Sunday, January 24, 2010

மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம்

மொழிப்போர் ஈகியருக்கு

வீரவணக்கம்

திருவள்ளுவராண்டு 2041 சுறவம் 12


மொழிப்போர் ஈகியர் நாள் - 25.01.2010

Saturday, January 23, 2010

தமிழால் வளம்பெறலாம்!

இன்று உலகை ஆளும் முதலாளிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் உள்ள ஒரே இலக்கு தாம் செய்யும் தொழிலில் “இலாபம்”, “மேலும் இலாபம்”, “மேலும் மேலும் இலாபம்” ஈட்டுவது மட்டுமே. இந்த இலக்கை அடைய அவர்கள் “எதை” வேண்டுமானாலும் செய்ய தயாராகவே இருக்கிறார்கள். இந்த கட்டுரையின் நோக்கம் அந்த “எதை” வேண்டுமானாலும் என்ற இடத்தில் “தமிழையும்” வைக்கவேண்டும் என்பது மட்டுமே.

உலகில் உள்ள அனைத்து மொழிக்கும் பல்வேறு சிறப்புகள் உண்டு. ஒரு மொழிக்கு எத்தனை சிறப்புகள் இருந்தாலும் அந்த மொழி மக்கள் பயன்பாட்டில் இருந்தால் மட்டுமே காலத்தால் நிலைத்து நிற்கமுடியும். குறிப்பாக ஆட்சி அதிகாரத்திலும், வியாபாரா-வர்த்தக-தொழில் நடைமுறைகளிலும் ஒரு மொழி பயன்படுத்தப்படுமானால் அந்த மொழியும் - அந்த மொழியை அறிந்தவர்களும் – அந்த மொழி சார்ந்த பிற துறைகளும் தானாக வளர்ச்சியடையும்.

மேற்குறிப்பிட்ட வளர்ச்சியை அடைய தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? ஆட்சியாளர்களுக்கு கோரிக்கை மனு.., கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம்..., ஆர்ப்பாட்டம்..., கோரிக்கைப் பேரணி... போன்ற கூடிக்களையும் நிகழ்வுகள் எதுவுமே தேவையில்லை. நாம் இருக்கும் இடத்திலேயே, நமது அன்றாட வாழ்க்கை நடைமுறைகளிலேயே இதை சாதிக்கலாம். தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடி செயலாற்றுவோம். நாம் செய்ய வேண்டிய செய்யக்கூடிய பணிகள் ஒருசிலவற்றையாவது செய்வொம்...

நம்மால் ஏதாவது ஒருவகையில் பயனடையும் அல்லது இலாபமடையும் அனைவரோடும் தமிழில் தொடர்புகொண்டு அவர்களையும் தம்மோடு தமிழில் தொடர்புகொள்ள வலியுறுத்துவோம்.

நாம் பணிபுரியும் இடத்தில் நமது அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து நடைமுறைகளிலும் தமிழை பயன்படுத்துவோம்.

மின்னணு இயந்திரங்கள், மின்சார வீட்டு உபயோக பொருட்கள், போக்குவரத்து வாகனங்கள் போன்றவற்றின் பயன்பாடுகள் நமது வாழ்க்கை நடைமுறைகளில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. நாம் வாங்கும் எந்தவொரு மேற்குறிப்பிட்ட பொருளுடனும் “பயனாளர் கையேடுகள்” (User Manuals) வழங்கப்படுகின்றன. பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தாங்கள் வெளியிடும் கையேடுகளை பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே வெளியிடுகின்றன. தாம் உற்பத்தி செய்யும் பொருட்களை அனைத்து வகைகளிலும் பயனாளிகள் விரும்ப வேண்டும் என்றே உற்பத்தியாளர்கள் விரும்புவார்கள். அந்த வகையில் நாம் வாங்கும் பொருட்களின் முகவர்களிடமும் உற்பத்தியாளர்களிடமும் பயனாளர் கையேடுகளை தமிழில் வழங்க அனைத்து வகைகளிலும் வலியுறுத்துவோம். நமது கோரிக்கை தொடர்ந்தால் தமிழ்நாட்டில் வர்த்தகமொழியாக தமிழ்மட்டுமே இருக்கும்.

பொருட்களை உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்க்க “குறைதீர்க்கும் நடுவங்களை” (Customer Care, Help line, etc...) உலகெங்கும் நிறுவியுள்ளன. அந்த நடுவங்களை தொடர்புகொண்டு தாங்கள் உரையாட நேரிட்டால் தங்களுக்கு ஆங்கிலம் தெரிந்தாலும் தொடர்ந்து தமிழிலேயே உரையாடுங்கள். உறுதியாக அவர்கள் தங்களுக்கு தமிழில் பதிலளிக்கவே முயற்சி செய்வார்கள். எந்தவொரு வர்த்தக நிறுவனமும் வாடிக்கையாளர்களிடமிருந்து தொடர்புகளை துண்டித்துக்கொள்ளாது. அவர்களின் நோக்கம் இலாபம்... இலாபம்... இலாபம் மட்டுமே...

இந்த நூற்றாண்டு முதல் மொழிபெயர்ப்புத்துறைக்கு ஆயிரகணக்கான கோடி ரூபாயை ஒதுக்க பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இருப்பதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் உலகெங்கும் குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வட்டார அளவில் தனது வாடிக்கையாளர்களை விரிவுபடுத்த தயாராகிவருகின்றன. இந்தச் சூழலை தமிழர்கள் அனைவரும் சரியாக பயன்படுத்த வேண்டும்.

தொடருவோம்...

Thursday, January 21, 2010

நாமெல்லாம் உப்புப் போட்டுத்தான் சாப்பிடுகிறோமா?

மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விவகாரம் முற்றி சந்திக்கு வந்திருக்கிறது. மரபணு மாற்றக் கத்தரிக்காயை இந்தியாவில் பயன்படுத்தலாமா, கூடாதா என்பதை இறுதியாக முடிவு செய்யவேண்டியது அதற்கான நிபுணர் குழுதான் என்று வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் கூற, இல்லையில்லை இறுதி முடிவை எடுக்க வேண்டியது மத்திய அரசுதான் என்று அடுத்த நாளே மறுத்து நமது வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.

தேசியவாத காங்கிரஸ் என்ற தோழமைக் கட்சியின் தனிப்பெரும் தலைவர் சரத் பவார். அவருடைய சமீபகால அரசியல் நடவடிக்கைகள், மக்கள், அதிலும் குறிப்பாக விவசாயிகள், நலன் சாராது கூட்டுறவுச் சர்க்கரை ஆலை அதிபர்கள், சர்க்கரை மொத்த வியாபாரிகள், இறக்குமதியாளர்கள் ஆகியோர் நலன் சார்ந்து இருப்பது விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. நெல், கோதுமை, கரும்பு சாகுபடியாளர்களுக்குக் கட்டுபடியாகும் கொள்முதல் விலையை வாங்கித் தருவதில் அதிக ஆர்வம் காட்டாத சரத் பவார், இறக்குமதி கோதுமைக்குக் கூடுதல் விலை தருவதற்குத் தயக்கம் இல்லை என்று வெளிப்படையாகவே அறிவித்து கோதுமை உற்பத்தியாளர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார்.

இதையெல்லாம் கூறக் காரணம், மரபணு மாற்றப்பட்ட கத்தரி விஷயத்தில் நிபுணர் குழுவின் முடிவே இறுதியானது என்று கூறி, இந்த நாட்டுக்கு மிகப்பெரிய தீங்கு இழைக்கப்பட காரணமாக அவர் இருந்துவிடுவாரோ என்கிற அச்சம்தான். நல்லவேளை ஜெய்ராம் ரமேஷ் குறுக்கிட்டு அவருக்குக் கடிவாளம் போட்டிருக்கிறார்.

பி.டி. கத்தரிக்காய் விதைகளை "மேகோ' (மகாராஷ்டிர உயர்விளைச்சல் விதை நிறுவனம்) என்கிற நிறுவனம் தயாரிக்கிறது. அமெரிக்க பி.டி. நிறுவனம் தான் மகாராஷ்டிரத்தில் இப்படி ஒரு புதிய பெயரில் சில இந்தியர்களை முன்னிலைப்படுத்தி ஓர் இந்திய நிறுவனம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வேடிக்கை என்னவென்றால் மரபணு மாற்றப்பட்ட இந்தக் கத்தரிக்காய் விதை உலகின் எந்தப் பகுதியிலும் இதுவரை பெருமளவு நிலப்பரப்பில் விதைக்கப்பட்டு நேரடியாக சோதிக்கப்படவே இல்லை என்பதுதான்.

மரபணு மாற்றப்பட்ட பருத்தியாவது பரவாயில்லை. கத்தரிக்காய் என்பது நேரிடையாக மக்களால் உணவாகச் சாப்பிடப்படுவது. இதில் நச்சுக்கலப்பு இருந்தால் அதன் விளைவு எத்தகையதாக இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மேலும், அமெரிக்காவிலும் ஏனைய மேலைநாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர்கள் விவசாயத்துக்காக இருக்கும்போது, மரபணுப் பரிசோதனைகளை அங்கே நடத்தாமல் இந்தியா போன்ற ஏமாளி நாடுகளில் நடத்தி, நம்மைப் பரிசோதனைக் களமாக்குவதன் ராஜதந்திரம், சிறந்த அரசியல் ராஜதந்திரியான சரத் பவாருக்கு ஏன் தெரியவில்லை என்கிற கேள்வியும் எழுகிறது.

இதே பி.டி. ரக பருத்தி விதைகளை வாங்கி சாகுபடி செய்து, சாகுபடி பொய்த்ததால் கடனில் மூழ்கி தற்கொலை செய்துகொண்ட இந்திய விவசாயிகள் எண்ணிக்கை சில ஆயிரம். அவர்களுக்கு இந்த நிறுவனம் எந்த நஷ்டஈட்டையும் அளித்ததாகத் தகவலே கிடையாது. ஆலைகளில் இந்தப் பருத்தியைக் கையாண்ட தொழிலாளர்களுக்கு ஒருவித அரிப்பும், இதர உடல் உபாதைகளும் ஏற்பட்டது பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பசுமைப்புரட்சியை இந்த நாட்டில் கொண்டு வந்தபோது மிகவும் பெருமிதம் கொண்ட நமக்கு அதன் தீமைகள் புரிய பல ஆண்டுகள் பிடித்தன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

மரபணு மாற்றிய கத்தரிக்காயைப் பன்னாட்டு நிறுவனம்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. அதன் நோக்கம் இந்தியர்கள் கத்தரிச் சாகுபடியில் அமோக லாபம் சம்பாதிக்க வேண்டும், பூச்சி அரிக்காத காய்கறிகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும், ஓர் ஏக்கருக்கு இப்போது கிடைப்பதைவிட 3 மடங்கு 5 மடங்கு என்று கத்தரிக்காய் விளைய வேண்டும் என்பதெல்லாம் அல்ல. இவையெல்லாம் வியாபார உத்திக்காகக் கூறப்பட்டாலும் நம்முடைய பாரம்பரிய கத்தரிக்காய் ரகங்களைப் புழக்கத்திலிருந்து அகற்றுவதுதான் அவர்களின் நோக்கம். அதன் பிறகு கத்தரிக்காய் என்றாலே நாம் ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவனம் தயாரித்துத்தரும் ரகத்தைத்தான் வாங்க வேண்டியிருக்கும். அப்போது அதற்குத் தரும் விலையும் அமோகமாக இருக்கும்.

அதைவிடுங்கள், அதனால் நிலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படக்கூடிய கெடுதல்களை எப்படி முன்கூட்டியே அனுமானிப்பது? நாம் காரணம் இல்லாமலேயே சந்தேகப்படும் பத்தாம்பசலிகளாகவே கூட இருந்து தொலைப்போம், நாளை இதனால் கெடு விளைவுகள் ஏற்பட்டால் நம்மைக் காப்பாற்றப் போவது யார்? போபாலில் பல்லாயிரக்கணக்கானவர்களின் உயிரையும் வாழ்வையும் உறிஞ்சிய யூனியன் கார்பைடு என்ற பன்னாட்டு நிறுவனம் இன்று எங்கே? அதன் தலைவராக இருந்த ஆண்டர்சன் எங்கே? அவரைக் கொண்டுவந்து நீதியின் முன் நிறுத்த மன்மோகன் அரசு எடுத்த தீவிர முயற்சிகள் என்ன? பாதிக்கப்பட்டவர்கள் இப்போதும் முழுமையான நஷ்டஈடு கிடைக்காமல் தவிக்கிறார்களே, அவர்களுக்கு விடிவுதான் என்ன?

நாளை மரபணு கத்தரிக்காயால் அப்படியொரு கெடு பலன் ஏற்பட்டுவிட்டால் அதற்குப் பிணை நிற்கப் போவது யார்? இந்தியாவில் அணு மின் நிலையம் அமைக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், ஏதேனும் பெரிய அசம்பாவிதம் நேரிட்டால் மிகவும் குறைந்தபட்ச நஷ்ட ஈடு தந்தாலே போதும், வேறு எந்த ஜாமீனும் தேவையில்லை என்று ஒப்பந்தம் தயாரிக்கும் இந்த தேசபக்தர்களை நம்பியா நம் நாட்டு நிலங்களை புதிய மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு ஒப்படைப்பது?

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஆணிவேரையே கெல்லி எறிய தண்டியிலே ஒரு கைப்பிடி உப்பைக் கையில் எடுத்தார் அண்ணல் மகாத்மா காந்தி. நாமெல்லாம் உப்புப் போட்டுத்தான் சாப்பிடுகிறோமா? என் செய்வது, ஐநூறு ரூபாய்க்கும் ஆயிரம் ரூபாய்க்கும் விற்பதற்குத்தான் வோட்டு என்றாகிவிட்ட பிறகு, விலைபேசுவது நம் நாட்டு சரத் பவாராக இருந்தால் என்ன, அமெரிக்க ஆண்டர்சனாக இருந்தால்தான் என்ன?

நன்றி: தினமணி 22.01.2010

Tuesday, January 12, 2010

தேவை மதுவிலக்கு என்னும் மலர்க்கிரீடம்!

சில தினங்களுக்கு முன்பு புத்தாண்டு தினத்தையொட்டி அசம்பாவிதச் சம்பவங்களைத் தடுக்கும்விதமாக, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களைப் போக்குவரத்து போலீஸôர் கண்காணித்து கைது செய்தும், அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்ற அரசின் எச்சரிக்கையை மதித்து நடந்திருந்தால் தண்டனையிலிருந்து தப்பித்திருக்கலாம் என கைதானோர் அதன்பிறகு எண்ணியிருப்பார்களோ என்னவோ?

புத்தாண்டு தினத்தில் மட்டும் தமிழகத்தில் ரூ. 47 கோடி அளவுக்கு மதுவிற்பனை நடைபெற்றிருப்பதாகவும், இது கடந்த ஆண்டைவிட 10 சதவிகிதம் அதிகம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுஅருந்துவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிப்பது இதன்மூலம் வெட்டவெளிச்சமாகிறது.

சுப நிகழ்ச்சிகளோ, துக்க நிகழ்ச்சிகளோ பார்ட்டி என்ற பெயரில் மதுகுடித்து கூத்தடிப்பது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அந்தப் பட்டியலில் ஒருசில ஆண்டுகளாகப் புத்தாண்டையும் மதுமயக்கத்திலேயே வரவேற்கும் பு(ம)து வகை கலாசாரம் சென்னை போன்ற பெரிய நகரங்களை மட்டுமன்றி சின்னஞ்சிறிய கிராமங்களிலும் வேரூன்றத் தொடங்கியுள்ளது.

முகவரி கேட்டு வருவோருக்கு வழிசொல்ல முன்பெல்லாம் தலைவர்களின் சிலைகள், பூங்காக்கள், கோயில்கள் உதவின. இப்போது டாஸ்மாக் கடைகளே பெரிதும் உதவுகின்றன. வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளைத் திறந்து மது ஆறு வற்றாமல் பாயும்படி பார்த்துக் கொள்வதால் நாட்டில் நடப்பது "குடி'யாட்சிதான் என்று ஆட்சியாளர்கள் ஒருவகையில் மார்தட்டிக் கொள்ளலாம்.

மயக்கம் தரும் "கள்'ளைத் தரும் என்பதாலேயே பெரியார் தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்}இது கடந்த கால வரலாறு. ஆனால், அவரிடம் "பாஸ்மார்க்' வாங்கியதாகக் கூறிப் பெருமை கொள்ளும் தலைவர்களோ, இளைஞர்களின் எதிர்காலத்தை விழுங்கும் "டாஸ்மாக்' கடைகளைத்தான் திறந்து வைக்கின்றனர். இது நிகழ்காலம் சொல்லும் கசப்பான உண்மை.

திராவிடம் என்னும் இனப்பற்று பேசிய தலைவர்கள் அந்த இனத்தின் இளைஞர்களையும், குடும்பங்களையும் பாதிக்கும் எனத் தெரிந்தே தீரா விடம் (விஷம்) என்னும் மதுவைப் பணப்பற்று காரணமாக ஆதரிக்கின்றனர் என்பது வேதனை தரக்கூடியதுதானே?

அரசர்களான கடையேழு வள்ளல்கள் நாடி வந்த குடிமக்களுக்கெல்லாம் வாரிவாரி வழங்கினார்களாம். கலிகால வள்ளலான மது அரக்கனோ, மக்களின் குடியால் கஜானா நிரம்பி வழியவழிய அரசுக்கு வாரி வழங்குகிறான். நாய் விற்ற காசு குரைக்குமோ என்னவோ, ஆனால் மது விற்ற காசு என்றால் நிச்சயம் மயக்கம்தான், ஆட்சியாளர்களுக்கு.

இப்போது, வாங்கும் ஊதியத்தின் மொத்தத்தையும் ஒரு குடும்பத் தலைவன் குடித்தே அழித்தாலும் பரவாயில்லை. அவன் பாக்கெட்டில் ஒரு ரூபாய் இருந்தால்கூட போதும். அதைக் கொண்டு நியாயவிலைக் கடையில் வாங்கும் கிலோ அரிசியில் அவன் குடும்பம் பசியாறுமே என இவர்கள் நியாயம் பேசலாம்.

பல ஆண்டுகளாய் குடித்துக் குடித்து குடல் வெந்து, உள்ளுறுப்புகளும் கெட்டு, ஒருவன் எந்த நோயில் பாதிக்கப்பட்டாலும் அவனும், அவன் குடும்பமும் கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் அதற்கும்தான் இருக்கவே இருக்கிறதே மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்றும் நியாயப்படுத்தலாம்.

மதுபானங்களை விற்பதன் மூலம் கிடைக்கும் பெரும் தொகையில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி ஏழை, எளியோரின் வாழ்வில் குடும்ப விளக்கை ஏற்ற முயல்வதாகக் கூறுகின்றனர் ஆட்சியாளர்கள். ஆனால், மதுவால் நிலைகுலைந்த வீடு இருண்ட வீடுதானே?. அங்கு அழகின் சிரிப்பைக் காண்பதெப்படி?

படித்துப் பழகிய தலைமுறை மெல்ல மெல்ல மறைந்து இன்று குடித்துப் பழகும் தலைமுறை உருவாகி வருகிறது. ஊக்கத்தைக் கைவிடாதே என்ற பொருளில் "ஊக்கமது கைவிடேல்' என்றார் ஒüவையார். ஆனால், இனி வரும் தலைமுறை "ஊக்க மது கைவிடேல்' என தங்கள் வசதிக்கேற்ப வாசித்து மகிழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அதிகமாய் உலவிய மயிலும், புலியும் தேசியப் பறவையாகவும், விலங்காகவும் ஆகிவிட்ட பின்பு ஏனோ எண்ணிக்கையில் வெகுவாகக் குறைந்துவிட்டன. அந்த வகையில் பார்த்தால் நாட்டில் ஆறாக ஓடும் மதுவை முற்றிலும் ஒழிப்பது என்பது இயலாத காரியம் என்பதால் அதை ஓரளவுக்காவது குறைக்க வேண்டும் என்றால் அதை தேசிய பானமாக ஆக்குவதுதான் ஒரேவழி போலும்.

கள்ளுண்ணாமையை வலியுறுத்திய வள்ளுவரின் குறளுக்கு உரை எழுதி, குறளோவியம் தீட்டிய முதல்வர், மது அரக்கனுக்கும் ஒரு முடிவுரை எழுதி, தமிழகத்துக்கு நல்வழி காட்ட வேண்டும்.

தற்போது தமிழுக்குச் செம்மொழித் தகுதி என்ற கிரீடம் சூட்டி அழகுபார்க்கும் முதல்வர், தமிழகத்துக்கும், தமிழனுக்கும் மதுவிலக்கு என்னும் நிரந்தர மலர்க்கிரீடம் அணிவித்து தலைநிமிரச் செய்து அழகுபார்க்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும்.

மா. ஆறுமுககண்ணன்

நன்றி: தினமணி 12.01.2010

Thursday, November 26, 2009

இந்தியத் தாய்க்குப் பதினெட்டு நாக்குகள்; இருநூறு கோடி கைகள்!

மராத்தியச் சீற்றம் மாண்புடையதே!-பழ. கருப்பையா

“போரில் காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்” என்று மராத்தியர்களின் வீரத்தைத் தூக்கிப் பிடிக்கிறான் பாரதி. இந்தியப் பண்பாட்டின் உருவாக்கத்திலும் அதன் மீட்டெடுப்பிலும் அவர்களுக்குக் கணிசமான பங்கு உண்டு.

சிவசேனையின் வரவுக்குப் பின்னர் மராத்திய இலக்கியங்கள் போற்றப்பட்டன. மராத்தியர் என்னும் இன உணர்வு வளர்க்கப்பட்டது. மராத்தி மொழி, மராத்திய வீரம், மராத்தியப் பண்பாடு என்று இவை இனங்கண்டு போற்றப்படுவதற்கு அவர்களுக்கு இவ்வளவு காலம் தேவைப்பட்டிருக்கிறது என்பது ஒரு சோகந்தான்!

இவ்வளவுக்கும் பெறற்கரிய மாவீரன் சிவாஜியைப் பெற்றவர்கள் அவர்கள், ஒரு பஞ்சு மிட்டாய் பெறுவதற்குக் கூட வெள்ளைக்காரனுக்கு மனுப்போட்டு மண்டியிட்டு நின்ற மிதவாதிகளிடமிருந்து, இந்திய விடுதலைப் போராட்டத்தை மீட்டு, அதற்கு வேகங்கொடுத்து அந்தப் போரை முன்னெடுத்துச் சென்ற மகான் திலகரைப் பெற்றவர்கள் அவர்கள்.

மராத்தி மொழியில்தான் பதவி ஏற்பு உறுதிமொழியைப் படிக்க வேண்டும் என்று குட்டிச் சிவசேனா வீறு கொண்டு கிளம்பியது மகாராஷ்டிரச் சட்டமன்றத்தில். ஆனால் இந்தியில்தான் உறுதிமொழியை ஏற்பேன் என்று முலாயம்சிங் கட்சிக்காரர் வம்பு செய்தார். மராத்தியர்களின் வாக்குகளைப் பெற்று, மராத்தியர்களுக்குத் தொண்டு செய்வதற்காக, மகாராஷ்டிர சட்டமன்றத்துக்குள் நுழைகிறவன், தன்னுடைய தொண்டினை மராத்திய மொழியிலிருந்து தொடங்குவதுதானே நியாயம்!

மராத்தி மொழி தெரியாதென்றால் “அதைக் கற்றுக் கொள்ள ஆறுமாதம் அவகாசம் கொடுங்கள்” என்று சொல்லியிருந்தால் ஒப்புக் கொண்டிருப்பார்களே! அதை விட்டுவிட்டு “இந்திதான் தேசிய மொழி; அதில்தான் உறுதி எடுப்பேன்” என்றால், இந்திமொழி ஆட்சி மொழியாக இருக்கும் உத்தரப் பிரதேசத்திற்கோ நாடாளுமன்றத்திற்கோ போக வேண்டியதுதானே! மும்பையில் என்ன வேலை?

ஆனால் சிவசேனைக்காரர்களிடம் உள்ள ஒரு மோசமான பழக்கம், ஒத்துவராதவர்களை உதைப்பது. இப்படிச் செய்வதால் கடைசியில் மராத்தி மொழி நியாயங்கள் மறக்கடிக்கப்பட்டு, வன்முறை குறித்த விவாதமும், வன்முறையாளர்களிடம் மக்களுக்குள்ள வெறுப்பும்தான் தலைதூக்கி நிற்கும். நியாயமான தாய்மொழிக் கொள்கை தோற்றுப் போகும் நிலை ஏற்படும்.

தாயையும், தாய்மொழியையும் போற்றச் செய்வதற்குக்கூட அடியாள்களின் பக்கபலம் வேண்டுமென்பது நினைக்கவே அருவருப்பானது. தமிழ்நாட்டில் மறைமலை அடிகள் தொடங்கி அண்ணா வரை தமிழ் வளர்த்த யாரும் தாதாக்களுமில்லை; தாதாக்களின் துணையை நாடியவர்களுமில்லை.

மேலும் பால்தாக்கரேயை விமர்சித்துவிட்டு, யாரும் தப்பிச் சென்றுவிட முடியாது என்று வெளிப்படையாக மிரட்டுவது, முற்ற முழுக்கச் சிவசேனையைத் தாதாக்களின் கூட்டமாகவே காட்டுகிறது. கடவுளும் காந்தியும்கூட விமர்சனத்துக்கு உள்பட்டவர்கள்தான் என்றால், பால்தாக்கரே எந்த மூலைக்கு? விமர்சனத்தை அனுமதித்துத் தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்ளாத எந்தத் தலைவனும், தன்னுடைய செயல்களின் பாரம் தாங்காமல் ஒருநாள் முறிந்து போவான்.

நடந்து முடிந்த தேர்தலில் சிவசேனை வாங்கிய அடி கடுமையானதுதான். அதில் மனங்கலங்கிப் போன பால்தாக்கரே நாற்பது ஆண்டுகளாகத் தான் செய்த பணியை மறந்து நன்றி கொன்றுவிட்டார்களே என்று மராத்தியர்களை வசை பாடியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி பால்தாக்கரேயிடமிருந்து விலகி வந்த ராஜ் தாக்கரேக்கும், தமிழ்நாட்டில் விஜயகாந்துக்கும், ஆந்திரத்தில் சிரஞ்சீவிக்கும், தனித்தனியே நிற்பதற்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்து, வாக்குகளைச் சிதறடித்து, நாடாளுமன்றத்தில் ஐம்பது இடங்களைக் கூடுதலாகக் கைப்பற்றியது.

சிவசேனை கட்டிக் காத்த மராத்திய உணர்வு தோற்றுவிட்டது என்பது சரியான மதிப்பீடு ஆகாது. அந்த உணர்வை முன்னெடுத்துச் செல்லும் வல்லமையும், தலைமைக் கூறுகளுமுடைய அண்ணன் மகன் ராஜ் தாக்கரேயை விரட்டி விட்டு, ஒரு திறமையுமில்லாத, சவசவத்த உப்புக்குச் சப்பாணியான தன் மகனைத் தலைவர் பதவிக்கு உயர்த்திய வாரிசு அரசியலுக்குப் பால்தாக்கரே கொடுத்த விலைதான் சிவசேனையின் சரிவு. இப்போது இந்தத் தள்ளாத வயதிலே அண்ணன் மகனோடு போட்டி அரசியல் நடத்த வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார். எவ்வளவு நாளைக்கு மகனைப் பக்கத்திலேயே வைத்துக் கொண்டு பொத்திக் காக்க முடியும்?

பொதுவாக ஒரு வெறுப்பின்மீது கட்டப்பட்டு, வெறுப்பின் மீதே வளர்க்கப்பட்ட கட்சி சிவசேனைக் கட்சி. அது குறுகிய காலத்துக்குப் பயனளிக்குமே ஒழிய, நீண்ட காலத்துக்கு உகந்த அரசியல் ஆகாது. தன்னினத்தை நேசிப்பது என்பது வேறு; மாற்றினங்களின் மீது வெறுப்பை உமிழ்வது என்பது வேறு.

மராத்தியர்களின் வேலைவாய்ப்பைத் தட்டிப் பறிக்க வந்தவர்கள் என்று தொடக்ககாலத்தில் தமிழர்களைச் சிவசேனை அடித்து விரட்டியது. பெருந் தொழில்நகரமான மும்பைக்குத் தொழிற்சாலைகளிலும் தனித்தும் கூலி வேலை செய்ய வந்தவர்கள்தாமே தமிழர்கள். ஆசியாக் கண்டத்தின் அசிங்கமான பகுதி என்றும், ஆடு மாடுகளை அடைத்து வைக்கும் கொட்டில்கூட இன்னும் சுகாதாரமாக இருக்கும் என்று சொல்லத்தக்க அளவுக்குள்ள தாராவிச் சேரிதானே தமிழர்களின் வாழிடம். இதில் போட்டிக்கும் பொறாமைக்கும் என்ன வேலை?

அவர்கள் சுரண்ட வந்தவர்கள் இல்லையே; சுரண்டப்பட்டு எலும்பும் தோலுமாய் ஆனவர்கள்தாமே. அண்ணாந்து பார்த்து வியக்கின் எழில் மிகுந்த மும்பையை உருவாக்கும் முயற்சியில் எழில் குலைந்து போனவர்கள்தாமே.

உனக்கு வெளி முதலீடு வேண்டும்; அந்த முதலீட்டைக் கொண்டு வருபவன் எந்த இனமாகவும், எந்த நாடாகவும் இருக்கலாம். சுரண்டுபவனிடம் உனக்கு இனப் பகை இல்லை; சுரண்டப்படுபவனிடம் இனப் பகை கொள்கிறாய். மாற்று இன முதலாளிகளையும் வெளியேறச் சொல்ல வேண்டியதுதானே.

இப்போது தமிழர்களை விட்டுவிட்டார்கள்; ஏழைப் பிகாரிகளின் மீது பாயத் தொடங்கியிருக்கிறார்கள்.

பாகுபடுத்தி அறியத் தெரியாத சிவசேனையின் குருட்டுத்தனமான இனப் போற்றுதலில் ஒரு குற்றமுண்டு. ஏராளமான புகார்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளான மராத்திப் பெண்மணியான பிரதிபா பாட்டீலைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் கூட்டணி தர்மத்தை உடைத்துக் கொண்டு போய் ஆதரித்தார்கள். தவறானவர்களால் நாடு கெடுவது ஒருபுறமிருக்கட்டும்; உங்கள் இனமாவது வாழுமா?

பால்தாக்கரேயை இடத்தில் வைத்தால் கருணாநிதியை வலத்தில் வைக்க வேண்டும். இருவருமே ஒரே மாதிரியான கோணல் சிந்தனையாளர்கள். ஆ. ராசா ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் செய்துவிட்டாரே என்னும்போதும், உயர் நீதிமன்ற நீதிபதி தினகரன் அரசு நிலத்தை வளைத்துக் கொண்டு விட்டாரே என்னும்போதும், அவர்களெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் மேல்ஜாதியினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று சொல்லி அவர்களைப் பாதுகாப்பதற்கு அரசு இயந்திரத்தை வேறு பயன்படுத்துவார் கருணாநிதி.

கருணாநிதி, பால்தாக்கரேக்கெல்லாம் தடித்த நாக்கு; எதையும் பேசுவார்கள்.

நல்லவன் தன் இனத்துக்கும் மாற்றானுக்கும்கூட நன்மையே செய்வான். கெட்டவன் மாற்றானுக்கு மட்டுமில்லை; தன் இனத்துக்கும் கூடக் கேடே செய்வான்.

இப்போது சச்சின் டெண்டுல்கர் இன உணர்வுக் கொள்கைக்கு எதிராகக் கொம்பு சீவி விடப்பட்டுள்ளார்.

“நான் முதலில் இந்தியன்; இரண்டாவதாகத்தான் மும்பைக்காரன்; மும்பை அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தம்” இது டெண்டுல்கரின் ஞானமொழி!

ஒருகாலத்தில் மும்பைக்குக் குஜராத்திகள் சொந்தங் கொண்டாடினார்கள். அப்போது மும்பையை மீட்பதற்குத் தன்னுடைய ஒரு சுண்டுவிரலைக்கூட அசைக்காத டெண்டுல்கர், இப்போது மும்பையை இந்தியாவுக்குத் தானம் வழங்குகின்ற ஞானகுருவாக மாறிவிட்டார்.

ஆனால் டெண்டுல்கரின் முதிர்ச்சியற்ற இயற்கை அல்லாத பேச்சு நேர்மையே வடிவான பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமாருக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துவதற்குக் காரணம் பிகாரிகளைப் போட்டுச் சிவசேனை குதறி எடுத்ததுதான். பால்தாக்கரே போன்ற முறையற்ற வழிமுறைகளைக் கையாளுவோரால், நியாயமான மொழி வழி இனக் கொள்கை கூடச் சிக்கலுக்குள்ளாகிறது.

ஒருகாலத்தில் "மதராஸ் மனதே' என்று தெலுங்கர்கள் சென்னைக்குச் சொந்தம் கொண்டாடினார்கள். அப்போது கருணாநிதி பராசக்திக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தார். அன்றைய முதலமைச்சர் ராஜாஜி, மத்திய அமைச்சரவையில் அமைச்சராவதற்குத் தனக்கொரு மகன் நரசிம்மன் இருந்தும், மாநிலங்களவை உறுப்பினராக்குவதற்குத் தனக்கொரு மகள் நாமகிரி இருந்தும், தெலுங்கர்களின் மாபெரும் கிளர்ச்சிகளுக்கிடையே, தன்னுடைய நிகரற்ற செல்வாக்கை தில்லியிலே செலுத்திச் சென்னையை மீட்டுத் தந்தார். ராஜாஜி இல்லாவிட்டால் சென்னைதான் எங்கே?

மும்பை இந்தியாவுக்குச் சொந்தம் என்று ஒரு மராத்தியன் டெண்டுல்கரே சொல்கிறான் என்றால் பால்தாக்கரே கொதித்தெழ மாட்டாரா?

மும்பை இந்தியாவுக்குச் சொந்தம் என்று டெண்டுல்கர் சொன்னவுடன் மகாராஷ்டிர காங்கிரஸ் முதலமைச்சரும் கைதட்டுகிறார். ஏதாவது புரிந்துதான் கைதட்டுகிறாரா?

உலகம் யாவையும் தாம் உளவாக்கி, பின்பு அவற்றை நீக்கி, தான் மட்டும் நீங்காமல், எல்லையிலா விளையாட்டுக்குடையவனாகத் திகழ்கிறானே எம்பெருமான், அவனுக்குத் தானமாகக் கொடுப்பதற்கு வள்ளல் மாபலிக்குச் சொந்தமாக இரண்டடி மண் இருந்தது.

இந்தியாவுக்குச் சொந்தமாக அந்த இரண்டடி மண்ணையாவது டெண்டுல்கர் காட்டட்டுமே. எல்லா மண்ணும் மொழிவழி இனங்களுக்குத்தானே சொந்தம்.

இந்தியா சீனாபோல் ஒரே மொழி; ஒரே இனம் என்னும் அமைப்புடைய நாடில்லை. இந்தியத் தாய்க்குப் பதினெட்டு நாக்குகள்; இருநூறு கோடி கைகள்!

பந்தடிக்கிறவன் பந்துதான் அடிக்க வேண்டும்; பாரதி போல் ஞானம் புகலக் கூடாது.

பாரதி வரிசைப்படுத்துவான்: “வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்; வாழிய பாரத மணித்திருநாடு”.

மொழிவழி இனங்களை எம்மான் காந்தி இனங்கண்டு உடன்பட்டதால்தான் இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் தோன்றின. அவற்றிற்கான அரசுகளும் பிறந்தன.

சிவசேனையின் வெறுப்பு அடிப்படையிலான மூர்க்கப் போக்குகள் நல்ல கொள்கைகளையும், நிலைகொள்ள விடாமல் செய்து விடுகின்றன என்றாலும் பால்தாக்கரேயின் மராத்தியச் சீற்றம் மாண்புடையதே!

நன்றி: தினமணி 25.11.2009

Wednesday, November 18, 2009

தமிழகத்தின் உரிமைகள் பலவும் தில்லி பலிபீடத்தில் கருணாநிதியால் காவு கொடுக்கப்பட்டிருக்கின்றன

முல்லைப்பெரியாறு அணை நீர்ப் பிரச்னையில் மீண்டும் கேரளம் தான் நினைத்ததைச் சாதித்துவிட்டது. தமிழகம் மறுபடியும் மறுபடியும் வஞ்சிக்கப்பட்டுவிட்டது.

1979-ம் ஆண்டிலிருந்து கடந்த 30 ஆண்டுகளாக பெரியாறு அணைப் பிரச்னையில் கேரளம் பொய்யான புள்ளி விவரங்கள், அடிப்படை இல்லாத ஆதாரங்கள் இவற்றின் மூலம், தான் நினைத்ததைச் சாதித்து வருகிறது.

பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைத்து அதன் மூலம் இடுக்கி அணைக்கு அதிக நீரைக் கொண்டு சென்று மின்உற்பத்தியை அதிகமாக்க வேண்டும் என்பதற்காக அணை பலவீனமாக இருப்பதாகக் கூக்குரல் எழுப்பியது.

இதன் விளைவாக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் அணையைப் பார்வையிட்டு, பெரியாறு அணை பலமாக இருந்தாலும் கேரள மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்கும்படியும், தமிழக அரசு தனது செலவில் அணையை மேலும் பலப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்யும்படியும், இந்தப் பணிகள் முடிந்தபிறகு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்றும் கூறினார். அதன்படி அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க தமிழகம் ஒப்புக்கொண்டது. இது கேரளத்துக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.

அணையைப் பலப்படுத்தும் பணிகளைத் தமிழகம் மேற்கொள்வதற்கு, கேரளம் பலவகையிலும் முட்டுக்கட்டைகளைப் போட்டது. 1980-ல் தொடங்கிய இந்தப் பணிகள் 2001-ம் ஆண்டு வரை 21 ஆண்டுகளாக நடைபெற்றன. மராமத்து வேலைகள் முடிவடைந்த பிறகும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்குக் கேரளம் சம்மதிக்கவில்லை. எனவே தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. 2001-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக்கொண்டபோது, அணையின் பலம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தருமாறு டாக்டர் டி.கே. மிட்டல் தலைமையில் 15 நிபுணர்கள் கொண்ட குழுவையும், டாக்டர் எஸ்.எஸ்.பிரார் தலைமையில் 20 நிபுணர்கள் கொண்ட குழுவையும் நியமித்தது.

இக்குழுவினர் பல்வேறு ஆய்வுகளை நடத்தி அணை பலமாக உள்ளது என்றும், 142 அடிக்கு தண்ணீர் மட்டத்தை உயர்த்தலாம் என்றும், பேபி அணையைப் பலப்படுத்திய பிறகு 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் ஆய்வறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் 2001-ம் ஆண்டில் தாக்கல் செய்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையை இழுத்தடித்துக் காலம் கடத்துகிற தந்திரத்தைக் கேரளம் கையாண்டது. இதன் விளைவாக 5 ஆண்டுகள் கடந்தன. இது கேரளத்துக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றியாகும்.

இறுதியாக 2006 பிப்ரவரி 27-ம் நாளில் தலைமை நீதிபதி சபர்வால், நீதிபதிகள் தக்கர், பாலசுப்பிரமணியம் ஆகிய மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற ஆயம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அணை பலவீனமாக இருக்கிறது என்று கேரளம் கூறும் புகாருக்கு ஆதாரம் எதுவும் இல்லை எனவும், அணையின் நீர்மட்டத்தை 142அடிக்கு உயர்த்தலாம் என்றும் கூறியது. ஆனால் இத் தீர்ப்பை செயல்படுத்தவிடாத வகையில் கேரளம் 17-3-2006 அன்று சட்டமன்றத்தில் நதிகள் பாதுகாப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து நிறைவேற்றியது. இதற்கு எதிராகத் தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடுத்தது. இதற்கிடையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி கேரள அரசு கொடுத்த விண்ணப்பத்தை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இதன் பின்னர் கேரளம் புதிய தந்திரத்தைக் கையாண்டது. புதிய அணை கட்டவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. 2006-ம் ஆண்டு இறுதியில் புதிய அணை கட்டுவது குறித்து ஆய்வு நடத்த மத்திய வனத்துறை மட்டும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரளம் விண்ணப்பித்தது. அப்போது அத்துறையின் அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த ராசாதான் இருந்தார். 2007 மே மாதத்துக்குப் பிறகு இத்துறையின் அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு பொறுப்பேற்றார். கேரளத்தின் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்ய இவர்கள் இருவரும் முன்வரவில்லை. அதன் விளைவாகத்தான் இப்போது ஆய்வு நடத்துவதற்குக் கேரளம் அனுமதி பெற்றுவிட்டது. இது கேரளத்துக்குக் கிடைத்த மூன்றாவது வெற்றியாகும்.

கேரளத்தின் புதிய சட்டம் செல்லாது என தமிழக அரசு தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மூன்றாண்டு காலத்துக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் முடிவு தனக்கு எதிராக இருக்கும் என்பதை உணர்ந்த கேரளம், விசாரணையின் இறுதிக் கட்டத்தில் புதிய பிரச்னையை வேண்டுமென்றே எழுப்பியது. பெரியாறு அணைப் பிரச்னையில் அரசியல் சட்டம் தொடர்பான பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் இந்த வழக்கை அரசியல் சட்ட ஆயம்தான் விசாரிக்க வேண்டும் எனக் கூறியது. வழக்கு நடந்த மூன்றாண்டு காலமும் இந்தக் கோரிக்கையை எழுப்பாத கேரளம் விசாரணையின் முடிவுக் கட்டத்தில் இந்தக் கோரிக்கையை எழுப்பியதற்கே காலம் கடத்தும் நோக்கமே காரணமாகும்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையில் கூடிய நீதிபதிகளின் ஆயம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பை இப்போது அரசியல் சட்ட ஆயம் விசாரிக்கவோ, மாற்றவோ அதிகாரம் உண்டா என்ற கேள்வியை எழுப்பி, கேரளத்தின் முயற்சியைத் தமிழகம் முறியடித்திருக்க வேண்டும். கேரளம் பிறப்பித்த புதிய சட்டம் குறித்த தீர்ப்பை உடனடியாக வழங்கவேண்டும் எனவும் வற்புறுத்தியிருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் முதலில் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், பிறகு தமிழக அரசின் ஆலோசனையைப் பெற்று அதன் விளைவாக அரசியல் சட்ட ஆயம் அமைப்பதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சிகரமானது. மூன்றாண்டுகாலமாக நடைபெற்ற விசாரணையை முடக்கிப் போட்டதன் மூலம் கேரளம் நான்காவது வெற்றியை அடைந்துவிட்டது.

மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கேரள அமைச்சர்களும் கேரளத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு புதிய அணை கட்டவேண்டும் என்ற கோரிக்கைக்கு பிரதமர் முதல் அனைவரிடமும் ஆதரவு திரட்டியுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ நமது நியாயத்தை எடுத்துக்கூறி ஆதரவு தருவதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. இதுமட்டுமல்ல. நமது எதிர்ப்பை பிரதமரிடமும் மற்றவர்களிடமும் பதிவு செய்ய தமிழக அரசு முற்றிலுமாகத் தவறிவிட்டது.

கடந்த 16-9-09 அன்று மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் புதிய அணை கட்டுவது குறித்து ஆய்வு நடத்துவதற்கு கேரளத்துக்கு அனுமதி கொடுத்துவிட்டார். ஆனால் உடனடியாக இப்பிரச்னையை பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு சென்று இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய வேலையைத் தமிழக அரசு செய்யவில்லை. தில்லியில் செய்ய வேண்டியதைச் செய்யாமல் மதுரையில் 1-11-09 அன்று மத்திய இணையமைச்சரைக் கண்டிக்கும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

ஆனால் 21-10-09 அன்று தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையில் இணையமைச்சரைக் கண்டித்துக் கூட்டம் என்பது, பெரியாறு புதிய அணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டம் என மாற்றப்பட்டது. பிறகு அந்தக் கூட்டத்தை நடத்தும் துணிவும் தி.மு.க.வுக்கு இல்லை.

காங்கிரசோடு மத்திய அரசில் தி.மு.க.வும் அங்கம் வகிக்கிறது. ஆனால் காங்கிரசுக்கு எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வர் அச்சுதானந்தன் தில்லியில் சாதிக்க முடிந்ததை கருணாநிதியால் தடுக்க முடியவில்லை. தில்லி அமைச்சருக்கு எதிராகக் கண்டனக் கூட்டத்தைக் கூட நடத்தும் துணிவு தி.மு.க.வுக்கு இல்லை. இது கேரளத்துக்குக் கிடைத்த ஐந்தாவது வெற்றியாகும்.

முல்லைப்பெரியாறு கேரள மாநிலத்தில் ஓடும் நதியாகும். தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையே ஓடும் நதியல்ல என்ற தவறான வாதத்தை கேரளம் உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்தபோதும், தமிழகத்தின் சார்பில் சரியான முறையில் அது மறுக்கப்படவில்லை. முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி கேரளத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலும் உள்ளது.

மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதியின் பரப்பளவில் 20 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது. பெரியாற்றில் ஓடும் நீரின் மொத்த அளவு 4,767.9 மில்லியன் கன மீட்டராகும். இதில் ஐந்தில் ஒருபகுதி நீர், அதாவது சுமார் 960 மில்லியன் கன மீட்டர் நீர் தமிழ்நாட்டில் உற்பத்தியாகி கேரளத்துக்குள் பாய்ந்தோடுகிறது. அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்தினால் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் நீர் வெறும் 126 மில்லியன் கன மீட்டர் ஆகும். அதாவது தமிழ்நாட்டு எல்லைக்குள் உற்பத்தியாகி பெரியாற்றில் கலக்கும் நீரில் சுமார் 8-ல் ஒரு பகுதி நீரையே நாம் கேட்கிறோம். எட்டில் ஏழு பகுதி நீர் கேரளத்துக்கு நம்மால் வழங்கப்படுகிறது. எனவே பெரியாறு பன்மாநில நதியே தவிர, கேரள நதி அல்ல.

இந்த உண்மைகளை மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் உணர்த்துவதற்குத் தமிழக அரசு அடியோடு தவறிவிட்டது. தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் புகார்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவது எப்படி என்பதற்கு மட்டுமே கருணாநிதி கவலைப்படுகிறாரே தவிர பெரியாறு அணை நீர் மீது தமிழகத்துக்கு உள்ள உரிமைகளை நிலைநாட்டுவது குறித்து அவர் கவலைப்படவில்லை.

காவிரிப் பிரச்னையிலும் தமிழகத்தின் உரிமைகளை வற்புறுத்தி நிலைநாட்டுவதைவிட மத்திய அரசுக்கு நல்லபிள்ளையாக நடந்துகொள்வதிலேயே கருணாநிதி முழு கவனம் செலுத்தியதால் நாம் பேரிழப்புக்கு ஆளாகியுள்ளோம்.

1970-ம் ஆண்டில் காவிரிப் பிரச்னையில் பேச்சுவார்த்தைகள் பயன்தராத நிலையில், நடுவர் மன்றம் அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக விவசாயிகளின் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டிருந்தது. பெங்களூரில் நடைபெறவிருந்த நாடாளுமன்றத் துணைத் தேர்தலில் இரு காங்கிரஸ் கட்சிகளும் போட்டியிட்டன. எனவே அதில் வெற்றி பெற வேண்டிய அவசியம் இந்திரா காங்கிரஸýக்கு இருந்தது.

அப்போது பிரதமர் இந்திரா, முதலமைச்சர் கருணாநிதியை அழைத்துப் பேசி, உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெறுமாறும், தான் காவிரிப் பிரச்னையைச் சுமுகமாகத் தீர்த்து வைப்பதாகவும் கூறினார். அதை ஏற்று அன்று கருணாநிதி அந்த வழக்கைத் திரும்பப் பெற்றதன் விளைவு பின்னால் நமக்குப் பெரும் இழப்புகளைத் தந்தது.

1971-ம் ஆண்டு இந்திரா காங்கிரஸýடன் தி.மு.க. கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட இந்த உறவு வழிவகுத்தது. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சரானார். ஆனால் இதற்குப் பிறகு கர்நாடகத்தில் இந்திரா காங்கிரஸின் சார்பில் முதலமைச்சரான தேவராஜ் அர்ஸ், காவிரியிலும் அதனுடைய துணை நதிகளிலும் சட்டவிரோதமாகவும், தமிழகத்தின் சம்மதமின்றியும் அணைகளைக் கட்டத் தொடங்கினார். 1990-ம் ஆண்டில் தான் உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி அப்போதைய பிரதமர் வி.பி.சிங் நடுவர் மன்றம் அமைக்க முன்வந்தார். இடைக்காலத்தில் 19 ஆண்டுகளில் அவ்வளவு அணைகளையும் கர்நாடகம் கட்டி முடித்துவிட்டது. அதன் விளைவாக தமிழகத்துக்குத் தண்ணீர் வருவது அறவே தடைப்பட்டுப்போனது.

நடுவர் மன்றத்தின் தலைவரான சித்ததோஷ் முகர்ஜி, நீதி தவறாதவர் என்ற பெயரெடுத்தவர். அவர் காவிரிப் பாசன பகுதி முழுவதையும் நேரில் பார்வையிட்டு உண்மை நிலவரத்தைத் தெரிந்துகொண்டார். எனவே அவரது தீர்ப்பு தங்களுக்கு எதிராகத்தான் அமையும் என்பதை உணர்ந்த கர்நாடக அரசியல்வாதிகள் அவரை நீக்குவதற்குரிய வழிமுறைகளைக் கையாண்டார்கள். அப்போது கர்நாடக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேவ கௌடா, சித்ததோஷ் முகர்ஜி மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொய்யான புகாரைத் தாக்கல் செய்தார். தமிழகத்தில் உள்ள காவிரிப் பாசனப் பகுதிகளை நடுவர் மன்ற நீதிபதிகள் பார்வையிட்டபோது, சில கோயில்களில் அவர்களுக்குப் பரிவட்ட மரியாதைகள் அளிக்கப்பட்டன. இவ்வாறு விலையுயர்ந்த பரிசுகளை இவர்கள் பெற்றிருப்பதால் நடுநிலை தவறிவிட்டார்கள் என தேவ கௌடா குற்றம் சாட்டினார். பிறகு அவரே கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராகவும் ஆகிவிட்டார். அப்போதும் இந்த வழக்கைத் திரும்பப் பெறவில்லை. அந்த வேளையில் தேவ கௌடாவின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவருக்கு எதிரான நிலையை எடுத்து வைக்கத் தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் முன்வரவில்லை.

காவிரிப் பிரச்னையில் தொடக்கம் முதல் தமிழகத்தின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த தேவ கௌடாவை மத்தியில் பிரதமராக்கவும் தி.மு.க. துணைநின்றது என்பதுதான் துரோகத்தின் உச்சகட்டமாகும். தேவ கௌடா பிரதமரான பிறகும்கூட நடுவர் மன்றத் தலைவருக்கு எதிரான வழக்கைத் திரும்பப் பெறவில்லை. அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க. அமைச்சர்களோ அல்லது தமிழ் மாநில காங்கிரஸ் அமைச்சர்களோ சித்ததோஷ் முகர்ஜி மீது சுமத்தப்பட்ட பழியைப் போக்குவதற்கு எதுவுமே செய்யவில்லை. எனவே அவர் மனம் நொந்து தனது பதவியிலிருந்து விலகினார். கர்நாடகத்தின் நோக்கம் வெற்றிபெற்றது. இதற்குக் கருணாநிதி துணைநின்றார் என்பதுதான் வரலாற்றுச் சோகமாகும்.

காவிரிப் பிரச்னையில் துரோகம் தொடர்ந்தது. நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பைக் கர்நாடகம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இந்தத் தீர்ப்பு வெளியானவுடன் அதைச் செயல்படுத்துவதற்கான திட்டத்தை மத்திய அரசு தீட்டியிருக்க வேண்டும். ஆனால் அதை மத்திய அரசு செய்ய முன்வரவில்லை. அவ்வாறு செய்ய வேண்டுமென்று தமிழக அரசும் வற்புறுத்தத் தவறிவிட்டது. 1992-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது. அப்போது பிரதமராக இருந்த குஜ்ரால் இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற மத்திய அரசு ஒரு திட்டத்தை தீட்டி, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்தைப் பெற்று இறுதி முடிவு செய்யும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி 30-5-97-ல் மத்திய அரசு ஒரு வரைவுத் திட்டத்தை தீட்டி மாநிலங்களின் கருத்தை அறிய அனுப்பியது. இந்த வரைவுத் திட்டத்தின்படி முழுமையான அதிகாரம் கொண்ட நதி நீர் ஆணையம் ஏற்படுத்துவதற்கான யோசனை கூறப்பட்டது. இதையும் கர்நாடகம் ஏற்காமல் வழக்கில் வாய்தா வாங்கியபடியே இருந்தது.

இதற்கிடையில் தில்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரதமராக வாஜ்பாய் பொறுப்பேற்றார். பிரதமர் வாஜ்பாய் 6-8-98 அன்று கூட்டிய முதலமைச்சர்கள் கூட்டத்தில் புதிய வரைவுத் திட்டம் விவாதத்துக்கு வைக்கப்பட்டது. இதில் காவிரி நதிநீர் ஆணையம் ஏற்படுத்தும் யோசனை கைவிடப்பட்டு பிரதமர் தலைமையிலான மாநில முதலமைச்சர்களின் கூட்டுக் குழு அமைக்கப்படும் என்ற யோசனை கூறப்பட்டிருந்தது. எந்த அதிகாரமில்லாத இந்தக் குழு அமைக்கும் யோசனையை கருணாநிதி ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டார். இதன் விளைவாக நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்போ அல்லது இறுதித் தீர்ப்போ இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. பிரதமர் தலைமையிலான முதலமைச்சர் குழுவும் எதுவும் செய்யவில்லை. பிரதமர் வாஜ்பாய் கூறியதற்காக அவரது யோசனையைக் கருணாநிதி ஏற்றுக்கொண்டதுதான் நமக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

தில்லியின் விரல் அசைவுக்கு ஏற்ப ஆடுவதைக் கருணாநிதி மற்ற பிரச்னைகளிலும் தொடர்ந்தார். ஒகேனக்கல் பிரச்னை அவ்வாறுதான் ஆனது.

1998-ம் ஆண்டில் தமிழக கர்நாடக அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி பெங்களூர் குடிநீர்த் திட்டத்துக்கும், ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இரண்டுமே குடிநீர்த் திட்டங்கள் என்பதால் எந்த மாநிலமும் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடாது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. பெங்களூர் குடிநீர்த் திட்டத்தை உடனடியாக கர்நாடக அரசு நிறைவேற்றிவிட்டது. ஆனால் தமிழகம் ஜப்பானிய அரசின் உதவியைப் பெற்று இத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்ததால் ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஆயிற்று. இத்திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கியபோது கர்நாடகம் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது. அப்போது கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடியூரப்பா, ஒகேனக்கல்லுக்கே வந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். அந்த வேளையில் கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. எனவே கூட்டணிக் கட்சியான காங்கிரசின் நலன் கருதி, ஒகேனக்கல் திட்டத்தை நிறுத்தி வைக்க கருணாநிதி தயங்கவில்லை.

“கர்நாடகத்தில் இன்று நடந்திடும் ஆளுநர் ஆட்சி முடிவுற்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைய இருக்கும் புதிய ஆட்சி மலரும் வரை அவசியம் கருதி பொறுத்திருப்போம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைந்த பிறகு அந்த ஆட்சி நமது நியாயத்தை உணரும் என்ற அசையாத நம்பிக்கையோடு இப்போது தாற்காலிகமாக அமைதி காப்போம்’’ என முதல்வர் கருணாநிதி அறிவித்தார். தமிழக எதிர்க்கட்சிகள் எல்லாம் இதைக் கண்டித்தன. மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லியும் ஓர் உண்மையைப் பகிரங்கமாக வெளிப்படுத்தினார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டதன் பேரில்தான் முதல்வர் கருணாநிதி ஒகேனக்கல் திட்டத்தை ஒத்திவைத்தார் என்று சொன்னார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காக ஒகேனக்கல் திட்டத்தைத் தள்ளி வைக்க கருணாநிதி முன்வந்தபோதிலும் காங்கிரஸ் அங்கு வெற்றிபெறவில்லை. பா.ஜ.க.தான் வெற்றிபெற்றது. ஒகேனக்கல் திட்டம் கிடப்பில் போடப்பட்டதுதான் மிச்சம்.

தில்லியில் எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் அந்தக் கட்சிகளின் நலன்களைக் காக்க தமிழகத்தின் நலன்களைக் காவு கொடுக்க கருணாநிதி ஒருபோதும் தயங்கமாட்டார் என்பதற்கு மேலும் ஓர் உதாரணம் உண்டு.

2008-ம் ஆண்டு இறுதியில் இலங்கையில் போர் உச்சகட்டத்தை அடைந்தபோது, அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மக்கள், கட்சி வேறுபாடின்றி போராட்டங்களை நடத்தினார்கள். மக்களின் கொதிப்புணர்வைச் சமாளிப்பதற்காக முதலமைச்சர் கருணாநிதி அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அக்கூட்டத்தில் 15 நாள்களுக்குள் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால், தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவது என்ற தீர்மானத்தை முதலமைச்சர் கருணாநிதியே முன்மொழிந்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் வழிமொழிய ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் இந்திய அரசை மட்டுமல்ல, சிங்கள அரசையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் பெரும் உற்சாகத்துடன் இந்தத் தீர்மானத்தை வரவேற்றனர். இலங்கையில் போர் முனையில் சாவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழர்கள் புதிய நம்பிக்கையைப் பெற்றார்கள். ஆனால் இவையனைத்தும் வீணடிக்கப்பட்டன.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தில்லியிலிருந்து விரைந்து வந்து முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். அவரது பேச்சு, தனக்குத் திருப்தி அளித்ததாக கருணாநிதி அறிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜியோ போர் நிறுத்தம் பற்றி எதுவும் சொல்லவில்லை. அப்படியானால் கருணாநிதிக்கு திருப்தி அளித்த அம்சம் எது? அனுபவமிக்க முதலமைச்சரான கருணாநிதி என்ன செய்திருக்க வேண்டும்? அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து எடுத்த முடிவு; இதில் நானாகத் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது. எனவே மீண்டும் அனைத்துக்கட்சிகளையும் கூட்டி இது குறித்து விவாதித்து எங்கள் முடிவை உங்களுக்குத் தெரிவிக்கிறேன் என்று கருணாநிதி சொல்லியிருக்க வேண்டும். ஆனால் வந்தவரோ தில்லி அதிகாரபீடத்தின் தூதுவராயிற்றே. அவரையும் அவர் மூலம் தில்லி அதிகாரபீடத்தையும் திருப்திப்படுத்துவதுதானே கருணாநிதியின் நோக்கமும் கடமையும். எனவே உலகத் தமிழர்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார் கருணாநிதி. தொடர்ந்து தமிழகத்தின் உரிமைகள் பலவும் தில்லி பலிபீடத்தில் கருணாநிதியால் காவு கொடுக்கப்பட்டிருக்கின்றன. பதவி பேரத்தில் தமிழக உரிமைகள் பாழாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

நன்றி: தினமணி 18.11.2009

Tuesday, August 18, 2009

சட்டமெனும் இருட்டறை!

எப்போது ஒரு பிரச்னை ஆட்சியாளர்களை அலட்டுகிறதோ, சிந்திக்க வைக்கிறதோ அப்போதே அந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு விரைவிலேயே ஏற்படும் என்கிற நம்பிக்கையும் பிறக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் கலந்துகொண்ட முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் அனைவரும் ஒத்த கருத்தினராக இருந்து கவலை தெரிவித்த விஷயம் தீர்ப்புக்காகத் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் பற்றியது.

ஜூன் 30, 2009 நிலவரப்படி, உச்ச நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 52,592. பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் 40,17,596. மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளோ ஏறத்தாழ மூன்று கோடி. இந்தப் புள்ளிவிவரங்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே வழங்கி இருக்கிறார். பிரதமரும் தமது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த அளவுக்கு வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கு என்ன காரணம்? உச்ச நீதிமன்றக் குறிப்புப்படி, தேங்கிக் கிடக்கும் இந்த வழக்குகளை விசாரித்து ஒரு வருடத்தில் அத்தனை வழக்குகளையும் பைசல் செய்வதற்கு 1,500 உயர் நீதிமன்ற நீதிபதிகளும், 23,000 கீழமை நீதிமன்ற நீதிபதிகளும் தேவை. உயர் நீதிமன்றங்களில் மட்டும் சுமார் 280 நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருக்கிறார்கள். முதலில் நீதிபதிகளுக்கான பணி இடங்கள் முறையாகவும் விரைவாகவும் நிரப்பப்பட வேண்டும்.

இப்போது உடனடியாக ஓய்வுபெற்ற நீதிபதிகளை ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விசாரிக்க நியமிக்கலாமே. சமீபத்தில், சென்னையில் சட்ட அமைச்சர் முன்னிலையில் "மெகா லோக் அதாலத்' என்ற பெயரில் ஒரே நாளில் 15,650 வழக்குகளைப் பைசல் பண்ண முடிந்திருக்கிறதே? இதேபோல போர்க்கால அடிப்படையில் எல்லா நீதிமன்றங்களிலும் வழக்குகள் பைசல் செய்யப்படுவதில் என்ன தடை இருக்க முடியும்?

தேவையில்லாமல், காலனி காலத்திய நீதிபதிகளின் பாணியில் அளவுக்கு அதிகமான விடுமுறைகளை இப்போதும் நமது நீதிபதிகள் அனுபவித்துக் கொண்டிருப்பதே தார்மிகக் குற்றம். இத்தனை வழக்குகள் தேங்கிக் கிடக்கும்போது, பொறுப்புணர்வுடன் விடுமுறைகளைக் குறைத்துக் கொண்டு வழக்குகளைப் பைசல் செய்ய வேண்டும் என்கிற அக்கறை நீதிபதிகளுக்கும், நமது வழக்கறிஞர்களுக்கும் ஏன் வருவதில்லை?

பண்டைக் காலங்களில் கிராமப் பஞ்சாயத்துகள் இருந்தன. ஊர்ப் பெரியவர்கள் கூடித் தீர்ப்பளித்தனர். அதே பாணியில் மத்திய அரசு கொண்டுவர இருக்கும் கிராம் நியாயாலய மசோதா வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அரசு நீதித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு அளித்து, நீதிமன்றச் செயல்பாடுகளை நவீனப்படுத்த உதவ வேண்டும். நீதிமன்ற ஆவணங்கள் கணிப்பொறியின் உதவியுடன் பதிவு செய்யப்பட வேண்டும்.

இன்றைய நிலையில், இந்தியாவில் வழக்கு விசாரணைக்கான சராசரி கால அளவு என்ன தெரியுமா? 15 ஆண்டுகளாம். இதை மூன்று ஆண்டுகளாகக் குறைக்க முயற்சிப்பதாகச் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

அதுபோல, கொலைக் குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பளிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக அந்த மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. உதாரணமாக, தில்லியில் மட்டும் ஆண்டொன்றுக்கு 380 கொலைகள் நடப்பதாகவும், ஆனால் சுமார் 250 வழக்குகளைத்தான் பைசல் செய்ய முடிகிறது என்றும் கவலை தெரிவித்தனர். இதே நிலைமைதான் ஏனைய மாநிலங்களிலும். இந்தப் பிரச்னைக்கு உடனடியாக முடிவு காணப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

இந்தியச் சிறைச்சாலைகளில் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை திடுக்கிட வைக்கிறது. இந்தியாவில் உள்ள சுமார் 1,500 சிறைச்சாலைகளில் இரண்டரை லட்சம் கைதிகளைப் பாதுகாப்பதற்கான வசதிகள்தான் உள்ளன. ஆனால் சிறைகளில் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கையோ மூன்றரை லட்சத்துக்கும் அதிகம். இதில் 70 சதவிகிதம் கைதிகள் விசாரணைக் கைதிகள். அதாவது, இவர்கள் குற்றம் செய்தார்களா என்பதுகூட நிரூபிக்கப்படாமல், சிறையில் காலத்தைக் கழிப்பவர்கள்.

இதைவிடக் கொடுமையான விஷயம் என்ன தெரியுமா? இந்த விசாரணைக் கைதிகளில் 70 சதவிகிதம் பேர், சிறு குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டவர்கள். இவர்களில் பலர் தண்டிக்கப்பட்டால்கூட ஒரு சில நாள் தண்டனைதான் கிடைக்கும். ஆனால் தீர்ப்பு எழுதப்படாமல், குற்றம் நிரூபிக்கப்படாமல் மாதக் கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிரபராதிகளின் அவலம் எழுத்தில் எழுதி மாளாது. உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் பலமுறை, இதுபோன்ற விசாரணைக் கைதிகளை சொந்த ஜாமீனில் விடும்படி அறிவுறுத்தியும், காவல்துறையினரும் கீழமை நீதிமன்றங்களும் அதை சட்டை செய்வதாகத் தெரியவில்லை.

விசாரணைக் கைதிகள் என்கிற பெயரில் மூன்று மாதத்திற்கும் அதிகமாக, சிறு குற்றங்களில் கைது செய்யப்பட்ட யாரையும் சிறையில் வைத்திருப்பது மனித உரிமை மீறல் என்று கருதப்பட வேண்டும். அப்படிப்பட்ட மனித உரிமை மீறல்களுக்குச் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். கீழமை நீதிமன்றங்கள் இந்தப் பிரச்னையில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

பிரதமரையும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையும் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தேசத்தையும் சிந்திக்க வைக்கும் பிரச்னையாக இது மாறினால் மட்டும்தான் இதற்குத் தீர்வு ஏற்படும்.

நன்றி: தினமணி 18.08.2009