Sunday, February 7, 2010

மது விற்பனை இருக்கும்வரை தமிழகத்தில் வறுமையை ஒழிக்க முடியாது: தமிழருவி மணியன்

மது விற்பனை இருக்கும்வரை தமிழகத்தில் வறுமையை ஒழிக்க முடியாது என காந்திய அரசியல் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

இயக்கத்தின் சார்பில் நாமக்கல்லில் சனிக்கிழமை நடந்த தேசிய சிந்தனைக் கருத்தரங்கில் அவர் பேசியது:

டாஸ்மாக் கடைகள் மூலம் பெறக்கூடிய வருமானத்தில் தமிழக அரசு பல்வேறு இலவச திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இலவச திட்டங்கள் வேண்டும் என தமிழக அரசிடம் பொதுமக்கள் யாரும் கோரிக்கை விடுக்கவில்லை. வாக்காளர்களை கவர வேண்டும் என்பதற்காக கடந்த தேர்தலில் இலவச திட்டங்கள் குறித்த கவர்ச்சிகர அறிவிப்புகளை திமுக வெளியிட்டது. தற்போது, இந்த திட்டங்களுக்காகவே தமிழக மக்களை குடிமகன்களாக மாற்றி வருகிறது.

இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் கூறுகையில் தமிழகத்தில் மாற்று உடையில்லாமல் 3 கோடி மக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக ஆண்டுக்கு ரூ. 2,600 கோடி செலவில் இலவச வேட்டி, சேலை வழங்குவதாகவும் அரசு அறிவித்துள்ளது. ஆனால், 2008-09-ம் ஆண்டில் டாஸ்மாக் கடைகளில் நடந்த மது விற்பனையில் மது மீது விதிக்கப்பட்ட உள்நாட்டு வரி மற்றும் விற்பனை வரி ஆகியவற்றின் மூலமாக மட்டும் ரூ. 10 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் வந்துள்ளது. மது மீதான வரி மூலமே 10 ஆயிரம் கோடி வருவாய் என்றால் இந்த தொகையை வைத்து மாற்று உடையில்லாமல் உள்ள 3 கோடி மக்களை வசதியாக வாழ வைக்க முடியும்.

இதை விடுத்து இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, உயிர்காக்கும் காப்பீடு திட்டம் என்பதெல்லாம் மக்களை சிந்திக்க செய்யாமல் வைத்திருப்பதற்கே. ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கும் கிராம மக்கள்தான் தினமும் 70 ரூபாய் கொடுத்து டாஸ்மாக் மதுவை அருந்தும்நிலை உள்ளது. உயிர்காக்கும் காப்பீடு திóட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ. 600 கோடி தனியார் நிறுவனத்துக்கு வழங்கினால் 5 ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி வழங்க வேண்டியுள்ளது. இந்த 3 ஆயிரம் கோடியில் தமிழகத்தின் 30 மாவட்டங்களிலும் தலா 100 கோடி செலவில் மருத்துமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரிகளை அரசே துவக்க முடியும். தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையும் ஓராண்டில் உணவு, மருந்துக்காக செலவிடும் தொகையோடு ஒப்பிட்டால் மது குடிக்க செலவிடும் தொகையே அதிகமாக உள்ளது. இந்தநிலை மாற வேண்டும். இலவச திட்டம் என்பது கல்விக்கு மட்டுமே இருக்க வேண்டும். இலவச திட்டங்களால் மக்களை ஏமாற்றாமல் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் வகையில் தமிழக மக்களை தயார்படுத்த வேண்டும். பொதுநல அரசு என்பது மக்களை ஒழுக்கமாகவும், கண்ணியத்துடனும் இருக்கச் செய்ய வேண்டும். மது விற்பனையால் வரும் வருமானம் பாவத்தின் சம்பளம் என்பதை உணர வேண்டும்.

100 ஊராட்சிகளுக்கு குறி: காந்திய அரசியல் இயக்கம் குறைந்தபட்சம் 100 ஊராட்சிகளில் இயக்க நிர்வாகிகளை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 12,600 ஊராட்சிகளில் 100 ஊராட்சிகளிலாவது காந்திய அரசியல் இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பொறுப்புக்கு வந்தால் அந்த 100 ஊராட்சிகளை முன்மாதிரி ஊராட்சிகளாக மாற்றம் செய்து அவற்றை பிற ஊராட்சிகளும் கடைப்பிடிக்க செய்ய முடியும். இதற்காக கிராமம் தோறும் சமூக அக்கறையுள்ள 10 இளைஞர்கள் இயக்கத்துக்கு முன்வர வேண்டும். இந்த இளைஞர்களை கொண்டு கிராம சுயராஜ்ஜியம் அமைக்க பாடுபடுவதே காந்திய அரசியல் இயக்கத்தின் தலையாய நோக்கம். இந்த இயக்கத்தில் வன்முறைக்கு இடமில்லை. முழுக்க, முழுக்க காந்தியக் கொள்கைகள் பின்பற்றப்படும் என்றார் அவர்.

நன்றி: தினமணி 08.02.2010

No comments: