Friday, December 31, 2010

மனித உரிமைப் போராளி கே.ஜி.கண்ணபிரான் காலமானார்


சுதந்திரப் போராட்டத் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணன் துவக்கிய மக்கள் சமூக உரிமைக் கழகத்தின் (People’s Union for Civil Liberties - PUCL) தலைவராக 15 ஆண்டுகள் இருந்த பிரபல மனித உரிமைப் போராளியும், இந்நாட்டின் தலைசிறந்த வழக்குரைஞராகவும் திகழ்ந்த கே.ஜி.கண்ணபிரான் காலமானார்.

ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் 30.12.2010 அன்று மாலை 5.00 மணிக்கு அவர் காலமானார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த கண்ணபிரான், கடந்த 2 மாதங்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார்

81 வயதான கே.ஜி. கண்ணபிரான், மக்கள் சமூக உரிமைக் கழகத்தின் தொடக்க காலத்தில் இருந்தே உறுப்பினராக இருந்து தீவிரமாக பணியாற்றிய மாபெரும் ஜனநாயகவாதியாவார். 1995ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை பி.யு.சி.எல். அமைப்பின் தலைவராக இருந்துள்ளார்.

ஹைதராபாத்தில் வழக்கறிஞர் பணியாற்றி வந்த கண்ணபிரான், முஸ்லீம்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்கி ஆந்திர மாநில அரசு பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அவசியம் குறித்து விரிவாக வாதிட்டார்.

ஆனால் தீர்ப்பு இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வந்த நிலையில் அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் எழுதிய கட்டுரையில் முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு பெறுவதற்கான நியாயத்தை ஆணித்தரமாக வைத்தார்.

தீவிர சிகிச்சைக்கு சென்ற நிலைவரை ஒரு போராளியாகவே வாழ்ந்த பெருமையுடன் மறைந்துள்ளார் கே.ஜி.கண்ணபிரான்.

நன்றி: தமிழ்.வெப்துனியா.காம்

Thursday, December 16, 2010

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட லோகு.அய்யப்பன் விடுதலை!

அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கும் நோக்கத்தோடு பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி தலைவர் லோகு.அய்யப்பன், வீராம்பட்டினம் தி.மு.க. கவுன்சிலர் பா.சக்திவேல், பாட்டாளி மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் க.தேவமணி ஆகியோரை கடந்த மாதம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதுச்சேரி அரசு கைது செய்தது.

இதனைக் கண்டித்து பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு தோழமை அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் புதுச்சேரி அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதையும் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டியும் புதுச்சேரி ஆளுநருக்கும் நடுவண் அரசின் உள்துறைக்கும் புகார் மனு அனுப்பப்பட்டது.

இந்த புகார் மனுவை விசாரித்த நடுவன் அரசின் உள்துறை; எந்த முகாந்திரமும் இன்றி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தோழர் லோகு.அய்யப்பன், தோழர்.பா.சக்திவேல் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது. அதன்படி நேற்று நள்ளிரவு 10 மணியளவில் (15.12.2010) இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இத்தகவலை அறிந்த நூற்றுக்கணக்கான தமிழின உணர்வாளர்களும், பெரியார் திராவிடர் கழகத்தினரும் புதுவை காலாப்பட்டு சிறைச்சாலை வாசலில் திரண்டிருந்து தோழர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். விரைவில் தோழர்.க.தேவமணி அவர்களும் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thursday, December 9, 2010

தமிழக அரசின் முகத்திரையைக் கிழித்த சீமான் விடுதலை

தமிழக மீனவர்களை சிறிலங்க கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவருவதைக் கண்டித்து பேசியதற்காக நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமானை, தேசப் பாதுகாப்பு (National Security Act - NSA) சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது செல்லாது என்று கூறி, அவரை விடுதலை செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, தேச பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு தவறாகவே பயன்படுத்தியுள்ளது என்பதை நிரூபித்துள்ளது.

தேச பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்யும் உத்தரவை கூடுதல் ஆணையர் பிறப்பிக்க முடியாது என்று கூறி, எவ்வாறு இச்சட்டம் அவசர கதியில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், ஹரி பரந்தாமன் ஆகியோர் கொண்ட அமர்வு, அரசு செய்த தவறை சுட்டிக்காட்டியது மட்டுமின்றி, அரசு வழக்கறிஞரை நோக்கி பல கேள்விகளை கேட்டுள்ளது.

“தமிழக மீனவர்கள் சிறிலங்க கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டால், இங்கு படிக்கும் சி்ங்கள மாணவர்கள் உயிருடன் திரும்ப மாட்டார்கள்” என்று சீமான் கூறியது எதிர்காலத்தை கருத்தில் கொண்டுதான் பேசியதுதானே தவிர, அது வன்முறையை தூண்டும் நோக்கம் கொண்டதல்ல என்று நீதிபதிகள் கூறியுள்ளது கவனிக்கத்தக்கதாகும்.

அதுமட்டுமின்றி, சீமான் பேசியதன் காரணமாக வன்முறை ஏதாவது ஏற்பட்டதா என்றும் அரசு வழக்கறிஞரை கேட்டுள்ளனர். அப்படி ஏதும் நடக்காதபோது தேசப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று எவ்வாறு எடுத்துக்கொள்வது என்றும் கேட்டுள்ளனர். நீதிபதிகளின் கேள்விகள் எதற்கும் அரசு வழக்கறிஞரால் பதில் கொடுக்க முடியவில்லை.

அதுமட்டுமல்ல, சீமானின் பேச்சு உணர்ச்சியை தூண்டக்கூடியதாக இருந்தது என்று அரசு தலைமை வழக்கறிஞர் கூறியதற்கு நீதிபதிகள் எழுப்பிய கேள்வியே மிகவும் கவனிக்கத்தக்கதாகும். சிறிலங்க இராணுவத்தினர் இசைப்பிரியா என்ற தமிழ் பத்திரிக்கையாளரை மானபங்கப்படுத்தி கொலை செய்த காட்சிகளை பிபிசி உள்ளிட்ட பன்னாட்டு தொலைக்காட்சிகள் ஒளிபரப்புகின்றனவே, அவைகள் கூட உணர்ச்சியைத் தூண்டக்கூடியதுதான், அதற்காக அரசு அந்த தொலைக்காட்சிகள் மீது நடவடிக்கை எடுத்ததா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.


ஆனால் இதற்கெல்லாம் தமிழக அரசின் வழக்கறிஞரிடம் எந்த பதிலும் இல்லை. அதனால்தான் நீதிபதிகள் கேட்டனர், இது என்ன அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா? என்று. அதுவே உண்மையாகும்.

தமிழக மீனவர்கள் கால் நூற்றாண்டிற்கும் மேலாக சிறிலங்க கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு, 500க்கும் அதிகமானோர் அவர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பிறகும், அவர்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசு, இந்தியாவின் நாடாளுமன்றத்திலேயே சிறிலங்காவை தங்களது நட்பு நாடு என்று அறிவிக்கிறது. இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் தமிழின உணர்வு பொங்கும் தமிழக அரசும் துணைபோகின்றது.

தமிழக மீனவர்களை கண்டுகொள்ளாமல், சிறிலங்க அரசுடன் நட்பு பாராட்டும் மத்திய, மாநில அரசுகளின் முகத்திரையை கிழிப்பதாக சீமான் பேச்சு இருந்ததால் அவர் தேசப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி சிறையில் அடைத்தனர். எனவே ஐயத்திற்கிடமின்றி இது அரசியல் பழிவாங்கு நடவடிக்கையே.

இந்த தேசத்தின் சொத்தை, பெரு நிறுவனங்கள் கொள்ளையடிக்க ஏதுவாக ‘கொள்கை’ வகுத்து செயல்படும் மத்திய, மாநில அரசுகள்தான் இந்த தேசத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களைக் காட்டிக்கொள்கின்றனர்.


தேசப் பாதுகாப்பு என்று கூறி, இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்காக உரிமைக் குரல் கொடுப்பவர்களை, குறைந்தது ஓராண்டிற்காவது உள்ளே வைப்பதற்குத்தானே தேச பாதுகாப்புச் சட்டமே நிறைவேற்றப்பட்டது? ஓராண்டுக் காலத்திற்கு உள்ளே வைத்தால் மீண்டும் மக்கள் நலன் பற்றியெல்லாம் பேச மாட்டார்கள் அல்லவா?

அதுவும் இந்த தமிழ் திருநாட்டை ஆளும் முதலமைச்சர், சட்டத்தையும் நீதிமன்றத்தையும் எப்போதும் மதிப்பவர். அதனால்தான் சீமானை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று கோரி அவருடைய சகோதரர் தொடுத்த மனுவை விசாரணைக்கே அனுமதிக்காமல் ‘வாய்தா’ வாங்கியே பல மாதங்கள் இழுத்தடித்தனர். கடைசியாக அவர்கள் தங்கள் மனுவை வேறு ஒரு நீதிபதி விசாரிக்க வேண்டும் என்று மனுச் செய்து, அது இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட முதல் நாளிலேயே விடுதலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர்க்கத்தானே, மனு விசாரணைக்கு வரும்போதெல்லாம் அரசு வழக்கறிஞர் வாய்தா கேட்டு இழுத்தடித்தார்.

இந்த ஆளும் கட்சிதான் எதிர்க்கட்சித் தலைவரை வாய்தா ராணி என்று வர்ணித்து, போக்குவரத்தை முழுமையாக பாதிக்கும் அளவிற்கு போராட்டம் நடத்தியது. எந்த அளவிற்கு இந்த அரசு வெட்கமற்றது என்பதை நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வெளிக்காட்டியுள்ளது.





இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பது அதன் அரசமைப்புச் சட்டதோடு நின்று விடுகிறது. அரசமைப்பில் மக்களுக்கு அளிக்கப்பட்ட சிந்தனைச் சுதந்திரத்தில் இருந்து கருத்துச் சுதந்திரம் வரை அனைத்துச் சுதந்திரங்களையும் பறிக்கவே தேச பாதுகாப்புச் சட்டம், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், குண்டர்கள் சட்டம் என்று மக்களை மிரட்டும் சட்டங்களை நிறைவேற்றி வைத்துள்ளார்கள். இந்தச் சட்டங்களையெல்லாம் சரியாக பயன்படுத்துவதாகயிருந்தால், போபர்ஸ், காமன்வெல்த் ஊழலில் இருந்து 2ஜி அலைக்கற்றை ஊழல் வரை கொள்ளையடித்த நமது தேசத்தின் தலைவர்கள் பலர் சிறையில் இருக்க வேண்டும். உள்ளபடியே தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவுள்ள இவர்களை எல்லாம் உள்ளே வைத்தால், இன்றைக்கு இந்த நாட்டை ஆண்டுக் கொண்டிருக்கிற பல தலைகளின் இடங்கள் காலியாகத்தான் இருக்கும்.

அதுவும் ஒரு நாள் நடந்தே தீரும்.

நன்றி: தமிழ்.வெப்துனியா.காம்

Thursday, December 2, 2010

புதுச்சேரி அரசை கண்டித்து அரியாங்குப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!



அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கும் நோக்கத்தோடு பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி தலைவர் லோகு.அய்யப்பன், வீராம்பட்டினம் தி.மு.க. கவுன்சிலர் பா.சக்திவேல், பாட்டாளி மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் க.தேவமணி ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதுச்சேரி அரசு கைது செய்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணியளவில் அரியாங்குப்பத்தில் நடைபெற்றது.






பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் இரா.வீராசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்பாளர் தந்தைப்பிரியன் துவக்கவுரை நிகழ்த்தினார். பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் இரா.அனந்தராமன் கண்டனவுரை ஆற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் பொறுப்பாளர்களும் தமிழின உணர்வாளர்களும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

Tuesday, November 30, 2010

ஆட்சியாளர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் கூட்டணி ஆட்சி

சட்டீஸ்கர் மாநிலத்தில், தண்டகாரண்ய வனத்தின் ஒரு பகுதியாக இருக்கும், தாண்டிவாடா மாவட்டத்தில் உள்ள கனிம வளங்களை சுரங்கம் அமைத்து தோண்டி எடுப்பதற்காக அங்கு வாழ்ந்து வந்த ஆதிவாசிகள் 4 இலட்சம் பேர் துரத்தப்பட்டதையும், அவர்களின் துயரத்தையும் நமது நாட்டின் மற்ற பகுதி மக்களுக்கும் எடுத்த சொல்ல சென்னைக்கு வந்த காந்தியவாதி ஹிமான்சு குமார் ஒரு வரலாற்றைக் கூறினார்.

இந்தியா விடுதலை பெற்ற நாடான பிறகு, ஒரு நாள் மகாத்மா காந்தியைச் சந்திக்க வந்தாராம் பூதான இயக்கத்தை நடத்திய வினோபா பாவே. அவரிடம் பேசிய மகாத்மா காந்தி, “நமது நாடு விடுதலை பெற்றுவிட்டது. அரும்பாடுபட்டு நாம் பெற்ற இந்த விடுதலை நிலைக்க வேண்டுமானால் நமது மக்களை ஜனநாயகப்படுத்த வேண்டும். அவர்கள் தங்கள் உரிமைகளை உணர வேண்டும். அந்தப் பணியை நீங்களெல்லாம் மேற்கொள்ள வேண்டும். இதைச் செய்யத் தவறினால், எதிர்காலத்தில் இந்த நாட்டில் நாம் நினைக்கும் அந்த உண்மையான ஜனநாயகம் இருக்காது. ஒன்று, பெரு நிறுவனங்களின் ஜனநாயகம் (Corporate Democracy) உருவாகும் அல்லது குண்டர்களின் ஜனநாயகம் (Goondas Democracy) இருக்கும்” என்று கூறியதாக ஹிமான்சு குமார் கூறினார்.

“மகாத்மா காந்தி அவ்வாறு கூறியதற்கு இணங்கவே, வினோபா பாவே வழியில் நின்று, தண்டகாரண்ய காடுகளில் எனது ஆசிரமத்தை அமைத்து அந்த மக்களோடு வாழ்ந்து, அவர்களுக்கிடையே தொண்டு செய்து வருகின்றேன்” என்று கூறினார் (தமிழ்.வெப்துனியாவில் அந்த செய்தியைப் பார்க்க).

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டினால் பயன்பெற்றோர் விவரங்கள், நீரா ராடியா நடத்திய உரையாடல்களில் வெளியானதைப் பார்க்கும் போது, மகாத்மா காந்தியின் அந்த அச்சமே நினைவிற்கு வருகிறது.

தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.இராசாவிற்கு தொலைத் தொடர்பு அமைச்சர் பதவியைப் பெற்றுத் தருவதில் இருந்து, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வரை நடந்தேறிய பேரங்களை வெளிக்கொணர்ந்தது மட்டுமின்றி, இந்த நாட்டை ஆளும் அரசின் கொள்கை முடிவுகளை நிர்ணயிப்பதிலும், மாற்றுவதிலும் பெரு நிறுவனங்கள் எந்த அளவிற்கு செல்வாக்குச் செலுத்தின என்பதையும், அவைகளுக்கு வசதியாக பத்திரிக்கைகளில் செய்திகள் வராமல் இருட்டடிப்பை செய்யப்பட்டதும், அந்த பெரு நிறுவனங்கள் பெரும் பலம் அடைவதற்கென்ற அரசு அளிக்கம் சலுகைகளை நாடாளுமன்றத்தில் எந்த உறுப்பினரும் பேசாமல் தடுக்க கையாண்ட முறைகளும் ராடியா உரையாடல் பதிவுகளில் வெளிவந்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய வணிகக் குடும்பத்தில் நடந்த மோதல், அதில் ஒருவரின் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு உற்பத்திக்கு விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக அவர்களில் ஒருவர் மற்றவருக்கு எதிராக பத்திரிக்கைகளை பயன்படுத்த முயன்றது. அதனை முன்னவர் ராடியா உள்ளிட்ட தனது லாபியிஸ்ட்டுகளை பயன்படுத்தி, ‘பேச்சுவார்த்தைகளை’ நடத்தி இருட்டிப்பு செய்த விவரங்கள். விலை நிர்ணயம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போதே, திரைமறைவில் இத்தனை திரைமறைவு வேலைகள் நடந்துள்ளது.

இதைவிட, பெரும் அதிர்ச்சி தரும் மற்றொரு திரைமறைவு பேரம்தான் மிகக் கொடியது. மத்திய அரசு கடைபிடித்துவரும் புதிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்புகள் தொடர்பான உரிமம் (New Exploration and Licensing Policy) அளிக்கப்பட்டதில், இந்தியாவின் முதன்மையான அந்த பெரும் நிறுவனத்திற்கு வரிச் சலுகை - அதுவும் முன்தேதியிட்டு வழங்க - முன்வந்ததும், அதனை நாடாளுமன்ற விவாதத்தில் கொண்டு வந்து ‘கெடுத்து’விடாமல் இருக்க மேற்கொண்ண்ட திரைமறைவு நடவடிக்கைகளும்தான் அதிர்ச்சியளிக்கிறது. அந்த வரிச் சலுகை முன் தேதியிட்டு (Retrospective) அளிக்கப்பட்டால் அந்த முதன்மை நிறுவனத்திற்கு மட்டும் ரூ.81,000 கோடி வருமான வரிச் சலுகை கிடைக்குமாம். இந்த உண்மை பத்திரிக்கைகளில் வெளிவராமல் செய்துவிட்டதாக அந்த முதன்மை நிறுவனத்திற்கான தொடர்பாளராக செயல்பட்ட, இந்தியப் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது அவருக்கு செயலராக இருந்த என்.கே.சிங், ராடியாவிடம் கூறுகிறார்.

அந்த உரையாடலில் ராடியாவுடன் பேசியது என்.கே.சிங்தான் என்பதை, அவருடன் கல்லூரியில் பயின்ற பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் அருண் ஷோரி (ஒரு தொலைக்காட்சி பேட்டியில்) உறுதி செய்துள்ளார். பத்திரிக்கைளில் வெளிவராமல் (இந்தியாவின் ஒரு பெரும் ஆங்கில நாளிதழின் உரிமையாளரிடமே பேசிவிட்டதாக கூறுகின்றனர்) தடுத்துவிட்ட பிறகு, அதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதிப்பதை எவ்வாறு தடுப்பது என்று என்.கே.சிங், ராடியாவுடன் விவாதிக்கிறார்.

இப்பிரச்சனையை அருண் ஷோரி கட்சிக் கூட்டத்தில் எழுப்பியதால், அவர் நாடாளுமன்றத்திலும் அது பற்றி பேசக் கூடும் என்பதால், நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக முதலில் பேசுபவராக இருந்த அருண் ஷோரியை பின்னுக்குத் தள்ளிவிட்டு, அக்கட்சியின் முன்னாள் தலைவரான வெங்கையா நாயுடுவை (திரைமறைவு வேலை செய்து) முதன்மை பேச்சாளராக வாதத்தை வைப்பார் என்று மாற்றுகின்றனர்.

இதேபோல், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு, முரளி மனோகர் ஜோஷியை மக்களவையில் முதன்மை பேச்சாளராக விவாதத்தை தொடங்க வைத்து அந்த முதன்மை நிறுவனத்திற்கு அரசு அளிக்க உத்தேசித்துள்ள சலுகையை கேள்விக்கு உட்படுத்தாமல் தடுத்து விடுகின்றனர்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக அரசு என்று பெருமைப்படுத்தப்படும் நமது நாட்டின் பாரம்பரியமிக்க நாடாளுமன்றம் திரைமறைவு வேலைகளால் இயக்கப்படுகிறது என்ற உண்மை இன்றுதான் முதல் முறையாக - மிக ஆதாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!

இந்தியாவின் முதன்மையான நாளேடுகளில் இன்று வெளியாகியுள்ள இந்த விவரங்கள் அனைத்தும் உண்மையென்பதும், அது இதுவரை மறுக்கப்படவில்லை என்பதும் ஒன்றை நிச்சயமாக்குகிறது. அது இந்த நாடு நாம் நினைத்துக் கொண்டிருப்பதுபோல் மக்கள் ஜனநாயக அரசல்ல என்பதையே.

இது ஆட்சியில் இருப்பவர்கள், அரசு நிர்வாகிகள் (Bureaucracy), பெரு நிறுவனங்கள் (Corporates) ஆகியோரின் கூட்டணி ஜனநாயமே இங்கு நிலவுகிறது. இங்கு பெரு நிறுவனங்களின் கைப்பாவையாகவே அரசியல் கட்சிகளும், ஆட்சியில் உள்ளவர்களும், அதிகாரிகளும் செயல்படுகின்றனர் என்பதற்கு இதற்கு மேல் எந்தச் சான்றும் தேவையில்லை.

இவையாவும் ஒரிரு கோடி ரூபாய்க்கு நடந்த திரைமறைவு வேலையில்லை, பல ஆயிரம் கோடி ரூபாய் வரிப்பணத்தை சலுகை என்ற பெயரால் அரசே கொள்ளை கொடுக்கும் கொடுமையாகும்.

ஒரு பக்கத்தில் நமது நாட்டின் விவசாயிகள் கடன் தொலை தாங்காமல், மரபணு மாற்ற விதைகளை பயிரிட்டு, அதனால் இழப்பு ஏற்பட்டு சாகிறார்கள். இருபது ஆண்டுக்காலத்தில் இப்படி 3 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு செத்துள்ளார்கள். மறுபக்கம், தொன்றுதொட்டு தாங்கள் வாழ்ந்த வந்த பூமியில் உள்ள வளங்களுக்காக பழங்குடிகள் - இப்படிப்பட்ட பெரு நிறுவனங்களின் கொள்ளைக்காக - விரட்டப்படுகிறார்கள்.

கடலிற்குச் சென்று மீன் பிடித்து அன்றாட வாழ்க்கையை கரையேற்றிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் மீனவர்கள் சிறிலங்க கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். அன்றாடம் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியால் அடித்தட்டு மக்கள் அல்லுறுகிறார்கள். ஆனால், இந்த நாட்டின் வளத்தையும், வரிப்பணத்தையும் மிக எளிதாக பெற்று பெரு நிறுவனங்கள் செழித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் உலக பணக்காரர்கள் வரிசையில் அதிகம் இடம்பெறுகின்றனர் என்று இங்குள்ள பத்திரிக்கைகள் பல பெருமையாக செய்திகளை வெளியிடுகின்றன.

சந்தேகமில்லை, மகாத்மா காந்தி அஞ்சிய நிறுவன ஜனநாயகம் (Corporate Democracy) நமது நாட்டில் நிலைபெற்றுவிட்டது.
நன்றி: தமிழ்.வெப்துனியா.காம் (30.11.2010)

Wednesday, November 24, 2010

தமிழ் கலைஞர்களை பழித்தால் குரல்வளையை கடிப்பேன்: வி.சி.குகநாதன்

நான், எந்த நடிகருக்கும் விரோதி அல்ல. ஆனால் தமிழர்களையும், தமிழ் கலைஞர்களையும் பழித்தால், அவர்களின் குரல்வளையை கடித்து துப்பவும் தயங்க மாட்டேன் என்று வி.சி.குகநாதன் கூறினார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் வி.சி.குகநாதனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. தமிழ் நடிகர்களை ஆர்யா இழிவாக பேசியதாக வி.சி.குகநாதன் கயிறு திரித்து புது பிரச்சினையை கிளப்பி இருக்கிறார் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.குகநாதன், “உங்கள் விருப்பம்” படவிழாவில், எந்த நடிகரின் பெயரையும் குறிப்பிட்டு நான் பேசவில்லை. “ஏசியாநெட்” நடத்திய நிகழ்ச்சியில் ஒரு நடிகர் கலந்துகொண்டு பேசும்போது, மலையாள படங்களில் நடிக்க வேண்டும் என்றால் நடிப்பு தெரிந்திருக்க வேண்டும். அது எனக்கு கொஞ்சம்தான் தெரியும். அதற்கு தகுந்த மாதிரி வேஷம் கொடுத்தால், அதை நான் கவுரவமாக நினைத்து மலையாள படங்களில் நடிப்பேன். ஏனென்றால் நான் ஒரு மலையாளி. எல்லோரும் பார்க்கிற மாதிரி மலையாள பட உலகில் இன்னும் தரமான படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் மலையாள படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

அந்த நடிகரின் பேச்சு தமிழ் நடிகர்களை கேவலப்படுத்துவது மாதிரி இருக்கிறது. உலக புகழ்பெற்ற நடிகர்திலகம் சிவாஜிகணேசனில் இருந்து கமல்ஹாசன் வரை பல அபூர்வ நடிகர்களை கொண்டது, தமிழ் பட உலகம். அவர்களை எல்லாம் கேவலப்படுத்துகிற மாதிரி அந்த நடிகர் பேசியிருக்கிறார்.

இதை நான் பெப்சி' தலைவராக கூறவில்லை. தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒரு அங்கத்தினராக கூறுகிறேன். 10 வயதில் இருந்தே தமிழ் மொழிக்காகவும், தமிழ் இனத்துக்காகவும் நான் போராடியவன் என்பது தமிழ் மக்களுக்கு தெரியும்.

நான் யாருக்கும் கயிறு திரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அடிக்கடி கட்சி மாறுகிற ஆளும் இல்லை. தமிழர்களுக்காக போராடுகிற எல்லா தமிழர்களுடனும் இருப்பேன்.

நான், எந்த நடிகருக்கும் விரோதி அல்ல. ஆனால் தமிழர்களையும், தமிழ் கலைஞர்களையும் பழித்தால், அவர்களின் குரல்வளையை கடித்து துப்பவும் தயங்க மாட்டேன் என்றார்.

நன்றி: நக்கீரன்.காம் (25.11.2010)

Tuesday, November 23, 2010

பீகார் தேர்தல் - நிதிசுகுமார் வாழ்க!

பீகாரில் நிதிசுகுமார் தலைமையிலான கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்க பீகார் மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். மக்களுக்காக உண்மையாக உழைக்கும் ஒருதலைவரை பீகார் மக்கள் பெற்றுள்ளனர். பீகார் மக்கள் மேலும் வளச்சியடைய வாழ்த்துவோம்!

இந்தத்தேர்ததில் கங்கிரசின் வெற்றி ஒற்றை இலகத்திலேயே சுருக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக உண்மையாக உழைக்கும் தலைவரை அடையாளங்கண்டு காங்கிரசு-சோனியா-இராகுல் போன்ற வேடதாரிகளை பீகார் மக்கள் புறக்கணித்துள்ளனர்.

தமிழகத் தலைவர்களும் தமிழர்களுக்கு துரோகம் செய்யாமல் தமிழர்களின் நலனுக்காக உண்மையாக உழைத்தால் காங்கிரசை அண்டிப்பிழைக்கும் நிலைக்கு ஆளாகத்தேவையில்லை. தமிழர்களுக்காக உண்மையாக உழைக்கும் ஒருதலைவர் கிடைக்கமாட்டாரா?

Saturday, November 20, 2010

ஸ்பெக்ட்ரம் ஊழலை “நக்கீரன்” கண்டுகொள்ளாது ஏன்?

ஸ்பெக்டரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது என்பது ஓரளவுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊழலின் தொகை எவ்வளவு? யார் யாருக்கு எவ்வாளவு தொகை பங்கு பிரிக்கப்பட்டுள்ளது? பங்கு ஒழுங்காக பிரிக்கப்பட்டுள்ளதா? என்பது போன்ற தகவல்கள்தான் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.

அதற்குப் பிறகு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து!!!!!!!!! விசாரணை நடத்தி!!!!!!!!!! வாய்தா வாங்கி!!!!!!!!!!! வழக்கு நடத்தி!!!!!!!!!!! இவ்வளவு பெரிய தவறு செய்த பெரிய மனிதர்களை சட்டம் தண்டிக்கும் என குடிமக்களாகிய நாம் நம்பித்தான் ஆக வேண்டும். (நம்புவோமாக!)

தமிழ்நாட்டில் நடைபெறும் அரசியல் அத்துமீறல்களை, ஊழல்களை, மனித உரிமை மீறல்களை புலணாய்வு செய்து “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என எதற்கும் அஞ்சாமல்(!!!!!) செய்தி வெளியிடும் “நக்கீரன்” வாரம் இருமுறை இதழ், ஸ்பெக்டரம் ஊழலைப்பற்றி பட்டும் படாமல் செய்தி வெளியிடுகிறது. அதுமட்டுமின்றி இந்த ஊழலில் ஆ.இராசாவும் தி.மு.க.வும் தவறே செய்யவில்லை, அவர்கள் உத்தமர்கள் என்பது போன்று செய்திகளை வெளியிடுகிறது.... நெற்றிக்கண் திறந்துவிடுமோ என நக்கீரன் அஞ்சுகிறாரா என தெரியவில்லை...

அண்மையில் சவுக்கு இணையதளத்தை பார்த்தபோது தான் அதன் இரகசியம் புரியந்தது. அலைக்கற்றை ஊழலில் முக்கிய பங்குவகித்த “ஸ்வாம் டெலிகாம் நிறுவனத்தில்” நக்கீரன் துணை ஆசிரியர் காமராஜ் அவர்களும் பங்குதாரராக இருக்கிறாராம். ஆண்டிமுத்துவும், சின்னப்பிள்ளையும். http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=165:2010-11-18-12-48-20&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2

வாழ்க! சனாநாயகத்தின் நாண்காவது தூண்!

Wednesday, November 17, 2010

புதுச்சேரியில் பெரியார் திராவிடர் கழகத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்!

ஈழ அகதிகள் வெளிநாடு செல்ல உதவியதாக பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி தலைவர் லோகு.அய்யப்பன், வீராம்பட்டினம் கவுன்சிலர் சக்திவேல், காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணி உள்ளிட்ட 10 பேரை புதுச்சேரி குற்றப்புலணாய்வு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நிபந்தனை பிணையில் வெளிவந்து குற்றப்புலணாய்வு அலுவலகத்தில் நாள்தோறும் கையெழுத்திட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணி, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், வீராம்பட்டினம் கவன்சிலர் சக்திவேல் ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து புதுச்சேரி அரசு சிறையில் அடைத்துள்ளது.

அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கும் நோக்கத்தோடு புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை கண்டித்தும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட மூவரையும் உடனடியாக விடுதலை செய்ய கோரியும் இன்று காலை 10 மணியளவில் பெரியார் திராவிடர் கழகத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இந்த மறியலில் ம.தி.மு.க., பார்வர்டு பிளாக், செந்தமிழர் இயக்கம், தமிழர் தேசிய இயக்கம், நாம் தமிழர் இயக்கம், மண்ணின் மைந்தர்கள் நல உரிமைக் கழகம், அம்பேத்கர் தொண்டர்படை, பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம், லோக்ஜனசக்தி, புரட்சிப்பாவலர் இலக்கியப் பாசறை, புதுவைக்குயில் பாசறை, செம்படுகை நன்னீரகம், தந்தை பெரியார் பாசறை, மாணவர் நல அறக்கட்டளை, மீனவர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தோழமை அமைப்பினரும் திரளாக கலந்துகொண்டனர். இதனால் கடலூர், விழுப்புரம், திண்டிவனம் ஆகிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 200 பெண்கள் உள்ளிட்ட 500 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் கைது!

புதுச்சேரியில் இருந்து வெளிநாட்டுக்கு ஈழ அகதிகளை அழைத்து சென்றது தொடர்பாக வீராம்பட்டினம் திமுக கவுன்சிலர் சக்திவேல், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், சிலோன் மணி, படகு ஓட்டுநர் ஜீவா ஆகியோர் புதுச்சேரி குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல்துறையினரால் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் பயன்படுத்தியப் படகு காரைக்காலில் நிறுத்தப்பட்டது. அதில் இருந்த டீசல், கேஸ் சிலிண்டர், அடுப்பு உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்று, தடயங்களை அழித்தது தொடர்பாக காரைக்கால் மாவட்ட பாமகச் செயலர் தேவமணியும் பின்னர் கைது செய்யப்பட்டார்.பின்னர் 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டு, நிபந்தனை ஜாமீனில், வெளியில் வந்து, தினமும் குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து பெரியார் திராவிடர் கழக புதுச்சேரி தலைவர் லோகு.அய்யப்பன் மற்றும் வீராம்பட்டினம் கவுன்சிலர் சக்திவேல் ஆகியோர் இன்று மாலை குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல்நிலையத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

Tuesday, November 16, 2010

ஈழ அகதிகளுக்கு உதவிய காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது

புதுச்சேரியில் இருந்து, படகு மூலம் ஈழ அகதிகளை வெளிநாட்டுக்கு அழைத்து சென்ற வழக்குத் தொடர்பாக, காரைக்கால் பாமக செயலர் தேவமணி செவ்வாய்க்கிழமை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரியில் இருந்து வெளிநாட்டுக்கு ஈழ அகதிகளை அழைத்து சென்றது தொடர்பாக வீராம்பட்டினம் திமுக கவுன்சிலர் சக்திவேல், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், சிலோன் மணி, படகு ஓட்டுநர் ஜீவா ஆகியோர் புதுச்சேரி குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸôரால் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் பயன்படுத்தியப் படகு காரைக்காலில் நிறுத்தப்பட்டது. அதில் இருந்த டீசல், கேஸ் சிலிண்டர், அடுப்பு உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்று, தடயங்களை அழித்தது தொடர்பாக காரைக்கால் மாவட்ட பாமகச் செயலர் தேவமணியும் பின்னர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டு, நிபந்தனை ஜாமீனில், வெளியில் வந்து, தினமும் குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர். இந்நிலையில் காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய காரைக்கால் மாவட்ட ஆட்சியர் பிராங்கிளினிடம் புதுச்சேரி குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸôர் பரிந்துரை செய்தனர். அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் பிராங்கிளின் உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து தேவமணி, புதுச்சேரியில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

அரசை கண்டித்து போராட்டம்: புதுச்சேரியில் பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் தந்தை பிரியன் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

ஈழத்தமிழர் போராட்டத்துக்கு உறுதுணையாக இருந்து போராடி வரும் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், கவுன்சிலர் சக்திவேல், காரைக்கால் பா.ம.க. செயலர் தேவமணி ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் புதுச்சேரி அரசு கைது செய்துள்ளதை கண்டிக்கிறோம்.

இதை அரசு கைவிட வேண்டும். மீறி செய்தால் சட்டரீதியாக போராட்டம் நடத்தவும், அனைத்து அரசியல், சமுதாய இயக்கங்களை ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டங்களை நடத்தவும் முடிவெடுத்துள்ளோம் என்றார்.

நன்றி: தினமணி 17.11.2010

Wednesday, November 3, 2010

1,39,652,00,00,000 ரூபாய் கொள்ளை!

வரலாறு காணாத ஊழல்!


1,39,652,00,00,000. ஒரு சராசரி இந்தியன் இந்தத் தொகையைக் குழப்பமின்றி எழுத்துக் கூட்டிக் கணக்கிட சில நிமிஷங்கள் ஆகும். ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் அளித்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் தொகை இது.

இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல். நேற்று வரை உத்தேசமாகக் கணக்கிட்டு ஆளாளுக்கு ஒரு தொகை - ரூ. ஐம்பதாயிரம் கோடி - ரூ. எழுபதாயிரம் கோடி - என்று பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், இப்போது நாட்டின் உயரிய கணக்குத் தணிக்கை அமைப்பு நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பிடம் அதிகாரப்பூர்வமாக - அறிக்கையாக அளித்திருக்கிறது. இன்னமும் ஏன் மெüனம்?

இந்த ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளிலேயே இது மாபெரும் ஊழலுக்கான சூதாட்டம் என்பது தெரிந்துவிட்டது. தொலைத்தொடர்புத் துறையின் இணையதளத்தில் திடீரென்று ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியானதும், முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்று அறிவிக்கப்பட்டதும், ஒரு மணி நேரத்தில் அவசர அவசரமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், விண்ணப்பங்கள் பெறப்பட்ட "சஞ்சார் பவ'னில் நடந்த அடிதடியும்... இவையெல்லாமும் ஊடகங்களில் உடனுக்குடனே வெளியாயின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், எடுக்கவில்லை.

தொலைத்தொடர்புத் துறையின் வர்த்தகச் செயலகம், தொலைத்தொடர்புக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறி ஒதுக்கீட்டில் ஏல முறைக்குப் பதிலாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை முறையைக் கையாள அமைச்சகம் முடிவெடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை.

தொலைத்தொடர்புத் துறையில் அதுவரை எந்தச் சம்பந்தமுமில்லாத நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பதையும் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் தாம் பெற்ற ஒதுக்கீட்டின் பெரும் பகுதியை பல மடங்கு லாபத்தில் பிற நிறுவனங்களுக்கு விற்றதையும் ஊடகங்கள் வெளியிட்டன. எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்போதும் அசையவில்லை.

பிரச்னை நீதிமன்றப் படியேறியது. ""நாட்டின் மதிப்புமிக்க வளமும் பொதுமக்களின் பணமும் வீணடிக்கப்பட்டிருப்பது அதிரவைக்கிறது'' என்று கூறி விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதாவது விழித்துக் கொண்டு செயல்பட்டிருக்கும்.

அரசியல் நிர்பந்தம் மற்றும் நீதித் துறையின் நெருக்கடியால் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்கத் தொடங்குகிறது. பல ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. முக்கியமாக அதிகாரத் தரகர் ஒருவருக்கும் அமைச்சருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்களின் பதிவு மத்திய புலனாய்வு அமைப்புக்குக் கிடைத்திருப்பதாகவும், அந்த உரையாடலில் இந்த ஊழல் தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றிருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அரசு நேர்மையானதாக இருந்தால், உடனடியாகச் செயல்பட்டிருக்க வேண்டும்.

தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் மேற்கொண்ட தணிக்கையில், இந்த ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு நடந்திருப்பது தெரியவருகிறது. தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கிறது தணிக்கை அலுவலகம். அளிக்கப்பட்ட விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை என்றும் அறிவிக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தன்னுடைய அறிக்கையை அளிக்கிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இனியும் மௌனம்காப்பது சரியல்ல என்று உணர்ந்து நடவடிக்கையில் இறங்கி இருக்க வேண்டும்.

இந்த வழக்கின் விசாரணையில் மத்திய புலனாய்வு அமைப்பு காட்டிவரும் அசாதாரண தாமதத்துக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது உச்ச நீதிமன்றம். ""அரசு செயல்படும் லட்சணம் இதுதானா?'' என்று கேள்வி எழுப்புகிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இவ்வளவு கண்டனங்களுக்குப் பிறகாவது மௌனம் கலைத்திருக்க வேண்டும்.

ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். சாதாரண தொகையல்ல. இந்த ஊழல் நடந்த 2007-08-ம் நிதியாண்டில், நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் சேர்த்து மத்திய அரசு ஒதுக்கீடு செய்த மொத்தத் தொகைக்கு ஏறத்தாழ இணையான தொகை இது.

இந்தத் தொகையில் நாடு முழுவதும் தலா ரூ. 25 லட்சத்தில் 5,58,608 பள்ளிக்கூடங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 1 கோடியில் 1,39,652 தரமான ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 5 கோடியில் 27,930 கல்லூரிகளை அமைத்திருக்கலாம்; ரூ. 100 கோடியில் எல்லா வசதிகளையும் கொண்ட 1,396 மருத்துவமனைகளை அமைத்திருக்கலாம்; 11,63,766 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைத்திருக்கலாம்; 27,930 கி.மீ. தொலைவுக்கு புதிய மின் ரயில் பாதைகளை அமைத்திருக்கலாம். ஆனால், சில தனிப்பட்ட நபர்களின் கைக் காசாக மாறியிருக்கிறது நாட்டின் வளமும் மக்களின் பணமும்.

ஏறத்தாழ 45.58 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஒரு நாட்டில் - ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கக் குடும்பத்தோடு சேர்ந்து உழைக்கும் கோடிக்கணக்கானோர் வாழும் ஒரு நாட்டில் - இந்த ஊழல் எவ்வளவு பெரிய குற்றம்?

ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஆ. ராசா மீண்டும் அமைச்சராகி "நாளை மற்றுமொரு நாளே' என்று தன் பணிகளைத் தொடர்கிறார்; பிரதமர் மன்மோகன் சிங், அரசு தன் கடமையைச் செய்வதாகக் கூறுகிறார்; எதிர்க்கட்சிகள் சில மணி நேரக் கூச்சலோடும் அறிக்கைகளுடனும் முடித்துக் கொள்கின்றன; ஊடகங்கள் சில பத்திச் செய்திகளோடு முடித்துக் கொள்கின்றன; மக்களோ எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே...'!

நன்றி தினமணி 03.11.2010

Friday, October 29, 2010

என்கவுன்டர் - முன்னாள் ஐ.ஜி. க்கு ஆயுள் தண்டனை

நக்ஸலைட் தலைவர் கொல்லப்பட்ட வழக்கில் காவல்துறை முன்னாள் ஐ.ஜி- லட்சுமனாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் வியாழக்கிழமை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது பற்றிய விவரம் வருமாறு: 1970ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி நக்ஸலைட் தலைவர் ஏ. வர்கீஸ், திருநெல்வேலி அருகே உள்ள வனப் பகுதியில் போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் இது குறித்து 1998-ம் ஆண்டு சிஆர்பிஎப் கான்ஸ்டபிள் ராமச்சந்திரன் நாயர், காவல்துறை அதிகாரிகள் லட்சுமணா மற்றும் விஜயன் உத்தரவின்பேரில் வர்கீûஸ கொன்றதாக ஒப்புக் கொண்டார். உடனே இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது.

இந்த வழக்கின் முதல் குற்றவாளியான சிஆர்பிஎப் கான்ஸ்டபிள் பி. ராமச்சந்திரன் நாயர் (இப்போது உயிருடன் இல்லை), காவல்துறைத் தலைவர் லட்சுமணா உத்தரவின் பேரில் வர்கீûஸ கொலை செய்துள்ளார் என்று நீதிபதி எஸ். விஜயகுமார் தனது தீர்ப்பில் தெரிவித்தார். ரூ. 10 ஆயிரம் அபராதத் தொகையை லட்சுமணா செலுத்த வேண்டும் என்றும், இந்தத் தொகை உயிரிழந்த நக்ஸலைட் தலைவர் வர்கீஸ் குடும்பத்துக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி கூறினார். மற்றொரு குற்றவாளியான காவல்துறை முன்னாள் துணை ஆணையர் பி. விஜயன் குற்றமற்றவர் என அறிவித்து வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வைக்கம் புருஷோத்தமன் நாயர் வாதிட்டார். சாதாரண நபரை, நக்ஸலைட்டாக சித்தரித்து அவரது கைகளைக் கட்டி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். இது முன்கூட்டியே திட்டமிட்ட கொலை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தீர்ப்பைக் கேட்டதும் லட்சமணாவின் மனைவி மற்றும் வழக்கறிஞரான அவரது மகள் ஆகியோர் கண்கலங்கினர். தனக்கு 70 வயதாகிறது என்றும், அதைக் கருத்தில் கொண்டு தண்டனையைக் குறைக்குமாறு லட்சுமணா, நீதிபதியிடம் கோரினார். தன்னை திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவரை திருவனந்தபுரம் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீஸôர் மேற்கொண்டனர்.

இந்தத் தீர்ப்பு தங்கள் குடும்பத்துக்கு ஓரளவு ஆறுதல் அளிப்பதாக வர்கீஸின் சகோதரர் தாமஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மற்றொரு குற்றவாளியான விஜயனை நீதிமன்றம் விடுவித்தது வேதனையளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். போலி என்கவுன்ட்டர் நடத்தும் காவல்துறையினருக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பாடமாக இருக்கும் என்று முன்னாள் நக்சல் தலைவர் கே. அஜிதா கூறினார். இருப்பினும் இப்போதும் ஜம்மு காஷ்மீர் மற்றும் மேற்கு வங்கத்தில் இதுபோன்ற போலி என்கவுன்ட்டர்கள் நடப்பதை அவர் சுட்டிக் காட்டினார். இந்தத் தீர்ப்பை வர்கீஸின் நண்பர் குரோ வாசு வரவேற்றுள்ளார்.

போலீஸ்-பத்திரிகையாளர் மோதல்: நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே திரண்டிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக் காரர்களுக்கும் போலீஸôருக்கும் இடையே சிறிது மோதல் ஏற்பட்டது. லட்சுமணாவை புகைப்படம் எடுப்பதற்கு போலீஸôர் தடுத்ததால் இந்தப் பிரச்னை ஏற்பட்டது.

நன்றி தினமணி 29.10.2010

Tuesday, October 26, 2010

உட்கார்ந்தால் எழுந்து நிற்கும் எழுச்சிநாயகன்...

ராஜீவ்காந்தி சிலை அவமதிப்புக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்று சோனியாகாந்திக்கு தொல்.திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் மேம்பாட்டுக்காக உழைத்து வரும் கட்சி ஆகும்.

நாங்கள் மதச்சார்பின்மையை கடைபிடிக்கிறோம். அதன் அடிப்படையில் எந்த ஒரு நிபந்தனையும் இன்றி காங்கிரஸ் கட்சியை நாங்கள் ஆதரிக்கிறோம். (நாங்க தி.மு.க. வுடன் தான் கூட்டணி வைத்துள்ளோம் என்று சொன்னது!)

2009ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம். (தமிழினத்தை கொத்துக்கொத்தாக அழிந்ததற்காக நன்றிக்கடனா?)

உங்கள் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நாங்களும் ஒரு உறுப்பினர்.

இந்த சமயத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு எங்கள் கட்சிக்கும் அழைப்பு விடுத்ததற்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். காஷ்மீருக்கு சென்ற அனைத்து கட்சிகள் குழுவில் என்னையும் ஒரு உறுப்பினராக நியமனம் செய்ததற்கும், சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்து வரும் விரும்பத்தகாத சம்பவம் பற்றி உங்களுக்கு சில விளக்கங்கள் அளித்து இந்த கடிதத்தை எழுதுகிறேன். (இராஜபக்சேவை பார்க்க அனுப்பி வைத்ததற்கு நன்றி சொல்ல மறந்துட்டிங்களே!)

சென்னை அசோக்நகரில் உள்ள ராஜீவ்காந்தியின் சிலையை அவமானம் செய்த சம்பவத்தை கண்டித்து, அந்த மனித தன்மையற்ற நடவடிக்கையை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என்று எங்கள் சார்பில் கேட்டிருக்கிறோம். (மனிதத்தன்மை என்றால் என்ன ஐயா?)
ஆனால், சில காங்கிரசார் அங்கு கூடிநின்று நடத்திய போராட்டத்தில் எங்கள் கட்சியினரையும் உள்நோக்கத்தோடு அதில் சம்பந்தப்படுத்தி பேசியதோடு என்னை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

அந்த சம்பவத்தில் எங்களுக்கு துளியளவும் தொடர்பு இல்லை என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்கிறோம்.

நீங்கள் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி செல்வதில் மட்டுமல்ல இந்த முழு இந்தியாவையும் வழிநடத்தி செல்லும் உங்களுக்கு எங்கள் முழு ஆதரவு எப்போதும் உண்டு. (ஸ்பெக்டரம்... கமன்வெல்த்... போன்ற பம்பர் சீட்டில் பரிசு விழுந்ததற்காகவும் வாழ்த்து சொல்லுங்கள்)

தேசத்தின் நலனுக்காக உங்களது குடும்பம் அளித்துள்ள பங்களிப்பை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம். தமிழகத்தில் தலித் மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நல்லுறவு நீண்டகாலமாக இருந்து வருகிறது.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியால் தலித் மக்களின் நிலை பற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் எல்.இளையபெருமாள் மற்றும் தமிழகத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் கக்கன் ஆகியோரை பெருமையுடனும், அன்புடனும் நினைவுகூறுகிறோம். (காங்கிரசும் காந்தியும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்தது என்ன? என்ற கேள்வியை இனி கேட்கமாட்டீங்களா?)

மீண்டும் ஒருமுறை உங்கள் குடும்பத்திற்கு, குறிப்பாக ராஜீவ்காந்திக்கு எனது மரியாதையையும், வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். (நாங்களும் கும்புடுறோம் சாமி!)

ராஜீவ்காந்தி சிலை அவமதிப்பு விவகாரத்தில் எங்களுக்கு சம்பந்தம் உண்டு என்று கூறப்படுவதை நாங்கள் வன்மையாக மறுக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. (நிச்சயமாக உங்களுக்கு சம்பந்தம் இருக்க வாய்ப்பில்லை!)
“நான் பச்சை... மஞ்ச... சிவப்பு கலரு தமிழன்தான்!
உலகத்த இரட்சிக்க வந்த கடவுளும் நான்தான்!”

நன்றி நக்கீரன்.காம் (27.10.2010)

Monday, September 20, 2010

பத்து ரூபாய்க்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து!

இந்த நாட்டில் புதியதாக ஒரு நோய் வருவதற்கு முன்பே அந்த நோய்க்கான மருந்து முதலில் வந்துவிடுவதும்...

நோய் வரும்போதே அதனோடு மருந்தும் சேர்ந்து வருவதும்...

வந்த மருந்துகள் அனைத்தும் ஒருமாதத்தில் தீபாவளிக்கு பட்டாசு விற்பதுபோல் விற்றுத் தீர்ந்து விடுவதும்...

பண்டிகைக் காலங்களில் ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலை வழங்குவதுபோல் அரசாங்கம் மருந்து நிறுவனங்களில் கொள்முதல் செய்து ஏழைகளுக்கு சலுகை விலையில் வழங்குவதும்... பரம ஏழைகளுக்கு இலவசமாக வழங்குவதும்...

இந்தியப் பேரரசசும்! தமிழக சிற்றரசும் வல்லரசாகிவிட்டதையே கட்டுகிறது!

வாழ்க! அலோபதி மருந்து நிறுவனங்கள்!

....

பன்றிக்காய்ச்சல் வரமால் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக இந்தியபேரரசின் நலவாழ்வுத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் “மாற்று மருத்துவம்” தொடர்பான பிரிவு பன்றிக்காய்ச்சலை தடுப்பதற்காகன ஓமியோபதி மருந்தின் பெயரை அறிவித்துள்ளது. இந்த மருந்தின் விலையும் மிகக்குறைவு. (விலை குறைந்தது ரூ.10 முதல் ரூ. 30 வரை மட்டுமே.) மிகக்குறைந்த விலையில் வாங்கி ஒரு குடும்பமே பன்றிக்காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.... (ஒரு நாளைக்கு இரண்டு வேலையென மூன்று நாட்கள் சாப்பிட்டால் போதும்)

அந்த மருந்தின் பெயர் “ஆர்சனிக்கம் அல்பம்-30” (Arsenicum album-30) அனைத்து ஓமியோபதி மருந்து கடைகளிலும் கிடைக்கிறது. அருகில் உள்ள ஓமியோபதி மருத்துவரிடம் ஆலோசித்து உறுதிசெய்துகொண்டு பயன்படுத்துங்கள். (ஓமியோபதி மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பத்து ரூபாய்க்கு மருந்து வாங்கி எங்கள் குடும்பத்தில் பயன்படுத்துகிறோம்.)
...

Saturday, September 4, 2010

வெற்றியா? வெட்கக்கேடா?

“இந்தியாவில் காங்கிரஸ் கட்சி அழிந்தால்தான் இந்த நாடு உருப்படும்” என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. நாடு விடுதலை அடைந்தபோதே காங்கிரஸ் கட்சி கலைக்கப்பட்டிருக்க வேண்டும். நேருவின் சுயநலத்தால் அது நடைபெறாமல் போனது. தற்போது அந்த கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றதாம்! சோனியாகாந்தி நான்காவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துவிட்டாராம்! ஊடகங்கள் கொண்டாடுகிறது...

தற்போது உள்ள காங்கிரஸ் கட்சியின் உண்மையான பெயர் என்னவென்று தெரியவில்லை. (யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்) சோனியாகாந்தி தலைமையிலான அரசியல் கட்சியின் பெயரில் “காங்கிரஸ்” என்றும் நேரு குடும்பத்தின் பெயருக்குப்பின்னால் “கேண்டி” என்ற பெயர் திரித்து “காந்தி” என்று ஒட்டிக்கொண்டு இருப்பதாலேயே அந்த கட்சி நாட்டுக்கு விடுதலை வாங்கித்தந்த கட்சி என மீண்டும் மீண்டும் பரப்புரை செய்யப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி நேரு குடும்பத்தின் சொத்தாக மாற்றப்பட்டதன் மூலம் இந்த நாடும் நேரு குடும்பத்தின் சொத்தாக மாறிவிட்டது. இந்தியாவில் நடைபெறும் ஆட்சி “மக்களாட்சியின் பெயரில் நடைபெறும் மன்னராட்சி” என்றால் அது மிகையில்லை. மன்னாராட்சி காலத்தில்கூட மன்னனின் நேரடி வாரிசுக்கே பட்டம் சூட்டிக்கொள்ளும் உரிமை இருந்ததாக சொல்லப்படுகிறது. இன்றைய வல்லரசு இந்தியாவில் மன்னனிடமோ மன்னனின் வாரிசுகளிடமோ வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு வழியில் முந்திவிரித்து பிள்ளை பெற்றுக்கொண்டால் போதும் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றி விடலாம் என்ற நிலை உள்ளது... இந்த நாட்டின் குடிமக்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் இதற்காக வெட்கப்படப்போவதில்லை...


நேரு குடும்பத்தின் குடும்ப அட்டவனை இணையதளத்தில் கிடைத்தது அதையும் கொஞ்சம் பாருங்கள்...



Wednesday, August 25, 2010

ராஜபக்ஷ வரலாம்! நான் வரக் கூடாதா?: “மானமுள்ள“ துணை முதல்வர் இராமசாமி


தமிழர்களைக் கொல்லும் ராஜபக்ஷவும் அவர் பரிவாரங்களும் இந்தியாவுக்குள் வரலாம்! விருந்துண்டு மகிழலாம். ஆனால், அழிக்கப்படும் என் தமிழ் இனத்துக்காகப் பேசும் என்னைப் போன்றவர்கள் இந்தியாவுக்குள் வர முடியாது. இவ்வாறு மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி, கூறியுள்ளார்.

பேராசிரியர் இராமசாமி, 'பினாங்கு ராமசாமி' என்றே அறியப்படுகிறார். மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர். இலங்கை இன அழிப்புப் போருக்குப் பின்னர் ஈழ மக்களுக்காக சர்வதேச அளவில் ஓங்கி ஒலிக்கும் கோபக் குரல்!

செம்மொழி மாநாட்டுக்கு எதிராக இவர் கொளுத்திப்போட்ட பட்டாசுகள் வெடித்து அடங்குவதற்குள், 'மகிந்தா ராஜபக்ஷ, கோத்தபாய வரிசையில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், கருணாநிதி ஆகிய மூன்று பேரும் போர்க் குற்றவாளிகளே. இவர்களிடமும் ஐ.நா. விசாரணைக் குழு விசாரணை நடத்த வேண்டும்' என்று அதிரடி அறிக்கை விட்டிருக்கிறார்.

பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி, ஆனந்த விகடனுக்காக வழங்கிய செவ்வி வருமாறு:

கேள்வி: இந்தியாவுக்குள் உங்களை அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதே... என்ன காரணம்?

பதில்: மாநில முதல்வர் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக உள்துறை, இந்திய அரசைக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நானும் பார்வதி அம்மாளைப்போல எச்சரிக்கைப் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கிறேன். இலங்கையில் ராஜபக்ஷவின் தமிழின அழிப்புப் போரில் இந்திய நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்து வந்தேன்.

இருண்ட மேகம் தமிழர்களைச் சூழ்ந்த வேளையில், துயர் துடைக்க கருணாநிதி எதுவுமே செய்யவில்லை. கவலையோடு ஏதாவது செய்யுங்கள் என்றேன். ஆனால், கருணாநிதிக்கு சொக்கத் தங்கம் சோனியா காந்தியின் கோபத்துக்கு தான் ஆளாகிவிடக் கூடாது என்ற ஒரே கவலை மட்டுமே இருந்தது. அதன் விளைவுதான், அந்தக் கடிதம்.

தமிழர்களைக் கொல்லும் ராஜபக்ஷவும் அவர் பரிவாரங்களும் இந்தியாவுக்குள் வரலாம்! விருந்துண்டு மகிழலாம். ஆனால், அழிக்கப்படும் என் தமிழ் இனத்துக்காகப் பேசும் என்னைப் போன்றவர்கள் இந்தியாவுக்குள் வர முடியாது.

கேள்வி: உங்கள் நண்பர் சீமான் சிறையில் இருக்கிறாரே?

பதில்: மீனவர்களுக்காகக் குரல் கொடுத்ததற்காகத் தம்பியைச் சிறையில் அடைத்திருக்கிறார்கள். அதன் பின்னர், இரண்டு முறை சிங்களக் கடற்படை இராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை வெடிவைத்துத் தகர்த்திருக்கிறது. இப்போது மிகத் தந்திரமாக யாழ்ப்பாண மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே கலவரத்தைத் தூண்டும் சதி நடந்துகொண்டு இருக்கிறது.

இரு நாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகச் செய்திகள் வெளியாகின்றன. பிரச்சினை இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலானதா? இலங்கை அரசுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையிலான பிரச்னையை இவர்கள் இரு நாட்டுத் தமிழ் மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையாகத் திசை திருப்புகிறார்கள். அதற்கு இடைஞ்சலாக இருப்பார் என்பதால்தான், தம்பி சீமானை சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

கேள்வி: செம்மொழி மாநாட்டுக்கு உங்களை அனுமதிக்கக் கூடாது என்று கடிதம் எழுதுகிற அளவுக்கு உங்களுக்கும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் இடையில் என்ன முரண்பாடு?

பதில்: எல்லாத் தமிழர்களையும்போல நானும் ஆரம்பத்தில் கலைஞரை மிகவும் நேசித்தேன். அவர் எழுத்துக்களை விடாமல் படித்தேன். ஆனால், முதலாம் ஈழப் போரின்போதுதான் இவரின் சுயநல அரசியலைப் புரிந்துகொண்டேன். அவருக்கு, தமிழர்கள் பற்றியோ, தமிழ்மொழி பற்றியோ எந்தக் கவலையும் இல்லை.

செம்மொழி மாநாட்டைப் பொறுத்தவரையில் நான் ஏதோ செம்மொழி மாநாட்டுக்கு வருகிறேன்... வருகிறேன் என்று வாசலில் போய் நின்றது போலவும், கருணாநிதி என்னைத் துரத்திவிட்டது போன்றும் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார். விருந்து உண்ணுவதில்கூட மானம் பார்க்கிற தமிழன் நான். உலக அளவில் தனக்கு நேர்ந்துள்ள அவப் பெயரைப் போக்க, இனக் கொலை நடந்த ஓர் ஆண்டுக்குள் செம்மொழி பெயரில் இந்த மாநாட்டைத் தன் குடும்ப மாநாடாக நடத்தி முடித்திருக்கிறார்.

ஆனால், தன் மீது விழுந்த களங்கத்தை மாநாடு நடத்தியோ, மயிலாட நடத்தியோ கழுவ முடியாது என்பது முத்தமிழ் அறிஞர் கருணாநிதிக்கு இன்னும் விளங்கவில்லை. இந்த மாநாடு அறிவிக்கப்பட்ட உடனே முதன்முதலாக அதற்கு எதிராகக் குரல் கொடுத்தவன் நான். செம்மொழி மாநாடு நடந்த அதே கோவையில், பல தடைகளைத் தாண்டி டாக்டர் கிருஷ்ணசாமி ஏற்பாடு செய்த மாநாட்டிலும், மதுரையில் நாம் தமிழர் மாநாட்டிலும் பேசினேன்.

புது டெல்லியில் நடைபெற்ற புலம்பெயர்ந்த இந்தியர்களின் மாநாடான 'பிரவசி பாரதிய திவாஸ்' மாநாட்டுக்கு எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மனிதப் பேரவலத்தில் இந்தியாவின் பங்கைச் சுட்டிக்காட்டி, நான் நிராகரித்தேன்.

இப்படி எதிர்ப்புத் தெரிவித்த என்னை அவமானப்படுத்தும் நோக்கில், வழக்கம் போலக் கடிதம் எழுதினார் கருணாநிதி. மற்றபடி எனக்கும் அவருக்கும் எந்தவிதமான தனிப்பட்ட பிரச்சினைகளும் இல்லை.

கேள்வி: பிரபாகரன்தான் என் தலைவர் என்கிறீர்கள், அதற்கு என்ன காரணம்?

பதில்: எனக்கு மட்டுமல்ல... உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஒப்பற்ற தலைவர் பிரபாகரன்தான். தலைவர் பிரபாகரனை இரு முறை வன்னியில் சந்தித்துள்ளேன். ஈழத் தமிழர்களைப் பற்றியும் உலகத் தமிழர்கள் பற்றியும் நீண்ட நேரம் உரையாடினோம். அவரிடமிருந்து விடைபெறும்போது, தமிழ், தமிழர் நலன் குறித்த தெளிந்த சிந்தனையும் தெளிவான பார்வையோடும் நான் வெளியே வந்தேன்.

பிரபாகரன் எனக்கு ஒரு வழிகாட்டி. சுருக்கமாகச் சொல்லப்போனால், தமிழினத்தின் காவலன் பிரபாகரன். தமிழர் சரித்திரத்தில், 1,000 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் அவரைப் போன்ற தீர்க்கதரிசனம் மிக்க தலைவர் தோன்றுவார். தமிழர் சரித்திரத்தில் ஈடு இணையற்ற மாபெரும் தலைவர் அவர்!

கேள்வி: 30-க்கும் மேற்பட்ட நாடுகள், புலிகள் அமைப்பைத் தடை செய்திருக்கும் நிலையில், மலேசியாவில் ஓர் அரசுப் பதவியில் இருக்கும் உங்களது பேச்சு, மலேசிய அரசுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தாதா?

பதில்: கடந்த காலங்களில் 'தீவிரவாதம்' என்ற சொல்லைப் பயன்படுத்தி, பல சுதந்திரப் போராட்ட இயக்கங்கள் நசுக்கப்பட்டதை நாம் அறிவோம். அயர்லாந்து புரட்சி இயக்கம், விடுதலைப் புலிகள் இயக்கம், பி.எல்.ஓ. எனப்படும் பாலஸ்தீன சுதந்திர இயக்கம், இப்படிப் பல சுதந்திரப் புரட்சி இயக்கங்களை அவ்வாறுதான் சித்தரித்து ஒடுக்கப்பார்த்தார்கள்.

என்னைப் பொறுத்தவரை, விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தேசிய விடுதலை இயக்கம். சிங்கள இனவெறி அரசின் கொலை வெறியாட்டத்தில் இருந்து, இலங்கையில் ஒரு தேசிய இனமான தமிழர்களைக் காப்பாற்றத் தொடங்கப்பட்ட இயக்கம். அவ்வியக்கம், தமிழர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகவே விளங்கியது. ஈழத் தமிழர்கள் மட்டும் இன்றி, உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஒரு காவல் அரணாக நம்பிக்கையை ஏற்படுத்தியது விடுதலைப் புலிகள் அமைப்புதான்.

நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு இருந்தே, தமிழர்கள் மட்டுமல்லாது, இந்தோனேஷியாவின் ஆச்சே பகுதி மக்கள், பாலஸ்தீனியர்கள் என்று உரிமைக்காகப் போராடும் மக்களுக்காகப் போராடுபவனாகவே இருந்து வந்திருக்கிறேன். இப்போது அரசியலுக்கு வந்து, பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் பதவியில் உட்கார்ந்து இருக்கிறேன் என்பதற்காக எனது கொள்கைகளை, எனது போராட்டத்தைக் கைவிட்டுவிட முடியாது!

கேள்வி: கே.பி. கைது, ஈழ அகதிகள் விவகாரங்களில் கொண்டுள்ள அணுகுமுறை போன்றவற்றை வைத்துப்பார்க்கும்போது, மலேசிய அரசு, இலங்கை அரசுக்கு ஆதரவாக இருப்பதைப் போன்று தெரிகிறதே?

பதில்: மலேசியாவில் ஆட்சியில் இருக்கும் அரசும் இனவாத அரசே. அந்த வகையில், சுதந்திர இயக்கங்களுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவது அதிசயம் இல்லை. மலேசிய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இணக்கப்பாடின்றி, நெருங்கிய ஒத்துழைப்பு இன்றி, கே.பி-யின் கைது மலேசியாவில் நிகழ்ந்திருக்காது.

பல விடுதலைப் புலி உறுப்பினர்களைக் கைது செய்து, இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது மலேசிய அரசு. அவ்வாறு நாடு கடத்தப்படும் புலி உறுப்பினர்களை, இலங்கை அரசு கைது செய்து சிறையில் அடைக்கிறது, சித்திரவதைகள் செய்கிறது.

தமிழ் சுதந்திர இயக்கங்களை ஒடுக்குவதில், இரண்டு அரசுகளும் மிகக் கவனமாக நடந்துவருகின்றன. இன்று வரையிலும் சுமார் 2,000 தமிழ் அகதிகள், மலேசியாவின் குடிநுழைவுத் துறை தடுப்பு முகாம்களில் உள்ளனர். அண்மையில்கூட, சுமார், 75 அகதிகள் கைது செய்து அடைக்கப்பட்டுள்ளனர்.

கேள்வி: இந்திய, தமிழக அரசுகளையும், சோனியாவையும் நீங்கள் விமர்சிப்பது, மலேசிய-இந்திய உறவுகளைப் பாதிக்காதா?

பதில்: மகிந்தா ராஜபக்ஷ, கோத்தபய ராஜபக்ஷே போன்று மன்மோகன் சிங், சோனியா காந்தி, ப.சிதம்பரம், கருணாநிதி ஆகியோரும் போர்க் குற்றவாளிகளே.

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் குழு, தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக் கொடுமைகள்பற்றி விசாரிக்கும்போது இவர்களையும் விசாரிக்க வேண்டும்.

உங்களுக்குத் தெரியும், ஈழப் போரில் நிகழ்ந்த கொடுமைகளைக் கண்டு, நான் சில தலைவர்களைக் கேள்வி கேட்டதற்கே, எனக்கு இந்தியாவுக்குள் செல்லத் தடை விதித்துள்ளனர்.

கண்டிப்பாக, மலேசிய அரசுக்கு என் நடவடிக்கைகள் எரிச்சலைக் கிளப்பியிருக்கும்தான். அதைப்பற்றி எல்லாம் எனக்குக் கவலை இல்லை. இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதுதான் என் நோக்கம்.

கேள்வி: உங்கள் மாநிலத்துக்கு வந்த இந்தியத் தூதரை நீங்கள் சந்திக்க மறுத்து அவமதித்தது சரியா?

பதில்: எனக்குத் தடை விதித்த இந்திய அரசின் அதிகாரிகளுக்கு நான் மரியாதை கொடுப்பது அவசியம் இல்லை என்று நான் கருதுகிறேன். சமீபத்தில், இந்தியத் தூதர் விஜய் கோகல்லே அவர்களைச் சந்திக்க நான் மறுத்துவிட்டேன். நான் என்ன நினைக்கிறேன் என்றால், மலேசியாவில் உள்ள இந்திய அரசின் அதிகாரிகள் இந்திய அரசாங்கத்தின் பிரசார சாதனங்கள், அவ்வளவுதான்.

கேள்வி: ஐ.நா. விசாரணைக் குழுவின் விசாரணைகள் சரியான வகையில் நடத்தப்படும் என்று கருதுகிறீர்களா?

பதில்: இலங்கையில் நிகழ்ந்த கடும் யுத்தத்தை நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது. ஆனால், இன்று பல நாடுகள், மனித உரிமைக் குழுக்கள், தனி நபர்களின் தொடர் அழுத்தத்தால், இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் விசாரணைக் குழு ஒன்றை ஐ.நா. அமைத்துள்ளது. அதன் நடவடிக்கைகள், விசாரணைகள் எந்த அளவுக்கு நடுநிலையாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால், இலங்கையில் நிகழ்ந்தது இன அழிப்பு நடவடிக்கைதான் என உலக நாடுகளுக்கும், தலைவர்களுக்கும் புரியவைக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டன. நாங்களும் இதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டோம்!

கேள்வி: இந்திய அரசு ஈழத் தமிழர் விவகாரத்தில் மட்டுமல்லாது எல்லா தமிழர்கள் விவகாரத்திலும் இப்படித்தான் நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டினீர்களே, அது ஏன்?

பதில்: மலேசியாவில் வசித்தாலும் எங்கள் வேர்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன. எங்களின் மூதாதையர்களில் பலர், இரண்டாம் உலகப் போரில் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து போராடியவர்கள். ஆனால், இந்திய அரசாங்கம் மலேசியத் தமிழர்களை எப்போதோ மறந்துவிட்டது.

எங்கள் துன்பங்களை இந்திய அரசு கண்டுகொண்டதே இல்லை. அதிலும் குறிப்பாக, வட இந்தியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்திய நடுவண் அரசு, தமிழர்கள் விவகாரங்களில், அது மலேசியத் தமிழராகட்டும், ஈழத் தமிழராகட்டும், ஓர் அலட்சியப் போக்கையே கடைப்பிடிக்கிறது.

ஆஸ்திரேலியாவில் வட இந்தியர்கள் தாக்கப்பட்டால் அலறித் துடிக்கும் இந்திய அரசின் இதயம், தாக்கப்படுபவன் தமிழன் என்றால் மௌனமாகிவிடுகிறது.

கருணாநிதியோ தனது குடும்ப நலனுக்காக தமிழர்களின் நலன், அவர்களின் எதிர்காலம் எல்லாவற்றையும் காவு கொடுத்துவிட்டார்.

இப்போதைக்கு, தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம், மறுமலர்ச்சி கண்டிப்பாகத் தேவை என்பதுதான் என்னுடைய கருத்து. அதன் பிறகுதான், தமிழீழத்தைப் பற்றிய விவாதங்கள் குறித்து நாம் பேச முடியும்! என்றார்.

நன்றி தமிழ்வின்.காம்

Tuesday, August 17, 2010

மன்மோகன், சோனியா, கருணாநிதியிடமும் இலங்கை போர்க்குற்ற விசாரணை வேண்டும்: பினாங்கு துணை முதல்வர்

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை அதிபர் மற்றும் அவரது தம்பிகள் தவிர, இந்தியத் தலைவர்கள் பிரதமர் மன்மோகன் சிங் , காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரும் சர்வதேச அரங்கில் விசாரிக்கப்பட வேண்டும் என்று பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி வலியுறுத்தினார்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய மலேசிய ஜனநாயக நடவடிக்கைக் கட்சியின் தலைவரும், பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வருமான பேராசிரியர் பி. இராமசாமி கூறியதாவது:

இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தின், இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் உயிரிழந்தனர். சர்வதேச போர் நெறிமுறைகளை காலில் போட்டு நசுக்கிவிட்டு தமிழர்களை இனப் படுகொலை செய்தது இலங்கை இராணுவம். இதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன.

இலங்கை இராணுவத்தால் அங்கு நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு, இந்தியாவே உறுதுணையாக இருந்துள்ளது. இந்தியாவின் விரலசைவுக்கு ஏற்பவே இந்தப் போர்க்குற்றங்கள் அரங்கேறியுள்ளன. இதனை ராஜபக்சேவே கூறியுள்ளார்.

எனவே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் சிதம்பரம் , தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரது பங்களிப்பும் இதில் இருப்பது உறுதியாகிறது. எனவே இவர்களுக்கு எதிராகவும், போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள், ஐ.நா. செயலர் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் இந்தியத் தலைவர்கள் மீதான போர்க் குற்றங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்றார்.

நன்றி: தமிழ்வின்.காம்

Monday, August 2, 2010

உலக எண்கள் தமிழ் எண்களே!


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைத் தொடர்ந்து மக்களிடம் தமிழ்பற்றிய விழிப்புணர்வு உருவாகியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை மாநகராட்சி, வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்க வேண்டும் என முனைந்திருப்பதும் சரியான திசைவழியில் ஒரு நல்ல நடவடிக்கையே. அத்துடன் தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை என்ற முதல்வரின் அறிவிப்பும் பல்லாண்டு கால தமிழ் உணர்வாளர்கள் கோரிக்கையின் வெற்றியே.

ஆங்கிலத்தில் எழுதும்போதும், பேசும்போதும் பிழை ஏற்பட்டுவிடக் கூடாது என அஞ்சும் படித்தவர்கள் தமிழில் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம், பேசலாம் என எண்ணுகின்றனர். அதனால்தான் தமிழ் எண்களை ஆங்கில எண்கள் என்றும், அரபு எண்கள் என்றும், உலக எண்கள் என்றும், இந்திய எண்கள் என்றும் ஆளுக்கு ஆள் பிழைபடப் பேசியும், எழுதியும் வருகின்றனர்.

இப்போது உலகமெல்லாம் வழக்கில் இருக்கும் எண்கள் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 தமிழ் எண்களே என்பதைத் தமிழ் மக்களும், சில தமிழ் அமைப்புகளும் அறியாமல் இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. இதையறிந்த தமிழறிஞர்கள் மக்களிடம் பரப்பவில்லை; அதனால்தான் இதனை ஆங்கில எண்கள் என எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இந்த அறியாமையைப் போக்காதது அறிந்தவர்களின் குற்றம்தானே!

மாநில மொழிகளில் வாகன எண் பலகையை எழுதலாம் என்று இந்திய வாகனச் சட்டம் 1989 கூறுகிறது. அதுபோலவே 1998-ம் ஆண்டு தமிழ்நாட்டிலும் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. வாகன உரிமையாளர்கள் விரும்பினால் ஊர்திகளில் தமிழிலும் பதிவு எண்களை எழுதிப் பொருத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டது.

தமிழக அரசு தமது ஆணையில் எண்களைப் பொறுத்தவரை உலக எண்களையே (அரபிக் நம்பர்ஸ்) பயன்படுத்தலாம் என்று அறிவித்தது. இதன் மூலம் இந்த உலக எண்கள் அராபிய எண்கள் என்றே அரசும் கருதுகிறது என்றே கொள்ள வேண்டியுள்ளது.

"எண்ணும் எழுத்தும் கண்னெனத் தகும்' என்றும் "எண்னென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்னென்ப வாழும் உயிர்க்கு' என்றும் தமிழிலக்கியம் கூறுகிறது. ""உயிர்களுக்கு எண்ணும் எழுத்தும் இரண்டு கண்களாகும். இதில் ஒரு கண்ணாகிய தமிழ் எழுத்தை எடுத்துக் கொண்டோம். ஆனால், மற்றொரு கண்ணாகிய தமிழ் எண்களை விட்டுவிட்டோம். அவற்றைப் பயன்படுத்த அரசு ஆவன செய்யுமா...? '' என்று சட்டப்பேரவையிலேயே கேட்கப்பட்டது; கேட்டவர் அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் குமரி அனந்தன். "தமிழ் எண்கள் மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டு வரப்படுமா?' என்று அப்போது தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகனிடம் கேட்கப்பட்டது.

"இதுகுறித்து முதல்வர், கல்வியமைச்சர் ஆகியோருடன் பேசினேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட மைல் கற்களில் தமிழ் இருந்துள்ளது. படிப்படியாகக் கவனிக்கலாம் என்று இருக்கிறோம்...'' என்று அவர் ஒரு நேர்முகத்தில் விடை கூறியுள்ளார் (ராணி: 4-8-1996).

மறுக்க வேண்டிய சில தமிழ் அமைப்புகளும், "இப்போது வழக்கில் இருக்கும் எண்கள் தமிழ் எண்கள் இல்லை' என்ற எண்ணத்தில், "தமிழ் எண்களைப் பயன்படுத்த வேண்டும்' என்றே தீர்மானங்கள் இயற்றின. இதனை மறுக்காமல் தமிழறிஞர்கள் ஏன் அமைதி காத்தனர் என்றே தெரியவில்லை.

இந்த எண்களைப் பற்றிய குழப்பம் இப்போதுதான் இப்படி எழுந்துள்ளது என்று எண்ண வேண்டாம். 1960-ம் ஆண்டு "மத்திய கல்வி ஆலோசனைக் குழு'க் கூட்டத்திலும் இந்தப் பிரச்னை எழுந்துள்ளது.

இந்தியாவில் கல்வி சம்பந்தமாக உலகத்தில் வழங்கி வரும் எண்களையே பயன்படுத்துவது என்று மத்திய கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று "கல்விக்கு அராபிய எண்களே - ஆலோசனைக் குழு முடிவு' என்ற தலைப்பில் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

இதுபற்றி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், ""அவை அரபிய எண்கள் அல்ல தமிழ் எண்களே'' என்று தம் இதழாகிய "குயில்' ஏட்டில் 24-1-1960 அன்று எழுதினார். "அன்றைய தமிழகக் கல்வியமைச்சர் சி. சுப்பிரமணியம் அந்தக் குழுவில் இந்த எண்கள் தமிழ் எண்களே என ஏன் சொல்லவில்லை?' என கண்டனம் தெரிவித்தார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் வரிவடிவம் எப்படியிருந்தது என்பதை அரசினர் ஆராய்ச்சித்துறையின் சுவடியில் கண்டால் இன்றைய 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 ஆகியவை தமிழ் எழுத்துகளே என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இந்தத் தமிழ் எண்களை இங்கு வணிகத் தொடர்புடைய அராபியர் கொண்டு போயினர்; அவர்களிடமிருந்து மேல்நாட்டினர் கற்றுக்கொண்டனர். ஒரு மாற்றமும் செய்யாமல் அவர்கள் அப்படியே எடுத்தாண்டனர்; அவர்கட்குக் கிடைத்த அன்றைய உருவமே இன்றைய உருவம்; ஆனால் தமிழகத்தில் அந்த உருவம் நாளடைவில் மாற்றத்துக்கு உள்ளாயிற்று...!'' என்று பாரதிதாசன் எழுதினார்.

டாக்டர் மு. வரதராசனார் தம் "மொழி வரலாறு' என்னும் நூலில் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 என்ற எண்கள் தமிழ் எண்களே என்பதை கல்வெட்டுத் துணை கொண்டு நிறுவியுள்ளார். அந்தக் கல்வெட்டுச் சான்று (படம்). அவர் எழுதுகிறார்: "1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 என இன்று உலகமெங்கும் எழுதப்படும் எண்கள் அரபி எண்கள் என்று கூறப்படுகின்றன. ஆனால், அராபியர்களுக்கு இந்த எண்களின் பழைய வரலாறு பற்றி ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் இவற்றை இந்திய எண்கள் என்கிறார்கள். வடநாட்டு அறிஞர்களுக்கு இவற்றின் தோற்றம் பற்றி ஒன்றும் விளங்கவில்லை.

தமிழ்நாட்டின் பழைய எண் வடிவங்களைப் பற்றி இவர்கள் அறியாமல் இருத்தலே இவ்வாறு அனைவரும் தடுமாறுவதற்குக் காரணம் ஆகும். அரபி எண்கள் என்றும், இந்திய எண்கள் என்றும் இவ்வாறு தடுமாறிக் கூறப்படும் இந்த எண்கள் (1, 2, 3 முதலியவை) பழைய தமிழ் எண்களே என்பது முன்பக்கத்தில் உள்ள பழந்தமிழ் எண் வடிவங்களை நோக்கின் உணரப்படும்.

இவற்றை நோக்கி எண்ண வல்லார்க்கு 1, 2, 3 முதலிய எண்களின் எழுத்து வடிவம் தமிழகம் உலகத்துக்கு அளித்த கலையே என்னும் உண்மை புலப்படும்...''- இவ்வாறு எழுதிய டாக்டர் மு.வ., கல்வெட்டு ஆதாரத்தையும் படமாக்கி வெளியிட்டுள்ளார் (ஆதாரம்: "மொழி வரலாறு' - பக்கம் 358).

இந்த எண்களைத் "தமிழ் எண்கள்' என்று உலகம் ஏற்றுக் கொண்டாலும், உள்ளூர் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்குவது ஏன் என்பதுதான் தெரியவில்லை. தமிழில் ஏதேனும் நல்லவை தென்பட்டால் அவை பிறமொழியிலிருந்து வந்ததென்று கூறுவதும், ஆங்கிலத்திலிருந்து கிடைத்ததென்று கருதுவதும் நம்முடைய மரபாகிப் போனது. இந்தத் தாழ்வு மனப்பான்மை அகல வேண்டும்.

இவை தமிழ் என அறிந்த பிறகும், இதன் மாற்று வடிவங்களையே தமிழ் எனக்கூறி புழக்கத்துக்குக் கொண்டுவர முயல்வது சரியன்று; உலகம் ஏற்றுக் கொண்டதை நாமும் உவப்புடன் ஏற்போம்.

செம்மொழித் தமிழின் சிறப்புகளுள் தலையாய மணிமகுடம் இதுவென ஓங்கி ஒலிப்போம். தன் பிள்ளையை உலகம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை எந்தத் தாயும் கண்ணீர் மல்க வரவேற்கவே செய்வாள்.

தமிழகம் உலகத்துக்கு அளித்திருக்கும் மாபெரும் கொடை இது. இதற்கு உலகமே தமிழ்மொழிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது. இதற்காக தமிழ்மக்கள் பெருமைப்பட வேண்டும்; பெருமைப்படுவதற்கு அவர்களுக்கு இந்தச் செய்தி தெரிந்திருக்க வேண்டுமே!

இனிமேலும் ஐயம் வேண்டாம்; உலக எண்கள் தமிழ் எண்களே!



நன்றி: தினமணி (02.08.2010)

Thursday, July 15, 2010

“சீமான்”களை தூக்கிலிடு!

காட்டிக் கொடுக்கூட்டிக் கொடு
கொலை செய் கொள்ளையடி
அதிகாரத்தைக் கைப்பற்று – இதுதான்
அரசியல் அறிச்சுவடி

மக்களை மந்தை களாக்கு
மாண்பு மிகுக்களை மாமாக்களாக்கு
பட்டியில் அடை – மக்களாட்சி
இதுவென்று முரசுகொட்டு

பட்டியிலடைத்த மந்தைகள் கேட்கா
தனைத்தையும் இலவசமாகக் கொடு
தவணையில் கொடு – பிச்சையென்றுரைத்தால்
கொடையென்று சொல்

அன்பு அகிம்சையென்று பசப்பு
பண்பைப் பேணென்றுரைத்து மக்களை
அடித்து அடக்கு – அதுதான்
சட்ட ஒழுங்கென்றுரை

உழைக்கும் மக்களை ஊதாரிகளாக்கு
மதுவாறு ஓடவிட்டு காமக்கிழத்திகளை
வீடுதோரும் ஆடவிடு – பொற்கால
ஆட்சியென்பது இதுவே

நிலமும் நீரும் காற்றும்
ஆகாயமும் பொதுவென்றுரை முன்னேற்றம்
வேண்டுமென கூவு – தரகுக்கூலிக்காக
மாற்றானுக்கு அனைத்தையும் விற்றுவிடு

அந்தப்புரத்தை அதிகார மையமாக்கு
காமத்தின் கழிவில் முளைத்த
காளான் களனைத்தையும் – பட்டத்துக்
குரியவர்களென்று பறைசாற்று

உன் சிம்மாசனத்திற்கு ஆசைப்படும்
வாரிசுகளுக்கு போட்டி வை
மோதவிடு! மோதிவிடு! – பலிகடாவாக்கு
தொண்டனை மட்டும்

போதாதென்றால் காளான்களனைத்தையும் களமிறக்கு
அவர்களுக்குள் மோதட்டும்! மோதட்டும்!
மோதிக்கொண்டே இருக்கட்டும்! – மன்னன் நீதான்
கட்டையில் போகும்வரை

குடும்பத்தை எட்டுத்திக்கும்அனுப்பு கிடைத்ததைச்சுருட்டு
பொதுவுடமை பேசுவோரை பொல்லாப்பாக்கு – பொதுவுடமையின்
குறியீடென் குடும்பமென்றுரை

எதிரியோடு மண்டை நாட்டோடும்
அன்புப் பாராட்டு கேட்டதனைத்தும்
கொடுத்துதவு மகிழ்வோடு – “இறையாண்மை“
இருவருக்கும் இன்றியமையாதது

உன்குடி மக்களை கொன்றொழித்தாலும்
எதிரியோடு கொஞ்சிக் குலாவு
விருந்துண் குதூகலி – அவன்வீசும்
எலும்புத்துண்டை கவ்வு

மெதுவாகக்கடி! நீகடிக்கு மெலும்பு
மானமுள்ள மறவனின் குறுத்
தெலும்பாக இருந்தாலும் – அதுவுமுன்னை
கொல்லும் எச்சரிக்கை!

எச்சரிக்கை! எச்சரிக்கை! செய்கின்றேன்
இனமானம் மொழிமானம் தன்மானமென்று
மக்களை பேசவிடாதே – அத்தனையும்
நீயே பேசு

நல்வித்துக்கள் நாட்டில் அங்கொன்றும்
இங்கொன்றும் வளரத்தான் செய்யும்
அவைகளைகண்டு அஞ்சாதே – அணைத்துப்பார்
இல்லையெனில் அழித்துவிடு

இனமானம் பேசும்நெடு மாறன்களை
நாடுகடத்து சீறும்சீமான்களை தூக்கிலிடு
முழங்கும்நா வைகோடாரிக் – காம்பால்
குத்தி நசுக்கு

மறவன் நீயேகதியென சரணடைந்தால்
விட்டுவைக்காதை அப்போதே கடித்துக்குதறு
குருதிக்கவிச்சை குமட்டினால் – இரண்டுநாழிகை
எதுவுமுண்ணாமல் கடற்கரையில்கிட

பாலகரின் குருதியுனக்கு போதையேற்றும்
அந்தப்புரத்தில் புலவர்கூட்டத்தை பாடவிடு
நடனமாதரை யுன்போதை – தெளியும்வரை
ஆடையவிழ்த்து ஆடவிடு

மானங் கெட்டவர்களே நாட்டில்
நடமாடமுடியு மென்பதை உலகுக்குணர்த்து
கொண்டாடு! கொண்டாடு! - நான் மட்டுமே
தலைவனென்று கொண்டாடு!

குற்றத்தில் முதிர்ந்தகரு

Wednesday, June 30, 2010

வெங்காய மாநாடு!

“உலகத் தமிழ் மாநாடாம்! வெங்காய மாநாடாம். இது எதற்கு? கும்பகோணம் மகாமகத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது. காங்கிரசைவிட, இந்த மந்திரிசபை தேவலாம் என்கிறார்கள். இந்த நேரத்தில் ஏன் இந்த கூத்து? கனம் அண்ணாதுரை 1972 இல் பதவிக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிடட்டும்? உலகத் தமிழ்மாநாடு கூடிக் கலைந்த பின் சூத்திரன், சூத்திரனாகத் தானே இருக்கப் போகிறான்? இழிவு ஒழியப் போகிறதா? கண்ணகி சிலையும் கம்பன் சிலையும் எதற்கு? இவர்கள் நமது இனப் பெருமையை ஒழித்தவர்கள் அல்லவா? - பெரியார் ‘விடுதலை’ 15.12.1967

1968-ஆம் ஆண்டு சென்னையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டு குறித்து தந்தைபெரியார் கூறிய கருத்து. அன்று அவர் கூறியது போலவே உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை தனது சுயநலத்திற்காக மகாமக திருவிழாபோல் கூடிக்களையும் மாநாடாக மாற்றிய பெருமை அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் மு.கருணாநிதியையே சேரும்.
தான்செய்த தமிழினத் துரோகங்களை மூடிமறைக்க கருணாநிதியால் தற்போது நடத்தப்பட்ட கோவை செம்மொழி மாநாட்டை தந்தைப்பெரியார் பார்த்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்?

Monday, June 28, 2010

பழ. கருப்பையா மீது தாக்குதல்: கருணாநிதியின் சனநாயகம்

எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என எத்தனையோ சுதந்திரங்கள் இந்தநாட்டில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உண்மையில் இவை எதுவும் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடையாது என்பதே உண்மை. குறிப்பாக மானமுள்ளவர்களும், சுயசிந்தனையாளகளும் மக்களுக்காக சிந்திக்கவோ செயல்படவோ கூடாது என்பதை தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் மீண்டும் மீண்டும் நிறுபித்து வருகின்றனர்.

அடக்குமுறையின் செயல்வடிவம் தான் ஒவ்வொரு ஆட்சியாளர்களுக்கும் மாறுபடுகிறதே தவிர மற்றபடி யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் அல்ல. அதிலும் குறிப்பாக செயலலிதாவும், கருணாநிதியும் தங்களுக்கென்று தனித்தனி “அடக்குமுறை கொள்கை”யை தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

செயலலிதா அவர்கள் சனநாயகம், கருத்துச் சுதந்திரம், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, ........ என எதைப்பற்றியும் கவலைப்படவும் மாட்டார். தனக்கு சரி என்று தோன்றியதையும், தன்னை எதிர்ப்பவர்களையும் எதைப்பற்றியும் கவலைப்பாடாமல் ஒடுக்குவார் அல்லது அழித்துவிடுவார்.

கருணாநிதி அவர்கள், கொள்கை, இலட்சியம், பகுத்தறிவு, அரசியல், சனநாயகம், கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் போன்றவைகளைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதுவார், மணிக்கணக்காக பேசுவார். ஆனால் தனக்கு எதிரான எதையுமே விட்டுவைக்கமாட்டார். குறிப்பாக கருணாநிதிக்கு எதிரானவர்கள் தமிழர்களாக இருந்துவிட்டால் காத்திருந்து கருவருத்துவிடுவார். இதற்கு எடுத்துக்காட்டுகள் தேவையில்லை. கருணாநிதியின் வாழ்க்கையே தமிழினத்திற்கு எதிரானதுதான்.

அதன் தொடர்ச்சியான ஒரு நிகழ்வே தற்போது பழ.கருப்பையா அவர்கள் தாக்கப்பட்டது...

சென்னை இராயப்பேட்டையில் பழ. கருப்பையாவின் அவர்களின் வீடு உள்ளது. இங்கு மனைவி, மகன், மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளோடு அவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவர் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்கியவர்கள் பழ.கருப்பையாவை பார்த்து “நீ என்ன பெரிய எழுத்தாளனா, இந்த வாய் தானே கலைஞருக்கு எதிராக பேசுகிறது” என்று சொல்லி வாயில் குத்தியுள்ளனர். “இந்த கைதானே எழுதியது” என்று அவருடைய கையில் குத்தியுள்ளனர். “இது ஆரம்பம்தான்” என்று கூறிக்கொண்டே வீட்டில் உள்ள பொருள்களை அடித்து நொறுக்கியுனர்.

கருணாநிதியின் அரசியல் நிலைப்பாடுகள், தமிழினத் தூரோகச் செயல்கள், தமிழின துரோகத்தை மறைக்க நடத்தப்பட்ட செம்மொழி மாநாடு என அவரையும் அவரது ஆட்சியையும் பற்றி பழ.கருப்பையா அவர்கள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். அதற்காகவே இந்த பரிசு கருணாநிதியால் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வழக்கம்போல் ஊடகத்தை வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்தும் ஊடக வேசிகள் ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்காமல் இதை ஒரு செய்தியாக மட்டுமே வெளியிடுவார்கள். ஒரு சில சூராதி சூரர்கள் வழக்கம் போல் இப்படி ஒரு நிகழ்வு நிகழந்ததாகவே தங்களுடைய ஊடகத்தில் காட்டிக்கொள்ளமாட்டார்கள்.

வாழ்க! சனநாயகம்...

Wednesday, June 23, 2010

திராவிடரா? தமிழரா? எது நமது அடையாளம்? நான் தமிழன்!

தமிழர்களின் அடையாளம் எது? திராவிடரா? அல்லது தமிழரா? என்ற கேள்விக் கணையுடன் வரலாற்று, அரசியல் ரீதியிலான ஒரு விவாதம் சூடாகக் கிளம்பியுள்ளது.

கோவையில் தமிழக அரசால் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அம்மாநாடு குறித்து முரசொலியில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு,கருணாநிதி எழுதிய கடிதம் மற்ற நாளிதழ்களில் திமுக, தலைமைக் கழகத்தால் விளம்பரமாக அளிக்கப்பட்டுள்ளது. அதில், “திராவிடத்தை, திராவிடர் நாகரீகத்தை, அவர் தம் கலையை, கலாச்சாரத்தை, பண்பாட்டை, பழக்க வழக்கங்களை, தென்னகப் பலாக்கனியான் - திராவிடத்தில் குலுங்கிடும் இனிய தமிழ்ச் சுளைகளை; ஆம், இலக்கியச் சுளைகளை...” என்று எழுதியுள்ளது பெரும் சர்ச்சையை உருவாக்க, அதுவே தமிழரின் அடையாளம் எது? திராவிடரா? தமிழரா? என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது.

புதிய தமிழகம் கட்சியின் சார்பில் துவக்கப்பட்டுள்ள இந்த விவாதம் சென்னை, தியாகராயர் நகரிலுள்ள செ.தெ.நாயகம் மேனிலைப் பள்ளி மைதானத்தில் திங்கட்கிழமை மாலை ஒரு கருத்தரங்கமாக துவங்கி நடைபெற்றது.

கருத்தரங்கின் முதல் பேச்சாளராக வந்த தமிழ்த் திரைப்பட இயக்குனர் புகழேந்தி, தமிழர் என்று சொல்லின் மருவே திராவிடர் ஆனது என்பதை தேவநேயப் பாவாணர் உறுதி செய்துள்ளதை எடுத்துக் கூறி, ஒரு மருவு எப்படி தொன்மையான தமிழினத்தின் அடையாளம் ஆகும் என்று கேள்வி எழுப்பினார்.

தனது கடிதத்தில் திராவிடர், திராவிடம் என்று கூறி அடையாளப்படுத்த முயற்சிக்கும் தமிழக முதல்வர், திராவிடத்தின் அங்கமாகவுள்ள கருநாடகத்திலோ அல்லது ஆந்திரத்திலோ தேர்தலில் நிற்கத் தயாரா என்று கேட்டது மட்டுமின்றி, தனது அடையாளம் என்ன, தன்னை திராவிடர் என்கிறாரா அல்லது தமிழர் என்கிறாரா என்பதை முதலில் கருணாநிதி தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

தமிழர் என்ற உணர்வு இல்லாத காரணத்தால்தான், தமிழ் மொழியை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவிட்டு, அதனை நடைமுறைக்கு கொண்டு வர அனுமதி பெற எந்த முயற்சியும் தமிழக முதல்வர் எடுக்கவில்லை என்று குற்றம் சாற்றினார்.

தமிழ் மொழியின் வளமையை ஆய்வு செய்த அறிஞர் பலர், அதிலிருந்து பிறந்த மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் உள்ள தமிழ் சொற்களை நீக்கிவிட்டால் அந்த மொழிகளே இருக்காது என்று கூறியதைச் சுட்டிக்காட்டிய தமிழக அரசின் முன்னாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம், தமிழ் மொழியில் உள்ள வடமொழிச் சொற்களை நீக்கினால் அது மேலும் சிறப்புப் பெறும் என்று கூறினார்.

திராவிடர் என்ற சொல் தமிழ் இலக்கியம் எதிலும் இல்லாத ஒரு வார்த்தை என்று கூறிய தமிழறிஞர் அருகோ, அது தாயுமானவர் பாடிய பாடல் ஒன்றில் மட்டும், அதுவும் எதிர்மறைப் பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளதை பாடிக்காட்டினார்.

செம்மொழி என்று கூறுவதால் தமிழிற்கு பெருமை ஏதுமில்லை என்றும், இப்போது தெலுங்கு, கன்னட மொழிகளையும் செம்மொழி என்று மத்திய அரசின் பண்பாட்டுத் துறை அமைச்சர் அம்பிகா சோனி அறிவிக்க உள்ளார் என்றும் அருகோ கூறினார்.

“நாம் மொழியாலும், மரபாலும், தேசியத்தாலும் தமிழரே” என்று அருகோ கூறினார்.

தமிழ் மொழிச் சொற்களே வடமொழியில் உள்ள பெரும்பான்மை சொற்கள் என்று கூறி தனது உரையைத் துவக்கிய தமிழறிஞர் பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா, மாலையை குறிப்பிட, சூரியன் மேற்கில் சாயும் பொருள்பட நாம் கூறும் சாயங்காலம் என்றத் தமிழ்ச் சொல் சாய்ங்கால் என்றும், புவியைக் குறிப்பிட தமிழில் உள்ள பழவி என்ற சொலை பிருத்வி என்றும், பவழம் என்ற சொல் பிரவாகம் என்றும், படி என்ற சொல் பிரதி என்றும், தமிழ் மொழிச் சொற்கள் அவர்கள் வாயில் நுழையாத காரணத்தால் ஒலி மாறி வடமொழியாக புழங்கிவருவதைச் சுட்டிக்காட்டினார்.

வடமொழி என்று கூறப்படும் சமஸ்கிருதம் எந்த ஒரு காலத்திலும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பேசப்பட்ட ஒரு மொழியல்ல என்றும், தமிழ் உட்பட வழக்கில் இருந்த பேச்சு மொழிகளில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு மொழியே அது என்றும் கூறிய பேரா.தங்கப்பா, திராவிடம் என்பது பொய் என்றார்.

அப்படி ஒரு பகுதி வரலாற்றில் இல்லை என்று கூறிய பேரா. தங்கப்பா, தமிழை ஆய்வு செய்த மொழியியல் ஆய்வாளரான கால்டுவெல் தமிழையும், அதிலிருந்து பிறந்த மற்ற தென்னாட்டு மொழிகளையும் திராவிடக் குடும்பம் என்று கூறியதையும் சுட்டிக்காட்டினார்.

எனவே, மொழியால், இனத்தால், நாட்டால், பண்பாட்டால் நாம் தமிழர் என்பதே உண்மை, அது மட்டுமே நமது அடையாளம் என்று கூறினார்.

ஈழத்தில் தமிழினப் படுகொலைக்குப் பின்னர், தமிழர்களிடையே உருவாகிவரும் தமிழ்த் தேசிய உணர்வைக் கண்டு அச்சமுற்றதாலும், எங்கே அந்த வரைமுறைக்குள் தன்னால் வர முடியாதோ என்கிற அச்சத்தாலுமே திராவிடர், திராவிடம் என்றெல்லாம் கருணாநிதி பேசுவதாக தமிழக அரசின் முன்னாள் அரசவைக் கவிஞர் புலவர் புலமைப்பித்தன் கூறினார்.

“ஒரு மருந்து காலாவதியாகும் போது அது விஷமாகிறது, அதுபோலவே, திராவிடம் என்பது இப்போது பொருளற்றதாகிவிட்டது” என்று கூறிய புலமைப் பித்தன், தந்தை பெரியார் திராவிடர் என்ற சொல்லால் தமிழை மீட்டார். பெரியார் தோன்றியிருக்காவிட்டால் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்திருக்காது என்றார்.

1956ஆம் ஆண்டுவரை தமிழுக்கு திராவிடம் அரணாக இருந்தது, இன்றைக்கு அது தேவையற்றதாகிவிட்டது என்று கூறிய புலவர் புலமைப்பித்தன், தமிழர் என்ற அடையாளத்தை கண்ட பிறகு என்ன செய்யப்போகிறோம் என்பது முக்கியம் என்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய இதழாளர் கா.அய்யநாதன், ஆங்கில வரலாற்றாளர்கள் எழுதியுள்ளது போல், ஆரியப் படையெடுப்பால்தான் சிந்துவெளி நாகரீகம் அழிந்தது என்பதற்கும், வேதங்களில் ஒன்றான ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள தஸ்யூக்கள் என்பது தமிழர்களையே குறிக்கிறது என்று கூறுவதற்கும் எந்த ஆதாரமும் இதுவரை அளிக்கப்படவில்லை என்று கூறினார்.

தமிழரின் முன்னேற்றத்திற்கு எதிராக இருந்த ஒரு சமூதாயத்தினை எதிர்த்து தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த தந்தை பெரியார், திராவிடர் என்று அடையாளத்தை பயன்படுத்தினார் என்று கூறிய அய்யநாதன், அது அரசியல் அடையாளமாக்கப்பட்டப் பிறகு, தமிழரின் மு்ன்னேற்றத்தைத் தடுக்கும் மற்ற மொழிச் சக்திகளும் தமிழர் அரசியலில் ஊடுறுவ வழி வகுத்துவிட்டது என்றும், இந்த நிலை மாற, தமிழர் என்ற ஒரே அடையாளத்தை தங்களது மொழியை, இனத்தை, பண்பாட்டை, அரசியலை காப்பாற்றிக் கொள்ள தமிழர்கள் கொள்ள வேண்டும் கூறினார்.

இக்கருத்தரங்கை துவக்கி வைத்தும், இறுதியிலும் உரையாற்றிய புதிய தமிழக்ம கட்சித் தலைவர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி, நாம் திராவிடரா அல்லது தமிழரா என்ற விவாதத்தை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதற்காகவே இந்தக் கருத்தரங்கம் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

“தமிழர் என்கிற நமது அடையாளத்தை முற்றிலும் அழிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது, அதனை தமிழக முதல்வரே செய்து வருகிறார். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று வரலாற்றில் செழித்திருந்த தமிழினம், அன்னிய இன ஊடுவல்களால் சாதிய நோய்வாய்ப்பட்டுள்ளது. இதனை திராவிட கோட்பாடுகள் மேலும் வலிமைபடுத்துவதாகவே உள்ளது. திராவிடம் என்பது தமிழரின் வரலாற்றில் இடையில் திணிக்கப்பட்டது, அது இடையிலேயே போய்விட வேண்டும்.

தமிழன் என்கிற அடையாளம் மட்டுமே தமிழினத்தைத் சூழ்ந்துள்ள பிரச்சனைகளக்கு தீர்வு காண உதவும். உலகமெல்லாம் பிரிந்து போவதற்குச் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன, நாம் மட்டுமே இணைந்து வாழ்வதற்கு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். சாதியால் நாம் ஒருவரை ஒருவர் தாழ்த்திக்கொண்டிருக்கின்றோம். தமிழன் என்கிற உணர்வால் அதனை நாம் வென்றிட முடியும். கண்டதேவி கோயில் தேர் வடம் பிடித்தது, சாதியை ஒழித்து எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்பதற்கே.

ஈழத்தில் நம் இனத்தை அழித்த போரை நிறுத்த நாம் எப்படியெல்லாமோ போராடினோம், ஆனால் போர் நிற்கவில்லை. நமது போராட்டங்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. 6 கோடி பேர் தமிழ்நாட்டில் இருந்தும் நம்மால் ஈழத்தில் நம் இனத்தைக் காக்க முடியாமல் போனதற்கு நாம் தமிழர் என்ற ஒரே அடையாளத்துடன் ஒற்றுமையாக போராடததே காரணம் ஆகும்.

ஒரு பக்கம் திராவிடம் என்ற அடையாளம், மறுபக்கம் சாதியம் என்கிற நம்மை பிரிக்கும் சமூக அடையாளம். ஈழ விடுதலைக்கு எதிராக நடந்த துரோகத்திற்கு திராவிடமும் ஒரு காரணம். நாம் எப்படி திராவிடர் என்று அடையாளப்படுத்தப்படுகிறோம்?

இந்த உலகில் உள்ள மனித இனங்கள் மூன்றாக வகைபடுத்தப்பட்டுள்ளன. ஒன்று காக்கசாய்ட் எனும் வெள்ளையினம், இரண்டாவதாக மங்கோலாயிட் எனும் மஞ்சள் இனம், மூன்றாவதாக நீக்ராய்ட் என்கிற கருப்பினம். நம்மை கருப்பினத்திற்கு கீழ் ஆஸ்ட்ராய்ட் என்று துணை இனமாக பிரித்துக் காட்டுகின்றனர். இதையே அடிப்படையாகக் கொண்டு நம்மை திராவிடர் என்றும், நாம் தொன்று தொட்டு வாழ்ந்த இடம் திராவிடம் என்றும் கூறுகின்றனர். ஆனால் திராவிட இனம் என்ற ஒன்று இருந்ததாக சான்றுகள் ஏதுமில்லை.

சிந்து வெளி நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்கின்றனர், அது அழிந்தததற்கு ஆரியப் படையெடுப்பு காரணமென்கி்ன்றனர். ஆனால் அவர்கள் கூறும் காரணங்களை ஆராய்ந்து பார்க்கையில் இவை எதற்கும் சான்றுகள் இல்லையென்பது தெரிகிறது. இங்கு வந்துள்ளவர்கள் ஆரியர்களும் இல்லை, அவ்வாறு கூறுவது ஒருவித மாயை. அதுபோலவே நம்மை திராவிடர் என்று கூறுவதும் மாயையே. நம்மை திராவிடர் என்று அடையாளப்படுத்திவரும் தமிழக முதல்வர் விவாதத்திற்கு அழைக்கட்டும் நான் தயாராகவே இருக்கிறேன்.

எனவே திராவிடர் என்ற பொய் எப்படி நமது அடையாளமாக முடியும்? நம்மை திராவிடர் என்று அடையாளப்படுத்துவது, நமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அல்ல, தமிழினத்தை, அதன் அடையாளத்தை சிதைப்பதற்கே பயன்படுத்துகின்றனர். நாம் நம்மை தமிழர் என்று அடையாளப்படுத்திக்கொண்டால் தான் தமிழினத்தின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். ஈழத்தில் தமிழினத்தை அழிக்க நடந்த போர், இப்போது தமிழினத்தின் அடையாளத்தை அழிப்பதில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால், நமது அடையாளம் தமிழர் என்பதை உணர்ந்து நாம் ஒன்றிணைய வேண்டும். திராவிடம் பிரிக்கிறது. தமிழர் என்பது இணைக்கிறது” என்று மருத்துவர் கிருஷ்ணசாமி பேசினார்.

இக்கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

“எங்கள் குருதியோடு இரண்டரக் கலந்துள்ள தமிழ் மொழியின் வழி - எங்கள் தாய் மொழியின் வழி - ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழர் என்றே எங்களை அடையாளம் காட்டுகிறது வரலாறு. இந்த நீ்ண்ட நெடிய பெருமிதத்திற்குரிய வரலாற்றைத் திரித்து, தங்களது சுய இலாபங்களுக்காக ‘திராவிடர்’ என்று எங்களை அடையாளப்படுத்த நினைப்பவர்கள் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும், இந்தக் கருத்தரங்கம் அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறது. நாங்கள் பிறப்பால் தமிழர், இறப்பாலும் தமிழர். எங்களது அடையாளம். அது மட்டுமே எங்கள் அடையாளம் என்று தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் பங்கேற்கும் இந்தக் கருத்தரங்கம் வலியுறுத்துகிறது. தமிழர் என்கிற எங்கள் அடையாளம் காக்க, தமிழராய் எழுவோம் என்று இக்கருத்தரங்கம் உறுதியேற்கிறது”.

தமிழரா? திராவிடரா? எது நமது அடையாளம் என்பதை ஐயத்திற்கிடமின்றி உறுதிபடுத்த தமிழ்நாடு முழுவதும் இப்படிப்பட்ட கருத்தரங்கத்தை புதிய தமிழகம் கட்சி நடத்தும் என்றும் மருத்துவர் கிருஷ்ணசாமி கூறினார்.

முற்றும்.

நன்றி:வெப்துனியா.காம்

Thursday, June 10, 2010

தமிழர்களுக்கு முதல் எதிரி சிங்களவன் அல்ல: டில்லியில் உள்ளவர்கள்தான்: இரா. செழியன்

தமிழர்களுக்கு சிங்களவர்கள் எதிரிகள் அல்லர். டில்லியில் இருப்பவர்கள்தான் தமிழர்களின் முதல் எதிரிகள் என்று தமிழகத்தின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா. செழியன் தெரிவித்தார்.

பத்திரிகையாளர் பாவை சந்திரன் தினமணி நாளிதழில் 178 நாள்கள் தொடர்ந்து எழுதிய ‘ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சோவியத் கலாசார மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்குத் தலைமை ஏற்று இரா.செழியன் பேசியதாவது:
இத்தொடர் பற்றி இந்த நூலின் முன்னுரையில் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், 6 மாதங்களுக்கு முன்பே இத்தொடர் வந்திருந்தால், ஒரு வேளை மிகப் பெரிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமோ என்னவோ என்கிற வருத்தம் என் கடைசி காலம் வரை தொடரும் என்று எழுதியிருந்தார்.

இந்த வருத்தம் தேவையற்றது. 6 மாதம் அல்ல. 6 ஆண்டுகளுக்கு முன்பே வந்திருந்தாலும் மாற்றம் ஏற்பட்டிருக்காது. ஆள்பவர்களின் மனம் மாறியிருக்காது. தமிழர்களைக் காப்பாற்ற தமிழர்களால் மட்டுமே முடியும். மற்றவர்கள் யாரும் அதற்காக முன்வர மாட்டார்கள்.

1983-ல் யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற நூலகம் எரிக்கப்பட்டபோது அது குறித்து நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைத்தது. நான் பேசியதை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.

1960-ல் நேரு பிரதமராக இருந்தபோது தென் ஆப்பிரிக்காவில் நடந்த இனப்படுகொலை குறித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டதை சுட்டிக்காட்டி அதுபோல, இலங்கைத் தமிழர்களுக்காகவும் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றேன்.

இனப்படுகொலைக்கு எதிராக நேரு குரல் கொடுத்தார். அவருக்கு பிறகு எல்லாம் மாறிவிட்டது.

டில்லியில் ராஜபட்ச ராஜவலம் வந்துகொண்டிருக்கிறார். நமது எதிரி ராஜபட்ச அல்ல. தில்லியில் இருப்பவர்கள்தான் தமிழர்களின் முதல் எதிரிகள். சீனா, பாகிஸ்தானோடு சேர்ந்துகொண்டு இந்தியாவும் இலங்கைக்கு உதவுகிறது. கட்டடங்கள், அரண்மனைகள் அழிந்தால்கூட பரவாயில்லை. ஒரு இனம், மொழி அழிந்தால் நூற்றாண்டுகள் ஆனாலும் அதனை மீட்க முடியாது. இலங்கையில் ஒரு இனம் அழிக்கப்பட்டு வருகிறது.

இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் தீர்மானம் வந்தபோது இலங்கைக்கு ஆதரவாக சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இணைந்து இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. இது குறித்து ஆதாரங்களுடன் 200-க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நான் கடிதம் அனுப்பினேன். ஆனாலும் யாரும் அதுகுறித்து பேசவில்லை.

இலங்கையில் இனப்படுகொலை நடப்பது குறித்து தில்லியில் இருப்பவர்கள் மெத்தனமாக இருப்பது ஏன் என்று ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் தனது வேதனையை பதிவு செய்துள்ளார். அவருக்கு இருந்த உணர்வு தமிழகத்தில் யாருக்கும் இல்லை.

இப்போது இருப்பது நாடாளுமன்றம் அல்ல. சட்டம் இயற்ற வேண்டிய இடத்தில் சத்தம் போடுகிறார்கள். மக்கள் பிரச்னைகளோ, தேசத்தை எதிர்நோக்கும் பிரச்னைகளோ விவாதிக்கப்படுவதில்லை. ஆனால், ஆட்சி நிச்சயமாக மாறும். எப்போது மாறும் என்று சொல்ல முடியாது. தேர்தல் வரும்போது நாட்டைப் பற்றி கவலைப்படுபவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.

இலங்கைப் பிரச்சினைக்கு மாநில அரசால் தீர்வு காண முடியாது. டில்லிதான் முயற்சி எடுக்க வேண்டும். இப்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு நாட்டைப் பற்றிய கவலை இல்லை. அவர்கள் இந்தியாவை விற்றாலும் ஆச்சரியம் இல்லை. அதனைப் பங்குபோட பலர் தயாராக உள்ளனர். யாரை எதிர்ப்பது யாரை எதிர்த்து போராடுவது என்றே புரியவில்லை – என்றார் இரா. செழியன்.

எழுத்தாளர் பொன்னீலன்
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, ஈழத் தமிழர்களுக்கு இங்கே பயிற்சி கொடுத்தார். அவர் உயிரோடு இருந்திருந்தால், வங்கதேசத்தை உருவாக்கியதைப் போல, இலங்கையிலும் தனி நாட்டை உருவாக்கியிருப்பார் என்று நான் நம்புகிறேன்.

வித்து வீரியமாக இருந்தாலும், அது வளர்வதற்கு நல்ல மண் தேவை. அதுபோல பாவை சந்திரன் எழுதிய இந்த வரலாற்றுத் தொடர் நன்றாக வருவதற்கு தினமணி மண்ணாக இருந்து உதவியிருக்கிறது.

பாவை சந்திரனின் ஈழப்போராட்ட வரலாறு இந்தியிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்க வேண்டும். அப்போதுதான், இலங்கையில் நடக்கும் கொடுமைகள் உலகுக்கு தெரியவரும். இந்தியாவில் உள்ள மற்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கும் தெரியவரும்.

நேரு ஒருமுறை இத்தாலிக்கு சென்றிருந்தபோது, பாசிசத் தலைவரான முசோலினியைச் சந்திக்க மறுத்துவிட்டார். முசோலினியின் கறைபடிந்த கரங்களை கைகுலுக்க மாட்டேன் என்று அப்போது நேரு தெரிவித்தார்.

ஆனால், கறைபடிந்த கரங்கள் உடைய ராஜபட்சவுக்கு டில்லியில் இன்று ராஜமரியாதை அளிக்கப்படுகிறது. இதுவெட்கக் கேடானது என்றார் பொன்னீலன்.

கலைமாமணி விக்கிரமன்
எழுத்துகள் மூலம்தான் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தினால் மட்டுமே எழுத்துக்கும், பேச்சுக்கும் ஒரு மரியாதை உருவாகும். அந்தப் பணியை தினமணி ஆசிரியர் செய்துவருகிறார்.

1951-ல் இங்குள்ள தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் மூலம் யாழ்ப்பாணத்தில் தமிழ் விழா நடைபெற்றது. அதில் இங்குள்ள தமிழர்கள் பங்குபெற்றனர். 51-ல் சிறப்பாக இருந்த தமிழினம் இன்று அழிக்கப்பட்டுவிட்டது. இன்று தமிழர்களின் நிலை பற்றி கவலைப்பட யாரும் இல்லை.

1982-ல் யாழ்ப்பாணம் செல்ல முயன்றபோது, இங்குள்ள போலீஸôர் அங்கு புரட்சி வெடிக்க உள்ளதாகக் கூறி போக வேண்டாம் என்றனர்.

1983-ல்தான் இனக் கலவரமும், அதைத் தொடர்ந்து புரட்சியும் வெடித்தது. அதை இங்குள்ள உளவுத் துறை முன்கூட்டியே அறிந்துகொண்டிருந்தது. அந்த அளவு சக்திவாய்ந்த அரசாங்கம், தமிழர்களை காப்பாற்றுவதற்கு அன்றும் சரி, இன்றும் சரி, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அவர்களின் எச்சரிக்கையையும் மீறி நான் யாழ்ப்பாணம் சென்றேன். தமிழறிஞர்களைச் சந்தித்தேன். அங்கு எரிக்கப்பட்ட புகழ்பெற்ற நூலகத்தையும் பார்த்தேன். சிங்களவர்களின் இன அழிப்புக்கு எரிக்கப்பட்ட நூலகமே சாட்சி.

பாரதியார் இன்று இருந்திருந்தால் பிஜித் தீவு தமிழர்களுக்கு துடித்தது போல், இலங்கைத் தமிழர்களுக்காகவும் துடித்திருப்பார். நேதாஜி போன்ற மாவீரன்தான் பிரபாகரன்.

வரலாறு எப்போதுமே முடிவதில்லை. இந்த நூலிலும் அந்த வரலாறு முடிக்கப்படவில்லை. தனிநாடு கிடைத்தால்தான் ஈழத் தமிழர்களின் வரலாறு முடிவடையும்.

நன்றி: தமிழ்வின்.காம்

Tuesday, June 8, 2010

புதைக்கப்பட்ட நீதி – சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி

அணுஉலைகள் விபத்து இழப்பீடு தொடர்பான மசோதாவுக்கு பரவலாக எழுந்த கடும் எதிர்ப்புகள் மிகமிக நியாயமானவை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது போபால் நீதிமன்றம் யூனியன் கார்பைடு ஆலையின் நச்சுவாயுக் கசிவினால் பல ஆயிரம் பேர் இறந்த வழக்கில் அண்மையில் அளித்துள்ள தீர்ப்பு.

இந்த வழக்கில் நீதிமன்றத்தின் முன் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்ட,​​ அன்றைய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் செயல் தலைவர் கேசவ் மகிந்திரா உள்ளிட்ட 8 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியுள்ள நீதிமன்றம்,​​ அவர்கள் பிணையில் செல்லவும் மேல்முறையீடு செய்யவும் அனுமதித்துள்ளது,​​ அதே நாளில் சிலமணி நேரங்களில் அவர்கள் ​ வீடு திரும்பினர்!

ஆவணங்களின் படி 3000-க்கும் அதிகமானோரும்,​​ ஆவணத்துக்குள் இடம்பெறாமலும் தொடர் விளைவாகவும் 25,000 பேரும் இறந்த இந்தச் சம்பவத்தில் நீதிகேட்டு சலித்துப் போய் காத்திருக்கும் மக்களுக்கு,​​ இந்தத் தீர்ப்பு மேலும் வலியைக் கூட்டுவதாக இருக்கிறது என்பதே உண்மை.​ ​

இந்தத் தீர்ப்பில் யாருக்கும் திருப்தி இல்லை.​ இந்தத் தீர்ப்பு பற்றி கருத்துத் தெரிவித்துள்ள மத்திய சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி,​​ "தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி ​ என்று சொல்வதுதான் வழக்கம்.​ இது புதைக்கப்பட்ட நீதி' என்று கூறியிருக்கிறார்.​ இந்தத் தீர்ப்பு சரியானதல்ல என்று இத்தனை காலமாக நச்சுவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிவரும் தன்னார்வ அமைப்புகளும் கூறியுள்ளன.​ மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கூறியுள்ளன.​ ​

இதற்காக போபால் நீதிமன்ற நீதிபதி மோகன் பி.​ திவாரியை குறை சொல்லி எந்தப் பயனும் இல்லை.​ ஏனென்றால்,​​ அவர்​ முன் வைக்கப்படும் ஆதாரங்கள் அத்தகைய பலமில்லாத,​​ உறுதியில்லாத,​​ ஆதாரங்கள் இல்லாத அல்லது துடைத்தழிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மட்டுமே.​ மத்திய புலனாய்வுத் துறை பதிவு செய்த,​​ குற்றப்பத்திரிகையில் அடிப்படையில் வழக்கை விசாரித்த நீதிபதி யாராக இருந்தாலும் தீர்ப்பு இப்படியாகத்தான் இருந்திருக்கும்.​ ​

குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி பி.ஆர். லால் இந்தத் தீர்ப்பு பற்றி கருத்துத் ​ தெரிவிக்கையில்,​​ தங்களை முழுமையாகச் செயல்பட அப்போதைய அரசு அனுமதிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.​ ஓய்வுபெற்ற அதிகாரி என்பதால்தான் இதைக் கூட இப்போது வாய் திறந்து சொல்கிறார்.​ அவரது துறையில் அவர் நியாயமானவராக இருந்திருந்தால்,​​ அரசின் நிர்பந்தங்களுக்குப் பணிந்துபோக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்குமா?

இந்த வழக்கில் மனப்புண்ணைக் கிளறிப் பார்க்கிற விஷயம் இந்தத் தீர்ப்பு அல்ல.​ இந்தத் தீர்ப்புக்குள் "அடங்க மறுக்கும்' அல்லது இந்திய அரசு "அடைக்க மறுக்கும்' அன்றைய கார்பைடு நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சன் பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை என்பதும்,​​ பிணையில் வெளிவந்து இந்தியாவை விட்டுச் சென்ற ஆண்டர்சன் நியூயார்க்கில் வாழ்கிறார் என்று எல்லோரும் சொன்னபோதிலும் அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ளவில்லை என்பதும்தான்.

இந்தத் தீர்ப்பு வந்த சில மணி நேரங்களில் யூனியன் கார்பைடு நிறுவனம் மிகத் தைரியமாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.​ எங்களைக் குற்றவாளியாக விசாரிக்க இந்திய அரசுக்கு அதிகார வரம்பு இல்லை.​ விபத்து நடந்த பின்னர்,​​ என்றைக்கு நாங்கள் இழப்பீட்டை சமரசத் திட்டத்துக்குப் பிறகு அளித்துவிட்டோமோ,​​ அப்போது எங்கள் பங்கு முடிந்துவிட்டது.​ அந்த நிறுவனத்தைச் சரியாக நிர்வகிக்காத அதிகாரிகள் மீதுதான் இப்போதைய வழக்கு என்று கூறியுள்ளது.​ ​

இந்த ஆலையில்,​​ டிசம்பர் 3,​ 1984-ம் ஆண்டு விபத்துக்கு முன்பாகவே நடந்த சிறுவிபத்துகள் குறித்து அமெரிக்க நிபுணர்கள் குழு நேரில் ஆய்வு நடத்தி,​​ குறைகளைச் சுட்டிக்காட்டிய பிறகும் அதைச் சரிசெய்யவில்லை என்பதுதான் சிபிஐ தரப்பிலான ​ வழக்குரைஞரின் வாதம்.​ ​

ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் பணம் செலவழிக்க மறுத்து,​​ குறைகளைக் களைய தாமதம் செய்தால் அது யாருடைய குற்றம்?​ லாபம் மட்டுமே பார்க்க விரும்பும் அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் குற்றமா அல்லது அங்கு சம்பளத்துக்குப் பணியாற்றும் ஊழியர்களின் குற்றமா?

​சாதாரணமாக ஒரு கட்டடம் இடிந்து விழுந்து சிலர் இறந்துபோனாலும்கூட,​​ கட்டடம் கட்டும் கான்ட்ராக்டரை கைது செய்வார்களா அல்லது மேஸ்திரி,​​ சித்தாள்களைக் ​ கைது செய்வார்களா?​ என்பது நமக்குத் தெரிந்த நியாயங்கள்;​ சட்டம்தான் இருட்டறையாயிற்றே.​ அங்கே இந்த நியாயங்கள் எப்படி எடுபடும்?​ அப்படியே எடுபட்டாலும்,​​ எடுபடாமல் போவதற்கு உப்புச் சப்பில்லாத,​​ நீதியைத் திசைதிருப்பும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறதே...

செத்துப் போனவர்களைவிட இப்போது வாழ்பவர்கள் அங்கே கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று 1999-ம் ஆண்டு போபாலில் ஆய்வு நடத்திய கிரீன்பீஸ் அமைப்பு கூறியது.​ இன்னமும் அந்த மண்ணில் சயனைடு நஞ்சு கலந்து கிடப்பதாகவும்,​​ நீர்நிலைகளில் அந்த நச்சு எச்சம் இருப்பதாகவும் கூறியது.​ இருந்தும்கூட,​​ அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.​ இந்தியாவை விட்டுத் தப்பிப்போன வாரன் ஆண்டர்சன்னை பிடித்துவந்து தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை.​ ​ இந்நிலையில் என்ன நீதியை எதிர்பார்க்க முடியும்?​ ஆண்டர்சன் விவகாரத்தில் எப்படி நடந்துகொள்கிறதோ அதைப்போலவேதான் ஹெட்லி விஷயத்திலும்,​​ கசாப் விஷயத்திலும்கூட இந்திய அரசு நடந்துகொள்ளப் போகிறது.​ ​

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.​ ஆனால் இப்போதெல்லாம் அதற்கு ரொம்ப நாளாகிறது.​ போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு -​ வெந்த புண்ணில் வேல்!

நன்றி: தினமணி 08.06.2010

Sunday, June 6, 2010

உலகின் மிகப்பெரிய கொடுங்கோலன் ராஜபக்சவுக்கு உயரிய மரியாதையா? நாம் தமிழர்

ஈழத்தில் தமிழினத்தை கொன்றொழித்த இலங்கை அதிபர் ராஜபக்ச நாளை இந்தியா வருகிறார். அவருக்கு இந்திய அரசு இரத்தின கம்பள வரவேற்பு அளிக்க இருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இது குறித்து நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஈழத்தில் தமிழினத்தை கொன்றொழித்த இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை இந்தியா வருகிறார். அவருக்கு இந்திய அரசு இரத்தின கம்பள வரவேற்பு அளிக்க இருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்களை வெளியிட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய கொடுங்கோலர் ஒருவர் உயரிய மரியாதையுடன் இந்தியா வருவதை நினைக்கும்போது நாதியற்ற இனமா தமிழினம் என்னும் குரல் உலகம் முழுதும் எழுகின்றது.

நாதியற்ற இனமல்ல தமிழினம் என்று உலகுக்கு எடுத்து சொல்லவும், ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வலியுறுத்தியும், தரணியெங்கும் வாழும் தமிழர்கள் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி ராஜபக்சவின் இனப்படுகொலையை உலகுக்கு அம்பலப்படுத்தி ராஜபக்சவை தண்டித்தே தீர சூளுரை ஏற்க வேண்டும்.

ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்ச மீது ஐ.நா. மன்றம் எடுத்து வரும் போர்க்குற்ற விசாரணை முயற்சிகளுக்கு இடையூறு செய்து வருவதை கண்டிக்கும் வகையில், இந்தியாவுக்கு வருகைதரும் ராஜபக்சவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் நாம் தமிழர் இயக்கத்தினர் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: தமிழ்வின்.காம்

Friday, May 28, 2010

சிறு, குறு நிறுவனங்களுக்கு வேலை கொடுக்க 3 அமைச்சர்கள் எதிர்ப்பு

சிறு, குறு மற்றும் நடுத்தர ரக நிறுவனங்களுக்கு (எஸ்எம்இ) அரசு நிறுவனங்கள் அளிக்கும் டெண்டரில் ஒரு குறிப்பிட்ட அளவு ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்த கருத்துக்கு மூன்று அமைச்சர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

சிறு, குறு மற்றும் நடுத்தர ரக நிறுவனங்கள் நலிவடையாமல் காப்பது தொடர்பாக ஆராய பிரதமரின் முதன்மைச் செயலர் டிகேஏ நாயர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையை கடந்த ஜனவரி மாதம் தாக்கல் செய்தது. எஸ்எம்இ நிறுவனங்களுக்கு எளிதாக வங்கிக் கடன் கிடைக்க வழி ஏற்படுத்த வேண்டும் என்றும், அரசு கொள்முதல் செய்யும் பொருள்களில் 20 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர ரக நிறுவனங்களிடம் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

ஆனால் அரசின் இந்த முடிவுக்கு பெட்ரோலிய அமைச்சர், வர்த்தக அமைச்சர், உள்துறை அமைச்சர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தங்கள் துறைகளுக்கு ஏற்ற உபகரணங்களைத் தயாரித்து அளிக்க முடியாத நிலையில் எஸ்எம்இ உள்ளன. மேலும் தாங்கள் வகுத்துள்ள தர நிர்ணயத்தை எட்டும் அளவுக்கு திறமை படைத்ததாகவும் இவை இல்லை என்று குறிப்பிட்டன. இருப்பினும் பாதுகாப்பு மற்றும் ரயில்வே அமைச்சர்கள் எஸ்எம்இ துறையிடம் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்க ஒப்புக் கொண்டன.

நாடு முழுவதும் 2.6 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. சர்வதேச தேக்க நிலை காரணமாக இத்துறை கடும் சரிவைச் சந்தித்தது. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இத்துறையின் பங்களிப்பு 8 சதவீதமாகும். உற்பத்தித் துறையில் 45 சதவீத பங்களிப்பும். ஏற்றுமதியில் 40 சதவீத பங்களிப்பையும் இவை கொண்டுள்ளன.

நன்றி தினமணி 28.05.2010

Thursday, May 6, 2010

அழகிரி மற்றும் தயாநிதிக்கு என்ன துறை வழங்க வேண்டுமென்பதை இராசா தீர்மானிக்கிறார்!

கருணாநிதி குடும்பத்தில் விளைந்த கத்தரிக்காய் கடைத்தெருவிற்கு வந்துள்ளது. கருணாநிதி குடும்ப ஊடகங்களில் வெளிவராத செய்தியை தாங்கள் அறிந்துகொள்ள... இங்கே சுட்டவும்...

Wednesday, May 5, 2010

கருணாநிதியின் பாசிசப் படை

மிகச்சிறந்த நீதிபதிகளும் சட்ட நுணுக்கங்களில் துறைபோகிய வழக்கறிஞர்களும் சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் பெரும்புகழை ஈட்டிக்கொடுத்திருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள பிற உயர் நீதிமன்றங்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த பெருமைக்குரிய சென்னை உயர் நீதிமன்றம் இன்று சிறுமைப்பட்டுக் கிடக்கிறது. உயர் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் காவல்படையினாலும், கட்சிக் குண்டர்களாலும் மிருகத்தனமாகத் தாக்கப்படுகிறார்கள். உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் சுதந்திரமாகச் சென்றுவரவே அனைவரும் அஞ்சும் நிலை உருவாகிவிட்டது.

கடந்த 25-4-10 அன்று உயர் நீதிமன்றத்தில் அம்பேத்கரின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்றத்தில் 15,000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களும் இதர அலுவலர்களும் பணியாற்றி வருகிறார்கள். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, முதலமைச்சர், சட்ட அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளும் இதுபோன்ற விழாவில் சில ஆயிரம் வழக்கறிஞர்களாவது பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால் அன்றைய விழாவில் 50-க்கும் குறைவான வழக்கறிஞர்கள் மட்டுமே பங்கேற்றனர். மிகப்பெரும்பாலான வழக்கறிஞர்கள் விழாவைப் புறக்கணித்துவிட்டனர்.

உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் நடக்கும் விழாக்களில் கலந்து கொள்ளும் வழக்கறிஞர்களின் அடையாள அட்டை பரிசோதிக்கப்பட்டே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அன்றைய தினம் இந்தப் பரிசோதனையை நடத்தாமல் காவல்துறையினர் அமைதி காத்தனர். வழக்கறிஞர்கள் அல்லாத பலர் இவ்விழாவில் பங்கேற்பதற்கு வசதியாகவே இவ்வாறு செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது.

கடந்த 19-02-09 அன்று நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும், காவல்துறையினரால் தாக்கப்பட்ட நிகழ்ச்சிக்குப் பிறகு முதல்முறையாக முதலமைச்சர் உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்குகொள்ள வருகை தந்தார். எனவே, காவல்துறைத் தலைவர் உள்பட உயர்காவல் அதிகாரிகள் மற்றும் சீருடை அணியாத ஏராளமான காவலர்களும் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

முதலமைச்சர் பேசத்தொடங்கியதும் மனித உரிமைப் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பைச் சேர்ந்த ஐந்தாறு வழக்கறிஞர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடி காட்டினார்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய இவர்களை அங்கிருந்த காவல்படை எத்தகைய அமளியும் இல்லாமல் அப்புறப்படுத்தியிருக்கலாம். ஆனால் காவல்துறைத் தலைவர் உள்பட சீருடையில் வந்திருந்த காவலர்களும், சீருடை அணியாமல் வந்திருந்த ஏராளமான காவலர்களும் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடாமல் அமைதி காத்தனர்.

ஆனால் திட்டமிட்டு உள்நுழைந்திருந்த தி.மு.க. ஆதரவாளர்கள் அந்த ஐந்தாறு பேர் மீது பாய்ந்து காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதல் தொடுத்தனர். அதுமட்டுமல்ல, நாற்காலிகள் வீசப்பட்டன. இந்தத் தாக்குதலைப் படம்பிடிக்க முயன்ற ஊடகக்காரர்களின் கேமராக்கள் பறித்தெடுக்கப்பட்டு உடைக்கப்பட்டன. கேமராக்காரர்களும் தாக்குதலுக்குத் தப்ப முடியவில்லை. அவர்களுக்கு ஆதரவாக வந்த செய்தியாளர்களும் தாக்கப்பட்டனர்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, முதலமைச்சர் உள்ளிட்டவர்கள் கண்முன்னாலேயே நடைபெற்ற இந்தத் தாக்குதலை காவல்துறை முழுமையாக வேடிக்கை பார்த்தது.

காவல் துறையின் செயலற்ற தன்மை இத்துடன் நிற்கவில்லை. படுகாயமடைந்த வழக்கறிஞர்கள் மீது கொலைமுயற்சி உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குகளைப் பதிவு செய்த காவல்துறை தாக்குதலுக்குள்ளான செய்தியாளர்களின் புகாரைப் பதிவு செய்யவே மறுத்தது.

செய்தியாளர்கள் எழும்பூரில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்குச் சென்று உயர்அதிகாரிகளைச் சந்தித்து முறையிட நடைபெற்ற முயற்சிகளும் வெற்றிபெறவில்லை. எனவே அனைத்து செய்தியாளர்களும் ஒன்றுதிரண்டு முதலமைச்சர் இல்லத்துக்குச் சென்று ஆர்ப்பாட்டம் செய்வதாக முடிவெடுத்ததன் காரணமாக மாலை 6 மணியளவில் புகார் பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கையின் நகல் வழங்கப்பட்டது.

அது மட்டுமல்ல, உயர் நீதிமன்றத்தில் நடந்த இந்தத் தாக்குதல் நிகழ்ச்சி குறித்து பெரும்பாலான ஊடகங்களிலோ, பத்திரிகைகளிலோ எத்தகைய செய்தியும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தி.மு.க. குண்டர்களால் தாக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர்களை காவல்துறை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திக் கைதுசெய்து இழுத்துச் சென்றது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களை இவ்வாறு செய்வது சட்டவிரோதம் மட்டுமல்ல, மனிதநேயமற்றதுமாகும்.

கருப்புக்கொடி காட்டிய விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரை காவல்துறை அப்புறப்படுத்தியிருந்தால் இந்தப் பிரச்னை வந்திருக்காதே என்று ஓர் உறுப்பினர் குறிப்பிட்டபோது முதலமைச்சர் கருணாநிதி அளித்த பதில் பல தகவல்களை அம்பலப்படுத்திவிட்டது.

உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் காவல்துறையினர்தான் வரக்கூடாதே என முதலமைச்சர் பதிலளித்திருக்கிறார்.

காவல்துறையினர் வரமுடியாத நிலையில்தான் தி.மு.க. குண்டர்கள் உள்ளே கொண்டுவரப்பட்டார்கள் என்பதை முதலமைச்சர் மறைமுகமாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

தனக்கு வழக்கறிஞர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பும் என்பதை உணர்ந்தே அந்த எதிர்ப்பை அடக்குவதற்கு கழகத் தொண்டர்களை பயன்படுத்த வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

""நான்கைந்து பேர் முதல்வருக்குத் திருட்டுத்தனமாக கருப்புக்கொடி காட்டுவார்கள். அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டுமா, தி.மு.க.வினருக்கு உணர்ச்சி கிடையாதா, மானமுள்ளவன் இல்லையா, இரண்டு தட்டு தட்டமாட்டானா'' என்று தலைமை நீதிபதிகள் முன்னிலையில் வழக்கறிஞர்களைத் தாக்கியதை நியாயப்படுத்தும் வகையில் சட்ட அமைச்சர் பேசுகிறார்.

ஜனநாயகத்தில் ஆட்சியாளருக்கு கருப்புக்கொடி காட்டுவதென்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையாகும். இந்தியாவில் முதல்முதலாக பிரிட்டிஷ் அரசின் சார்பாக அனுப்பப்பட்ட சைமன் கமிஷன் வந்தபோது காங்கிரஸின் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் இந்தியா முழுவதும் நடைபெற்றன. ஆங்கிலேய அரசு அதை அனுமதித்தது.

பிரதமர் நேருவுக்கு எதிராக தி.மு.க. கருப்புக்கொடி காட்டியதை முதலமைச்சரே குறிப்பிட்டிருக்கிறார்.

பிரதமருக்கு மட்டுமல்ல, தமிழகம் வந்த மத்திய அமைச்சர் பலருக்கும் எதிராக தி.மு.க. கருப்புக்கொடி காட்டியது. அப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு மீறப்படும் கட்டத்தில் கருப்புக்கொடி காட்டியவர்களை கைது செய்து அப்புறப்படுத்தியுள்ளது. ஆனால் நேருவுக்கே கருப்புக்கொடியா என்று காங்கிரஸ்காரர்கள் கொதித்தெழுந்து தி.மு.க. தொண்டர்களுக்கு எதிராக தாக்குதல்களை ஒருபோதும் நடத்தவில்லை.

ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குறிப்பிட்ட பிரச்னைகளுக்காக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது மரபு. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு எதிராகக் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது இதுவரை இல்லாத மரபாகும்.

1978-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தமிழகம் வந்தபோது அவருக்கெதிராக தி.மு.க. கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் அவரை மதுரையில் கொலை செய்ய முயன்றது என்பது மறைக்க முடியாத வரலாறு ஆகும். அந்தக் கொடூரத் தாக்குதலில் இருந்து அவரைக் காப்பாற்றியவன் என்ற முறையில் இதை நான் சொல்கிறேன். இவ்வாறு தாக்கிய தி.மு.க.வினருக்கு எதிராக எதிர்த்தாக்குதல்களை நாங்கள் நடத்தவில்லை.

ஆட்சிக்கு வருவதற்கு முன் அறிஞர் அண்ணா கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் அவருக்கு முன் தி.மு.க.வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான என்.வி. நடராசன் காங்கிரஸ் அமைச்சர்களை கல்லால் அடிக்க வேண்டும் என்று பேசியபோது அண்ணா உடனடியாக எழுந்து பகிரங்கமாக அவரைக் கண்டித்ததோடு மன்னிப்பும் கேட்க வைத்தார்.

ஜெர்மனியில் தனக்கு எதிரான கருத்துக்கொண்டவர்களையும், யூதர்களையும் காவல்படையை வைத்து இட்லர் ஒடுக்கவில்லை. மாறாக, நாஜிக் கட்சியைச் சேர்ந்த எஸ்.எஸ். படை என்ற குண்டர் படையை வைத்து சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் இட்லர். அதனால்தான் நாஜிகள் பாசிஸ்ட்டுகள் என்று வர்ணிக்கப்பட்டனர்.

தனக்கு எதிராகக் கருப்புக்கொடி காட்டிய ஐந்தாறு பேரைத் தாக்குவதற்கு முயன்ற தனது கட்சிக்காரர்களைத் தடுத்து அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தாலோ அல்லது காவல்படையினரை வைத்து அந்தச் சிறு கும்பலைப் பத்திரமாக வெளியே அனுப்ப முதலமைச்சர் ஆணை பிறப்பித்திருந்தாலோ அவருடைய மதிப்பு உயர்ந்திருக்கும்.

தமிழ்நாட்டில் ஜனநாயகத்தையும் தனிநபர் சுதந்திரத்தையும் நிலைநாட்டுவதற்காக எண்ணற்ற தலைவர்கள் தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார்கள். அவர்கள் எழுப்பிய ஜனநாயக மாளிகையை கருணாநிதியின் பாசிசப் படை தகர்க்க முயல்கிறது என்பதைத்தான் உயர் நீதிமன்ற நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.

-பழ.நெடுமாறன்

நன்றி தினமணி 05.50.2010

Monday, April 19, 2010

கட்டடம் கட்ட ஏரியையும் குளங்களையும் அரசு தேர்ந்தெடுப்பது ஏன்?

கோவையில் அம்மன்குளம் என்ற இடத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டுவந்த 48 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி ஒரு பக்கமாகச் சரிந்து புதைந்ததைத் தொடர்ந்து தற்போது அங்கு பணிகள் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் புதைந்து சரியாமல் இருக்க, அக்கட்டத்தின் செங்கல்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளன.

இந்த அம்மன் குளத்தில் மொத்தம் 936 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வந்தது என்பதும், மற்ற அடுக்குமாடி தொகுப்புகளுக்கு என்ன நிலை ஏற்படும் என்பதும் இனி மண்ஆய்வுகளுக்குப் பிறகுதான் தெரியவரும் என்று கூறப்படுகிறது. மண்ஆய்வுகள் முறைப்படி ஒரு பிரசித்திபெற்ற பொறியியல் கல்லூரியால் எடுக்கப்பட்டதாகவும், அதன் பிறகே இந்த இடம் தேர்வு செய்யப்பட்டதாகவும் குடிசை மாற்று வாரியம் தெரிவித்தாலும், எதற்காக அம்மன்குளத்தைத் தேர்வு செய்தார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

அதிமுக ஆட்சியில் இந்த இடம் நிராகரிக்கப்பட்டதாக முன்னாள் வீட்டுவசதித் துறை அமைச்சர் செ.ம.வேலுசாமி சட்டப்பேரவையில் குறிப்பிட்டுள்ளார். அம்மன்குளம் என்கிற பெயரிலேயே குளம் உள்ளது. ஆனாலும் அமைச்சர் இது ஏரிப் புறம்போக்கு அல்ல, நத்தம் புறம்போக்கு என்று அவையில் தெரிவித்திருக்கிறார். 15 ஆண்டுகளாக அந்தக் குளத்தில் தண்ணீர் தேங்கவில்லை என்பதால் அந்தக் குளத்தை நத்தம் புறம்போக்கு என மாற்றிவிட்டதாக அரசு சொல்வது நியாயமானதாகத் தெரியலாம். ஆனால், அந்தக் குளம் எப்போதுமே குளம்தான். மனிதர்களின் சுயநலத்தாலும், அதிகாரிகளின் ஆதரவாலும் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்துவிட்டதாலேயே, குளம் தன்னை நத்தம்புறம்போக்காக மாற்றிக்கொண்டுவிடுமா? எல்லா நீர்வழிகளையும் அடைத்துவிட்டால் எப்படி தண்ணீர் வந்து தேங்கும். அது நேரம் வரும்போது தன் இயல்பு நிலையைக் காட்டத்தானே செய்யும்? அதுதான் அங்கே நிகழ்ந்திருக்கிறது.

இந்த இடத்தைத் தேர்வு செய்து வெகு விரைவாக கட்டடங்களைக் கட்டி முடிக்க அவசரம் காட்டியதற்குக் காரணம், கோவையில் செம்மொழி மாநாட்டின்போது முதல்வரால் திறப்பு விழா செய்து, அவரால் பாராட்டப்பட வேண்டும் என்கிற ஆசைதான். ஆசை நியாயமானதாக இருக்கலாம். ஆனால் இந்த அவசரம் நியாயமில்லை. 936 குடும்பங்களின் உயிர்கள் இந்தக் குளத்தின் மீது குடியேற்றப்படுகிறது என்கிற உணர்வே இல்லாத அவசரத்தில் நியாயமே இல்லை.

நீர்ப்பிடிப்புப் பகுதி அல்லது ஏரி குளங்களில் வீடுகள் கட்டுவது கூடாது என்று நீதிமன்றம் தெளிவான உத்தரவைக் கொடுத்திருக்கிறது. இத்தகைய இடங்களில் வீடுகளைக் கட்டி, நீராதாரத்தைக் கெடுத்துவிட்டு, குடிநீருக்காகத் திட்டங்கள் போடுவது வீண் செலவு என்றும், நீதிமன்ற எதிர்ப்பையும் பொருள்படுத்தாமல், நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் நீராதாரங்களிலும் கட்டப்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு, சாலை வசதி அளிப்பது நீதிமன்ற அவமதிப்பு என்றும்கூட, ஒரு மாவட்ட ஆட்சியரை நீதிமன்றம் கண்டித்திருக்கிறது.

அப்படியிருந்தும் ஏரி, குளங்களைத்தான் அதிகாரிகளும் அமைச்சர்களும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைக்கத் தேர்வு செய்கிறார்கள். ஏனென்றால், மற்ற தனியார் நிலங்களை கையகப்படுத்த முயன்றால் அவர்கள் வழக்கு தொடுப்பார்கள். வழக்கு முடிய காலதாமதமாகும். தங்களது பதவிக் காலத்தில் செயலைச் செய்து முடிக்க வேண்டுமானால், அரசு நிலங்கள்தான் தோதாக இருக்கின்றன. விளைவு? குளமெல்லாம் நத்தமாகிறது.

இந்த விவகாரத்தில் மிகவும் ஆச்சரியமான விஷயம், அவையில் அமைச்சர் சுப தங்கவேலன் கூறியதுதான்: கட்டடம் கட்டும் ஒப்பந்ததாரர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், புதிய இடத்தைக் காட்டினால் அங்கே இதே அடுக்குமாடி வீடுகளைக் கட்டிக் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், அம்மன்குளத்தில் கட்டிய பாதிவேலை முடிந்த கட்டடங்களை இடித்து விடுவதாகவும், இந்தக் கட்டடத்துக்காக செய்யப்பட்ட தொகையைக் கேளாமல் விட்டுவிடுவதாகவும் எழுதியிருக்கிறார் என்று அமைச்சர் கூறினார். அந்தக் கட்டடங்களின் புகைப்படங்களைப் பார்த்தாலே தெரியும். பாதிக்கும் மேற்பட்ட பணிகள் முடிந்துவிட்டன என்று. தன் மீது குற்றமில்லை, அரசு காட்டிய மண் மீதுதான் குற்றம் என்ற நிலையிலும், பல கோடி ரூபாயை இழக்க ஒரு ஒப்பந்ததாரர் முன்வருகிறார் என்றால் இந்தப் பணிவுக்குப் பின்னணியில் என்ன இருக்கிறது?

ஜவாஹர்லால் நேரு தேசிய ஊரக புனரமைப்பு திட்டத்தில் கட்டப்படும் பல லட்சம் வீடுகளில் மூன்றில் ஒரு பகுதி தனியார்-அரசு பங்கேற்பில் (பி.பி.பி)கட்டப்பட்டு வருகிறது. குடிசைவாசிகளுக்கு வீடுகள் கட்டிக்கொடுத்து, அவர்களையே அதற்கு உரியவர்களாக்கும் ராஜீவ் ஆவாஸ் யோஜனா கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு, அத்திட்டத்தின் உள்அங்கமாக மேற்சொன்ன ஜவாஹர்லால் நேரு தேசிய ஊரக புனரமைப்பு திட்டத்தையும் சேர்த்திருக்கிறார்கள்.

இதற்காக மொத்தம் பத்து லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கவுள்ளது. நிகழாண்டில் இத்திட்டத்துக்காக ரூ. 1,270 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சரி பாதி வீடுகளை அரசு மற்றும் தனியார் பங்கேற்பில் (பிபிபி) கட்டுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் கட்டவுள்ள 9,600 வீடுகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் பொறுப்பில் 3,840 வீடுகளை கட்டப்பட்டு வருவதாகச் செய்திகள் வருகின்றன. மற்ற வீடுகளை பிபிபி முறையில்தான் கட்டப்போகிறார்களா என்பது தெரியவில்லை.

கட்டும்போது சரிந்தால் வீழ்வது கட்டடம் மட்டும்தான். கட்டியபிறகு சரிந்தால், வீழ்வது ஏழைகளின் குடும்பமாக அல்லவா இருக்கும். வீடு கட்டுகிறோம் பேர்வழி என்று குளங்களை நத்தமாக்குவதுடன் நின்றுவிடாமல் மயானமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபடலாமா? ஏன் இந்த அவசரம்?

நன்றி: தினமணி 20.04.2010