Wednesday, May 25, 2011

சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி‌க்கு ‌‌மீ‌ண்‌டு‌ம் செலவு தேவையா? த‌மிழக அரசு‌க்கு உ‌‌ய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் கே‌ள்‌வி?

சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி‌க்கு ஏ‌ற்கனவே ரூ.200 கோடி செல‌வி‌ட்டிரு‌க்கு‌ம்போது ‌மீ‌ண்டு‌ம் செலவா? எ‌ன்று த‌மிழக அரசு‌க்கு கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ள செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம், இது தொட‌ர்பாக வரு‌ம் 8ஆ‌ம் தே‌தி ப‌தி‌ல் ‌அ‌ளி‌க்கு‌ம் படி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

சமச்சீர் கல்வியை தமிழக அரசு நிறுத்தி வைத்ததை எதிர்த்து வழ‌க்க‌றிஞ‌ர் கே.ஷியாம் சுந்தர் தாக்கல் செய்து‌ள்ள பொதுநலன் மனுவில், தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதற்காக, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எஸ்.முத்துகுமரன் தலைமையில் நிபுணர்கள் குழுவை அமைத்து சாத்தியக்கூறுகளை முந்தைய அரசு ஆய்வு செய்தது.

கல்வியாளர்கள், பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர், பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்து இந்தக் குழு தமிழக அரசிடம் 4.7.07 அன்று அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை அரசு பரிசீலித்து, சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது தொடர்பாக அறிவித்தது. சமச்சீர் கல்வி தொடர்பாக விஜயகுமார் தலைமையிலும் குழு அமைக்கப்பட்டு அதன் அறிக்கையையும் அரசு பெற்றிருந்தது.

அதைத்தொடர்ந்து தமிழ்நாடு சமச்சீர் கல்வி சட்டம்-2010 கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌மு‌ம் உறுதி செய்துள்ளது. 2010-11ஆம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் 6ஆம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு அறிமுகம் செய்தது.

அதைத் தொடர்ந்து சமச்ச்சீர் கல்வியை 10ஆம் வகுப்பு வரை 2011-12ஆம் கல்வி ஆண்டுக்கு அரசு அறிமுகம் செய்தது. இதற்காக ரூ.200 கோடி செலவில் 9 கோடி பாட புத்தகங்களை தமிழக அரசு அச்சடித்துள்ளது.

இந்த நிலையில் தேர்தலில் முந்தைய ஆளும் கட்சி தோல்வி அடைந்து, அ.தி.மு.க. கட்சி தலைமையில் தமிழகத்தில் அரசு அமைந்துள்ளது. இந்த அரசு தற்போது சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்துவிட்டது. மேலும் பழைய கல்விமுறையையே பின்பற்றுவதற்கும் புதிய அரசு முடிவு செய்துள்ளது. சமச்சீர் கல்வி தொடர்பாக புதிய நிபுணர் குழுவை அமைக்கவும் அரசு தீர்மானித்துள்ளது.

இந்த முடிவுகள் பொதுமக்கள் நலனுக்கு எதிரானவை. எந்த ஒரு நிபுணர்களின் ஆலோசனையையும் பெறாமலேயே இந்த முடிவை தமிழக அரசின் அமைச்சரவை எடுத்துள்ளது. சமச்சீர் கல்வியை அறிமுகம் செய்வதில் ஏற்கனவே நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையை பெற்று அதை விரிவாக விவாதித்த பிறகுதான் அதற்கான சட்டத்தை முந்தைய அரசு கொண்டு வந்தது.

தற்போது பழைய கல்வி முறைக்கான புத்தகங்களை மீண்டும் அச்சடிப்பதற்காக பள்ளிக்கூடங்களின் திறப்பு நாளை அரசு தள்ளி வைத்துள்ளது. சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று இந்த அரசு எடுத்துள்ள முடிவு முற்றிலும் அரசியல் சார்பானது.

அரசின் கொள்கை முடிவு என்று கூறி தமிழக அரசு தப்பிக்க முடியாது. பல கோடி ரூபாய் செலவு செய்து முந்தைய அரசால் கொண்டுவரப்பட்ட இந்த கல்வி முறையை புதிய அரசு உடனடியாக தவிர்க்கக் கூடாது. எனவே சமச்சீர் கல்வி முறைக்கு எதிராக அமைச்சரவை எடுத்த முடிவு சட்டவிரோதமானது.

மாணவர்கள் நலனோ, பொதுமக்களின் நலனோ அதில் இல்லை. மக்கள் வரிப்பணம்தான் வீணாக்கப்படுகிறது. சட்டப்பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவை நிர்வாக ரீதியாக மீற முடியாது. எனவே ஏற்கனவே உள்ள சட்டத்தின்படி தமிழகத்தில் சமச்சீர் கல்வியை தொடர்ந்து நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இ‌ந்த மனு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், கே.பி.கே.வாசுகி முன்னிலையில் இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது, சம‌ச்‌சீ‌‌‌ர் க‌‌ல்‌வி ச‌ட்ட‌ம் இய‌‌ற்ற‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம்போது அதனை ம‌ா‌ற்ற த‌மிழ அரசு முடிவு எடு‌ப்பது ச‌‌ரியா? எ‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்‌பிய ‌நீ‌திப‌திக‌ள், சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி‌க்கு ஏ‌ற்கனவே ரூ.200 கோடி செல‌வி‌ட்டிரு‌க்கு‌ம்போது ‌மீ‌ண்டு‌ம் செலவா? எ‌ன ‌வின‌‌வின‌ர்.

சம‌‌‌ச்‌சீ‌ர் க‌ல்‌வியை அம‌ல்படு‌த்த‌க் கோரு‌ம் வழ‌க்‌கி‌ல் வரு‌ம் 8ஆ‌ம் தே‌தி ப‌தி‌ல் அ‌ளி‌க்க த‌மிழக அரசு‌க்கு ‌நீ‌திப‌திக‌ள் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளன‌ர்.

நன்றி: தமிழ்.வெப்துனியா.காம்

சமச்சீர் கல்வித் திட்டம்: அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் வலியுறுத்தல்

தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அதன் மாநிலச் செயலர் ம.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கல்வி என்பது வியாபார மற்றும் விற்பனை பொருளாக இருப்பதை எதிர்த்து கடந்த காலங்களில் பல்வேறு விதமான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக தமிழகத்தில் இந்தாண்டு முதல் சமச்சீர் கல்விமுறை அமுல்படுத்தப்படும் என தமிழக அரசு கடந்தாண்டு அறிவித்தது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து அதற்கான பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு நிறைவடைந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்ற அ.தி.மு.க அரசு இத்திட்டத்தை நிறுத்திவைப்பதாக அறிவித்திருப்பது வேதனைக்குரியதாகும்.

சமச்சீர்கல்வி திட்டத்தில் குறைபாடுகள் இருப்பின் அதனை அமுல்படுத்திக்கொண்டே அதனை சரிசெய்யும் நடவடிக்கையில் இறங்காமல் அதனை முழுமையாக நிறுத்திவைப்பது என்பது தனியார் கல்வி நிறுவனங்களின் வியாபாரத்திற்கு ஊக்கமளிக்கும் விதமாக அமையும்.

தேவையற்ற பாடங்களை சுற்றறிக்கைகள் மூலமாக நீக்கிவிட முடியும். மேலும் தரத்தை மேம்படுத்துவதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. தரம் குறைந்துவிடுவதாக கூறி தனியார் பள்ளிகளின் வியாபார நலனை உள்நோக்கமாகக் கொண்டு செயல்படக்கூடாது.
எனவே, தமிழக அரசு தனது முடிவினை மறுபரிசீலனை செய்யவதுடன் உடனடி நடவடிக்கையாக நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை அமுல்படுத்த உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் ம.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி 26.05.2011

Tuesday, May 24, 2011

சமச்சீர் கல்வி நிறுத்திவைப்பு: பா.ம.க. எதிர்ப்பு

சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பது என்ற தமிழக அரசின் முடிவுக்கு பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பாமக நிர்வாகக் குழு கூட்டம் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமையில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், அடிதடி, சண்டை சச்சரவுகள் போன்ற சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு குடிப்பழக்கம்தான் அடிப்படை காரணமாகும். மனித சமுதாயத்தை சீரழித்து வரும் குடிப்பழக்கத்திலிருந்து மக்களை விடுவிக்க பூரண மதுவிலக்கு கொள்கையை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

தனி மனித வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் கல்விதான் அடிப்படையாகும். ஏழை, பணக்காரர், நடுத்தர வகுப்பினர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே தரமான, சீரான உயர் கல்வி கிடைக்க வேண்டும். இதற்காகவே சமச்சீர் கல்வி முறை வேண்டும் என பா.ம.க. முதன் முதலில் குரல் கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இதனை வலியுறுத்தியதால் கடந்த ஆண்டில் சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அனைத்து வகுப்புகளுக்கும் இது விரிவுப்படுத்தப்படும் என எதிர்பார்த்த நிலையில் சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பது என தமிழக அரசு எடுத்துள்ள முடிவு பெரும் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை நீக்கி நடைமுறைப்படுத்துவதுதான் சரியானது. ரூ. 200 கோடி செலவில் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு தனது முடிவை திரும்பப் பெற வேண்டும். அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்படும் சமச்சீர் கல்வித் திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிர்வாகக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி 25.05.2011

சமச்சீர் கல்வியை நிறுத்திவைக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: அரசுக்கு கல்வியாளர்கள் கோரிக்கை

சமச்சீர் கல்வியை நிறுத்திவைக்கும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பேராசிரியர்கள் அ.மார்க்ஸ், கல்யாணி, கே.ராஜு, த.பச்சையப்பன், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, வழக்கறிஞர் ரஜினி ஆகியோர் கூறியதாவது,

பல்வேறு பாடத்திட்டங்கள் போய் பொதுப்பாடத்திட்டம் என்கிற அளவில் கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. 1 முதல் 10 ம் வகுப்பு வரை பொதுப்பாடத்திட்டம், பாடநூல்கள் உருவாக்க குழுக்கள் அமைக்கப்பட்டன.

குழுக்களின் அறிக்கை அடிப்படையில் பொது விவாதத்துக்குப் பிறகே பாடத்திட்டங்களை இறுதி செய்து பாடநூல்கள் அச்சடிக்கப்பட்டன. இந்த நிலையில், பாடத்திட்டம் தரமாக இல்லை என்று ஒரு தரப்பு கருத்தை ஏற்று சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதை அரசு நிறுத்திவைத்துள்ளது. இது பெரும் பொருள் இழப்பு மட்டுமல்ல, மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தும்.

பொதுக்கல்வி வாரியத்தில் 7 கல்வித் துறை அதிகாரிகள், 3 கல்வியாளர்கள், மெட்ரிக், ஆங்கிலோ, ஓரியண்டல் ஆசிரியப் பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளனர். பொதுக்கல்வி வாரியத்தின் ஏற்புடன் பாடத்திட்டமும், பாடநூலும் அச்சிடப்பட்டன.

அப்படியிருக்கும்போது, சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரமற்றதாக உள்ளது என்று அமைச்சரவை எப்படி முடிவுக்கு வர முடியும்?

இந்தப் பாடத்திட்டத்தைப் பற்றி அரசுக்கு யாராவது எழுத்துப்பூர்வமாக குறை தெரிவித்தார்களா? அல்லது ஏதேனும் வல்லுநர் குழு இந்தப் பாடத்திட்டம் சரியில்லை என்று அறிக்கைச் சமர்ப்பித்ததா?

எந்த அடிப்படையில் இந்தப் பாடத்திட்டம் தரமற்றதாக உள்ளது என்ற முடிவுக்கு அரசு வந்தது என்பதை விளக்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதை மற்றும் அவரது சில எழுத்துகள் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளதாலேயே புதிய அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. தேவையானால் அத்தகைய பகுதிகளை நீக்கி நூல்களை விநியோகிக்கலாம்.

பழைய பாடத்திட்டத்தின் படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள பாடநூல்கள் 10 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டவை. அதே பாடநூல்களை மீண்டும் பயன்படுத்துவது என்.சி.ஈ.ஆர்.டி நெறிமுறைக்கு எதிரானது என்பதை அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.

எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ள நிலையில், சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதை ஏற்க முடியாது. இது உண்மையான சமச்சீர்க் கல்வியை நோக்கிய பயணத்தை முடக்கும் செயல். நீண்ட விவாதங்களுக்குப் பிறகு பலரும் இணைந்து ரூ.216 கோடி செலவில் உருவாக்கிய பாடநூல்களை ஒரு சில தவறுகளுக்காகவும், அரசியல் நோக்கங்களுக்காகவும் புறக்கணிப்பது எந்த வகையிலும் நியாயமானதல்ல. சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைத்துள்ளதை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசை வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.

நன்றி: நக்கீரன் 25.05.2011

Monday, May 23, 2011

சமச்சீர் கல்வியை தொடர வேண்டும்: பா.ம.க., மார்க்சிஸ்ட் கோரிக்கை

பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியை நடப்பு ஆண்டிலிருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவே அதிர்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது. அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப்பட்ட சமச்சீர்க் கல்வி பாடத்திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்தப்படாது என்றும், அதற்கு மாறாக பழைய பாடத்திட்டத்தையே பின்பற்றலாம் என்றும் எடுக்கப்பட்டுள்ள முடிவு தேவையற்ற ஒன்றாகும்.

முந்தைய அரசு கொண்டுவந்த திட்டம் என்பதற்காக இந்தத் திட்டத்தை நிறுத்திவைப்பது ஏற்புடையதல்ல. சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் உள்ள குறைகளை படிப்படியாக சரிசெய்து கொள்வதுதான் முறையாக இருக்கும். அதைவிடுத்து, சமச்சீர் கல்வி முறையையே நிறுத்தி வைப்பது என்பது வளரும் கன்றை முளையிலேயே வெட்டி வீழ்த்துவதற்குச் சமம். சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்த புதிய வல்லுநர் குழு அமைக்கப்படும் என்பது காலம்தாழ்ந்த நடவடிக்கையே தவிர வேறல்ல.

இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் கல்வியை வணிகமயமாக்கி, கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வரும் தனியார் பள்ளி நிர்வாகிகளின் நிர்ப்பந்தத்திற்கு அரசு துணை போய்விடக் கூடாது.

தமிழக அரசின் முடிவால் ரூ.200 கோடி செலவால் அச்சிடப்பட்ட 6.5 கோடி புத்தகங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், பழைய பாடத்திட்டத்தின் படி, பாடப்புத்தகங்களை புதிதாக அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்க தேவையற்ற காலதாமதமும், பொருள்செலவும் ஏற்படும்.

1, 6 வகுப்புகளில் சமச்சீர் கல்வி முறை ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு 2, 7 வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

மாணவர்களின் கல்வி நலன் கருதியும், ஏழை, பணக்காரர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே தரமான, சீரான கல்வி கிடைப்பதை உறுதி செய்யவும் சமச்சீர் கல்வி முறையை அனைத்து வகுப்புகளுக்கும் நடப்பாண்டிலிருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ராமதாஸ்.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை அமலாக்க வேண்டும் என மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஜனநாயக இயக்கங்கள் நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வந்துள்ளனர்.

இந்தப் பின்னணியில்தான் தமிழ்நாடு அரசு சமச்சீர் கல்வியை ஏற்றுக்கொண்டு முதல்கட்டமாக 1,6 வகுப்புகளில் அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு சமச்சீர் கல்வி அமலாக்கத்தை ஏற்றுக்கொள்வதாகவும், கூடவே கல்வித் தரத்தையும் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி அதற்காக வல்லுநர் குழு அமைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்தக் கல்வியாண்டுக்கு சமச்சீர் கல்வியை நிறுத்தி, பழைய பாடத்திட்டத்தையே பின்பற்ற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கல்வித் தரத்தை உயர்த்துவதும் பாடப்புத்தகத்தில் உள்ள குறைபாடுகளைக் களைவதும் வரவேற்கத்தக்கவையே.

ஆனால், இதற்காக சமச்சீர் கல்வி முறையை இந்த ஆண்டு நிறுத்தி வைத்திருப்பதும், ரூ.200 கோடிக்கும் மேல் செலவிட்டு அச்சிட்டுள்ள பாடப்புத்தகங்களை முழுமையாகக் கைவிடுவது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையும், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, சமச்சீர் கல்வி முறையை இந்த ஆண்டும் அமலாக்கிக் கொண்டே கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான பணிகளை நிறைவேற்றுமாறும், பாடப்புத்தகங்களில் உள்ள குறைபாடுகளைக் களையும் வகையில் சில பாடங்களை நீக்கியோ அல்லது பிழைதிருத்தம் செய்தோ அரசு உத்தரவு மூலம் சரிசெய்யுமாறு வேண்டுகிறோம்.

இதன்மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் நம்பிக்கையை பலப்படுத்துமாறு தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு கேட்டுக்கொள்கிறது. தனியார் கல்விக் கட்டணக் கொள்ளையிலிருந்து மாணவர்களையும், பெற்றோர்களையும் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

நன்றி: தினமணி 24.05.2011

சமச்சீர் கல்வியை நிறுத்தக் கூடாது: அரசுக்கு அமைப்புகள் கோரிக்கை

சமச்சீர் கல்வியை அமல்படுத்திக்கொண்டே, அதிலுள்ள குறைகளை நீக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்திய மாணவர் சங்கம்: பொதுப்பாடத்திட்டத்தை இந்த கல்வியாண்டில் நிறுத்திவைக்கும் புதிய அரசின் அமைச்சரவை முடிவு சரியானதல்ல. எனவே, அதை அமல்படுத்திக்கொண்டே அதிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.

பொதுப்பாடத்திட்டத்தில் சில குறைகள் உள்ளதையும், அதில் பல மாற்றங்கள் செய்து செழுமைப்படுத்த வேண்டும் என்பதையும் ஏற்கிறோம்.

ஆனால், அதை இந்தப் பொதுப்பாடத்திட்டத்தை அமல்படுத்திக் கொண்டேதான் குறைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும்.

கடந்த தி.மு.க. அரசு முழுமையான சமச்சீர் கல்வியைத் தராமல், பொதுப்பாடத்திட்டத்தை மட்டுமே ஏற்படுத்தியது. பெரும்பான்மையான மக்களின் எதிர்பார்ப்பான முழுமையான சமச்சீர் கல்வியை இந்த அரசு ஏற்படுத்த வேண்டும்.

தமிழ் உரிமைக் கூட்டமைப்பு:இப்போது அமலில் உள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தில் குறைகள் இருந்தால் நீக்க நவடிக்கை எடுக்கலாம். ஆனால், திட்டத்தையே நிறுத்துவது பொருத்தமானதாக இல்லை.

பழைய பாடத்திட்டத்தின் புதிதாக புத்தகங்களை அச்சிடுவதற்கு மூன்று மாதங்களாகும். அதுவரை பாடப்புத்தகங்கள் இல்லாமல் மாணவர்களும், ஆசிரியர்களும் சிரமப்படுவார்கள். தமிழக அமைச்சரவை எடுத்த முடிவை மாற்றி சமச்சீர் கல்விமுறையை இந்த ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம்:சமச்சீர் கல்வித் திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களைந்து அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் பாடத்திட்டங்களை தயாரிக்க வேண்டும். தமிழ்நாட்டின் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களும் தரமான கல்வியை இலவசமாகப் பெறத்தக்க வகையில் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

நன்றி: தினமணி 24.05.2011

Thursday, May 19, 2011

ஜெயலலிதாவின் நியாயமற்ற கோபம்!

புதுவை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ரங்கசாமி தனித்தே ஆட்சி என்று அறிவித்திருப்பதன் மூலம் அதிமுகவுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சி தனக்கு துரோகம் செய்துவிட்டது என்று கூறிய ரங்கசாமி, தேர்தலுக்குப் பிறகு அதே துரோகத்தை அதிமுகவுக்கு இழைத்திருக்கிறார்.

நடந்து முடிந்த புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்திந்திய அதிமுகவுடன் இணைந்து ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. தேர்தல் சமயத்தில், தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரசாரம் செய்த நான், புதுச்சேரிக்கு சென்று என். ரங்கசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய ஆதரவு அளிக்குமாறு புதுச்சேரி வாக்காளப் பெருமக்களைக் கேட்டுக் கொண்டேன்.

இது மட்டுமல்லாமல், தேர்தலுக்கு முன்பு அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதிமுக மீதும், என் மீதும் நம்பிக்கை வைத்தும், கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை மனதில் வைத்தும் தான் புதுச்சேரி மக்கள் அதிமுக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தனர். அதிமுக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது.

கழகக் கூட்டணி வெற்றி பெற்றதும், புதுச்சேரி யூனியன் பிரதேச வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, புதுச்சேரி முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் என்.ஆர். ரங்கசாமி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளையும் நான் தெரிவித்திருந்தேன். ஆனால், ரங்கசாமி அவர்களுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற எனக்கு வாழ்த்து தெரிவிக்கக்கூட மனமில்லை. நன்றி மறந்து நாணயமற்ற முறையில் நடந்து கொண்டிருக்கிறார் ரங்கசாமி. எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை என்ற வள்ளுவரின் வாய்மொழியை இந்தத் தருணத்தில் நான் அவருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அதிமுக ஆதரவுடனும், செல்வாக்குடனும் வெற்றி பெற்றுவிட்டு ஆட்சி அமைக்க துணைநிலை ஆளுநரிடம் உரிமை கோரச் செல்லும் போது ஒரு வார்த்தை கூட எனக்குத் தெரிவிக்காமல், கழக வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேட்சை உறுப்பினரின் ஆதரவுடன் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைத்திருப்பது கூட்டணி தர்மத்திற்கு விரோதமான செயல் ஆகும். நம்ப வைத்து மோசடி செய்துவிட்டார் ரங்கசாமி. முதுகில் குத்துவதில் எல்லோரையும் மிஞ்சிவிட்டார் ரங்கசாமி. கூட்டணிக் கட்சியுடனேயே நாணயமற்ற முறையில் நடந்து கொண்டுள்ள ரங்கசாமி மக்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறார்? புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் ஏமாற்று நடவடிக்கைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்

ஜெயலலிதா கோபப்படுவதில் எந்தவித நியாயமும் இல்லை என்பதும் புதுச்சேரி மாநிலத்தில் அ.தி.மு.க.வின் செல்வாக்கு என்ன என்பதும் புதுச்சேரி மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

தமிழக மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்காகத்தான் வேறு வழியின்றி அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். ஜெயலலிதாவின் கடந்த கால ஆட்சியைப் பார்த்து தமிழக மக்கள் வாக்களிக்க வில்லை என்பதுதான் உண்மை.

ஆனால் புதுச்சேரி மக்கள் ரங்கசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகத்தான் வாக்களித்தனர்.

புதுச்சேரி அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் ரங்கசாமியின் படத்தைப்போட்டு..

“ரங்கசாமி முதலமைச்சராக எனக்கு வாக்களியுங்கள்”...

“நான் தேர்தலில் நிற்கவில்லை ரங்கசாமிதாம்மா என்ன நிக்க வச்சாரு.. ”

“நான் அ.தி.மு.க. வேட்பாளரா வரவில்லை ரங்கசாமியின் வேட்பாளராகத்தான் உங்களிடம் வந்துள்ளேன்”...

அதனால எனக்கு இரட்டை இலையில ஓட்டு போடுங்க...”


என்று கூறித்தான் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் மக்களிடம் வாக்கு கேட்டனர். அதனாலேயே அவர்களும் வெற்றி பெற்றனர்.

புதுச்சேரியில் ரங்கசாமியை தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து போட்டியிட்டிருந்தாலோ, அல்லது அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டிருந்தாலோ அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் டெப்பாசிட் தொகையை இழந்திருப்பார்கள். இந்த உண்மை தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவருக்கும் தெரியும்... இந்த உண்மை ஜெயலலிதாவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை...