Thursday, April 1, 2010

எங்கு வாழ்ந்தாலும் தமிழன் தன் வீட்டில் தமிழ்தான் பேச வேண்டும்

புதுதில்லி, மார்ச் 31: தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தங்கள் வீடுகளில் தமிழில்தான் பேச வேண்டும் என்கிற உறுதியேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.

தினமணி நாளிதழும் தில்லி தமிழ்ச் சங்கமும் இணைந்து, பத்ம விருதுகள் பெற்ற நோபல் நாயகர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான், அப்பல்லோ மருத்துவமனைத் தலைவர் டாக்டர் பிரதாப் சந்திர ரெட்டி, சிபிஐ முன்னாள் இயக்குநர் டி.ஆர். கார்த்திகேயன் மற்றும் சித்த மருத்துவ வல்லுநர் டாக்டர் ஜெ.ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகிய தமிழர்களைப் பாராட்டி புதன்கிழமை நடத்திய விழாவில் பேசியபோது இதனை அவர் வலியுறுத்தினார்.

மேலும் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் பேசியது: திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்ற பாரதியின் கனவை நனவாக்கித் தந்த அறிஞர்கள் இவர்கள். தமிழ்நாட்டின் பெருமையை இந்தியத் தலைநகரில் மட்டுமின்றி உலக அரங்கிலும் பட்டொளிவீசிப் பறக்கச் செய்தவர்கள். இவர்களைப் பாராட்டுவது தமிழர்களாகிய நம்மை நாமே பாராட்டிக் கொள்வதற்குச் சமம்.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, அதைத் தொழுது படித்திடடி பாப்பா என்பான் பாரதி. இசைமேதை ஏ.ஆர். ரஹமான் பேசும்போது "ஜெய் ஹோ' பாடலைத் தமிழில் இசையமைக்க வேண்டும் என்கிற ஏக்கமும் தாகமும் தனக்கு இருப்பதாகத் தெரிவித்தார். அவர் வெளிப்படுத்திய அந்தத் தமிழ் உணர்வு நம் அனைவரிடத்திலும் இருக்க வேண்டும். அதற்கு முதலில் நாம் தமிழில் பேச வேண்டும் என்கிற வைராக்கியம் நமக்கு ஏற்பட வேண்டும்.

தமிழ்நாட்டிலும் வெளிமாநிலங்களிலும் வாழும் மலையாளிகளைப் பார்க்கிறேன். அவர்கள் வீடுகளில் மலையாளத்தில் பேசிக்கொள்கிறார்கள். குஜாராத்திகள் குஜராத்தி மொழியில் பேசுகிறார்கள். கன்னடத்தவர் கன்னடத்திலும், வங்காளிகள் வங்க மொழியிலும் பேசுகிறார்கள். தமிழ்நாட்டிலேயேகூடத் தமிழன் மட்டுமே, தன் வீட்டில் தமிழ் பேசுவது குறைந்து வருகிறது. தமிழில் பேசுவது கெüரவக் குறைச்சலாகக் கருதுவதும் ஆங்கிலத்தில் பேசுவதுதான் பெருமை என்று நினைப்பதும் வேதனை அளிக்கிறது. இந்த மேடையில் ஜெய் ஹோ பாடலை குழந்தைகள் ஹிந்தியில் பாடியதைக் கேட்ட ரஹ்மான், இப்பாடலை தமிழல் கொண்டுவரப்போவதாகச் சொன்ன அதே தமிழ் உணர்வை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, நாமும் வீடுகளில் தமிழில்தான் பேசுவோம் என்று உறுதி ஏற்க வேண்டும். நாம் நமக்குள்ளே பேசும் மொழி நம் இனிய தமிழ் மொழியாக இருக்கட்டும் என்றார் ஆசிரியர் வைத்தியநாதன்.

நோபல் நாயகர் வெங்கட் ராமகிருஷ்ணன் பாராட்டுக்கு நன்றி தெரிவித்துப் பேசுகையில், "நான் இங்கே உள்ள இசை மேதை ரஹ்மான் போல அனைவரும் தெரிந்த நபர் அல்ல, ஆனால் எனக்கு ஒரு நோக்கம் இருந்தது, அதை நான் ஈடுபாட்டுடன் பின் தொடர்ந்தேன். நான் எப்படி பி.எச்டி. படிக்க நேர்ந்தது என்பதெல்லாம் சுவாரஸ்யமான விஷயம். இருப்பினும் என்னைப் போன்றவர்களுக்கு விருது கிடைக்குமபோது அது மிகப்பெரிய நல்லெண்ணத்தைத் தமிழர்களிடத்தில் ஏற்படுத்துகிறது என்பதும், உழைப்பவருக்கு பாராட்டு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்பதும் என்னை ஆச்சரியம் கொள்ள வைக்கிறது. இது ஒரு பாடம். பணம், நல்ல வேலை என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் உங்கள் விருப்பங்களைத் தீர்மானித்து, அதைத் தொடர்ந்து செல்லுங்கள். பாராட்டு வந்து சேரும்' என்றார்.

தமிழில் ஜெய்ஹோ: இசைமேதை ஏ ஆர். ரஹ்மான் பேசுகையில், எல்லாப் புகழும் இறைவனுக்கே, இந்த விழாவில் குழந்தைகள் நான் இசையமைத்த ஹெய் ஹோ பாடலை ஹிந்தியில் பாடியபோது, இதைத் தமிழிலும் அமைக்க வேண்டும் என்று தோன்றியது. அடுத்த ஆண்டு அதைச் செய்வேன், பாராட்டியதற்கு தினமணிக்கு நன்றி என்றார்.

டாக்டர் டி.ஆர். கார்த்திகேயன் பேசுகையில், விருது பெற்றவுடன் இங்கே வந்து கலந்து கொண்டதற்குக் காரணம் நாங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான். எனக்கு விருது கிடைத்திருப்பதாக நண்பர்கள் சொன்னபோது, எனக்குத் தெரியாது, நான் கேட்டதும் இல்லை. இத்தகைய விருதுகள் பெற செல்வாக்கைப் பயன்படுத்தினால்தானே இத்தகைய விருதுகள் கிடைக்கும் என்றேன். தகுதிக்கேற்பவும் தருகிறார்கள் என்று சொன்னார்கள். தமிழ்நாட்டுக்கு மறுபடியும் பெருமை கிடைக்கத் தொடங்கியுள்ளது. சில காலமாக தொய்வு இருந்த நிலை மாறி, கடந்த இரு ஆண்டுகளாக ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று நிறைய தமிழர்கள் மத்திய அரசுப் பணிக்கு வரத் தொடங்கியுள்ளனர். தமிழன் மறுபடியும் தலைதூக்கி உலகப் புகழைப் பெறத் தொடங்கியுள்ளான். இந்த விருது பெற்ற அனைவருமே, சாதாரண குடும்பங்களில் இருந்து இந்நிலைக்கு உயர்ந்தவர்கள் என்றார்.

டாக்டர் ஜெ.ஆர். கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், தமிழ் உணர்வு தமிழர்களிடத்தில் அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் இருக்கிறது. சோரியாஸிஸ் தோல் நோய்க்கு நான் உருவாக்கியுள்ள சித்த மருந்துக்காக எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது. சித்த மருத்துவமனை அதிகம் வருவதற்காக நாம் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.1946-ல் தொடங்கப்பட்ட தில்லி தமிழச் சங்கத்தின் செயல்பாடுகளை தலைவர் எஸ். கிருஷ்ணமூர்த்தி விளக்கினார். செயலர் சக்தி பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் பி. குருமூர்த்தி, ராஜ்குமார் பாலா ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

நன்றி தினமணி 01.04.2010

1 comment:

Unknown said...

////புதுதில்லி, மார்ச் 31: தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தங்கள் வீடுகளில் தமிழில்தான் பேச வேண்டும் என்கிற உறுதியேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்////

சாத்தான் வேதம் ஓதுகிறது:
அம்பி, ஆத்துக்கு, அசமஞ்சம், அபிஷ்டு, ஆத்துக்காரி, ஆமப்டையான், அம்மாஞ்சி, பேக்கு, நன்னா, நேக்கு, நோக்கு, தோப்பனார் நம்மவா, அவா, அவாள், இவாள், சொல்றேள், சொன்னேள், வாங்கோன்ன, கஷிசடை, கம்மினாட்டி, இளிசசிண்டு, ஈஷிண்டு, ஈஷிக்காதே, மம்மு, சாதம் (சோறு தான் தமிழ்), பப்புசாதம், மோரிஞ்சா, தயறுன்ஜா, புளிக்காத்ச்சல், எழவு (இந்த வார்த்தையை உபயோகப் படுத்தாமல் அவாள் ஒரு வரி பேச முடியாது) பேசிண்டு, நின்னுண்டு, கண்றாவி -----
இது மாதிரி அழகான (!!!!) தமிழ் என்னும் ஒரு கண்றாவியை பேசும் அவா சொல்லரா!!!!!!!!!!!