தால், அவர்களின் குரல்வளையை கடித்து துப்பவும் தயங்க மாட்டேன் என்று வி.சி.குகநாதன் கூறினார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் வி.சி.குகநாதனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. தமிழ் நடிகர்களை ஆர்யா இழிவாக பேசியதாக வி.சி.குகநாதன் கயிறு திரித்து புது பிரச்சினையை கிளப்பி இருக்கிறார் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.குகநாதன், “உங்கள் விருப்பம்” படவிழாவில், எந்த நடிகரின் பெயரையும் குறிப்பிட்டு நான் பேசவில்லை. “ஏசியாநெட்” நடத்திய நிகழ்ச்சியில் ஒரு நடிகர் கலந்துகொண்டு பேசும்போது, மலையாள படங்களில் நடிக்க வேண்டும் என்றால் நடிப்பு தெரிந்திருக்க வேண்டும். அது எனக்கு கொஞ்சம்தான் தெரியும். அதற்கு தகுந்த மாதிரி வேஷம் கொடுத்தால், அதை நான் கவுரவமாக நினைத்து மலையாள படங்களில் நடிப்பேன். ஏனென்றால் நான் ஒரு மலையாளி. எல்லோரும் பார்க்கிற மாதிரி மலையாள பட உலகில் இன்னும் தரமான படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் மலையாள படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

அந்த நடிகரின் பேச்சு தமிழ் நடிகர்களை கேவலப்படுத்துவது மாதிரி இருக்கிறது. உலக புகழ்பெற்ற நடிகர்திலகம் சிவாஜிகணேசனில் இருந்து கமல்ஹாசன் வரை பல அபூர்வ நடிகர்களை கொண்டது, தமிழ் பட உலகம். அவர்களை எல்லாம் கேவலப்படுத்துகிற மாதிரி அந்த நடிகர் பேசியிருக்கிறார்.

இதை நான் பெப்சி' தலைவராக கூறவில்லை. தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒரு அங்கத்தினராக கூறுகிறேன். 10 வயதில் இருந்தே தமிழ் மொழிக்காகவும், தமிழ் இனத்துக்காகவும் நான் போராடியவன் என்பது தமிழ் மக்களுக்கு தெரியும்.

நான் யாருக்கும் கயிறு திரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அடிக்கடி கட்சி மாறுகிற ஆளும் இல்லை. தமிழர்களுக்காக போராடுகிற எல்லா தமிழர்களுடனும் இருப்பேன்.

நான், எந்த நடிகருக்கும் விரோதி அல்ல. ஆனால் தமிழர்களையும், தமிழ் கலைஞர்களையும் பழித்தால், அவர்களின் குரல்வளையை கடித்து துப்பவும் தயங்க மாட்டேன் என்றார்.

நன்றி: நக்கீரன்.காம் (25.11.2010)

Tuesday, November 23, 2010

பீகார் தேர்தல் - நிதிசுகுமார் வாழ்க!

பீகாரில் நிதிசுகுமார் தலைமையிலான கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்க பீகார் மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். மக்களுக்காக உண்மையாக உழைக்கும் ஒருதலைவரை பீகார் மக்கள் பெற்றுள்ளனர். பீகார் மக்கள் மேலும் வளச்சியடைய வாழ்த்துவோம்!

இந்தத்தேர்ததில் கங்கிரசின் வெற்றி ஒற்றை இலகத்திலேயே சுருக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக உண்மையாக உழைக்கும் தலைவரை அடையாளங்கண்டு காங்கிரசு-சோனியா-இராகுல் போன்ற வேடதாரிகளை பீகார் மக்கள் புறக்கணித்துள்ளனர்.

தமிழகத் தலைவர்களும் தமிழர்களுக்கு துரோகம் செய்யாமல் தமிழர்களின் நலனுக்காக உண்மையாக உழைத்தால் காங்கிரசை அண்டிப்பிழைக்கும் நிலைக்கு ஆளாகத்தேவையில்லை. தமிழர்களுக்காக உண்மையாக உழைக்கும் ஒருதலைவர் கிடைக்கமாட்டாரா?

Saturday, November 20, 2010

ஸ்பெக்ட்ரம் ஊழலை “நக்கீரன்” கண்டுகொள்ளாது ஏன்?

ஸ்பெக்டரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது என்பது ஓரளவுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊழலின் தொகை எவ்வளவு? யார் யாருக்கு எவ்வாளவு தொகை பங்கு பிரிக்கப்பட்டுள்ளது? பங்கு ஒழுங்காக பிரிக்கப்பட்டுள்ளதா? என்பது போன்ற தகவல்கள்தான் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.

அதற்குப் பிறகு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து!!!!!!!!! விசாரணை நடத்தி!!!!!!!!!! வாய்தா வாங்கி!!!!!!!!!!! வழக்கு நடத்தி!!!!!!!!!!! இவ்வளவு பெரிய தவறு செய்த பெரிய மனிதர்களை சட்டம் தண்டிக்கும் என குடிமக்களாகிய நாம் நம்பித்தான் ஆக வேண்டும். (நம்புவோமாக!)

தமிழ்நாட்டில் நடைபெறும் அரசியல் அத்துமீறல்களை, ஊழல்களை, மனித உரிமை மீறல்களை புலணாய்வு செய்து “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என எதற்கும் அஞ்சாமல்(!!!!!) செய்தி வெளியிடும் “நக்கீரன்” வாரம் இருமுறை இதழ், ஸ்பெக்டரம் ஊழலைப்பற்றி பட்டும் படாமல் செய்தி வெளியிடுகிறது. அதுமட்டுமின்றி இந்த ஊழலில் ஆ.இராசாவும் தி.மு.க.வும் தவறே செய்யவில்லை, அவர்கள் உத்தமர்கள் என்பது போன்று செய்திகளை வெளியிடுகிறது.... நெற்றிக்கண் திறந்துவிடுமோ என நக்கீரன் அஞ்சுகிறாரா என தெரியவில்லை...

அண்மையில் சவுக்கு இணையதளத்தை பார்த்தபோது தான் அதன் இரகசியம் புரியந்தது. அலைக்கற்றை ஊழலில் முக்கிய பங்குவகித்த “ஸ்வாம் டெலிகாம் நிறுவனத்தில்” நக்கீரன் துணை ஆசிரியர் காமராஜ் அவர்களும் பங்குதாரராக இருக்கிறாராம். ஆண்டிமுத்துவும், சின்னப்பிள்ளையும். http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=165:2010-11-18-12-48-20&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2

வாழ்க! சனாநாயகத்தின் நாண்காவது தூண்!

Wednesday, November 17, 2010

புதுச்சேரியில் பெரியார் திராவிடர் கழகத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்!

ஈழ அகதிகள் வெளிநாடு செல்ல உதவியதாக பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி தலைவர் லோகு.அய்யப்பன், வீராம்பட்டினம் கவுன்சிலர் சக்திவேல், காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணி உள்ளிட்ட 10 பேரை புதுச்சேரி குற்றப்புலணாய்வு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நிபந்தனை பிணையில் வெளிவந்து குற்றப்புலணாய்வு அலுவலகத்தில் நாள்தோறும் கையெழுத்திட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணி, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், வீராம்பட்டினம் கவன்சிலர் சக்திவேல் ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து புதுச்சேரி அரசு சிறையில் அடைத்துள்ளது.

அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கும் நோக்கத்தோடு புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை கண்டித்தும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட மூவரையும் உடனடியாக விடுதலை செய்ய கோரியும் இன்று காலை 10 மணியளவில் பெரியார் திராவிடர் கழகத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இந்த மறியலில் ம.தி.மு.க., பார்வர்டு பிளாக், செந்தமிழர் இயக்கம், தமிழர் தேசிய இயக்கம், நாம் தமிழர் இயக்கம், மண்ணின் மைந்தர்கள் நல உரிமைக் கழகம், அம்பேத்கர் தொண்டர்படை, பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம், லோக்ஜனசக்தி, புரட்சிப்பாவலர் இலக்கியப் பாசறை, புதுவைக்குயில் பாசறை, செம்படுகை நன்னீரகம், தந்தை பெரியார் பாசறை, மாணவர் நல அறக்கட்டளை, மீனவர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தோழமை அமைப்பினரும் திரளாக கலந்துகொண்டனர். இதனால் கடலூர், விழுப்புரம், திண்டிவனம் ஆகிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 200 பெண்கள் உள்ளிட்ட 500 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் கைது!

புதுச்சேரியில் இருந்து வெளிநாட்டுக்கு ஈழ அகதிகளை அழைத்து சென்றது தொடர்பாக வீராம்பட்டினம் திமுக கவுன்சிலர் சக்திவேல், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், சிலோன் மணி, படகு ஓட்டுநர் ஜீவா ஆகியோர் புதுச்சேரி குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல்துறையினரால் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் பயன்படுத்தியப் படகு காரைக்காலில் நிறுத்தப்பட்டது. அதில் இருந்த டீசல், கேஸ் சிலிண்டர், அடுப்பு உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்று, தடயங்களை அழித்தது தொடர்பாக காரைக்கால் மாவட்ட பாமகச் செயலர் தேவமணியும் பின்னர் கைது செய்யப்பட்டார்.பின்னர் 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டு, நிபந்தனை ஜாமீனில், வெளியில் வந்து, தினமும் குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து பெரியார் திராவிடர் கழக புதுச்சேரி தலைவர் லோகு.அய்யப்பன் மற்றும் வீராம்பட்டினம் கவுன்சிலர் சக்திவேல் ஆகியோர் இன்று மாலை குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல்நிலையத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

Tuesday, November 16, 2010

ஈழ அகதிகளுக்கு உதவிய காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது

புதுச்சேரியில் இருந்து, படகு மூலம் ஈழ அகதிகளை வெளிநாட்டுக்கு அழைத்து சென்ற வழக்குத் தொடர்பாக, காரைக்கால் பாமக செயலர் தேவமணி செவ்வாய்க்கிழமை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரியில் இருந்து வெளிநாட்டுக்கு ஈழ அகதிகளை அழைத்து சென்றது தொடர்பாக வீராம்பட்டினம் திமுக கவுன்சிலர் சக்திவேல், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், சிலோன் மணி, படகு ஓட்டுநர் ஜீவா ஆகியோர் புதுச்சேரி குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸôரால் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் பயன்படுத்தியப் படகு காரைக்காலில் நிறுத்தப்பட்டது. அதில் இருந்த டீசல், கேஸ் சிலிண்டர், அடுப்பு உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்று, தடயங்களை அழித்தது தொடர்பாக காரைக்கால் மாவட்ட பாமகச் செயலர் தேவமணியும் பின்னர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டு, நிபந்தனை ஜாமீனில், வெளியில் வந்து, தினமும் குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர். இந்நிலையில் காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய காரைக்கால் மாவட்ட ஆட்சியர் பிராங்கிளினிடம் புதுச்சேரி குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸôர் பரிந்துரை செய்தனர். அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் பிராங்கிளின் உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து தேவமணி, புதுச்சேரியில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

அரசை கண்டித்து போராட்டம்: புதுச்சேரியில் பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் தந்தை பிரியன் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

ஈழத்தமிழர் போராட்டத்துக்கு உறுதுணையாக இருந்து போராடி வரும் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், கவுன்சிலர் சக்திவேல், காரைக்கால் பா.ம.க. செயலர் தேவமணி ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் புதுச்சேரி அரசு கைது செய்துள்ளதை கண்டிக்கிறோம்.

இதை அரசு கைவிட வேண்டும். மீறி செய்தால் சட்டரீதியாக போராட்டம் நடத்தவும், அனைத்து அரசியல், சமுதாய இயக்கங்களை ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டங்களை நடத்தவும் முடிவெடுத்துள்ளோம் என்றார்.

நன்றி: தினமணி 17.11.2010

Wednesday, November 3, 2010

1,39,652,00,00,000 ரூபாய் கொள்ளை!

வரலாறு காணாத ஊழல்!


1,39,652,00,00,000. ஒரு சராசரி இந்தியன் இந்தத் தொகையைக் குழப்பமின்றி எழுத்துக் கூட்டிக் கணக்கிட சில நிமிஷங்கள் ஆகும். ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் அளித்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் தொகை இது.

இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல். நேற்று வரை உத்தேசமாகக் கணக்கிட்டு ஆளாளுக்கு ஒரு தொகை - ரூ. ஐம்பதாயிரம் கோடி - ரூ. எழுபதாயிரம் கோடி - என்று பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், இப்போது நாட்டின் உயரிய கணக்குத் தணிக்கை அமைப்பு நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பிடம் அதிகாரப்பூர்வமாக - அறிக்கையாக அளித்திருக்கிறது. இன்னமும் ஏன் மெüனம்?

இந்த ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளிலேயே இது மாபெரும் ஊழலுக்கான சூதாட்டம் என்பது தெரிந்துவிட்டது. தொலைத்தொடர்புத் துறையின் இணையதளத்தில் திடீரென்று ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியானதும், முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்று அறிவிக்கப்பட்டதும், ஒரு மணி நேரத்தில் அவசர அவசரமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், விண்ணப்பங்கள் பெறப்பட்ட "சஞ்சார் பவ'னில் நடந்த அடிதடியும்... இவையெல்லாமும் ஊடகங்களில் உடனுக்குடனே வெளியாயின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், எடுக்கவில்லை.

தொலைத்தொடர்புத் துறையின் வர்த்தகச் செயலகம், தொலைத்தொடர்புக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறி ஒதுக்கீட்டில் ஏல முறைக்குப் பதிலாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை முறையைக் கையாள அமைச்சகம் முடிவெடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை.

தொலைத்தொடர்புத் துறையில் அதுவரை எந்தச் சம்பந்தமுமில்லாத நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பதையும் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் தாம் பெற்ற ஒதுக்கீட்டின் பெரும் பகுதியை பல மடங்கு லாபத்தில் பிற நிறுவனங்களுக்கு விற்றதையும் ஊடகங்கள் வெளியிட்டன. எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்போதும் அசையவில்லை.

பிரச்னை நீதிமன்றப் படியேறியது. ""நாட்டின் மதிப்புமிக்க வளமும் பொதுமக்களின் பணமும் வீணடிக்கப்பட்டிருப்பது அதிரவைக்கிறது'' என்று கூறி விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதாவது விழித்துக் கொண்டு செயல்பட்டிருக்கும்.

அரசியல் நிர்பந்தம் மற்றும் நீதித் துறையின் நெருக்கடியால் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்கத் தொடங்குகிறது. பல ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. முக்கியமாக அதிகாரத் தரகர் ஒருவருக்கும் அமைச்சருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்களின் பதிவு மத்திய புலனாய்வு அமைப்புக்குக் கிடைத்திருப்பதாகவும், அந்த உரையாடலில் இந்த ஊழல் தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றிருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அரசு நேர்மையானதாக இருந்தால், உடனடியாகச் செயல்பட்டிருக்க வேண்டும்.

தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் மேற்கொண்ட தணிக்கையில், இந்த ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு நடந்திருப்பது தெரியவருகிறது. தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கிறது தணிக்கை அலுவலகம். அளிக்கப்பட்ட விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை என்றும் அறிவிக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தன்னுடைய அறிக்கையை அளிக்கிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இனியும் மௌனம்காப்பது சரியல்ல என்று உணர்ந்து நடவடிக்கையில் இறங்கி இருக்க வேண்டும்.

இந்த வழக்கின் விசாரணையில் மத்திய புலனாய்வு அமைப்பு காட்டிவரும் அசாதாரண தாமதத்துக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது உச்ச நீதிமன்றம். ""அரசு செயல்படும் லட்சணம் இதுதானா?'' என்று கேள்வி எழுப்புகிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இவ்வளவு கண்டனங்களுக்குப் பிறகாவது மௌனம் கலைத்திருக்க வேண்டும்.

ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். சாதாரண தொகையல்ல. இந்த ஊழல் நடந்த 2007-08-ம் நிதியாண்டில், நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் சேர்த்து மத்திய அரசு ஒதுக்கீடு செய்த மொத்தத் தொகைக்கு ஏறத்தாழ இணையான தொகை இது.

இந்தத் தொகையில் நாடு முழுவதும் தலா ரூ. 25 லட்சத்தில் 5,58,608 பள்ளிக்கூடங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 1 கோடியில் 1,39,652 தரமான ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 5 கோடியில் 27,930 கல்லூரிகளை அமைத்திருக்கலாம்; ரூ. 100 கோடியில் எல்லா வசதிகளையும் கொண்ட 1,396 மருத்துவமனைகளை அமைத்திருக்கலாம்; 11,63,766 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைத்திருக்கலாம்; 27,930 கி.மீ. தொலைவுக்கு புதிய மின் ரயில் பாதைகளை அமைத்திருக்கலாம். ஆனால், சில தனிப்பட்ட நபர்களின் கைக் காசாக மாறியிருக்கிறது நாட்டின் வளமும் மக்களின் பணமும்.

ஏறத்தாழ 45.58 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஒரு நாட்டில் - ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கக் குடும்பத்தோடு சேர்ந்து உழைக்கும் கோடிக்கணக்கானோர் வாழும் ஒரு நாட்டில் - இந்த ஊழல் எவ்வளவு பெரிய குற்றம்?

ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஆ. ராசா மீண்டும் அமைச்சராகி "நாளை மற்றுமொரு நாளே' என்று தன் பணிகளைத் தொடர்கிறார்; பிரதமர் மன்மோகன் சிங், அரசு தன் கடமையைச் செய்வதாகக் கூறுகிறார்; எதிர்க்கட்சிகள் சில மணி நேரக் கூச்சலோடும் அறிக்கைகளுடனும் முடித்துக் கொள்கின்றன; ஊடகங்கள் சில பத்திச் செய்திகளோடு முடித்துக் கொள்கின்றன; மக்களோ எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே...'!

நன்றி தினமணி 03.11.2010