Tuesday, August 18, 2009

சட்டமெனும் இருட்டறை!

எப்போது ஒரு பிரச்னை ஆட்சியாளர்களை அலட்டுகிறதோ, சிந்திக்க வைக்கிறதோ அப்போதே அந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு விரைவிலேயே ஏற்படும் என்கிற நம்பிக்கையும் பிறக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் கலந்துகொண்ட முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் அனைவரும் ஒத்த கருத்தினராக இருந்து கவலை தெரிவித்த விஷயம் தீர்ப்புக்காகத் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் பற்றியது.

ஜூன் 30, 2009 நிலவரப்படி, உச்ச நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 52,592. பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் 40,17,596. மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளோ ஏறத்தாழ மூன்று கோடி. இந்தப் புள்ளிவிவரங்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே வழங்கி இருக்கிறார். பிரதமரும் தமது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த அளவுக்கு வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கு என்ன காரணம்? உச்ச நீதிமன்றக் குறிப்புப்படி, தேங்கிக் கிடக்கும் இந்த வழக்குகளை விசாரித்து ஒரு வருடத்தில் அத்தனை வழக்குகளையும் பைசல் செய்வதற்கு 1,500 உயர் நீதிமன்ற நீதிபதிகளும், 23,000 கீழமை நீதிமன்ற நீதிபதிகளும் தேவை. உயர் நீதிமன்றங்களில் மட்டும் சுமார் 280 நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருக்கிறார்கள். முதலில் நீதிபதிகளுக்கான பணி இடங்கள் முறையாகவும் விரைவாகவும் நிரப்பப்பட வேண்டும்.

இப்போது உடனடியாக ஓய்வுபெற்ற நீதிபதிகளை ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விசாரிக்க நியமிக்கலாமே. சமீபத்தில், சென்னையில் சட்ட அமைச்சர் முன்னிலையில் "மெகா லோக் அதாலத்' என்ற பெயரில் ஒரே நாளில் 15,650 வழக்குகளைப் பைசல் பண்ண முடிந்திருக்கிறதே? இதேபோல போர்க்கால அடிப்படையில் எல்லா நீதிமன்றங்களிலும் வழக்குகள் பைசல் செய்யப்படுவதில் என்ன தடை இருக்க முடியும்?

தேவையில்லாமல், காலனி காலத்திய நீதிபதிகளின் பாணியில் அளவுக்கு அதிகமான விடுமுறைகளை இப்போதும் நமது நீதிபதிகள் அனுபவித்துக் கொண்டிருப்பதே தார்மிகக் குற்றம். இத்தனை வழக்குகள் தேங்கிக் கிடக்கும்போது, பொறுப்புணர்வுடன் விடுமுறைகளைக் குறைத்துக் கொண்டு வழக்குகளைப் பைசல் செய்ய வேண்டும் என்கிற அக்கறை நீதிபதிகளுக்கும், நமது வழக்கறிஞர்களுக்கும் ஏன் வருவதில்லை?

பண்டைக் காலங்களில் கிராமப் பஞ்சாயத்துகள் இருந்தன. ஊர்ப் பெரியவர்கள் கூடித் தீர்ப்பளித்தனர். அதே பாணியில் மத்திய அரசு கொண்டுவர இருக்கும் கிராம் நியாயாலய மசோதா வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அரசு நீதித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு அளித்து, நீதிமன்றச் செயல்பாடுகளை நவீனப்படுத்த உதவ வேண்டும். நீதிமன்ற ஆவணங்கள் கணிப்பொறியின் உதவியுடன் பதிவு செய்யப்பட வேண்டும்.

இன்றைய நிலையில், இந்தியாவில் வழக்கு விசாரணைக்கான சராசரி கால அளவு என்ன தெரியுமா? 15 ஆண்டுகளாம். இதை மூன்று ஆண்டுகளாகக் குறைக்க முயற்சிப்பதாகச் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

அதுபோல, கொலைக் குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பளிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக அந்த மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. உதாரணமாக, தில்லியில் மட்டும் ஆண்டொன்றுக்கு 380 கொலைகள் நடப்பதாகவும், ஆனால் சுமார் 250 வழக்குகளைத்தான் பைசல் செய்ய முடிகிறது என்றும் கவலை தெரிவித்தனர். இதே நிலைமைதான் ஏனைய மாநிலங்களிலும். இந்தப் பிரச்னைக்கு உடனடியாக முடிவு காணப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

இந்தியச் சிறைச்சாலைகளில் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை திடுக்கிட வைக்கிறது. இந்தியாவில் உள்ள சுமார் 1,500 சிறைச்சாலைகளில் இரண்டரை லட்சம் கைதிகளைப் பாதுகாப்பதற்கான வசதிகள்தான் உள்ளன. ஆனால் சிறைகளில் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கையோ மூன்றரை லட்சத்துக்கும் அதிகம். இதில் 70 சதவிகிதம் கைதிகள் விசாரணைக் கைதிகள். அதாவது, இவர்கள் குற்றம் செய்தார்களா என்பதுகூட நிரூபிக்கப்படாமல், சிறையில் காலத்தைக் கழிப்பவர்கள்.

இதைவிடக் கொடுமையான விஷயம் என்ன தெரியுமா? இந்த விசாரணைக் கைதிகளில் 70 சதவிகிதம் பேர், சிறு குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டவர்கள். இவர்களில் பலர் தண்டிக்கப்பட்டால்கூட ஒரு சில நாள் தண்டனைதான் கிடைக்கும். ஆனால் தீர்ப்பு எழுதப்படாமல், குற்றம் நிரூபிக்கப்படாமல் மாதக் கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிரபராதிகளின் அவலம் எழுத்தில் எழுதி மாளாது. உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் பலமுறை, இதுபோன்ற விசாரணைக் கைதிகளை சொந்த ஜாமீனில் விடும்படி அறிவுறுத்தியும், காவல்துறையினரும் கீழமை நீதிமன்றங்களும் அதை சட்டை செய்வதாகத் தெரியவில்லை.

விசாரணைக் கைதிகள் என்கிற பெயரில் மூன்று மாதத்திற்கும் அதிகமாக, சிறு குற்றங்களில் கைது செய்யப்பட்ட யாரையும் சிறையில் வைத்திருப்பது மனித உரிமை மீறல் என்று கருதப்பட வேண்டும். அப்படிப்பட்ட மனித உரிமை மீறல்களுக்குச் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். கீழமை நீதிமன்றங்கள் இந்தப் பிரச்னையில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

பிரதமரையும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையும் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தேசத்தையும் சிந்திக்க வைக்கும் பிரச்னையாக இது மாறினால் மட்டும்தான் இதற்குத் தீர்வு ஏற்படும்.

நன்றி: தினமணி 18.08.2009

Thursday, March 26, 2009

நீதி கிடைக்க மக்கள் என்ன செய்ய வேண்டும்? சனநாயகத் தூண்கள் வாய்திறக்குமா?

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் புஷ்சை தொடர்ந்து சீனப் பிரதமரை நோக்கி செருப்பு வீசப்பட்டது. இந்த சம்பவம் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அந்த பல்கலைக்கழகத்தின் ஒரு அரங்கில் சீனப் பிரதமர் வென் ஜியாபாவோ உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு இளைஞர் அவரை நோக்கி செருப்பை வீசி “இது ஒரு மோசடி’ என்று கத்தினார். “இந்த சர்வாதிகாரி இங்கே பொய்கள் சொல்லிக் கொண்டிருப்பதை எப்படி கேட்டுக் கொண்டிருக்க முடியும்” என்று அந்த இளைஞர் தெரிவித்தார்.
...

சுவீடன், ஸ்டாக்ஹோம் நகர பல்கலைக்கழகத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டு தூதுவர் Benny Dagan மீது இரண்டு மாணவர்கள் தமது காலணிகளை கழற்றி வீசினார்கள். தொடர்ந்து புத்தகங்களும் பறந்து வந்து தூதுவரை தாக்கி நிலை குலைய வைத்தது. இருப்பினும் சில நிமிடங்களில் சுதாகரித்துக் கொண்ட தூதுவர் தொடர்ந்து "ஹமாசிடமிருந்து தேசத்தை பாதுகாப்பது பற்றி" உரையாற்றினார். "கொலைகாரன்", "இன்டிபதா" போன்ற சுலோகங்களை முழங்கிக் கொண்டிருந்த, மாணவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சுவீடன் ஊடகங்கள் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன.
...

இந்திய வரலாற்றிலும் “செருப்பு“-க்கு எப்போதுமே ஒரு முக்கிய இடம் உண்டு. “இராமனின் செருப்பு” இந்த நாட்டை ஆண்டது முதல் அண்மையில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி மீது செருப்பு வீசப்பட்டது வரை வரலாற்றில் செருப்பின் பதிவுகள் ஏராளம்.

“செருப்பால் அடிப்பேன்” என்று சொல்வது, ஒருவரை செருப்பால் அடிப்பது, செருப்புமாலை போடுவது போன்ற நிகழ்வுகள் அனைத்தும் குறிப்பிட்ட நபரின் மீதோ அல்லது குறிப்பிட்ட நிறுவனத்தின் மீதுதோ உள்ள எதிர்ப்பு உணர்ச்சியே இதற்கு காரணமாக உள்ளது.

...

அண்மையில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியின் மீது செருப்பு வீசப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மராட்டிய மாநிலத் தலைநகர் மும்பையில் செயல்பட்டு வரும் பாசுகோ இசைக் கல்லூரிக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான நன்கொடை வருகிறது. இதை கல்லூரி நிர்வாகம் முறைகேடு செய்வதாக அக்கல்லூரியில் ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் மாணவிகள் மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

ஆனால் இந்த வழக்கை மராட்டிய அமர்வு நீதிமன்றமும், மும்பை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன.

இதனை எதிர்த்து பவித்ரா முரளி என்ற ஆராய்ச்சி மாணவி உச்ச நீதிமன்றத்தில் 10 முறைக்கும் அதிகமாக மேல் முறையீடு செய்தார். ஆனால் ஏதேதோ காரணம் காட்டி ஒவ்வொரு முறையும் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தங்களது வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளாததுடன், தங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர ஆணையிட்ட நீதிபதிகளை சிறையில் அடைக்க வேண்டும் என்று பவித்ரா முரளி உள்ளிட்ட 4 மாணவிகள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இசைக் கல்லூரி மீதும் புதிய வழக்கைத் தொடர்ந்தனர்.

இந்த இரு வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அரிசித் பசாயத், ஏ.கே. கங்கூலி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

இதில், மாணவிகள் பவித்ரா முரளி, லீலா டேவிட், சரிதா பாரிக், என்னட் கோட்டியான், சரிதா பாரிக்கின் தந்தை கிசோர் பாரிக் உள்ளிட்டவர்கள் நீதிமன்றத்தில் நேர் நின்று வாதிட்டனர்.

இவர்கள் முறைகேடுகள் தொடர்பாக 700 பக்க ஆவணங்களைத் தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்த அவர்கள், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தக் கோரினர்.

ஆனால் 700 பக்க ஆவணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நீதிபதி அரிசித் பசாயத் கூறியதை அடுத்து அவருக்கும், மாணவிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதத்தால் கோபமடைந்த நீதிபதி, மாணவிகளை வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். நீதிபதியின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த மாணவி பவித்ரா முரளி, கீழ் நீதிமன்றங்களைப் போல உச்ச நீதிமன்றத்திலும் ஊழல் மலிந்துவிட்டது என்று கூறியபடியே தனது காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி அரிசித் பசாயத்தை நோக்கி வீசினார். அப்போது அரிசித் பசாயத் சற்று நகர்ந்ததால் அவர் மீது செருப்பு படவில்லை.

இ‌ந்த சம்பவத்தைக் கண்ட வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

நீதிபதிகள் ஆணைப்படி அங்குப் பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.

நீதிபதி மீது செருப்பு வீசியதற்காகவும், நீதிமன்றத்தை அவமதித்ததற்காகவும் 5 பேருக்கும் 3 மாதச் சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

மேலும், நீதிபதிகள் அரிசித் பசாயத்தும், ஏ.கே. கங்கூலியும், நீதிமன்ற அவமதிப்பு மற்றும் இந்த நடவடிக்கை குறித்து பெரிய அமர்வு விசாரித்து தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளனர்.

வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நீதிபதி அரிசித் பசாயத்திற்கும் மாணவிகளுக்குமிடையே நடந்த விவாதம் இங்கே குறிப்பிடத்தக்கது,

நீதிபதி அரிசித் பசாயத்: 700 பக்க ஆவணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. சுருக்கமாக தாருங்கள்.

மாணவிகள்: எங்களுக்குக் கிடைத்த அனைத்து சான்றுகளையும் உங்கள் முன் தாக்கல் செய்திருக்கிறோம். அவற்றின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும்.

பசாயத்: எங்களுக்கு அதிகப் பணிகள் உள்ளன. சான்றுகளைச் சுருக்கமாகத் தாருங்கள்.

மாணவிகள்: இசைப் பள்ளியில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக மராட்டிய நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடர்ந்தோம். ஆனால் அங்கு ஊழல் நிலவியதால் எங்கள் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. எனவே உங்களிடம் நீதி கிடைக்கும் என்று இங்கு வந்திருக்கிறோம். நீங்கள் மராட்டிய நீதிமன்றங்களைப் போல நடந்துகொள்ளக்கூடாது.

பசாயத்: நீதிபதிகளுக்கு நீங்கள் கட்டளையிடக்கூடாது

மாணவிகள்: நீதிபதிகளும் மக்களுக்காகத்தான் இருக்கிறார்கள்.

பசாயத்: எங்களைப் பதவியில் அமர்த்தியவர்கள் நீங்கள் அல்ல. எங்களுக்கு நீங்கள் கட்டளையிடாதீர்கள்.

மாணவிகள்: நாங்கள் இந்தியக் குடிமக்கள். நாங்கள்தான் உங்களைப் பதவியில் அமர்த்தும் அதிகாரம் பெற்றவர்கள். எங்களது வரிப்பணத்தில்தான் உங்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.
...
சனநாயகம் தழைத்தோங்குவதாக சொல்லப்படும் விடுதலை பெற்ற இந்தியாவில் மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை என்பதற்கும் அப்படியே கிடைத்தாலும் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை என்பதற்கும் நம் நாட்டு நீதிமன்றத்தில் நடைபெறும் அனைத்து வழக்குகளுமே சான்று...

“நீதித்துறையில் ஊழல் மலிந்து விட்டது...” “நீதித்துறையில் கருப்பு ஆடுகள் ஊடுருவி உள்ளது...” என நீதிபதிகளே பலமுறை குறிப்பிட்டுள்ளனர். நீதித்துறையில் ஊழல் நடைபெறுவதை அனைவரும் அறிந்திருந்தும் இதை தடுப்பதற்காக நீதிமன்றமோ ஆட்சிமன்றமோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

நீதி நெறியோடு ஆட்சியை நடத்துவதும், அதை உறுதிபடுத்துவதும் சனநாயகத்தூண்களின் தலையாய கடமை.

சனநாயக நாட்டில் உரிமைக்காகவும், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், நீதியை நிலைநாட்ட வேண்டியும் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகின்றன. போராட்டம் நடத்துபவர்களுக்கு அதைச் செய்யக்கூடாது, இதைச் செய்யக்கூடாது, மீறினால் இந்த தண்டனை என்று சட்டம் எச்சரிக்கை விடுத்தே அவர்களை போராட அனுமதிக்கிறது. உணர்ச்சி வேகத்தில் தன்னெழுச்சியாக நடைபெறும் மக்கள் போராட்டங்களும் சட்டத்தால் ஒடுக்கப்படுகின்றன.

சனநாயக முறையில் சட்டத்திற்கு உட்பட்டு நீதிக்காக போராடும் ஒருவருக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் நீதி கிடைக்க மாற்று வழியையும் சட்டம் திறந்துவிடவேண்டும். அது பற்றி ஆட்சியாளர்களும் நீதிமன்றமும் சிந்திக்க வேண்டும்.
மக்களுக்குத் தேவை நீதி! நீதி! நீதி மட்டுமே...

இல்லையெனில் இதுபோன்ற செருப்படி நிகழ்வுகளால் சனாநாயக நாடுகள் வெட்கி தலைகுணிவது தொடர்கதையாகிவிடும்...

“இராமனின் செருப்பின் பெயரால் ஆளப்பட்டதற்கே வெட்கப்படாத நாம், செருப்பால் அடிவாங்கியதற்காகவா வெட்கப்படப்போகிறோம்...”


துணைநின்றவை:
தமிழ் ஓசை நாளேடு, 21.03.2009
யாகூ.காம்
கூகுல்.காம்

Saturday, January 24, 2009

இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் தமிழ்!

இந்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை பற்றி நாட்டுமக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் அதனுடைய இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நூற்றுக்கணக்கான மொழிகள் இருப்பினும் தமிழ் உள்ளிட்ட 13 (௧௩) மொழிகளில் தகவல்களை வெளியிட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் ரிசர்வ் வங்கியின் செயல்பாடு, நாட்டில் உள்ள அரசு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் வங்கிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

மேலதிக விவரங்களுக்கு....

http://www.rbi.org.in/commonman/Tamil/scripts/sitemap.aspx

Saturday, December 20, 2008

புதுச்சேரியில் சட்டத்தை வன்புணர்ச்சி செய்யும் சட்டத்தின் காவலர்கள்

“இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது” என்று ஆட்சியாளர்களால் சொல்லப்படுகிறது. மக்களும் நம்புகிறார்கள். நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்காகத்தான் சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம், காவல்துறை போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் சட்டத்தை உருவாக்கும் பணியையும் காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் அதை நடைமுறைப்படுத்தும் பணியையும் நமது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.

இதன் அடிப்படையிலேயே தொடர்புடையவர்கள் உறுமொழி ஏற்றுக்கொண்டு பணியாற்றுகிறார்கள். ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு ஏற்ப இவர்கள் நடந்துகொள்கிறார்களா? இல்லையா? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க; மக்களுக்காக இயற்றப்பட்ட சட்டத்தை கேளிக்கூத்தாக்கி ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் வலைத்து நெளித்து தன்னலத்திற்காக பயன்படுத்துகிறார்கள் என்பது நாட்டுமக்கள் அனைவரும் அறிந்ததே.

இத்தகைய இழிச்செயல்களை மிஞ்சும் வகையில் புதுச்சேரி காவல்துறையினர் நேற்று ஒரு செயலைச் செய்தனர். இச்செயல் “சட்டத்தின் மீது நடத்தப்பட்ட வன்புணர்ச்சி” என்று குறிப்பிடுவது மிக்கச் சரியாக இருக்கும்.

புதுச்சேரியைச் சேர்ந்த இரமேசு என்பவர், புதுச்சேரி காவலர்கள் தன்னிடம் கையூட்டு கேட்பதாக கொடுத்த புகார் தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துணை ஆய்வாளர் சறீதர், வழக்கறிஞர் அம்பலவாணன் ஆகியோரை நடுவண் குற்றப் புலனாய்வு காவலர்கள் பொறிவைத்து கையும் களவுமாக வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.

அவர்களை புதுச்சேரி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நேர்நிறுத்துமாறு நீதிபதி ஆணையிட்டார். இதன் பேரில் வெள்ளிக்கிழமை காலை நீதிமன்றத்தில் நடுவண் குற்றப் புலனாய்வு காவலர்கள் கைது செய்யப்பட்ட இருவரையும் நேர்நிறுத்தினர். அப்போது வழக்கறிஞர் அம்பலவாணணுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் களத்தில் இறங்கினர். தலைமை நீதிபதி கிருட்டிணராசா, வழக்கறிஞர் அம்பலவாணணுக்கு பிணை வழங்கினார். ஆனால் துணை ஆய்வாளர் சறீதருக்கு பிணை வழங்கவில்லை.

ஒரே வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞருக்கு பிணை கிடைத்த நிலையில் துணை ஆய்வாளருக்கு பிணை அளிக்காததால், ஆத்திரமடைந்த புதுச்சேரி காவலர்கள் திரண்டுவந்து ரகளையில் ஈடுபட்டனர்.

தலைமை நீதிபதி கிருட்டிணராசா அறை முன் காவலர்கள் திரண்டு முழக்கங்கள் எழுப்பினர். அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு ஒருசில காவல்நிலையங்களுக்கு பூட்டும் போட்டுவிட்டு ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள், தலைமைக் காவலர், காவலர்கள், ஆயுதப்படை பிரிவினர் என சுமார் 750- க்கும் மேற்பட்டவர்கள் நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர்.

சட்ட ஒழுங்கை காக்க வேண்டிய காவலர்களே ரகளையில் ஈடுபட்டதால் காவல் நிலையங்களிலும், போக்குவரத்துப் பணிகளிலும் பணியாற்ற போதுமான காவலர்கள் இல்லை.

இதையடுத்து சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலை உருவானது. இதற்கிடையில் காவலர்களின் குடும்பத்தினர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் காவலர்களுடன் வந்து, நீதிமன்ற வளாகத்தில் திரண்டனர். துணை ஆய்வாளருக்கு பிணை வழங்காத நீதிபதி வெளியில் செல்ல முடியாத வகையில் ஆர்ப்பாட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.

காவலர்களின் ரகளைக்கு பணிந்த நீதிபதி கையூட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட துணை ஆய்வாளர் சறீதருக்கு வெள்ளிக்கிழமை மாலை பிணை வழங்கினார். இதையடுத்து காவலர்கள் பட்டாசு வெடித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். புதுச்சேரி காவலர்களின் சட்டத்திற்கு புறம்பான இச்செயல் காலை 11 மணிக்குத் தொடங்கி மாலை 5.20 வரை நீடித்தது.

இதற்கிடையில் காவலர்களின் ரகளையை படம் பிடிக்க முயன்ற ஊடகவியலாளர்கள் செல்வராசு, சேகர், பாலா ஆகியோரை காவலர்கள் தாக்கினர். அவர்களின் படக்கருவிகளும் உடைக்கப்பட்டன. காவலர்களின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று பேரும் புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்ட ஊடகவியலாருக்கு ஆதரவாக குரல் கொடுத்த அரசியல் கட்சியினருடனும் காவலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடமையைச் செய்வதற்காக கையூட்டு பெற்ற காவலருக்கு ஆதரவாக புதுச்சேரி காவல்துறையே முழுமையாக செயல்பட்டதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மக்களாட்சி தத்துவத்தின் மீதும் சட்டத்தின்மீதும் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தற்போது எழுந்துள்ள ஐயம் என்னவென்றால்,

காவலர்கள் கடமையைச் செய்வதற்காக கையூட்டு பெறுவது சட்டப்படி ஏற்கப்பட்டுள்ளதா என்பதுதான்? (ஆம், என்றால் வெளிப்படையாக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இந்த வேலைக்கு இவ்வளவு தொகை என்று விலைப்பட்டியல் வைக்கட்டும். இல்லை, என்றால் நேற்று நீதிமன்றத்தில் அத்துமீறிய காவல்துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்கட்டும்.)

காவல்துறை உயர் அதிகாரிகளின் கட்டளைக்கு பணியாமல் கட்டளைகளை புறக்கணித்த காவலர்களின் மீது காவல்துறை எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?

நீதிபதி அறையை முற்றுகையிடவும், நீதிமன்ற வளாகத்தில் ரகளையில் ஈடுபடவும் காவல் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் அனுமதி உண்டா? இல்லை, என்றால் ரகளையில் ஈடுபட்ட காவலர்கள் மீதும் அவர்களின் உறவினர்களின் மீதும் நீதிமன்றமும் அரசும் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?

கையூட்டு வழக்கில் அரசு அதிகாரிகளோ அரசு ஊழியர்களோ கைது செய்யப்படும்போது அரசு ஊழியர் சங்கங்கள் நீதிமன்றத்தை முற்றுகையிட அனுமதிக்கப்படுமா? அப்படி முற்றுகையிட்டால் நீதிபதிகள் உடனடியாக பிணை வழங்குவார்களா?

எதிர்காலத்தில் புதுச்சேரி அரசியல்வாதிகளும், குற்றவாளிகளும் தங்களுக்கு பிணை வேண்டும் என்பதற்காக நீதி மன்றத்தில் கும்பல் கூட்டி ரகளையில் ஈடுபட்டால் நீதிபதிகள் உடனே பிணை வழங்கிவிடுவார்களா?

தங்களைத் தாக்கிய காவலர்களுக்கு எதிராக ஊடவிலாளர்கள் எப்படி எதிர்வினை புரியப்போகிறார்கள்?

இப்படி பல்வேறு ஐயத்துடன் புதுச்சேரி மக்கள் அச்சத்தோடு நடமாடுகிறார்கள்...

“வலிமையானது நிலைக்கும்” என்ற டார்வின் கோட்பாட்டைப் போல சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாக சொல்லப்படும் இந்த நாட்டில் “கும்பல் கூட்டி ரகளை செய்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்” என்ற புதிய கோட்பாட்டை புதுச்சேரி காவல்துறையும் நீதித்துறையும் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கியுள்ளனர்.

வாழ்க! சட்டத்தின் ஆட்சி!

Monday, November 17, 2008

சோதனை முயற்சி

சோதனை முயற்சி