Monday, March 15, 2010

பள்ளிகள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்படும்!

தமிழகத்தில் இப்போது பா.ம.க.​ ஆட்சியில் இருந்தால் மாநிலத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்படும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

தமிழக அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்னதாக,​​ கடந்த 8 ஆண்டுகளாக பா.ம.க.​ சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிடப்படுகிறது.

2010-2011-ம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கையை சென்னையில் ஞாயிற்றுக்கிழமை ராமதாஸ் வெளியிட,​​ அக்கட்சி எம்.எல்.ஏ.​ வேல்முருகன் பெற்றுக் கொண்டார்.

தமிழகத்தில் இப்போது பா.ம.க.​ ஆட்சியில் இருந்தால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து அதில் விவரிக்கப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியின் பயன் மக்களைச் சென்றடையவில்லை.​ இந்த நிலையை மாற்றக் கூடியதாக நிதிநிலை அறிக்கை இருக்க வேண்டும்.​ நிதிநிலை அறிக்கையின் மூலம் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று பா.ம.க.​ விரும்புகிறது.

மாநில மொத்த வருவாயில் 6 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்படும்.​ பள்ளிக்கல்வி முழுவதும் அரசினால் வழங்கப்படும்.​ தனியார் பள்ளிகளே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தி,​​ அனைத்தும் அரசுப் பள்ளிகளாக மாற்றப்படும்.

தொழில் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு மூலம் பயிலும் மாணவர்களின் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும்.

நாட்டின் குடியரசுத் தலைவருக்கு கிடைக்கும் மருத்துவ சிகிச்சை,​​ ஒரு சாதாரண குடிமகனுக்கும் கிடைக்கும் வகையில்,​​ ஒரு விரிவான மக்கள் நல்வாழ்வுக் கொள்கையை அரசு செயல்படுத்தும்.

உலகமயக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள சமத்துவம் அற்ற நிலையை மாற்றி,​​ மண்ணுக்கேற்ற பொருத்தமான மாற்றுக் கொள்கைகளை அரசு செயல்படுத்தும்.​ சிறப்பு வேளாண்-பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படும்.

வேளாண் வளர்ச்சிக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.​ சென்னை மாநகரை வாழத் தகுந்த நகரமாக ஆக்கும் வகையில் போக்குவரத்து முறை மாற்றி அமைக்கப்படும்.​ 'மக்களை இயங்கச் செய்வோம்;​ ஊர்திகளை அல்ல' என்ற அடிப்படையில் மக்களை மையப்படுத்தி போக்குவரத்து முறை உருவாக்கப்படும்.

அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் தேவையான அளவு குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படும்.​ ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும்.

குடிசை வாழ் மக்களின் வாழ்விட உரிமை காப்பாற்றப்படும்.​ அரசின் ஒவ்வொரு திட்டத்திலும் 40 சதவீத நிதி பெண்களுக்காக செலவிடப்படும்.​ மகளிர் இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட,​​ சிறுபான்மையின மக்களுக்கு உள்ஒதுக்கீடு வலியுறுத்தப்படும்.

பின் தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சிக்காக தனி கவனம் செலுத்தப்படும்.

பா.ம.க.​ மதிப்பீட்டின்படி நடப்பு நிதியாண்டில் தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய் வரவு ரூ.66 ஆயிரத்து 686 கோடியாக இருக்கும்.​ ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு ரூ.41 கோடியே 52 லட்சம் மொத்த நிதிப் பற்றாக்குறையாக இருக்கும்.​ இது சென்ற ஆண்டு நிதிப் பற்றாக்குறையான ரூ.1,894 கோடியைவிட குறைவு என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஏ.கே.​ மூர்த்தி,​​ பசுமைத் தாயகம் அமைப்பின் பொறுப்பாளர் அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நன்றி: தினமணி 15.03.2010

2 comments:

ஜோதிஜி said...

இவருடைய நல்ல எண்ணங்கள் அத்தனையும் சமீப தவறான முடிவால் தப்பாக முடிந்து விட்டது.

seeprabagaran said...

தவறான முடிவு எதுவென்று விளக்கினால் நன்று.